Saturday, June 25, 2016

பிரிந்தது பிரித்தானியா! தெரிந்தது வர்க்க எதிரிகளின் கோர முகம்!


அன்று உலகையே காலனிப் படுத்திய பிரித்தானியா, இன்று தனது நாட்டை ஐரோப்பிய ஒன்றியம் காலனிப் படுத்தி விட்டதாக குமுறியதன் விளைவு தான் ‪#‎Brexit‬!

தேசங்கடந்த பெரும் வணிக நிறுவனங்களும், லிபரல் அரசியல்வாதிகளும் சேர்ந்து உருவாக்கிய ஐரோப்பிய ஒன்றியம் என்ற அமைப்பு ஒரு பேரரசு (Super State) ஆகும். ஐரோப்பிய ஒன்றியத்தில் சேரும் நாடுகள், தமது இறைமையில் ஒரு பகுதியை அடகு வைக்க வேண்டும். தேசிய சட்டங்களை விட ஐரோப்பிய (ஒன்றிய) சட்டங்கள் மேலானவை என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும். இதனால் உறுப்புரிமை பெற்ற ஒரு தேசத்தின் உள்ளே நடக்கும் எல்லா விஷயங்களிலும் ஐரோப்பிய ஒன்றியம் மூக்கை நுழைக்க முடியும்.

பல தசாப்த காலமாகவே, ஐரோப்பிய நாடுகளில் உள்ள தீவிர வலதுசாரிகளும், தீவிர இடதுசாரிகளும் தத்தமது அரசியல் நிலைப்பாட்டில் இருந்து கொண்டு ஐரோப்பிய ஒன்றியத்தை எதிர்த்து வருகின்றனர். தேசிய முதலாளிகளின் நலன்கள் பாதிக்கப்படுதல், குடியேறிகளின் வருகையினால் வேலை வாய்ப்புகள் பறிபோதல் போன்ற பல குற்றச்சாட்டுகள் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு எதிரான பொது மக்களின் அதிருப்திக்கு முக்கிய காரணிகளாக உள்ளன.

பிரிட்டனில் குடியேறிகளுக்கு எதிரான புதிய இனவாதக் கட்சியான UKIP, ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தனியா பிரிய வேண்டும் என்ற கோஷத்தை முன்வைத்து பிரச்சாரம் செய்து வந்தது. அது தேர்தலில் பெரிய வெற்றி எதையும் பெற்றிருக்கா விட்டாலும், ஊடகங்களின் கவனத்தை கவர்ந்தது. அதன் தலைவர் நைஜல் பராஜ் என்ன பேசினாலும், ஊடகங்கள் முக்கியத்துவம் கொடுத்து வெளியிட்டன. அவர் கூறியவை பெரும்பாலும் வெளிநாட்டவருக்கு எதிரான இனவாதக் கருத்துக்கள் என்பதை இங்கே குறிப்பிடத் தேவையில்லை.

அதே நேரம், ஆளும் கட்சியான வலதுசாரி கென்சர்வேட்டிவ் கட்சிக்குள்ளும் பலர் அந்தக் கொள்கையை ஆதரிக்கத் தொடங்கினார்கள். சிலர் கட்சி மாறினார்கள். அதன் மூலம் பிரதமர் டேவிட் கமேரூனுக்கு அழுத்தம் அதிகரித்தது. போதாக்குறைக்கு லண்டன் மாநகரின் முன்னாள் மேயர் போரிஸ் ஜோன்சனும், பிரித்தானியா பிரிய வேண்டும் என்ற நிலைப்பாட்டைக் கொண்டிருந்தார். அவரது குறி பிரதமர் பதவியாக இருந்தது.

தற்போது பதவி விலகியுள்ள பிரதமர் டேவிட் கமெரூன் இதை வைத்து அரசியல் லாபம் தேடலாம் எனத் தப்புக் கணக்குப் போட்டார். அதாவது, வலதுசாரிகளின் கொள்கைகளை ஆதரிப்பது போலக் காட்டிக் கொள்ள வேண்டும். அதே நேரம் ஐரோப்பிய ஒன்றியத்தையும் ஆதரிக்க வேண்டும். இந்த இரட்டை வேடம், இறுதியில் அவரது பிரதமர் பதவிக்கு ஆப்பு வைத்தது.

ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் பிரிந்து சென்றுள்ளதை, "ஒரு மாநிலம் சுதந்திர நாடாகி விட்டது" என்பது போல சிலர் பேசி வருகின்றனர். பிரித்தானியாவுக்கும், ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இடையிலான உறவு என்றைக்குமே சீரானதாக இருக்கவில்லை. தனது தனித்துவத்தை பேணுவதற்காக யூரோவை ஏற்றுக் கொள்ளாமல், ஸ்டேர்லிங் பவுன் நாணயத்தையே தொடர்ந்தும் வைத்திருக்கப் போவதாக அடம் பிடித்தது. அதே நேரம், குடியேறிகள், அகதிகளின் வருகையை கட்டுப்படுத்துவதற்காக, செங்கண் ஒப்பந்தம் செய்ய மறுத்து வந்தது.

பிரித்தானியா ஒரு உலக அணுவாயுத வல்லரசு. ஐ.நா. பாதுகாப்புச் சபையின் நிரந்தர உறுப்பினர். இரண்டாம் உலகப்போரில், அமெரிக்காவுடன் சேர்ந்து, ஐரோப்பாக் கண்டத்தை ஆக்கிரமித்திருந்தது. இது போன்ற காரணங்களினால், ஐரோப்பிய ஒன்றியத்தினுள் அடங்கிப் போக முடியாமல், பிரித்தானியாவுக்கு தாழ்வுச் சிக்கல் இருந்து வந்துள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் லிஸ்பன் ஒப்பந்தப் படி, உறுப்புரிமை பெற்ற எந்த நாடும் பிரிந்து செல்ல முடியும். ஆனால், வரலாற்றில் இதுவே முதல் தடவை. முன்பு கிரீஸ் பிரிந்து செல்ல விரும்பிய நேரம், கடுமையான எதிர்ப்புக் கிளம்பியது. அதற்குக் காரணம், கிரேக்கம் ஒரு கடன்பட்ட நாடு. அது மட்டுமல்ல, யூரோ பொது நாணயத்தை கொண்டுள்ளது. அது கடுமையான பொருளாதார விளைவுகளை உண்டாக்கி இருக்கும்.

பிரிட்டன் உலகிலேயே பெரிய மூலதனத்தை கொண்டுள்ள நாடுகளில் ஒன்று. அத்துடன், இராணுவ வல்லரசு. அது மட்டுமல்லாது, யூரோ நாணயத்தை ஏற்றுக் கொள்ளாமல், தொடர்ந்தும் பவுன் வைத்திருந்தது. மேலும், ஜெர்மன், பிரான்சுடன், பிரிட்டனும் சேர்ந்து, ஐரோப்பிய ஒன்றியத்தை கட்டுப்படுத்தக் கூடிய நிலையில் இருந்தன. இத்தாலி தவிர்ந்த பிற சிறிய நாடுகளிடம் அந்தளவு பலம் கிடையாது. பிரிட்டன் பிரிவதை இலகுவாக்கிய காரணங்கள் இவை தாம்.

இருப்பினும், பிரிட்டனின் உதாரணத்தை பின்பற்றி பிற ஐரோப்பிய நாடுகளும் பிரிந்து செல்லும் என்று எதிர்பார்க்க முடியாது. பிரித்தானியா கூட, அடுத்து வரும் இரண்டு வருடங்களுக்கு ஐரோப்பிய ஒன்றிய நாடாக தொடர்ந்தும் இருக்கும். அதற்குப் பிறகு, நோர்வே, சுவிட்சர்லாந்து, ஐஸ்லாந்து மாதிரி, வேறொரு வர்த்தக உடன்படிக்கை (European Economic Area (EEA)) செய்து கொள்ளலாம்.

மேற்படி ஒப்பந்தத்தின் அடிப்படையில், நோர்வே முக்கால்வாசி ஐரோப்பிய ஒன்றிய சட்டங்களை ஏற்றுக் கொண்டுள்ளது. அனேகமாக பெரிய வித்தியாசம் எதையும் கண்டுபிடிக்க முடியாது. சுவிட்சர்லாந்து குடியேறிகள் விடயத்தில் தான் விரும்பிய நிலைப்பாட்டை எடுக்கும் சுதந்திரத்தை கொண்டுள்ளது. அதே போன்ற ஒப்பத்தங்களை, எதிர்காலத்தில் பிரித்தானியாவும் செய்து கொள்ளலாம்.

பிரித்தானியா பிரிய வேண்டும் என்று ஓட்டுப் போட்டவர்களின் முக்கிய நோக்கம், குடியேறிகளின் வருகையை கட்டுப்படுத்த வேண்டும் என்பது. அது எவ்வளவு தூரம் நடைமுறைச் சாத்தியமானது? போலந்து, ருமேனியா, பல்கேரியா போன்ற கிழக்கைரோப்பிய நாடுகளை சேர்ந்த குடியேற்றவாசிகளின் எண்ணிக்கை பிரிட்டனில் அதிகம். அவர்களை வெளியேற்ற முடியுமா? அது அவ்வளவு இலகுவான விடயமல்ல.

பல்கேரியா, ஸ்பெயின், சைப்பிரஸ் போன்ற நாடுகளில், பிரிட்டிஷ் ஓய்வூதியக்காரர்கள் வீடுகளை வாங்கி, அங்கேயே வசித்து வருகின்றனர். அது மட்டுமல்ல, இலட்சக் கணக்கான பிரிட்டிஷ் குடியேறிகள், பல்வேறு ஐரோப்பிய நாடுகளில் வேலை செய்து வருகின்றனர். பிரிட்டன் ஐரோப்பிய குடியேறிகளை திருப்பி அனுப்பினால், பதிலடியாக ஐரோப்பிய நாடுகள் பிரிட்டிஷ் குடியேறிகளை திருப்பி அனுப்பலாம்.

அப்படியானால் என்ன செய்யப் போகிறார்கள்? அனேகமாக, புதிய குடியேறிகளை அனுமதிப்பதற்கு புதிய நடைமுறை அமுலுக்கு வரலாம். பிரித்தானியாவில் குறிப்பிட்ட வேலைக்கு ஆள் பற்றாக்குறை இருந்தால் ஒப்பந்தத் தொழிலாளர்களை தருவிக்கலாம். 

உதாரணத்திற்கு, மருத்துவமனைகளில் தாதியர் (நர்ஸ்) வேலைக்கு பற்றாக்குறை நிலவுகின்றது. போலந்துக்காரர்கள், பாகிஸ்தான்காரர்களுடன் அந்த வேலைக்கு போட்டி போட வேண்டி இருக்கும். சுருக்கமாக, பிரித்தானியாவில் குடியேறிகளின் தேவை எப்போதும் இருந்து கொண்டிருக்கும்.

பிரித்தானியா பிரிவதை பல (வலதுசாரி) தமிழர்களும் ஆதரித்தார்கள். கிழக்கைரோப்பிய குடியேறிகளின் பிரச்சினையை அதற்குக் காரணமாகக் கூறினார்கள். இதிலே வேடிக்கை என்னவென்றால், பிரிந்த பிரித்தானியாவில் அவர்களின் இருப்புக்குத் தான் ஆபத்து ஏற்பட்டுள்ளது. 

ஐரோப்பிய குடியேறிகளின் வருகையை தடுக்க முடியாது. ஆனால், தமிழர்கள் போன்ற மூன்றாமுலக நாடுகளின் குடியேறிகளை வர விடாமல் தடுக்க முடியும். புதிய சட்டங்கள் போட்டு அவர்களை கட்டுப்படுத்தலாம். என்ன இருந்தாலும், "தமிழர்கள் கருப்பர்கள். கிழக்கைரோப்பியர்கள் வெள்ளையர்கள்."

UKIP என்ற தீவிர வலதுசாரிக் கட்சி தான், ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் விலக வேண்டும் என்ற பிரச்சாரத்தை தொடங்கியது. அந்தக் கட்சியின் பெயரே (UK Independence Party) அதை உறுதிப் படுத்துகின்றது.

NHS எனப்படும் அரசு மருத்துவமனைகளின் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு வழங்கும் நிதியை அதற்கு செலவிடலாம் என்று சொல்லித் தான் UKIP கட்சியினர் பிரச்சாரம் செய்தனர்.

பொது வாக்கெடுப்பில் பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து விலகுவது உறுதியாகி விட்டது. தற்போது, UKIP தலைவர் நைஜல் பராஜ் தனது முன்னைய கொள்கையை மாற்றிப் பேசி வருகின்றார். "EU நிதியை NHS க்கு பயன்படுத்துவது சாத்தியமில்லை." என்கிறார்.

அத்துடன், பத்து வருடங்களுக்குள் அரசு மருத்துவமனைகளை தனியார்மயமாக்க வேண்டும். ஐரோப்பாவில் இருப்பது மாதிரி எல்லோருக்கும் பொதுவான காப்புறுதித் திட்டம் வேண்டும் என்பதும் UKIP கொண்டுவரவிருக்கும் மாற்றங்கள் ஆகும்.

"சுதந்திரம், இறைமை" பற்றிப் பேசும், UKIP போன்ற தீவிர வலதுசாரிகள், தங்களது சொந்த இன மக்களையே அடக்கி ஆளும் சுதந்திரத்தையும், தேசிய முதலாளிகளின் இறைமையையும் பற்றித் தான் கவலைப் பட்டுள்ளனர்.

பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து விலகியதும், மக்களுக்கு ஒரு வகையில் படிப்பினை தான். ஏகாதிபத்திய கூட்டமைப்பில் ஒரு விரிசலை உண்டாக்க முடிந்துள்ளது. அதே நேரம், சொந்த இனத்திற்குள் இருக்கும் வர்க்க எதிரிகளையும் அடையாளம் காண உதவியுள்ளது.


இதனுடன் தொடர்புடைய முன்னைய பதிவுகள்:

Thursday, June 23, 2016

பிரித்தானியாவின் Brexit ஆதரவு "தீக்கோழி" தமிழர்கள்


பிரிட்டன் ஐரோப்பிய யூனியனில் இருந்து வெளியேறுவதை (Brexit), தமிழ் வலதுசாரிகள் ஆதரிப்பது ஏற்கனவே தெரிந்த விடயம். ஆனால், லண்டனில் வாழும் "தமிழ் இடதுசாரியான" சேனன் என்ற ட்ராஸ்கிஸ்ட் கூட அதை ஆதரித்து வருகின்றார். இது தொடர்பாக எதிர் இணையத்தளத்தில் கட்டுரைகள் எழுதி உள்ளார்.

சேனனின் வழிகாட்டலில் உருவான, "இடதுசாரி- தமிழ் தேசிய இளையோர்" அமைப்பான தமிழ் சொலிடாரிட்டி உறுப்பினரான  பாரதி என்ற பெண், லண்டன் தமிழ் வானொலி ஒன்றுக்கு பேட்டி கொடுத்திருக்கிறார். (ஒன்றியத்திலிருந்து ஏன் பிரித்தானியா வெளியேற வேண்டும்? -பாரதி)

அதில் அவர் தெரிவித்த Brexit ஆதரவுக் கருத்துக்கள் சிறுபிள்ளைத்தனமாக உள்ளன.

முதலில் அந்தப் பெண், "வட்டுகோட்டை தீர்மானம்... தமிழ் தேசியப் போராட்டம்..." போன்றவற்றை சொல்லி தனது உரையை தொடங்கினார். ஐயர் சம்ஸ்கிருத மந்திரம் ஓதுவது போன்று, இப்போதெல்லாம் ஆரம்பத்தில் கொஞ்சம் தமிழ் தேசியம் பேசி விட்டு தொடர்வது ஒரு பேஷனாகி விட்டது. அது போகட்டும். விடயத்திற்கு வருவோம்.

பிரிட்டன் ஐரோப்பிய யூனியனில் இருந்து வெளியேறினால், அது அகதித் தஞ்சம் கோருவோருக்கு பாதிப்பாக அமையும் என்ற வாதம் ஒரு "கற்பனை" என்று வாதிடுகிறார். அனேகமாக, ஒரு ஈழத் தமிழ் அகதிக் குடும்பத்தில் இருந்து வந்தவர் இப்படிப் பேசுவது அதிர்ச்சி அளித்தது.

பிரிட்டனில் அகதி தஞ்சம் நிராகரிக்கப் பட்ட பலருக்கு, ஐரோப்பிய ஒன்றிய சட்டத்தினால் அங்கீகாரம் கிடைத்துள்ளது. அதாவது, பிரிட்டனின் சட்டம் எதுவாக இருந்தாலும், ஐரோப்பிய சட்டம் தான் மேலானது. அது ஏதாவதொரு காரணத்தால், ஒருவரின் தஞ்சக் கோரிக்கையை ஏற்றுக் கொள்ளுமாறு வலியுறுத்தினால், பிரிட்டிஷ் நீதிபதி மறுப்புக் கூற முடியாது. பிரிட்டன் ஐரோப்பாவில் இருந்து விலகினால் அந்த சட்டப் பாதுகாப்பு கிடைக்குமா?

ஐரோப்பிய ஒன்றியத்தில், பிரிட்டிஷ் முதலாளிகள் (பெரும் நிறுவனங்கள்) ஐரோப்பிய முதலாளிகளுடன் கூட்டுச் சேர்ந்து பலமாக இருப்பார்களாம். அவர்களை எதிர்த்துப் போரிடுவது கஷ்டமான காரியமாம். பிரிட்டன் பிரிந்தால், தனிமைப் படுத்தப் பட்ட முதலாளிகளை இலகுவாக எதிர்க்கலாமாம்!

பிரிட்டிஷ், அமெரிக்க பெரு நிறுவனங்களுக்கு இடையிலான உறவுக்கும் ஐரோப்பிய ஒன்றியமா காரணம்? நேட்டோ ஒரு இராணுவக் கூட்டமைப்பு. வர்த்தகக் கூட்டமைப்பு அல்ல. மேலும் பிரிட்டிஷ் - ஐரோப்பிய முதலாளிகள் ஒன்று சேர்ந்தால், தொழிலாளர்களும் ஒன்று சேர வேண்டியது தானே? பிறகெதற்கு சேனனின் இடதுசாரி ட்ராஸ்கிசக் கட்சி இயங்குகின்றது? இன்னமும் "நிரந்தரப் புரட்சி" பற்றிப் பேசுகின்றது?

"பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருப்பதால் தான், போலந்து, ருமேனியாவில் இருந்து குடியேறிகள் வருகிறார்கள். பிரிட்டிஷ் மக்களின் வேலை வாய்ப்புகளை, வீட்டு வசதிகளை பறிக்கிறார்கள்..." இவையெல்லாம் பிரிட்டிஷ் வலதுசாரிகள், ஆங்கிலேய தேசியவாதிகள்/இனவாதிகள் முன்வைக்கும் வாதங்கள். பிரிட்டனில் வாழும் Brexit ஆதரவு தமிழர்களும் (வலதுசாரிகள்) அதை வழிமொழிகிறார்கள். பிரிட்டன் ஐரோப்பாவில் இருந்து பிரிந்தால் தமிழர்களின் குடியேற்றத்தையும் தடுப்பார்கள். இந்த உண்மை தெரிந்தாலும் தெரியாத மாதிரி நடிப்பார்கள்.

தமிழ் சொலிடாரிட்டி உறுப்பினர் பாரதி, குடியேறிகளின் பிரச்சினைக்கு இடதுசாரி சாயம் பூசுகின்றார்: "ஐயோ பாவம்! போலந்து, ருமேனிய தொழிலாளர்கள் குறைந்த கூலிக்கு சுரண்டப் படுகிறார்கள்....வாடகை கட்ட முடியாமல் ஒரே வீட்டுக்குள் பலர் இருந்து கஷ்டப் படுகிறார்கள்..." ஆடு நனைகிறதென்று ஓநாய் அழுததாம். பிரிட்டன் ஐரோப்பாவில் இருந்து பிரிந்தால், தொழில் வாய்ப்புகள் உருவாகும் என்று சேனன் தனது எதிர் இணையத் தளத்தில் விளம்பரம் செய்கிறார். இது அவர் சார்ந்த ட்ராஸ்கிஸ்ட் கட்சியின் நிலைப்பாடு என்று நினைக்கிறேன்.

போலந்து, ருமேனியாவில் இருந்து வந்து குடியேறும் மலிவு விலைத் தொழிலாளர்கள், பிரிட்டனில் நிறைய வேலைத் ஸ்தலங்களில் இருப்பது உண்மை தான். அவர்கள் குறைந்த கூலிக்கு சுரண்டப் படுவதால், உள்ளூர் தொழிலாளர்களுக்கு வாய்ப்புகள் கிடைக்காமல் போவதும் உண்மை தான். ஆனால், எல்லோரும் ஒரு பொருளாதார உண்மையை மறந்து விட்டுப் பேசுகிறார்கள்.

குறிப்பிட்ட சில வேலைகளுக்கு வழங்கப் படும் சம்பளத்தின் அளவு குறைவு. அந்த சம்பளத்திற்கு வேலை செய்வதற்கு உள்ளூர் தொழிலாளர்கள் வர மாட்டார்கள். ஏனென்றால் பிரிட்டனில் வாழ்க்கைச் செலவும் அதிகம். ஒரு பிரிட்டிஷ் தொழிலாளி தனது குடும்பத்தை பராமரிக்கும் அளவு சம்பளத்தை எதிர்பார்ப்பதில் தவறில்லை. ஆனால், அதைக் கொடுப்பதற்கு பிரிட்டிஷ் முதலாளிகள் தயாராக இல்லை.

பிரிட்டிஷ் பிரஜைகள் பலர் "வேலையில்லாமல் சும்மா வீட்டில் இருந்தாலும்" அரசு அவர்களுக்கு மாதாந்தம் பணம் கொடுக்கிறது. (அது வாழ்க்கைச் செலவுக்கு போதாது என்பது வேறு விடயம்.) அந்தப் பணம் எங்கிருந்து வருகின்றது? புதிய குடியேறிகளான போலந்து, ருமேனிய தொழிலாளர்களிடம் இருந்து சுரண்டப் படும் பணத்தில் ஒரு சிறிய பகுதி தான் அது.

இப்படி யோசித்துப் பார்ப்போம். பிரிட்டன் ஐரோப்பாவில் இருந்து வெளியேறிய பிறகு, பிற ஐரோப்பிய நாடுகளில் இருந்து வரும் குடியேறிகளின் எண்ணிக்கை கணிசமான அளவில் குறைந்து விடும். ஒரேயடியாக நின்று விட்டது என்றே வைத்துக் கொள்வோம். அப்போது வேலையில்லா பிரிட்டிஷ் பிரஜைகளுக்கு வேலை கிடைத்து விடுமா? 

இல்லை, பிரிட்டனின் முன்னாள் காலனி நாடுகளில் இருந்து புதிய மலிவு விலைத் தொழிலாளர்களை வருவிப்பார்கள். ஆனால், ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் இருந்து வந்த தொழிலாளர்கள் அனுவித்த சலுகைகள் அவர்களுக்கு கிடைக்காது. அனேகமாக ஒப்பந்தம் முடிந்தவுடன் திருப்பி அனுப்பும் நிலையில் வைத்திருப்பார்கள்.

அது போகட்டும். போலந்து, ருமேனிய குடியேறிகள் வருவது நின்று போனால், பிரிட்டனில் வாழும் தமிழர்களுக்கு, அல்லது இலங்கையர், இந்தியருக்கு நல்ல காலம் பிறந்து விடுமா? எப்போதும் இல்லை. பிரிட்டிஷ் வலதுசாரிகள், ஆங்கிலேய இனவாதிகளின் அடுத்த குறி அவர்களாகத் தானிருக்கும். பிரிட்டனில் பல தசாப்த காலம் வாழ்ந்தாலும், அவர்களது உரிமைகளை படிப்படியாகப் பறிக்க வேண்டும் என்று பிரச்சாரம் செய்வார்கள். பிரிட்டிஷ் அரசும் அதை ஆமோதிக்கும். அப்போது அவர்களை பாதுகாப்பதற்கு ஐரோப்பிய ஒன்றியம் வரப் போவதில்லை.

தீக்கோழி மண்ணுக்குள் தலையை புதைத்துக் கொண்டு, தான் ஆபத்தில் இருந்து தப்பி விட்டதாக நினைக்குமாம். பிரிட்டனில் வாழும் Brexit ஆதரவு தமிழர்களும் அப்படித் தான்.

Part - 1
 

Part - 2
 

Part - 3
 

Tuesday, June 21, 2016

"இனம் என்னடா இனம், வர்க்கம் தான் நிரந்தரம்!" - இப்படிக்கு தமிழ் முதலாளிகள்


இனம் இனத்தோடு தான் சேரும். ஈழத் தமிழ் முதலாளி, சிங்கள பேரினவாத அரசுடன் கைகோர்ப்பான். யாழ்ப்பாண தமிழ் கோடீஸ்வரர், வெற்றிகரமான தொழிலதிபர், தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சரவணபவன். இவர் சிங்கள பேரினவாத அரசு இயந்திரத்துடன் கைகோர்த்துள்ளதை நிரூபிக்கும் படங்கள், சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளப் பட்டன.

யாழ்நகரில் இருந்து வெளியாகும் தமிழ்த் தேசிய, புலி ஆதரவு தினசரி உதயன் பத்திரிகை முதலாளி சரவணபவன் மகளின் பிறந்த நாள் கொண்டாட்டம் ஆடம்பரமாக நடைபெற்றது. அதில் இலங்கை ஜனாதிபதி மைத்திரி, மற்றும் சிங்கள இராணுவத் தளபதியும் கலந்து சிறப்பித்தனர்.

கடந்த பல தசாப்த காலமாக யாழ்நகரில் இருந்து வெளிவரும் உதயன் பத்திரிகையை மற்றைய பத்திரிகைகளுடன் ஒப்பிட முடியாது. யுத்த காலத்தில், இராணுவ அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் புலிகளுக்கு ஆதரவான செய்திகளை தெரிவித்து வந்தது. புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் இருந்து ஈழநாதம், ஈழமுரசு ஆகிய பத்திரிகைகள் வெளிவந்து கொண்டிருந்தன. இருப்பினும், உதயன் பத்திரிகைக்கு யாழ்ப்பாண தமிழ் மக்கள் மத்தியில் பெருமளவு வரவேற்பு இருந்தது.

உதயன் பத்திரிகை வரலாற்றில் அது பல தடவைகள் தடங்கலுக்கு உள்ளாகியது. அதன் நிர்வாகம் பல தடவைகள் கைமாறியுள்ளது. இன்றைய உதயன் பத்திரிகை, புலிகளின் முதலீட்டில் உருவானதாக சந்தேகிக்கப் பட்டது. தலைமை நிர்வாகி சரவணபவன் ஒரு பினாமி முதலாளி என்றும் நம்பப் பட்டது. இராணுவப் புலனாய்வுத்துறை அது தொடர்பாக மோப்பம் பிடித்த படியால், சரவனபவனை கைது செய்து விசாரித்துள்ளது.

ஒரு தடவை, உதயன் பத்திரிகையாளர் நிமலராஜன் ஈபிடிபி ஆயுதபாணிகளால் படுகொலை செய்யப் பட்டார். இறுதிப்போர் நடந்த காலத்தில், உதயன் பத்திரிகை அலுவலகம் அடிக்கடி தாக்குதலுக்குள்ளானது. ஊடகவியலாளர்கள் உயிரச்சுறுத்தலுக்கு மத்தியில் செயல்பட்டனர். இத்தனை பிரச்சினைகள் இருந்த போதிலும், உதயன் தனது புலி ஆதரவு நிலைப்பாட்டில் இருந்து மாறவில்லை.

சிங்கள பேரினவாதிகளின் கோட்டையான கொழும்பு நகரில் இருந்து வெளியான, உதயனின் சகோதர பத்திரிகையான சுடரொளி வெளிப்படையாகவே புலிகளின் புகழ் பாடி வந்தது. இதெல்லாம் எப்படி சாத்தியமானது? உதயன் முதலாளி சரவணபவன், திரைமறைவில் சிங்கள அரசுடன் தொடர்புகளை பேணி வந்தார். ஒரு காலத்தில் இரகசியமாக இருந்த உறவு, இன்று பரகசியமாக வெளிப்பட்டுள்ளது. இதிலென்ன அதிசயம்?

விடுதலைப் புலிகள் வலதுசாரிப் பாதையை தேர்ந்தெடுத்ததும், தமிழ் முதலாளிகளை ஊக்குவித்து வளர்த்ததும் கடந்த கால வரலாறு. சிலநேரம் புலிகளே உருவாக்கி வளர்த்து விட்ட தமிழ் முதலாளிகள், புலிகளின் வீழ்ச்சிக்கும் காரணமாக இருந்தனர். (பார்க்க: இடதுசாரி புலிகள் உருவாக்கிய முதலாளிகள் எனும் வலதுசாரி அழிவு சக்திகள்!) சரவணபவன் போன்ற பல முதலாளிகள், இன்று சிங்களப் பேரினவாத அரசை பகிரங்கமாகவே ஆதரிக்கிறார்கள். எல்லாம் வணிக நலன்தான் காரணம்.

இன உணர்வை விட வர்க்க உணர்வு மிகவும் உறுதியானது. தமிழீழ தேசிய போராட்டமும், முதலாளித்துவமும் ஒன்றுக்கொன்று விரோதமான விடயங்கள். அந்த உண்மையை காலங் கடந்தாவது உணர வேண்டும். இன்றைக்கும் முதலாளித்துவத்தை ஆதரித்துக் கொண்டே, புலிகளையும் ஆதரிப்பதாக பாசாங்கு செய்யும் வலதுசாரிகளையிட்டு தமிழ் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

"இனம் என்னடா இனம், வர்க்கம் தான் நிரந்தரம்!" - இப்படிக்கு தமிழ் முதலாளிகள்


இதனுடன் தொடர்புடைய முன்னைய பதிவுகள்:

Sunday, June 19, 2016

அச்சே கடலோரம் தமிழ் அகதிகளின் அவலம் கண்டீரோ?


இந்தோனேசியாவில் அச்சே மாநிலக் கரையோரம் ஒதுங்கிய ஈழத் தமிழ் அகதிகளின் அவலம் இன்னமும் தொடர்கின்றது. ஒரு படகில் வந்த நாற்பது அகதிகளில், ஒரு கர்ப்பிணிப் பெண்ணும், பல பெண்களும் குழந்தைகளும் இருந்தனர்.

அவுஸ்திரேலியாவுக்கு சென்று கொண்டிருந்த படகு பழுதடைந்து கரை ஒதுங்கிய போது, அச்சே மாநில காவல்படை அவர்களை கரைக்கு வர அனுமதிக்கவில்லை. சில பெண் அகதிகள் தாமாகவே கரையில் இறங்கிய பொழுது, பொலிசார் எச்சரிக்கை வேட்டுக்களை தீர்த்து அவர்களை திருப்பி அனுப்பினார்கள்.

சர்வதேச மன்னிப்புச்சபை, மற்றும் பல தொண்டு நிறுவனங்களின் அழுத்தங்கள் காரணமாக, இந்தோனேசிய அரசு அகதிகளை கரைக்கு வர அனுமதிக்க ஒத்துக்கொண்டது. படகை திருத்திக் கொடுக்கவும் ஒப்புக் கொண்டது. ஆனால், அச்சே மாநில அரசு தொடர்ந்தும் மறுத்து வந்தது. அகதிகளை இலங்கைக்கே திரும்பிச் செல்லுமாறு அறிவுறுத்தியது.

இந்தியப் படகொன்றில் பயணம் செய்த அகதிகள், நேரடியாக இலங்கையில் இருந்து கிளம்பிச் சென்றனரா என்பது தெரியவில்லை. அவர்கள் தமிழ்நாட்டு அகதி முகாம்களில் வசித்தவர்கள் என்றும் கருதப் படுகின்றது. அவர்கள் அவுஸ்திரேலியா சென்றாலும், அவுஸ்திரேலிய அரசு ஏற்றுக் கொள்ளுமா என்பது தெரியவில்லை. திருப்பி அனுப்பினால் அவர்கள் இலங்கைக்கு செல்வார்களா, இந்தியாவுக்கு செல்வார்களா என்பதிலும் தெளிவில்லை.

தமிழகத்தை சேர்ந்த "தமிழ் உணர்வுத்" தலைவர்களில் வைகோ மட்டுமே அகதிகளின் நெருக்கடியை தீர்ப்பதற்கு அழுத்தம் கொடுத்துள்ளார். இதற்கிடையே, மலேசியா பினாங்கு மாநிலத்தின் பதில் முதலமைச்சர் பேராசிரியர் இராமசாமி, "அச்சே மாநில அரசுக்கு தான் எழுதிய கடிதத்தின் பின்னர் அகதிகளுக்கு அடைக்கலம் கொடுத்துள்ளதாக" அறிக்கை ஒன்றை விட்டுள்ளார்.

அகதிகளின் அவலத்தை பயன்படுத்தி அரசியல் இலாபம் தேடுவதாகவே, பேராசிரியர் ராமசாமியின் அறிக்கை அமைந்துள்ளது. ஆளும் கட்சியான DAP உறுப்பினர். மலேசிய அரசுக்கு மிகவும் வேண்டப் பட்டவர். அவர் தமிழ் தேசியவாதி வேஷம் போடும் கொடுமை சகிக்கவொண்ணாத ஒன்று. 

விடுதலைப் புலிகளை தடைசெய்த மலேசிய அரசின் பிரதிநிதி, தமிழ் தேசியம் பேசுவது ஒரு சிறந்த நகைச்சுவை. அவரது தமிழீழ ஆதரவு உண்மையானது என்று நம்பும், தமிழ் உணர்வாளர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள். அந்த அறிக்கையில் அளவுக்கு அதிகமாக தமிழ் தேசிய வாடை அடிப்பதால், பல தமிழ் உணர்வாளர்களும் தமக்குள் பகிர்ந்து கொண்டுள்ளனர்.

பேராசிரியர் இராமசாமியின் அறிக்கையில் இருந்து சில பகுதிகள்:

//பேராசிரியர் இராமசாமியின் வேண்டுகோளுக்கு இணங்க கடலில் தத்தளித்த ஈழத்தமிழ் அகதிகளுக்கு தஞ்சம் அளித்த ஆச்சே அரசு!

ஆச்சே கடலில் தத்தளித்த ஈழத்தமிழ் அகதிகளுக்கு போதிய உணவு, மருத்துவ உதவிகளை அளித்து தஞ்சம் அளிக்கவேண்டும் என்று தாம் விடுத்த கோரிக்கையை ஏற்று தமிழ் அகதிகளுக்கு தஞ்சம் அளித்துள்ள இந்தோனேசியாவின் ஆச்சே மாகாண அரசாங்கத்திற்கு பினாங்கு மாநில துணை முதலமைச்சர் பேராசிரியர் இராமசாமி நன்றி தெரிவித்தார்...

ஆச்சே மக்கள் மனிதாபிமான மிக்க மக்கள்; தங்களைப் போலவே, நீண்ட போராட்ட வரலாற்றைக் கொண்ட ஈழத்தமிழ் மக்களை எப்பொழுதும் அரவணைப்பார்கள் என்று நம்புகின்றேன். இன்று, ஆச்சேயின் சுயாட்சி கோரிக்கை நிறைவேற்றப்பட்டு விட்ட நிலையில், ஈழத்தமிழ் மக்களின் போராட்டம் இனப்படுகொலையால் நசுக்கப்பட்டு, இப்பொழுது அரசியல் வடிவம் கண்டுள்ளது. ஆச்சே மக்களின் சுதந்திர போராட்டத்திற்கு தமிழீழ மக்கள் ஆதரவாகவே இருந்துள்ளனர். இவ்வேளையில் அதனையும் ஆச்சே மக்கள் நினைத்துப் பார்ப்பார்கள் என்று நான் நம்புகின்றேன்’ என்று பேராசிரியர் இராமசாமி கூறியிருந்தார்....//

ஈழத்தமிழ் அகதிகள் ஒரு வார காலமாக கடலில் தத்தளித்துக் கொண்டிருந்தார்கள். உணவின்றி நீரின்றி கஷ்டப் பட்டார்கள். இந்த அவலத்தை கண்ணுற்ற சர்வதேச தொண்டு நிறுவனங்கள் பதறித் துடித்த அளவிற்கு அச்சே மாநில அதிகாரிகள் நடந்து கொள்ளவில்லை. இந்தோனேசிய மத்திய அரசு மனிதாபிமான அடிப்படையில் உதவ முன்வந்த போதிலும், அச்சே மாநில அரசு அகதிகளை கரையொதுங்க அனுமதிக்க மறுத்தது.

கடந்த வருடம், இதே மாதிரி கடலில் தத்தளித்த ரோஹிங்கியா (மியான்மர்) அகதிகளை, அச்சே மாநில அரசு பொறுப்பேற்றுக் கொண்டது. சர்வதேச தொண்டு நிறுவனங்கள் அந்தச் சம்பவத்தை சுட்டிக் காட்டி உதவி கோரின. ஆயினும், "ரோஹிங்கியா அகதிகள் நாடற்றவர்கள்... தமிழ் அகதிகள் இலங்கைக்கு திரும்பிச் செல்லலாம்..." என்று அச்சே மாநில அரசு விளக்கம் அளித்திருந்தது. அச்சே மாநில பொலிஸ் தான், படகில் இருந்து குதித்து கரைக்கு வர முயன்ற அகதிகளை நோக்கி துப்பாக்கி வேட்டுக்களை தீர்த்து பயமுறுத்தியது.

பேராசிரியர் இராமசாமி குறிப்பிட்டது போன்று, "அச்சே மக்களுக்கும் தமிழீழ மக்களுக்கும் தேசியவாத மட்டத்தில் கொள்கை உடன்பாடு இருப்பதாக" அங்கு யாரும் கருதவில்லை. அச்சே தனி நாடாக வேண்டுமென்று ஒரு தேசியவாத விடுதலை இயக்கம் ஆயுதப் போராட்டம் நடத்தியது உண்மை தான். புலிகளுக்கும், இலங்கை அரசுக்கும் இடையில் சமாதானப் பேச்சுவார்த்தைகள் நடந்த அதே காலகட்டத்தில் தான், அச்சே விடுதலை இயக்கமும், இந்தோனேசிய அரசும் பேச்சுவார்த்தை நடத்தின. அவர்களுக்கும் நோர்வே தான் அனுசரணையாளர்.

இறுதியில், நோர்வேயின் மத்தியஸ்தத்தின் பின்னர், அச்சே விடுதலை இயக்கமும், இந்தோனேசிய அரசும் சமாதானப் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டன. அந்த நேரத்தில் தான் சுனாமி ஆழிப் பேரலைகளினால் அச்சே மாநிலம் கடுமையாக பாதிக்கப் பட்டிருந்தது. சமாதான ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்ததற்கு அதுவும் ஒரு காரணம். அப்போது நோர்வேயும் சர்வதேச சமூகமும், அச்சே உதாரணத்தை பின்பற்றி, புலிகளும் சமாதான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட வேண்டுமென்று அழுத்தம் கொடுத்திருந்தன. அப்போது, "அச்சே வேறு, தமிழீழம் வேறு. இரண்டையும் ஒப்பிட முடியாது" என்று புலிகளும், ஆதரவாளர்களும் வாதாடி வந்தனர்.

அச்சே தேசிய இயக்கத்திற்கும், தமிழீழ தேசிய இயக்கத்திற்கும் இடையில், எந்தக் காலத்திலும் ஒருமைப்பாடு இருக்கவில்லை. அதற்குக் காரணம் தேசியவாத கொள்கையில் உள்ள குறைபாடு. உலகில் உள்ள எல்லா தேசியவாதிகளும், "தமது மொழி பேசும், தம்மின மக்களை" பற்றித் தான் அதிகம் அக்கறைப் படுவார்கள். அவர்கள் பிற இன மக்களை கண்டுகொள்வதில்லை. மொழி கடந்த ஒருமைப்பாடு இருக்குமாக இருந்தால், அது மதம் சார்ந்ததாக இருக்கும்.

தமிழ் தேசியவாதிகளைப் பொறுத்தவரையில், தமிழர்களுக்கு அப்பால் உலகில் ஏதும் இல்லை. இருப்பினும், தமிழ் தேசியவாதிகளில் பெரும்பான்மையானோர் (புலி ஆதரவாளர்கள் உட்பட), இந்து மத ஒருமைப்பாட்டின் அடிப்படையில், இந்தியா தமக்கு உதவ வேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள். அச்சே தேசியவாதிகளும் அப்படித் தான். எந்த வித்தியாசமும் கிடையாது. அச்சே மொழி பேசும் மக்களைப் பற்றி மட்டுமே அவர்களது கவலை இருக்கும். அதற்கும் அப்பால், உலக இஸ்லாமியர்களைப் பற்றிக் கவலைப் படுவார்கள்.

இந்தோனேசியாவில், அச்சே மொழிச் சிறுபான்மையினருக்கும், ஜாவா மொழிப் பெரும்பான்மையினருக்கும் இடையில் முரண்பாடுகள் இருப்பது உண்மை தான். ஆனால், அச்சே தனி நாட்டுக்கான போராட்டம் மதம் சார்ந்து எழுந்தது. ஜாவா மொழி பேசும் பெரும்பான்மையினரும், அச்சே மொழி பேசும் சிறுபான்மையினரும் இஸ்லாத்தை பின்பற்றும் மக்கள் தான். 

இந்தோனேசியாவில் முஸ்லிம்கள் பெயரளவில் மட்டுமே உள்ளனர். பெரும்பான்மையான முஸ்லிம்கள் மத சம்பிரதாயங்களை பின்பற்றுவதில்லை. அதற்கு மாறாக, அச்சே சிறுபான்மையினர் பெருமளவில் மத அடிப்படைவாதிகள். இஸ்லாமிய மத சம்பிரதாயங்களை கறாராக பின்பற்ற வேண்டும் என்று நினைப்பவர்கள். ஷரியா சட்டம் கொண்டு வர வேண்டுமென்பது, அவர்களது ஆயுதப் போராட்டத்திற்கான முக்கியமான கோரிக்கையாக இருந்தது.

அச்சே மாநில அரசு, ரோஹிங்கியா அகதிகளை ஏற்றுக் கொண்ட காரணம், அவர்கள் முஸ்லிம்கள் என்பது தான். தற்போது கரையொதுங்கியுள்ள தமிழ் அகதிகளை ஏற்றுக் கொள்வதற்கு அப்படி எந்தக் காரணமும் இருக்கவில்லை. பேராசிரியர் இராமசாமி குறிப்பிடுவது போன்று, "பொதுவான தேசியவாத உணர்வு" எதுவும் உலகில் இல்லை. தேசியவாதிகளுக்கு இடையில் அப்படி ஓர் ஒருமைப்பாடு ஏற்படுவது சாத்தியமே இல்லை. அவரவருக்கு அவர்களது மொழியும், இனமும் தான் பெரிதாகத் தோன்றும். அல்லாவிட்டால் ஒரே மத ஒருமைப்பாடு இருக்க வேண்டும். அதற்குப் பெயர் தான் தேசியவாதம்.


அச்சே கடலோரம் கரையோதிங்கிய தமிழ் அகதிகள் பற்றி இந்தோனேசிய தொலைக்காட்சி செய்தி அறிக்கை: 

Wednesday, June 15, 2016

சோம‌வ‌ன்ச அமர‌சிங்க‌ : வலதுசாரி சந்தர்ப்பவாத அரசியலின் மறைவு

மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) முன்னாள் த‌லைவ‌ர் சோம‌வ‌ன்ச அமர‌சிங்க‌, தனது 74 வ‌து வ‌ய‌தில் கால‌மானார். முதற்கண் அன்னாருக்கு எனது அஞ்சலியையும், குடும்பத்தாருக்கு ஆழ்ந்த அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

சோமவன்ச, "ஜேவிபி யின் முள்ளிவாய்க்கால்" என்று சொல்ல‌க் கூடிய‌, 1989 - 1991 ப‌டுகொலைக‌ளில் இருந்து உயிர் த‌ப்பிய சில தலைவர்களில் ஒருவராவார். அந்தக் காலத்தில் தலைவர் ரோகன விஜேவீர உட்பட, தலைமையில் இருந்த அத்தனை பேரும் சிறிலங்கா இராணுவத்தால் அழித்தொழிக்கப் பட்டனர்.

சோமவன்ச சில தமிழ் நண்பர்களின் உதவியால் இந்தியாவுக்கு தப்பிச் சென்றிருந்தார். பின்ன‌ர் அங்கிருந்து பிரிட்ட‌ன் சென்று அக‌தித் த‌ஞ்ச‌ம் கோரி பல வருட காலம் அந்நாட்டில் ஒரு அகதியாக வாழ்ந்து வந்தார். சந்திரிக்கா குமாரதுங்க ஜனாதிபதியாக இருந்த காலத்தில், பொது மன்னிப்பு வழங்கப் பட்ட பின்னர் தாயகம் திரும்பி இருந்தார்.

புலம்பெயர்ந்து வாழ்ந்த போதிலும், சோமவன்ச லண்டனில் இருந்து கொண்டே இலங்கையில் இருந்த கட்சி உறுப்பினர்களுடன் தொடர்புகளை பேணி வந்தார். பழைய ஜேவிபியின் அழிவில் இருந்து தப்பிய மூத்த தலைவர்களில் ஒருவர் என்ற காரணத்தினால் தான், சோமவன்சவுக்கு கட்சியின் தலைமைப் பதவி கிட்டியது.

தொண்ணூறுக‌ளின் பிற்ப‌குதியில், ஜே.வி.பி. முற்றாக‌ அழித்தொழிக்க‌ப் ப‌ட்ட‌ நிலையில், முற்றிலும் புதியதொரு அரசியல் கட்சியாக உருவாக்கப் பட்டது. அரசியலை விட்டொதுங்கி உதிரிக‌ளாக‌ இருந்த‌ க‌ட்சி உறுப்பின‌ர்க‌ளையும், ஆத‌ர‌வாள‌ர்க‌ளையும் ஒன்றிணைத்து மீண்டும் கட்சி கட்டியெழுப்பப் பட்டிருந்தது.

இருப்பினும், புதிய ஜேவிபி பாராளும‌ன்ற‌ சாக்கடை அர‌சிய‌லுக்குள் அமிழ்ந்து போன‌து. க‌ட்சியை வ‌ல‌துசாரிப் பாதையில் வ‌ழி ந‌ட‌த்திய‌தில் சோம‌வ‌ன்ச‌ அமர‌சிங்க‌வின் த‌லைமைப் பாத்திர‌ம் கணிசமான அளவில் இருந்தது. தேர்த‌ல் கால‌ங்க‌ளில் பிற‌ வ‌ல‌துசாரிக் க‌ட்சிக‌ள் போன்று, ஜே.வி.பி.யும் இன‌வாத‌ம் பேசி வாக்கு வேட்டையாடிய‌தை ம‌றைக்க‌ முடியாது. சோமவன்ச அமெரிக்கத் தூதுவராலயத்துடன் இரகசியத் தொடர்பில் இருந்ததை, விக்கிலீக்ஸ் அம்பலப் படுத்தி இருந்தது.

முன்பு பிரேமதாச ஜனாதிபதியாக இருந்த காலத்தில், சிறிலங்கா அரசு ஜேவிபியையும், புலிகளையும் பிரித்து வைப்பதில் கணிசமான வெற்றி பெற்றிருந்தது. சில கசப்பான அனுபவங்கள் காரணமாக புலிகள் மேல் ஏற்பட்ட வன்மம், பிற்காலத்தில் ஜேவிபியை போர் ஆதரவு நிலைப்பாடு எடுக்கத் தூண்டியது.

ஏற்கனவே ஒரு அழித்தொழிப்பு போரில் தப்பிய இயக்கம், இன்னொரு அழித்தொழிப்பு போரை ஆதரித்த முரண்நகை அரங்கேறியது. "போரில் வெல்வது எப்படி?" என்று ஜேவிபி நடத்திய பாடத்தை, மகிந்த ராஜபக்ச சுவீகரித்துக் கொண்டார். போர் முடியும் வரையில் ஜேவிபியை பயன்படுத்தி விட்டு, தேவை முடிந்தவுடன் தூக்கி வீசி விட்டார். ஜேவிபி இன் வீழ்ச்சிக்கு காரணமான அந்தத் தவறான அரசியல் அணுகுமுறைக்கு, கடைசி வரையில் சோமவன்ச பொறுப்பேற்கவில்லை.

சோம‌வ‌ன்ச‌ அம‌ர‌சிங்க‌ த‌லைமையிலிருந்த‌ கால‌த்தில், ஜேவிபி ராஜ‌ப‌க்ச‌ அர‌சாங்க‌த்திற்கு முண்டு கொடுத்தது. இத‌னால் ஆதாய‌மடைந்த‌ ம‌கிந்த‌ ராஜபக்ச, அத‌ற்கு "ந‌ன்றிக் க‌ட‌னாக‌" ஜேவிபி யில் இருந்த‌ விம‌ல் வீர‌வ‌ன்ச‌ த‌லைமையிலான‌ தீவிர‌ வ‌ல‌துசாரிக‌ளை பிரித்தெடுத்து த‌ன்னுட‌ன் சேர்த்துக் கொண்டார். (இறுதிக் காலத்தில், கட்சியை விட்டு வெளியேற்றப் பட்ட பின்னர், சோமவன்ச வெளிப்படையாகவே ராஜபக்சவை ஆதரித்தார்.)

சோம‌வ‌ன்ச‌ அம‌ர‌சிங்க‌வின் வ‌ல‌துசாரி ச‌ந்த‌ர்ப்ப‌வாத‌ அர‌சிய‌ல், கட்சிக்கு மட்டுமல்ல, தனிப்பட்ட முறையில் அவ‌ருக்கும் ந‌ன்மையையும் உண்டாக்க‌வில்லை. கட்சியின் தலைமையில் ஏற்பட்ட கொள்கை முரண்பாடு காரணமாக, கட்சி இர‌ண்டாகப் பிள‌வுவுற்றது. 

தீவிர‌ இட‌துசாரிக‌ள் குமார் குண‌ர‌ட்ன‌ம் த‌லைமையில் பிரிந்து சென்ற‌னர். குமார் குணரட்ணம் ஆயுதப் போராட்ட காலத்தில் இருந்து தலைமறைவான தலைவராக இயங்கியவர். அதனால், "கடும்போக்காளர்கள்" என்று அழைக்கப் படும், "பழைய" இடதுசாரிகள், குமார் குணரட்னத்தை ஆதரித்ததில் வியப்பில்லை.  

பிளவின் பின்னர் எஞ்சிய ஜேவிபி இலும், சோமவன்சவின் தலைமைக்கு எதிரான விமர்சனங்கள் தொடர்ந்தன. சோமவன்சவின் வலதுசாரி சந்தர்ப்பவாத அரசியல், கட்சியை அழிவுப் பாதையில் இட்டுச் சென்றதை பலர் அனுபவத்தில் உணர்ந்து கொண்டனர். 

இறுதியில், சோம‌வ‌ன்ச‌வின் த‌லைமையில் அதிருப்தியுற்ற‌ ஜேவிபி ம‌த்திய‌ குழு உறுப்பின‌ர்க‌ள் அவரை ப‌த‌வியிற‌க்கினார்க‌ள். ஜேவிபி இன் மறுமலர்ச்சியில் பெரும் பங்கெடுத்த ஒருவர், இறுதியில் அந்தக் கட்சியினாலேயே ஓரங் கட்டப் பட்டார். சோமவன்ச பதவி அகற்றப் பட்ட பின்னர், கட்சிக்குள் இடதுசாரி குழுவினரின் செல்வாக்கு அதிகரித்தது.

கட்சிக்குள் தோன்றிய புதிய தலைமையுடனும் சோமவன்ச முரண்பட்டார். ஒரு கட்டத்தில், அவராகவே கட்சியை விட்டு விலகும் நிலைமை ஏற்பட்டது. அத‌ற்குப் பிற‌கு, சோம‌வ‌ன்ச‌ அமர‌சிங்க த‌னியாக‌ ஒரு "பௌத்த‌ - தேசிய‌வாத‌" க‌ட்சியை உருவாக்க முனைந்து தோல்வியுற்றார்.‌ இறப்பதற்கு சில நாட்களுக்கு முன்னர், ராஜபக்சவை ஆதரித்து அரசியல் செய்யப் போவதாக சொல்லிக் கொண்டிருந்தார். இருப்பினும் அவரை யாரும் கண்டுகொள்ளவில்லை. 

சோமவன்ச தனது இறுதிக் காலத்தில், பகிரங்கமாகவே வலதுசாரி அரசியல் கருத்துக்களை கூறிக் கொண்டிருந்தார். முந்திய காலங்களில், அவை அவரது தனிப்பட்ட கருத்தாகவிருந்தாலும், ஜேவிபியையும் பாதித்திருந்தது. சோமவன்ச அமரசிங்கவின் மறைவு, ஜேவிபியின் பின்னடைவுக்கு காரணமான, வலதுசாரி சந்தர்ப்பவாத அரசியலின் மறைவாக, இனிவரும் வரலாற்றில் எழுதப் படலாம்.

Wednesday, June 08, 2016

சோமாலி சிறுமிக்காக கண்ணீர் வடிக்கும் மேற்குலக ஓநாய்கள் - சினிமா விமர்சனம்


சினிமா எனும் கலை ஒரு வகையில் அரசியல் பிரச்சாரம் தான். ஹாலிவூட் திரைப்படங்கள், மேற்கத்திய அரசியலை உலகம் முழுவதும் பிரச்சாரம் செய்ய உதவுகின்றன. தற்போது திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கும் Eye in the Sky (http://www.imdb.com/title/tt2057392/) எனும் திரைப்படம், அமெரிக்காவின் ட்ரோன் யுத்தத்திற்கு ஆதரவாக பிரச்சாரம் செய்கின்றது.

தென்னாபிரிக்க டைரக்டர் Gavin Hood இந்தத் திரைப்படத்தை எடுத்துள்ளார். அவரும் அதில் ஒரு பாத்திரத்தில் நடிக்கிறார். இந்தப் படம் தென்னாபிரிக்காவில் படமாக்கப் பட்டாலும், ஒரு பிரிட்டிஷ் தயாரிப்பாக இருக்கலாம். 

எது எப்படி இருப்பினும், இந்தத்  திரைப்படத்தின் நோக்கம் அமெரிக்காவின் ட்ரோன் தாக்குதல்களுக்கு பிரிட்டன் வக்காலத்து வாங்குவதாக உள்ளது.

இது தான் கதைச் சுருக்கம்: 

கென்யாவில் அல்ஷஹாப் இயக்கத்தின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் கதை நடக்கிறது. (அது சோமாலியாவாகவும் இருக்கலாம்) அங்கே ஒரு அமெரிக்க பிரஜையும், இரண்டு பிரிட்டிஷ் பிரஜைகளும் தாக்குதலுக்கு சதித்திட்டம் தீட்டுகின்றனர். அதில் ஒருவர் மதம் மாறிய வெள்ளையின ஆங்கிலேய பெண்மணி, மற்றய இருவரும் சோமாலிய பூர்வீகம் கொண்ட இளைஞர்கள்.

கென்யா இராணுவத்துடன் கூட்டுச் சேர்ந்து இயங்கும், பிரிட்டிஷ் படையினர், அவர்களை ட்ரோன் மூலம் தாக்கியழிக்க திட்டமிடுகின்றனர். சோமாலிய உளவாளிகளை வைத்து தகவல் திரட்டுகின்றனர். கமெரா பொருத்திய இயந்திரப் பறவைகளை பறக்க விட்டு மறைவிடங்களை கண்காணிக்கின்றனர்.

எதிர்பாராத விதமாக, சதித்திட்டம் தீட்டும் தீவிரவாத குழுவினர் தங்கியிருக்கும் வீட்டுக்கு அருகில் ஒரு சிறுமி இருக்கிறாள். அந்த வீட்டின் மதிலருகில், தெருவில் கடை போட்டு, பாண் (பிரெட்) விற்றுக் கொண்டிருக்கிறாள்.

ட்ரோன் தாக்குதலுக்கு தயாராகும் பிரிட்டிஷ் படை அதிகாரிகள், தமது நாட்டு அமைச்சர்கள் மட்டுமல்லாது, அமெரிக்க அமைச்சர்களையும் தொடர்பு கொண்டு அனுமதி கோருகின்றனர். "அமெரிக்க பிரஜையாக இருந்தாலும் அல்ஷஹாப் இயக்கத்தில் சேர்ந்து விட்டால் எங்கள் எதிரி..." என்று அமெரிக்க அமைச்சர் கூறுகின்றார்.

சோமாலிய உளவாளி இயக்கிக் கொண்டிருக்கும் சின்னஞ்சிறிய இயந்திர வண்டு ஒன்றில் வீடியோக் கமெரா பொருத்தப் பட்டுள்ளது. அதன் வீடியோவில் இருந்து, அல்ஷஹாப் உறுப்பினர்கள் அந்த வீட்டிற்குள் தற்கொலைத் தாக்குதலுக்கு திட்டமிடுவது தெரிய வருகின்றது. பிரிட்டிஷ் படை அதிகாரிகள், அதைக் காட்டி ட்ரோன் தாக்குதலை நியாயப் படுத்துகின்றனர்.

"தற்கொலைக் குண்டுதாரி வெளியே போனால் ஏராளமான பொது மக்களை கொல்லப் போகிறான். அதைத் தடுத்து நிறுத்தும் முயற்சியாக, ட்ரோன் தாக்குதலில் ஒரு சிறுமி கொல்லப் பட்டாலும் பரவாயில்லை" என்கின்றனர். அப்படி இருந்தும் பிரிட்டிஷ் அமைச்சர் அனுமதி தர மறுக்கிறார். "அல்ஷஹாப் தாக்குதலில் ஏராளமான  பொதுமக்கள் கொல்லப்  பட்டால், அது எமக்கு பிரச்சார  வெற்றி. அதே  நேரம், எமது ட்ரோன் தாக்குதலில் சிறுமி கொல்லப் பட்டால், அது அல்ஷஹாப் பிரச்சாரத்திற்கு கிடைத்த வெற்றி" என்று வினோதமான காரணம் ஒன்றைக்  கூறுகின்றார்.

கடைசியில் எப்படியோ, அமைச்சர்கள் அனைவரையும் ஒத்துக் கொள்ள வைத்து, மேலதிகாரிகள் உத்தரவு பிறப்பித்தாலும்,  ட்ரோன் விமானத்தை இயக்கிக் கொண்டிருக்கும் படைவீரர்கள் குண்டு வீசத் தயங்குகின்றனர். அதற்குக் காரணம் "அந்த இடத்தில் இருக்கும் அப்பாவி சிறுமியும் கொல்லப் பட்டு விடுவாள்"!

இதற்கிடையே, அவர்களது உத்தரவின் படி சிறுமியிடம் செல்லும் சோமாலிய உளவாளி, அவளிடம் இருந்த பாண் எல்லாவற்றையும் வாங்கிக் கொண்டு வீட்டுக்கு அனுப்பப் பார்க்கிறான். ஆனால், தற்செயலாக அந்த இடத்திற்கு வரும் அல்ஷஹாப் போராளிகள், அவன் "கென்யா இராணுவத்திற்கு காட்டிக் கொடுப்பவன்" என்பதை கண்டுபிடித்து விடுகின்றனர். அதனால் சிறுமியை காப்பாற்றும் திட்டம் பாழாகின்றது.

இருப்பினும், குண்டு வீச்சின் தாக்குதல் திறனை குறைக்கலாம் என திட்டமிடுகின்றனர். இதற்கு மேலும் பொறுமையாக இருக்க முடியாது என்ற நிலையில், அல்ஷஹாப் சதிகாரர்கள் இருக்கும் வீட்டின் மீது ட்ரோன் குண்டு வீசுகின்றது. அந்தத் தாக்குதலில் படுகாயமுற்ற சிறுமி, மருத்துவமனையில் இறக்கிறாள். வெற்றிகரமான தாக்குதலை நடத்தி முடித்தாலும், சம்பந்தப் பட்ட எல்லோரும் தாக்குதலில் பலியான சிறுமிக்காக அழுகிறார்கள்! அத்துடன் படம் முடிகின்றது.

படம் முழுவதும் ஒரு சிறுமியின் உயிரைக் காப்பாற்றுவதற்காக, அரசுத் தலைவர்களும், இராணுவத் தளபதிகளும் மனம் இரங்குவது நம்பும் படியாக இல்லை. ட்ரோன் தாக்குதல்களில் குழந்தைகள் கொல்லப் பட்ட செய்திகளை கேள்விப் பட்டவர்களுக்கு, அது வெறும் பாசாங்கு. சினிமா எமக்குக் காட்டுவது உண்மையான கண்ணீர் அல்ல, அது நீலிக் கண்ணீர். ஆடு நனைகிறதென்று ஓநாய் அழுத கதை இது தான்.

அது சினிமாப் படம். நிஜ வாழ்வில் உலகம் எப்படி இருக்கின்றது? அமெரிக்க படையினர், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், சோமாலியா, யேமன் போன்ற பல நாடுகளில் இன்று வரைக்கும் ட்ரோன் தாக்குதல்களை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். சினிமாவில் வருவது போலில்லாமல், பல தாக்குதல்கள் இரவு நேரத்தில் நடக்கின்றன. இருட்டுக்குள் துல்லியமாகப் பார்க்கும் கமெரா பொருத்தப் பட்டாலும், ஆயுதபாணிகளுக்கும், பொது மக்களுக்கும் வித்தியாசம் தெரிவதில்லை.

பெரும்பாலும் ஆயுதபாணி இயக்கங்களின் முக்கிய தலைவர்களை குறி வைத்துக் கொல்வதற்கு ட்ரோன்கள் பயன்படுகின்றன. எல்லா நேரத்திலும் உளவுத் தகவல்கள் சரியாக அமைந்து விடுவதில்லை. எல்லா நேரத்திலும் குண்டுகள் ஆயுதபாணிகளை மட்டும் கொல்வதில்லை. பொது மக்களின் வீடுகள் மீதும் குண்டுகள் போடப் பட்டுள்ளன. தெருவில் சென்ற பொதுமக்களும் கொல்லப் பட்டுள்ளனர். அதில் பிள்ளைகளும் அடங்குவார்கள். 

பொது மக்களின் இழப்புகளை ஏற்றுக் கொள்ளும் அமெரிக்க அரசு, ஒப்பீட்டளவில் மிகக் குறைவு என்று சொல்கின்றது. ஆனால், ட்ரோன் தாக்குதல் நடத்திய படையினர் தாம் அப்பாவிப் பொது மக்களை, அதிலும் குழந்தைகளையும் கொன்ற குற்றவுணர்ச்சி காரணமாக வருந்துகின்றனர். ஆனால், எல்லோரும் அப்படியான மனோபாவத்துடன் இருப்பதில்லை. 

"பயங்கரவாதிகளை ஒழித்துக் கட்டி விட்டோம்" என்று குதூகலிப்பவர்கள் தான் அதிகம். குறிப்பாக, அரச மட்டத்தில் யாரும் வருந்துவதில்லை. பொதுமக்கள், குழந்தைகள் கொல்லப் பட்டதாக தகவல் வந்தாலும், தாங்கள் பயங்கரவாதிகளை மட்டுமே கொன்றோம் என்று சாதிப்பார்கள். சினிமாவில் காட்டுவது மாதிரி அவர்கள் யாரும் மனச்சாட்சியுடன் நடப்பதில்லை. பொதுமக்களின் உயிரிழப்புகள் குறித்து என்றைக்குமே கவலைப் பட்டதில்லை.

Monday, June 06, 2016

ஐரோப்பாவில் வேலையற்றோர் நவீன அடிமைகளாக சுரண்டப் படுகின்றனர்!


மேற்கு ஐரோப்பிய நாடுகளில் உள்ள நலன்புரி அரசின் திட்டங்களில் ஒன்று, வேலையற்றவர்களுக்கும் அரசு உதவித் தொகை வழங்கப் படுவது. வேலையிழந்தவர்களுக்கு முதலில் குறிப்பிட்ட காலம், முன்பு அவர்கள் கட்டி வந்த காப்புறுதிப் பணத்தில் இருந்து மாதாந்த உதவித் தொகை வழங்குவார்கள். தொடர்ந்தும் வேலையில்லாமல் இருந்தால், அரசு நிதியில் இருந்து பணம் கொடுப்பார்கள்.

இதைப் பற்றிக் கேள்விப் படும் பலர், "வேலைக்குப் போகாமல் சும்மா இருந்து சாப்பிடுகிறார்கள்..." என்று நினைக்கலாம். ஆனால், உண்மை நிலைமை அதுவல்ல. நீண்ட காலம் உதவித் தொகை கிடைக்கும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. கூடிய சீக்கிரமே ஏதாவதொரு வேலைக்கு அனுப்புவது தான் அரசின் நோக்கமாக இருக்கும். அதற்காக எல்லா வகையான முயற்சிகளையும் செய்வார்கள்.

அது மட்டுமல்ல, ஒருவரது முன்னைய தொழில் அனுபவம், கல்வித்தகைமை எப்படியானதாக இருந்தாலும் பரவாயில்லை. எந்த வேலையையும் ஏற்றுச் செய்வதற்கு தயாராக இருக்க வேண்டும். உதாரணத்திற்கு ஒருவர் முன்பு மருத்துவராக அல்லது ஆசிரியராக வேலை செய்திருப்பார். அவருக்கு துப்பரவுப் பணி வேலை கிடைத்தாலும் மறுக்காமல் ஏற்றுக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் மாதாந்த உதவித்தொகை வெட்டப் படும்.

குறைந்தது பத்து அல்லது இருபது வருடங்களுக்கு முன்னரான நிலைமை வேறு. அந்தக் காலங்களில் தனியார் நிறுவனங்களை விட, ஏராளமான அரசு நிறுவனங்களும் இருந்தன. ஆகையினால், தனியார் நிறுவனத்தில் தட்டிக் கழிக்கப் பட்ட ஒருவருக்கு அரசு நிறுவனத்தில் வேலை கொடுக்கக் கூடியதாக இருந்தது. ஆனால், கடந்த காலத்தில் அரசு தனது நிறுவனங்களை தனியாருக்கு விற்று விட்டது அல்லது அரசு செலவினக் குறைப்பை சாட்டாக வைத்து மூடி விட்டது.

பாதுகாப்புப் படைகள், அரசு அலுவகங்களை தவிர, அனைத்தையும் தனியாரிடம் ஒப்படைக்கும் அரசின் திட்டம் மெல்ல மெல்ல செயற்படுத்தப் பட்டு வந்துள்ளது. பொருளாதார நெருக்கடி ஏற்பட்ட காலத்தில் தனியார் நிறுவனங்கள் ஆட்குறைப்பு செய்து விட்டன. அதனால் வேலையற்றோர் எண்ணிக்கையும் அதிகரித்து விட்டது. தற்போதுள்ள பிரச்சினை என்னவெனில், பொருளாதாரம் வளர்வதாக சொல்லப் பட்டாலும், சாதாரண பொதுமக்கள் அதை உணரக் கூடியதாகவில்லை. தனியார் துறை புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கத் தவறி விட்டது.

இதனால் ஒரு பக்கம் வேலையில்லாமல் இருப்போர் எண்ணிக்கை குறையவில்லை. குறிப்பாக, நாற்பது வயதுக்கு மேற்பட்டோர், வெளிநாட்டவர்கள் அதிகமாக பாதிக்கப் படுகின்றனர். எந்த முதலாளியும் அவர்களை வேலைக்கு எடுக்க தயாராக இருக்கவில்லை. இந்த நிலையில், அவர்கள் வருடக் கணக்காக அரசு உதவித் தொகையில் தங்கியிருக்க வேண்டிய நிலைமை ஏற்படுகின்றது. அரசு அவர்களை நவீன அடிமைகளாக பயன்படுத்திக் கொள்கின்றது!


நெதர்லாந்தில் நான் நேரில் கண்ட அனுபவங்களை இங்கே பகிர்ந்து கொள்கிறேன்:

வேலையற்றோருக்கு உதவித்தொகை வழங்கும் பொறுப்பேற்றுள்ள நகர சபை நிர்வாகம், அவர்களுக்கு வேலை தேடிக் கொடுக்கும் முயற்சிகளில் இறங்குவதில்லை. (வேலை வாய்ப்பு இருந்தால் தானே?) அதற்குப் பதிலாக "வேலை பழகும் நிலையங்களுக்கு" அனுப்புகின்றது. இந்தத் திட்டத்தை மேம்போக்காக பார்த்தால் தொழிற்கல்வி போன்று தோற்றமளிக்கும். ஆனால், உண்மை நிலவரம் அதுவல்ல.

அதாவது, வேலை இல்லாதவர்கள் "தொழிற்கல்வி" படிப்பதற்கு பாடசாலைக்கு செல்கிறார்கள் என்று நினைத்தால் ஏமாந்து போவீர்கள். அங்கே எதையும் படிப்பதில்லை. மாறாக, வாரத்திற்கு 32 மணிநேரம் வேலை செய்ய வேண்டிய நிர்ப்பந்தம். ஆறு மாதங்களுக்கு ஒப்பந்தம் போடுவார்கள். அதற்குப் பிறகு மூன்று மாதங்கள் நீடிக்கலாம். ஆனால், நான் சந்தித்த சிலர் இரண்டு வருடங்களாக இலவச வேலை செய்கிறார்கள்.

"வேலை பயிலும் நிலையங்களிலும்" விருப்பமான தெரிவுகள் மிகவும் குறைவு. அனேகமாக, துப்பரவுப் பணி, உணவுச்சாலை (கேட்டரிங்) வேலை, தோட்ட வேலை, பொருள் உற்பத்தி போன்ற அடித்தட்டு தொழிலாளர்கள் செய்யும் வேலைகள் தான் கிடைக்கும். இதற்கு முன்னர் ஆசிரியராக, எஞ்சினியராக வேலை செய்திருந்தாலும், அவர் அடித்தட்டு தொழிலாளியாக வேலை செய்ய வேண்டிய நிர்ப்பந்தம்.
கார்ட்டூன்: "தாழ்த்தப் படுதலுக்கு
அடங்கி வாழப்  பழகி விட்டோம்."

தொழிலகங்களுக்கு பொறுப்பாக ஒரு மனேஜர் இருப்பார். அவர் "வேலை பழகும் ஒப்பந்தம்" செய்வதவுடன் மறைந்து விடுவார். அதற்குப் பிறகு அவரைப் பிடிக்க முடியாது. ஏதாவது தேவைக்கு தொலைபேசி அழைப்பு எடுத்தாலும் கிடைக்க மாட்டார். குறைந்தது இரண்டு மாதங்களுக்குப் பிறகு மீண்டும் தலைகாட்டுவார். 

ஒழுங்காக வேலை செய்யவில்லை என்று பல குற்றச்சாட்டுகளை அடுக்குவார். "தவறுகளை" திருத்திக் கொள்வதற்கு இன்னொரு மாதம் சந்தர்ப்பம் தருவதாகவும், அதற்குப் பின்னரே வெளியில் சம்பளத்துடன் கூடிய வேலைக்கு பரிந்துரை செய்வதாகவும் சொல்வார். ஆனால், எத்தனை மாதங்கள் சென்றாலும் அது மட்டும் நடக்காது. "ஒழுங்காக" வேலை செய்பவர்களுக்கும், அங்கே வேலை இருக்கிறது, இங்கே வேலை இருக்கிறது என்று சொல்லிச் சொல்லி ஏமாற்றிக் கொண்டிருப்பார்கள்.

தொழிலகங்களில் வேலையாட்களை மேற்பார்வை பார்ப்பதற்கு இரண்டு அல்லது மூன்று ஊழியர்கள் இருப்பார்கள். உண்மையில் அங்கே அவர்கள் மட்டும் தான் சம்பளத்திற்கு வேலை செய்கிறார்கள். ஏனையோர் எல்லோரும் இலவசமாக வேலை செய்யும் நவீன அடிமைகள்! ஒவ்வொரு வாரமும் புதிய புதிய அடிமைகளை கொண்டு வந்து சேர்ப்பார்கள். வேலைப்பளு, சுரண்டலை எதிர்க்க முடியாத கையாலாகத்தனம் காரணமாக, பலர் அடிக்கடி சுகயீன விடுப்பு எடுக்கின்றனர். ஆனால், அவர்கள் வேண்டுமென்றே வீட்டில் நிற்பதாக மனேஜர் குற்றம் சாட்டுவார்.

வேலையற்றவர்களின் உழைப்பை அரசு இலவசமாக சுரண்டுகின்றது என்பதற்கு ஏராளமான ஆதாரங்கள் உள்ளன. ஒரு தடவை நான் பூந் தோட்டம் ஒன்றில் வேலை செய்தேன். கூடாரங்களுக்குள் பூஞ் செடிகளை தண்ணீர் ஊற்றி வளர்த்து வர வேண்டும். வளர்ந்த செடிகளை கொண்டு சென்று சந்தையில் விற்பார்கள். கடைகளில் பூஞ்செடிகளை வாங்கிச் சென்று வீடுகளில் அழகிற்கு வைக்கும் வாடிக்கையாளர்களுக்கு, அது அடிமைகளின் உழைப்பால் உருவானது என்ற உண்மை தெரியாது.

நான் இன்னொரு தடவை கேன்டீன் ஒன்றில் கேட்டரிங் வேலை செய்தேன். தினசரி காலையில் சான்ட்விச் தயாரிக்க வேண்டும். வேடிக்கை என்னவென்றால், அந்த உணவுச் சாலைக்கு மதியம் சாப்பிட வரும் அத்தனை பேரும் நகர சபைக்கு வேலை செய்யும் அரசு ஊழியர்கள்! நாங்கள் அங்கே சம்பளத்திற்கு வேலை செய்வதாக அவர்கள் அப்பாவித்தனமாக நினைக்கிறார்கள். ஏனென்றால், அங்கே வைக்கப் பட்டிருக்கும் சான்ட்விச்களை அவர்கள் சாதாரண சந்தை விலைக்கே வாங்கிச் செல்கிறார்கள்.

அது மட்டுமல்ல, அந்த இடத்தில் சில நேரம் ஒன்றுகூடல்கள் நடக்கும். பெரிய பெரிய அரசு அதிகாரிகள் அங்கே சாப்பிட வருவார்கள். அங்குள்ள மண்டபத்தில் கூட்டங்கள் நடக்கும். சிலநேரம், வெளியாரும் மண்டபத்தை வாடகைக்கு எடுத்திருப்பார்கள். அவர்கள் தமக்கான கேட்டரிங் சேவைக்கு பணம் கொடுக்கிறார்கள். அதுவும் சந்தை மதிப்பின் படியே தீர்மானிக்கப் படுகின்றது. ஒன்று கூடல், கூட்டங்களுக்கு ஐம்பது பேர் சமூகமளித்தாலும், அவர்களுக்கான உணவை நாங்கள், அதாவது நவீன அடிமைகள் தான் தயார் படுத்த வேண்டும்.

நாளொன்றுக்கு எட்டு மணிநேர வேலை என்றால், ஓய்வொழிச்சல் இல்லாத வேலையாக இருக்கும். அரை மணிநேர இடைவேளை உண்டு. அப்போது தான் சக தொழிலாளர்களுடன் (அடிமைகளுடன்) மனம் விட்டுப் பேசலாம். அங்குள்ள நிலைமை பற்றி யாரும் நல்லதாக பேச மாட்டார்கள். "கட்டாய வேலை வாங்குகிறார்கள்... உழைப்பை சுரண்டுகிறார்கள்...ஏமாற்றுகிறார்கள்..." இப்படிப் பல முறைப்பாடுகளை கேட்கலாம்.

கேட்டரிங் வேலை செய்பவர்களாக இருந்தாலும், விற்பனைக்கு வைக்கப் படும் சான்ட்விச் எதையும் எடுத்து சாப்பிட முடியாது. இறைச்சிப் பதார்த்தங்களை சாப்பிட முடியாது. விலை குறைந்த தரமற்ற பாண் (பிரெட்), பாவனை நாள் முடியும் நிலையில் உள்ள சீஸ், பால் இவற்றை மட்டும் உண்ணலாம்.

எல்லா தொழிலகங்களிலும், மதிய இடைவேளையின் போது மாத்திரம் தொலைபேசி பாவிக்கலாம் என்ற கட்டுப்பாடு உள்ளது. ஒருவேளை வேலைக்கு விண்ணப்பித்த நிறுவனத்தில் இருந்து அழைப்பு வந்தால்? பிள்ளைக்கு சுகமில்லை என்று அழைப்பு வந்தால்? இந்தக் குறைகளை யாரிடம் சொல்வது? விதியை நொந்து கொள்ள வேண்டியது தான்.

மேற்படி கட்டுப்பாடுகள் எல்லாம், இலவசமாக உழைக்கும் நவீன அடிமைகளுக்கு மட்டுமே செல்லுபடியாகும். அவர்களின் மேற்பார்வையாளர்கள், அதாவது சம்பளத்திற்கு வேலை செய்வோர், நிறைய சலுகைகளை அனுபவிப்பார்கள். அரை மணிநேரத்திற்கும் அதிகமாக, சிலநேரம் இரண்டு மணித்தியாலங்கள் உணவு இடைவேளை எடுத்துக் கொள்வார்கள். அது மட்டுமல்ல, காலையில் ஓரிரு மணிநேரம் வேலை செய்வதோடு சரி. அதற்குப் பிறகு அவர்களை காணக் கிடைக்காது. எங்கே போகிறார்கள்? என்ன செய்கிறார்கள்? யாருக்குத் தெரியும்?

இவ்வளவு கொடுமைகளையும் அனுபவித்துக் கொண்டு ஏன் அடிமை வேலை செய்ய வேண்டும்? வேறு வழி? தனியார் துறை தவறு செய்தால் அரசிடம் முறையிடலாம். அரசே அந்த தவறை செய்தால்? யாரிடம் முறையிடுவது? அதனால் பலர் இதனை சாதாரணமாக ஏற்றுக் கொள்ள வேண்டிய நிர்ப்பந்தத்தில் உள்ளனர். அது மட்டுமல்ல, கட்டாய வேலை செய்ய மறுத்தால், உதவித் தொகையை வெட்டி விடுவார்களே என்று அஞ்சுகிறார்கள். உண்மையில் அப்படியும் நடந்துள்ளது.

ஒரு கணம் சிந்தித்துப் பாருங்கள். பொதுவாக, அரச உதவித் தொகையில் தங்கி இருப்பவர்கள், அந்நாட்டின் வறுமைக் கோட்டுக்கு கீழே வாழ்கிறார்கள். மாதாந்தம் கிடைக்கும் சொற்பத் தொகை அன்றாட செலவுக்கே கட்டுப்படியாகாது. எப்படியும், வீட்டு வாடகை, மின்சாரம், எரிவாயு போன்ற அத்தியாவசிய செலவுகளுக்கு முக்கால்வாசி தொகை செலவாகிடும். அதையும் வெட்டிக் குறைத்தால் கடனாளியாக வேண்டியிருக்கும். தலைக்கு மேல் எவ்வளவு கடன் ஏறினாலும் அரசு அக்கறைப் படப் போவதில்லை. மீண்டும் கட்டாய வேலை வாங்கும் தொழிலகம் சென்று அவர்களது கட்டுப்பாடுகளுக்கு அடங்கி ஒழுங்காக வேலை செய்யச் சொல்வார்கள்.

உண்மையில் அரசால் இந்தப் பிரச்சினையை தீர்க்க முடியும். அவர்களுக்கு அடிப்படை சம்பளம் கொடுத்தாவது வேலைக்கு வைத்துக் கொள்ள முடியும். ஆனால் செய்யப் போவதில்லை. 

வேலையற்றோரின் உழைப்பை இலவசமாக சுரண்டுவதால், அரசுக்குக் கிடைக்கும் இலாபம் மிகவும் அதிகமாகும். உண்மையில், அரசு மில்லியன் கணக்கான யூரோக்களை அடிமை உழைப்பாளிகளிடம் இருந்து திருடியுள்ளதாக உள்ளூர் பத்திரிகை ஒன்று ஆதாரங்களுடன் எழுதி உள்ளது. (பார்க்க: Gemeenten verdienen half miljoen aan 'dwangarbeid'http://www.gelderlander.nl/regio/achterhoek/aalten/gemeenten-verdienen-half-miljoen-aan-dwangarbeid-1.4879591

அடிமை உழைப்பாளிகளிடம் இருந்து சுரண்டப் பட்ட பணம் எங்கே போகின்றது? ஏன் அதில் ஒரு பகுதியாவது இலவசமாக உழைத்தவர்களுக்கு திருப்பிக் கொடுக்கப் படுவதில்லை?

தொழிலகங்களில் சம்பளம் இல்லாத தொழிலாளர்களை வைத்திருந்து, இலவசமாக உழைப்பை சுரண்டுவதால் இரண்டு தரப்பினர் பாதிக்கப் படுகின்றனர். ஒன்று, அடிமை வேலை செய்யும் நபர் சம்பளத்துடன் வேலை செய்யும் தொழில் வாய்ப்பை இழக்கிறார். மற்றது, அப்படி ஒரு வேலைக்கு விண்ணப்பிக்கவிருக்கும் இன்னொருவருக்கான வேலை வாய்ப்பு பறிக்கப் படுகின்றது. இதனால் நாட்டில் வேலையற்றோர் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டு செல்லுமே தவிர குறையப் போவதில்லை.

சமீபத்தில் இந்தப் பிரச்சனைகளை கவனத்தில் எடுத்துள்ள FNV என்ற தொழிற்சங்கம், பல முனைப் போராட்டங்களை நடத்தி வருகின்றது. கடதாசிப் பூக்கள் தயாரிக்கும் தொழிலகம் அமைந்துள்ள Aalten என்ற ஊரில் உள்ள நகர சபை அலுவகத்தினுள் உள்ளிருப்புப் போராட்டம் நடத்தினார்கள். நகர சபைக்கு வெளியே, ஊடகவியலாளர்கள், ஊர் மக்களை கூட்டி, பொதுக் கூட்டம் நடத்தினார்கள். சோஷலிஸ்ட் கட்சி (SP) பாராளுமன்ற உறுப்பினர் சாடேத் (Sadet Karabult; https://twitter.com/sadetkarabulut?lang=nl) அங்கு வந்து உரையாற்றி, போராட்டத்திற்கு தனது ஆதரவை தெரிவித்தார்.
நெதர்லாந்து பாராளுமன்ற உறுப்பினர் சாடேத் உடன்...  

நானும் FNV தொழிற்சங்க உறுப்பினர் என்ற படியால், தொடர்ச்சியாக இது தொடர்பான போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறேன். ஏற்கனவே நான் வழங்கிய பல தகவல்கள், அதாவது இந்தக் கட்டுரையில் எழுதியிருப்பவை, பாராளுமன்ற உறுப்பினர் சாடேத் காதுக்கு எட்டியுள்ளன. அவர் பாராளுமன்றத்தின் உள்ளே இந்தப் பிரச்சினை குறித்து விவாதிப்பதாக உறுதியளித்துள்ளார்.