Wednesday, October 28, 2015

நெதர்லாந்து தொழிலாளர் உரிமைக்காக நடந்த தொழிற்சங்கப் போராட்டம்


மேற்கு ஐரோப்பிய நாடுகள் முதலாளித்துவ நாடுகள் தான். இருப்பினும், முன்னாள் சோஷலிச நாடுகளில் இருப்பதைப் போன்று மக்கள் நலத் திட்டங்களை, நலன்புரி அரசு என்ற பெயரில் நடைமுறைப் படுத்துகின்றன. அதற்காக, மேற்கு ஐரோப்பிய நாடுகள் "சோஷலிசப் பாதையில் பயணிக்கின்றன..." என்று சொல்ல வரவில்லை.

ஆனால், சோஷலிஸ்டுகள், கம்யூனிஸ்டுகள் வைத்த பல கோரிக்கைகளை, முதலாளித்துவ அரசே ஏற்றுக் கொண்டு செயற்படுத்தி வருகின்றது. இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில் உள்ள அறிவுஜீவிகள் சிலர், "மேற்கத்திய பாணி முதலாளித்துவ - ஜனநாயகத்தை" ஆதரிக்கும் அதே நேரம், அங்கு நடந்த வர்க்கப் போராட்டத்தை வசதியாக மறந்து விடுகின்றனர்.

இப்படியான தகவல்களை, மத்தியதர வர்க்க அறிவுஜீவிகள் வேண்டுமென்றே மறைக்கிறார்கள். தங்களது நாட்டில் உள்ள சாதாரண தொழிலாளர்கள், தங்களைப் போன்று வாழ்க்கை வசதிகளை அனுபவிக்கக் கூடாது என்ற எச்சரிக்கை உணர்வு காரணமாக இருக்கலாம்.

நெதர்லாந்தில் இருப்பதைப் போன்று, குப்பை அள்ளும் தொழிலாளியின் சம்பளம், அலுவலகப் பணியாளரின் சம்பளத்தை விட அதிகமாக இருந்தால்...? சென்னை, கொழும்பு, யாழ்ப்பாணம் போன்ற நகரங்களில் குப்பை அள்ளும் தொழிலாளர்களும், வசதியாக வாழத் தொடங்கினால்...? ஐயகோ... அந்த நிலைமையை நினைக்க நெஞ்சு பதறுகின்றதே! இது தான் மத்தியதர வர்க்கத்தினரின் கெட்ட கனவு. அதற்காகத் தான் சோஷலிசத்தை வெறுக்கிறார்கள்.

உண்மையைச் சொன்னால், சோஷலிஸ்டுகள், கம்யூனிஸ்டுகளின் போராட்டம் நடக்காத ஐரோப்பிய நாடு எதுவும் கிடையாது. நீங்கள் எந்த நாட்டின் பெயரைக் குறிப்பிட்டாலும், அந்த நாட்டில் எந்தக் கட்சி, எப்படியான போராட்டங்களை நடத்தியது என்ற விபரங்களை தருவதற்கு தயாராக இருக்கிறேன். சோஷலிசத்திற்கான மக்கள் போராட்டத்திற்கு எந்த ஐரோப்பிய நாடும் தப்பவில்லை.

இன்றைக்கு ஐரோப்பிய மக்கள் வசதியாக வாழ்கிறார்கள் என்றால், அதற்கு அங்கு நடந்த வர்க்கப் போராட்டம் தான் காரணம். நெதர்லாந்து நாட்டின் வர்க்கப் போராட்ட வரலாறு பற்றி அதிகமாக அறிந்திருப்பதால், அதைப் பற்றி தொடர்ந்து விரிவாக எழுத விரும்புகிறேன். இந்தியா, இலங்கையில் இன்றைக்கும் போராடிக் கொண்டிருக்கும் மக்களுக்கு அந்தத் தகவல்கள் பிரயோசனமாக இருக்கும்.

இரண்டாம் உலகப்போர் காலம் வரையில், தொழிலாளர்கள் ஏழ்மையில் வாழ்ந்தார்கள். பதினாறு சதுர அடி கொண்ட சிறிய வீட்டுக்குள், ஒரு பெரிய குடும்பம் வசித்தது. படுக்கையறை, சமையலறை, குளியலறை, கழிப்பறை, எல்லாம் ஒரே இடத்தில் தான் இருக்கும். அதற்குள், தந்தை, தாய், ஐந்து பிள்ளைகள் வாழ்வது சர்வ சாதாரணம்.

குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் ஒரே தொழிற்சாலையில் வேலை செய்து வந்தனர். குழந்தைத் தொழிலாளர்கள் அந்தக் காலங்களில் சர்வ சாதாரணம். நெசவாலைகளில் தரையில் கொட்டும் நூல்களை பொறுக்குவது போன்ற வேலைகளில் சிறுவர்கள் ஈடுபடுத்தப் பட்டனர். அதனால், இயந்திரங்களுக்கு நடுவில் சிக்கி பல சிறுவர்கள் கைகளை இழந்துள்ளனர்.  

சிறார் தொழிலாளிகளுக்கு கொடுத்த சம்பளமும் மிகக் குறைவு என்பதை இங்கே குறிப்பிடத் தேவையில்லை. ஏன் அவர்களின் பெற்றோர்கள் பாடசாலைக்கு அனுப்பவில்லை என்று கேட்கலாம். வறுமையில் வாழ்ந்த பெற்றோருக்கு வேறு வழி இருக்கவில்லை. தமது பிள்ளைகளும் சேர்ந்து சம்பாதித்தால் தான் அன்றாட உணவு கிடைக்கும் என்ற நிலைமை.

தொழிலாளர்கள் அதிகாலை நான்கு மணிக்கே எழுந்து வேலைக்கு செல்ல வேண்டும். சிறுவர்களும் தான். மதிய உணவு இடைவேளைக்கு மட்டும் ஒரு மணிநேரம் ஓய்வு கிடைக்கும். அதற்குப் பின்னர், இரவு ஏழு மணி வரையில் வேலை செய்ய வேண்டும். நாளொன்றுக்கு பதினான்கு அல்லது பதினாறு மணி நேர வேலை சர்வ சாதாரணம். வாரத்தில் ஆறு நாட்களும் வேலை இருக்கும். ஞாயிற்றுக் கிழமை மட்டுமே ஓய்வு நாள்.

தொழிலாளர்களின் அரசியல் உரிமைகள் மறுக்கப் பட்டிருந்த போதிலும், தொழிற்சங்கங்களில் சேர்ந்து கொண்டார்கள். பல இடங்களில் வேலை நிறுத்தப் போராட்டங்கள் நடைபெற்றன. வேலைக்குப் போனால் மட்டும் தான் சம்பளம் கிடைக்கும் என்றிருந்த காலத்தில், ஒரு நாள் வேலை நிறுத்தம் கூட, அவர்களின் வாழ்க்கையில் எந்தளவு பாதிப்பை உண்டாக்கியிருக்கும் என்பதை சொல்லத் தேவையில்லை. ஆயினும், உரிமைகளை பெறுவதற்காக மனம் தளராமல் போராடினார்கள். 

நெதர்லாந்தின் வர்க்கப் போராட்டம், 1906 ம் ஆண்டு உருவாக்கப்பட்ட NVV (Nederlands Verbond van Vakverenigingen - நெதர்லாந்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு) சோஷலிச தொழிற்சங்கத்துடன் தொடங்கியது. 

அதற்கு முன்னரே, 19 ம் நூற்றாண்டில் இருந்து அங்கே இயங்கிக் கொண்டிருந்த SDAP (Sociaal-Democratische Arbeiderspartij - சமூக ஜனநாயக தொழிலாளர் கட்சி) அரசியல் போராட்டங்களை நடத்தியது. SDAP ஒரு மார்க்சிய சமூக - ஜனநாயகக் கட்சியாகும். நெதர்லாந்தில் சோஷலிசத்தை கொண்டு வரும் நோக்கில் உருவாக்கப் பட்டது.

NVV தொழிற்சங்க நடவடிக்கைகள் ஊடாக சோஷலிசத்தை கொண்டு வர விரும்பியது. சோஷலிசம் என்றால், குறிப்பாக மத்தியதர வர்க்க  இளைஞர்கள் பலருக்கு என்னவென்ற தெளிவில்லை என்பது தெரிகின்றது. ஓய்வூதியம், விடுமுறை, எட்டு மணி நேர வேலை, பல்வேறு காப்புறுதிகள், இவையெல்லாம் சோஷலிசம் தான்.


அது மட்டுமல்ல, அனைவருக்கும் கல்வி, மருத்துவ வசதி, வாக்குரிமை இவை கூட சோஷலிசத்திற்கான போராட்டம் மூலம் தான் சாத்தியமானது. அவை எதையும் அரசு சும்மா தூக்கிக் கொடுக்கவில்லை. தொழிலாளர்கள் தமது உரிமைகளுக்காக நீண்ட காலம் போராட வேண்டியிருந்தது.

உலகில் எல்லா நாடுகளிலும் நடப்பதைப் போன்று, நெதர்லாந்திலும் முதலாளிகள் தமக்கு சார்பான கருங்காலி தொழிற்சங்கத்தை உருவாக்கி இருந்தனர். CNV என்ற கிறிஸ்தவ தொழிலாளர் சங்கம், முதலாளிகளுடன் சமரசமாகப் போவதை விரும்பியது. (முதலாளியும் கிறிஸ்தவர். ஆகவே கிறிஸ்தவர்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று வாதிட்டார்கள்.)

1906 ம் ஆண்டு, NVV ஒரு சஞ்சிகையை வெளியிட்டு வந்தது. Het Volk (மக்கள்) என்ற சோஷலிச மாற்றத்திற்கான சஞ்சிகையின் அட்டைப் படத்தை இங்கே பார்க்கிறீர்கள். "வர்க்கப் போராட்டம்" என்ற தலைப்பின் கீழான கருத்துப் படம் வரையப் பட்டுள்ளது. கீழே, கிறிஸ்தவ தொழிலாளர் சொல்கிறார்: "நான் போராட்டத்தை விரும்பவில்லை. ஒத்துழைப்பதை விரும்புகிறேன்." அதற்கு முதலாளி கூறுகிறார்:"சரியாகச் சொன்னாய்... அது தான் எனது நோக்கமும்...பட்...பட்..."




மேலதிக தகவல்களுக்கு:
Naar groter eenheid, De geschiedenis van het Nederlands Verbond van Vakvereningen 1906 -1981

Saturday, October 24, 2015

உலகம் அறிந்திராத வியக்கத் தக்க சோவியத் சாதனைகள்


சோவியத் யூனியன் ஸ்தாபிக்கப் பட்ட பின்னர், உலகில் வேறெந்த நாட்டிலும் வாழும் மக்கள் அறிந்திருக்காத வசதி வாய்ப்புகள், சோவியத் பிரஜைகளுக்கு வழங்கப் பட்டன. மேற்கத்திய நாடுகளில் கூட, இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் தான் அவை நடைமுறைக்கு வந்தன. அந்த வகையில், இன்றைக்கு மேற்குலகில் வாழும் மக்கள் அனுபவிக்கும் சலுகைகளை, சோவியத் யூனியன் தான் முதன் முதலாக அறிமுகப் படுத்தியது. 

சோவியத் மக்கள் அனுபவிக்கும் வாழ்க்கை வசதிகளைப் பற்றிக் கேள்விப்படும் தமது மக்கள், புரட்சி மூலம் ஆட்சியைக் கவிழ்த்து விடுவார்கள் என்று மேற்குலக அரசுகள் அஞ்சின. அதனால் தான், எதிர்காலப் புரட்சியை தடுக்கும் நோக்கில், தாமும் அதே மாதிரியான வசதிகளை தமது மக்களுக்கு ஏற்படுத்திக் கொடுக்க முன்வந்தனர். மனித சமுதாயம் முழுவதற்கும் சோவியத் யூனியன் வழங்கிய நன்கொடைகளின் விபரம்: 

 1. உலக வரலாற்றில் முதல் தடவையாக, சோவியத் யூனியனில் மட்டும் தான், எட்டு மணி நேர வேலை நடைமுறைக்கு கொண்டு வரப் பட்டது. 

 2. வேலை செய்யும் அனைவருக்கும், வருடத்திற்கு ஒரு தடவை ஒரு மாத விடுமுறை வழங்கப் பட்டமை இன்னொரு சாதனை ஆகும். சில தொழிற்துறைகளில் ஒரு மாதத்திற்கும் மேற்பட்ட விடுமுறை கிடைத்தது. அது மட்டுமல்ல, விடுமுறைக் காலம் முழுவதும் முழுச் சம்பளம் வழங்கப் பட்டது. இதுவும் உலக வரலாற்றில் முதல் தடவை என்பது குறிப்பிடத் தக்கது.

3. ஒவ்வொரு தொழிற்துறைக்கும் ஏதாவதொரு தொழிற்சங்கம் பொறுப்பாக இருக்கும். அதில் அங்கத்தவராக இருந்தாலும் இல்லாவிட்டாலும், தொழிற்சங்கப் பாதுகாப்பு கிடைத்து வந்தது. உதாரணத்திற்கு, தொழிற்சங்கத்தை கலந்தாலோசிக்காமல் எந்த நிறுவனமும் தமது ஊழியரை பணி நீக்கம் செய்ய முடியாது. 

4. கல்லூரி, பல்கலைக்கழகங்களில் படித்து முடித்த ஒவ்வொரு பட்டதாரிக்கும், வேலை தேடிக் கொடுக்கும் பொறுப்பை அரசு ஏற்றுக் கொண்டது. அனைவருக்கும் வேலை வாய்ப்பு உறுதிப் படுத்தப் பட்டது. 

5. பாடசாலைக் கல்வியில் திறமைச் சித்தி பெற்ற அனைவரும், தாம் விரும்பிய கல்லூரிக்கோ, அல்லது பல்கலைக்கழகத்திற்கோ செல்ல முடிந்தது. தரப்படுத்தல் கிடையாது. கல்விக் கட்டணமும் அறவிடப் பட மாட்டாது. 

6. பாலர் பாடசாலை தொடங்கி, ஆரம்பக் கல்வி முதல் உயர்கல்வி வரையில், முற்றிலும் இலவசமாக வழங்கப் பட்டது. உலகிலேயே இலவசக் கல்வியை அறிமுகப் படுத்திய முதல் நாடு சோவியத் யூனியன் தான். 

7. உலகிலேயே முதல் தடவையாக, சோவியத் குடிமக்கள் தான் இலவச மருத்துவ வசதியை அனுபவித்தனர். மருத்துவ ஆலோசனை முதல் சத்திர சிகிச்சை வரையில் அனைத்தும் இலவசம். எங்கேயும், எப்போதும், காலவரையறை இன்றி இலவச மருத்துவ வசதி வழங்கப் பட்டது. எந்த மருத்துவமனையிலும் நோயாளிகள் வரிசையில் காத்திருக்கவில்லை. காலந் தாமதித்து சிகிச்சை வழங்கவில்லை. ஒவ்வொரு நகரத்திலும் பத்துக்கும் குறையாத மருத்துவ மையங்கள் (poliklinikas) இருந்தன. அந்த இடங்களுக்கு எவரும் சென்று வைத்திய ஆலோசனை பெறலாம். எக்ஸ் ரே படம் பிடித்தல், பற்களை கட்டுதல் அனைத்தும் இலவசம். 

8. ஒவ்வொரு உழைப்பாளியும், தனது நிறுவனத்தை சேர்ந்த முகாமையாளரிடம் சுற்றுலா பயணம் கோரி விண்ணப்பிக்க முடிந்தது. கடற்கரைக்கோ அல்லது வேறெந்த விரும்பிய சுற்றுலா ஸ்தலத்திற்கோ சென்று வர அனுமதி கோர முடிந்தது. ஒவ்வொரு வருடமும், தமது தொழிலாளரின் சுற்றுலா செலவுகளை, அந்த நிறுவனம் முழுமையாக பொறுப்பெடுத்தது. அதாவது, தொலைதூர பிரதேசத்திற்கான சுற்றுலா பயணமும் முற்றிலும் இலவசம். 

9. உலக வரலாற்றில் முதல் தடவையாக, ஒவ்வொரு சோவியத் பிரஜையும் இலவச வீட்டுக்கு உரிமை உடையவராக இருந்தார். வீட்டு வாடகை கிடையாது. முற்றிலும் இலவசம். உங்களது பெயரில் வீடு எழுதித் தரப் படும். அதை நீங்கள் சொந்தமாக்கிக் கொள்ளலாம். உங்களுக்குப் பின்னர் உங்களது பிள்ளைகள் அங்கே வசிக்கலாம். வீடு கிடைப்பதற்காக காத்திருக்க வேண்டி இருந்தமை உண்மை தான். ஆனால், ஒவ்வொரு மாதமும் நாடு முழுவதும் ஆயிரக் கணக்கானோருக்கு புது வீடுகள் வழங்கப் பட்டன. இன்றும் கூட, ரஷ்யாவிலும், முன்னாள் சோவியத் குடியரசுகளிலும் பெரும்பான்மையான மக்கள் சொந்த வீடுகளில் வாழ்கிறார்கள் என்ற உண்மையை யாரும் மறுக்க முடியாது. 

10. ஒவ்வொரு சோவியத் பிரஜையும், தங்கியுள்ள இடத்தில் இருந்து வேலை செய்யும் இடத்திற்கு சென்று வர இலவச பயணச் சீட்டு வழங்கப் பட்டது. பஸ், மெட்ரோ, ரயில் எதுவாக இருந்தாலும், பொதுப் போக்குவரத்தை பயன்படுத்திக் கொள்வதற்கு இலவச பயணச் சீட்டுகள் கொடுத்தனர். இதுவும் உலகிலேயே முதல் தடவை. 

11. தாயாகப் போகும் ஒவ்வொரு பெண்ணுக்கும் மூன்று வருட மகப்பேற்று விடுமுறை வழங்கப் பட்டது. ஆமாம், மூன்று வருடங்கள்! முதலாவது வருடம், அவர் சம்பாதித்த அதே சம்பளம் வழங்கப் பட்டது. இரண்டாவது, மூன்றாவது வருடங்கள் அரசு உதவித் தொகை கொடுக்கப் பட்டது. அது மட்டுமல்ல, மூன்று வருடங்கள் முடிந்ததும், அவர் முன்பு செய்த அதே வேலையை திரும்பவும் பெற்றுக் கொள்ள முடிந்தது. 

12. ஒவ்வொரு தாய்க்கும் குழந்தைகளுக்கான பால் அல்லது பால்மா இலவசமாக வழங்கப் பட்டது. பிறந்த குழந்தை ஒவ்வொன்றும் மூன்று வயதாகும் வரையில் இலவசப் பால் கிடைத்தது. இதற்காக, ஒவ்வொரு ஊரிலும் பால் நிலையங்கள் இருந்தன. பெற்றோர்கள் எந்த நேரத்திலும் அங்கே சென்று, தமது குழந்தைகளுக்கான பாலை இலவசமாகப் பெற்றுக் கொள்ளலாம்.

ஆதாரம்:
12 Awesome things Soviet Union gave to the people ahead of every other country in the world


இது தொடர்பான முன்னைய பதிவுகள்:

Saturday, October 17, 2015

அகதிகளை வரவேற்கும் ஜெர்மனி, உண்மை நிலவரம் என்ன?


தற்போது, ஐரோப்பிய நாடுகளை சுற்றி புதிய "பெர்லின் மதில்கள்" எழுப்பப் பட்டு விட்டதால், அகதிகள் வருகையும் குறைந்து விட்டது. உலகத் தொலைக்காட்சிகளும் தமது கவனத்தை வேறு பக்கம் திருப்பி விட்டன. ஐரோப்பிய நாடுகளின் கனவான்கள் "தாராள மனப்பான்மையுடன்" அகதிகளை வரவேற்றதாக பிரச்சாரம் செய்து ஓய்ந்து விட்டார்கள்.

ஜெர்மனியில் புதிதாக திறக்கப் பட்ட அகதி முகாம்கள் பல எரிக்கப் பட்டன. ஒரு சம்பவத்தில் அகதி ஒருவர் பலியானார். நெதர்லாந்தில் புதிதாக அகதி முகாம்கள் அமைப்பதற்கு, சில இடங்களில் மக்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். உள்ளூராட்சி சபைகளில் அகதிகளுக்கு முகாம் அமைப்பது பற்றிய விவாதங்கள் நடந்த நேரம், உள்ளூர் மக்கள் கூட்டம் நடக்க விடாமல் தடுத்து இடையூறு செய்தார்கள். வெளிநாட்டவர்கள் பற்றிய அறியாமையால் ஏற்படும் அச்சவுணர்வை வெளிப்படுத்தினார்கள்.

மேற்படி தகவல்களை எந்தவொரு சர்வதேச ஊடகமும் கண்டுகொள்ளவில்லை. (உள்நாட்டு ஊடகங்களில் மட்டுமே தெரிவிக்கப் பட்டன.) அது மட்டுமல்ல, தஞ்சம் கோரிய அகதிகளில், மிகக் குறைந்த அளவினரை மட்டும் ஏற்றுக் கொண்டு விட்டு, எஞ்சிய அகதிகளை நாட்டை விட்டு வெளியேறுமாறு உத்தரவிடுவார்கள். மீறி இருந்தால், விசாவைப் பறித்து விடுவார்கள். தடுப்பு முகாம்களுக்குள் வைத்திருந்து திருப்பி அனுப்புவார்கள். அந்தத் தகவல்களும் எந்த ஊடகத்திலும் வரப் போவதில்லை.

"மேற்கு ஐரோப்பியர்களுக்கு எவ்வளவோ தாராள மனசு!"

ஜெர்மனி அகதிகளை ஏற்றுக் கொள்வதில் தாராள மனப்பான்மையுடன் நடந்து கொள்வதாக, ஜெர்மனியைப் புகழும் பல கட்டுரைகள் தமிழகப் பத்திரிகைகளில் வந்திருந்தன.
(பார்க்க:

பல நண்பர்கள் அவற்றை சுட்டிக் காட்டி, உண்மை நிலவரம் என்னவென்று கேட்டிருந்தார்கள். வழக்கம் போலவே, ஊடகங்கள் தெரிவிப்பதற்கும், உண்மை நிலவரத்திற்கும் இடையில் மிகப்பெரிய இடைவெளி உள்ளது.

பிரிட்டனை விட ஜெர்மனி பெருமளவு அகதிகளை ஏற்றுக் கொள்கின்றது என்பது உண்மை தான். பெரும்பாலான தமிழர்கள், காலனிய அடிமைத்தனம் காரணமாக பிரிட்டனுக்கு செல்ல விரும்புவதுண்டு. பிரிட்டனின் முன்னாள் காலனி நாடுகளை சேர்ந்த அகதிகள், பிற ஐரோப்பிய நாடுகளை விட பிரிட்டனை விரும்புவார்கள். 

பிரான்சின் கலே பகுதியில், யூரோ சுரங்க ரயில் பாதைக்கு அருகில் முகாமிட்டுள்ள அகதிகள் பிரிட்டனுக்கு ஒரு தலையிடியாக இருந்தனர். சுரங்க ரயில் பாதை மூலம் நடந்து செல்ல முயன்ற சில அகதிகள் விபத்தில் சிக்கி மரணமடைந்தனர். அப்படி இருந்தும், பிரிட்டிஷ் அரசு, தனது நாட்டிற்குள் அகதிகளை வர விடாமல் தடுப்பதற்காக, பெருமளவு நிதியை பாதுகாப்புக்கு செலவிட்டது.

பிரிட்டனுக்கு செல்லும் அகதிகள் விவகாரம் பூதாகரமாக உருவெடுத்த நிலையில் தான், கிரேக்க தீவுகளில் ஆயிரக் கணக்கான சிரிய அகதிகள் வந்திறங்கினார்கள். அவர்கள் கிரீசில் இருந்து, மாசிடோனியா, செர்பியா, ஹங்கேரி வழியாக ஜெர்மனிக்கு சென்றனர்.

துருக்கி கடற்கரையில் இறந்து ஒதுங்கிய அய்லான் என்ற குழந்தையின் படம், உலக ஊடகங்களின் கவனத்தை கவர்ந்த பின்னர் தான், ஜெர்மனி எல்லைகளை திறந்து விட்டது. இதன் மூலம், ஜெர்மன் அதிபர் அங்கெலா மெர்கல், தன் மீதான நல்லெண்ணத்தை உயர்த்திக் கொண்டமை தனிக் கதை.

பிரிட்டனோடு ஒப்பிடுகையில், ஜெர்மனியில் அகதிகளுக்கான வசதி வாய்ப்புகள் அதிகம் என்பதை மறுப்பதற்கில்லை. இத்தாலியில் கூட, அகதிகளுக்கு பாதுகாப்பும், பராமரிப்பும் கிடைப்பதில்லை. அதனால், லிபியா மூலம் இத்தாலி வந்தடைந்த ஆயிரக் கணக்கான அகதிகள், ஜெர்மனி போன்ற வட ஐரோப்பிய நாடுகளை நோக்கி இடம்பெயர்ந்தனர்.

ஜெர்மனி மட்டுமல்ல, நெதர்லாந்து, பெல்ஜியம், மற்றும் ஸ்கண்டிநேவிய நாடுகள், அகதிகளை மனிதாபிமான அடிப்படையில் வரவேற்கின்றன. யாரையும் தெருவில் படுக்க விடுவதில்லை. படுப்பதற்கு கட்டிலும், மூன்று வேளை உணவும், கைச் செலவுக்கு பணமும் கொடுக்கின்றன.

முதலில், மேற்கு ஐரோப்பிய நாடுகள், தஞ்சம் கோருவோரை அகதிகள் என்று அழைப்பதில்லை என்ற உண்மையை உணர்ந்து கொள்ள வேண்டும். அவர்கள் வெறும் "தஞ்சக் கோரிக்கையாளர்கள்" மட்டும் தான், அகதிகள் அல்ல! அதாவது, அவர் அகதியா இல்லையா என்பது தெரியாத நிலையில் இருக்கிறார் என்று அர்த்தம். ஒவ்வொரு அகதிக்கும் தனித்தனியாக விசாரணை நடக்கும். சிலநேரம் இரண்டு, மூன்று தடவைகள் விசாரிப்பார்கள். அகதி என்பதை நிரூபிக்குமாறு ஆதாரம் கேட்பார்கள். (அரசியல் காரணங்களினால் பாதிக்கப் பட்டவராக இருக்க வேண்டும்.)

அகதிகளுக்கான விசாரணைக் காலகட்டம் மாதக் கணக்கு அல்லது வருடக் கணக்காகலாம். விசாரணைகளின் முடிவின் பின்னர், குறைந்தது பத்து சதவீதமானோரை மட்டுமே ஏற்றுக் கொள்வார்கள். (ஒன்றில் "உண்மையான" அகதியாக அங்கீகாரம், அல்லது வதிவிட அனுமதி) அவர்களை மட்டும் நாட்டில் தங்க அனுமதிப்பார்கள்.

எப்போதுமே, பெரும்பாலான அகதிகளின் தஞ்சக் கோரிக்கைகள் நிராகரிக்கப் படுவது வழமை. அந்த துரதிர்ஷ்டசாலிகள், தாயகம் திரும்ப வேண்டும் என்று வற்புறுத்தப் படுவார்கள். உத்தரவை மீறி தங்கி இருந்தால், சட்டவிரோதிகள் ஆக்கப் படுவார்கள். அதற்குப் பின்னர், திடீரென ஒரு நாள் பொலிஸ் வந்து விலங்கு மாட்டி நாடு கடத்தி விடும்.

இருபது வருடங்களுக்கு முன்னர், ஒரு ஐரோப்பிய நாட்டில் தஞ்ச மனு நிராகரிக்கப் பட்ட அகதி, இன்னொரு ஐரோப்பிய நாட்டில் மீண்டும் தஞ்சம் கோர முடிந்தது. ஆனால், டப்ளின் ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்த பின்னர், அது சாத்தியமில்லாமல் போனது. அது மட்டுமல்ல, ஏற்கனவே "பாதுகாப்பான" ஐரோப்பிய நாட்டில் வந்திறங்கிய அகதியை, அந்த நாடு பொறுப்பேற்க வேண்டும் என்று டப்ளின் ஒப்பந்தம் வலியுறுத்துகிறது. பல வருடங்களாக, ஜெர்மனி வந்த அகதிகளில் எத்தனையோ பேர், முதலில் வந்த நாட்டிற்கே திருப்பி அனுப்பப் பட்டிருக்கிறார்கள். தற்போது வந்து சேர்ந்துள்ள சிரிய அகதிகளும் திருப்பி அனுப்பப் பட மாட்டார்கள் என்று சொல்ல முடியாது.

இருப்பினும், அகதிகளின் விண்ணப்பம் பரிசீலிக்கப் படும் வரையில், தற்காலிகமாக வசிப்பதற்கு ஏற்ற வாய்ப்புகளை உருவாக்கிக் கொடுக்கிறார்கள். அகதிகள் தங்குவதற்கான தற்காலிக இருப்பிடங்கள், வசதிகளற்ற முகாம்கள் ஆகும். அவை பெரும்பாலும் நகரங்கள், கிராமங்களில் இருந்து தொலைவில் இருக்கும். சில இடங்களுக்கு பஸ் போக்குவரத்து கூட இருக்காது. அருகில் உள்ள கடைக்கு செல்வதற்கும், நான்கு கிலோமீட்டர் நடந்து செல்ல வேண்டி இருக்கலாம்.

சிலநேரம், பழைய சிறைச்சாலைகளில் கூட, அகதிகளை தங்க வைக்கிறார்கள். நகர்ப் பகுதிகளில், புதிதாக வரவிருக்கும் அகதி முகாம்களுக்கு உள்ளூர் மக்கள் எதிர்ப்புத் தெரிவிப்பது ஆங்காங்கே நடக்கிறது. ஜெர்மனியில் சில இடங்களில், அகதிகள் குடியேறுவதற்கு முன்னரே கட்டிடங்களுக்கு தீ வைத்துள்ளனர். நெதர்லாந்தில் ஒரு அகதி முகாமுக்கு அருகில், பெரிய சத்தம் போடும் நைட்ரேட் வெடிகுண்டு வீசினார்கள்.


மேலும், மேற்கு ஐரோப்பிய நாடுகள், சில தவிர்க்கவியலாத காரணங்களினால் தான், பெருமளவு அகதிகளை நாட்டுக்குள் வர விட்டனர். அதே நேரம், எல்லைகளில் சோதனைகள் தீவிரமடைந்ததன. "பயண முகவர்கள்" என அழைக்கப்படும், அகதிகளை கடத்திக் கொண்டு வருவோர், நூற்றுக்கணக்கில் கைது செய்யப் பட்டனர். அதன் மூலம், அகதிகள் வருகையை தடுக்கலாம் என்று நினைக்கிறார்கள்.

பெரும்பாலான அகதிகள் ஜெர்மனியை நோக்கி வந்தாலும், விரைவில் அனைத்து ஐரோப்பிய ஒன்றிய நாடுகளினாலும் பங்கிடப் படவுள்ளனர். பல வருட காலமாக, ஐரோப்பிய நாடுகளை அவ்வாறு செய்வதற்கு ஜெர்மனி வற்புறுத்தி வந்துள்ளது. குறிப்பாக கிழக்கு ஐரோப்பிய நாடுகள் மட்டுமே அகதிகள் பங்கீட்டுக்கு எதிர்ப்புத் தெரிவித்து வந்தன.

ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கும், துருக்கிக்கும் இடையில் நடந்த பேச்சுவார்த்தையின் முடிவில், இனிமேல் புதிதாக அகதிகள் வருவதை தடை செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப் பட்டுள்ளன. துருக்கி மூலமாக பெருமளவு அகதிகள் வந்த படியால், அந்த நாட்டுடன் சில ஒப்பந்தங்களைப் போட்டுள்ளனர். அதன் படி, துருக்கியில் உள்ள அகதி முகாம்களில் வசதிகள் அதிகரிக்கப் படும். அங்கீகரிக்கப்பட்ட அகதிகள் துருக்கி மொழி கற்பதற்கும், வேலை வாய்ப்பிற்கும் வழி ஏற்படுத்திக் கொடுக்கப் படும். இதற்காக மில்லியன் கணக்கான யூரோக்களை, ஐரோப்பிய ஒன்றியம் செலவிடவுள்ளது.

அதன் அர்த்தம், துருக்கி அகதிகளுக்கான பாதுகாப்பான நாடாக அறிவிக்கப் பட்டுள்ளது. இனிமேல் ஓர் அகதி துருக்கி வந்த பின்னர், பிற ஐரோப்பிய நாடொன்றில் தஞ்சம் கோர முடியாது. இதன் மூலம், ஜெர்மனி போன்ற மேற்கு ஐரோப்பிய நாடுகளுக்கு செல்லவிருக்கும் அகதிகளின் நோக்கம் நிறைவேறப் போவதில்லை. அவர்கள் இனிமேல் துருக்கி போன்ற எல்லையோர நாடுகளிலேயே தங்க வைக்கப் படுவார்கள்.

Thursday, October 01, 2015

தொழிலாளர்களுக்கான ஆடம்பர சுற்றுலா, கம்யூனிச நாடுகளின் உயர்தர வாழ்க்கை


பிரமாண்டமான உல்லாசப் பிரயாணக் கப்பலில் வெளிநாடுகளுக்கு சுற்றுலாப் பயணம். மலைப் பகுதிகளில் இளைப்பாறுவதற்கு ஆடம்பரமான தங்குவிடுதிகள். சாதாரண அடித்தட்டு தொழிலாளர்கள் கூட விடுமுறையில் பொழுதுபோக்குவதற்கு ஏற்படுத்தப் பட்ட உயர்தரமான வசதிகள். இந்த சுகபோக வாழ்க்கையை எண்ணி, நம் நாட்டு தொழிலாளர்கள் கனவு மட்டுமே காண முடியும். ஆனால், கிழக்கு ஐரோப்பாவிலிருந்த முன்னாள் சோஷலிச நாடுகளில் அது நடைமுறையில் இருந்தது. மிக மிக குறைந்த செலவில், அனைத்து பிரஜைகளும் சுற்றுலா செல்வதற்கான வசதிகளை, கம்யூனிச அரசுக்கள் மக்களுக்கு செய்து கொடுத்திருந்தன.

தமிழ் பேசும் மத்தியதர வர்க்கத்தினர் பலர், எந்தக் காரணமும் இல்லாமல் கம்யூனிசத்தை, அல்லது இடதுசாரியத்தை எதிர்க்கவில்லை. அவர்கள் ஜனநாயகவாதிகளோ அல்லது மனிதநேயவாதிகளோ அல்ல. அவர்களது அச்சம் எல்லாம், தமது சொந்த தமிழ் இனத்தை சேர்ந்த அடித்தட்டு தொழிலாளர்கள், தமது "அந்தஸ்தை" எட்டிப் பிடித்து விடுவார்கள் என்பது பற்றியது தான். 

மேட்டுக்குடி மக்கள், வாழ்க்கையில் தாம் அனுபவிக்கும் சுகபோகத்தில், நூறில் ஒரு பங்கை கூட, அடித்தட்டு வர்க்க மக்கள் அனுபவிப்பதை விரும்பவில்லை. இன்றைக்கும், அவர்களைப் பொருத்தவரையில், வர்க்க சமத்துவம் ஒரு கெட்ட கனவாகவே உள்ளது. இலங்கையிலும், இந்தியாவிலும், வசதியான மத்தியதர வர்க்கத்தினர் மட்டுமே சுற்றுலா செல்கிறார்கள். விடுமுறைக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்புக் கிட்டியவர்கள் கூட, உல்லாசக் கப்பலில் செல்வது மிகக் குறைவு. 

இப்படி ஒரு நிகழ்வை கற்பனை பண்ணிப் பார்ப்போம். தமிழ் நாட்டில், தொழிற்சாலை ஒன்றில் கடின வேலை செய்யும் தொழிலாளி, ஒரு மாத விடுமுறையில், குடும்பத்தோடு கோவா சென்று, கடற்கரையில் உல்லாசமாக பொழுது போக்குகிறார். யாழ்ப்பாணத்தில் புகையிலைத் தோட்டத்தில் வேலை செய்யும் கூலித் தொழிலாளி, ஒரு வார விடுமுறையில், குடும்பத்துடன் உல்லாசக் கப்பலில் பயணம் செய்து, தாய்லாந்து, சிங்கப்பூர் என்று நாடு பார்த்து விட்டு ஊர் திரும்புகிறார்.

"பகல் கனவு காணாதீர்கள். இன்னும் நூறு வருடங்கள் சென்றாலும், எமது  நாட்டில் இப்படி எல்லாம் நடக்காது." என்று பலர் நினைக்கலாம். ஒருவேளை, இந்தியாவும், இலங்கையும், கம்யூனிஸ்ட் கட்சிகளால் ஆளப்படும் சோஷலிச நாடுகளாக இருந்திருந்தால்? அது என்றோ ஒரு நாள் நடைமுறைச் சாத்தியமாகி இருக்கும் என்று நம்பிக்கையோடு எதிர்பார்க்கலாம். ஏனென்றால், வளர்ச்சி அடைந்த சோஷலிச நாடுகளில், "தொழிலாளர்களுக்கான உல்லாசப் பிரயாணம்" நடைமுறையில் இருந்துள்ளது.

தொழிலாளர்கள் குடும்பத்துடன் விடுமுறையை களிப்பதற்கான ஆடம்பர ஹோட்டல் 

சோவியத் யூனியனிலும், கிழக்கு ஐரோப்பாவில் இருந்த சோஷலிச நாடுகளிலும், அனைத்துப் பிரஜைகளும் விடுமுறைக்கு உல்லாசமாக பொழுதுபோக்கும் வசதிகள் செய்து கொடுக்கப் பட்டன. சோவியத் யூனியன், உலகிலேயே மிகப் பெரிய நாடாக இருந்தது. பல்வேறு மொழிகளைப் பேசும், பல்வேறு பட்ட கலாச்சாரங்களை பின்பற்றும், பல்லின மக்களின் தேசமாக இருந்தது. அதனால், சோவியத் யூனியனுக்குள் சுற்றுலா சென்றாலே, உலகின் அரைவாசியைப் பார்த்தது போன்ற அனுபவம் ஏற்படும்.

உலகில் எல்லா நாடுகளிலும் இருப்பதைப் போன்று, பெரும்பான்மையான சோவியத் மக்கள் விடுமுறையில் கடற்கரையொன்றில் உல்லாசமாகப் பொழுது போக்குவதற்கு தான் ஆசைப் படுவார்கள். குறிப்பாக மாஸ்கோ போன்ற குளிர்வலையப் பிரதேசத்தில் வாழும் மக்கள், கொளுத்தும் வெயிலில் இளைப்பாற விரும்புவார்கள். அதனால், கருங்கடலில் உள்ள கிரீமியா கடற்கரைகள், விடுமுறைக் காலத்தில் சுற்றுலாப் பயணிகளால் நிரம்பி வழிந்தன.

அநேகமாக, அன்று ஐரோப்பாவில் இருந்த எல்லா சோஷலிச நாடுகளிலும் சுற்றுலாத் திட்டம் கிட்டத்தட்ட ஒரே மாதிரி நடைமுறையில் இருந்தது. எமக்கு அந்த நாடுகளின் மொழிகள் தெரியாத படியால், அது தொடர்பான தகவல்கள் கிடைக்கவில்லை. (தெரிந்திருந்தாலும் மத்தியதர வர்க்க வலதுசாரி- அறிவுஜீவிகள் அவற்றை மறைத்திருப்பார்கள்.) இந்தக் கட்டுரைக்கு ஆதாரம் கேட்பார்கள் என்பதற்காக, நானும் எனக்குத் தெரிந்த ஜெர்மன் மொழி பேசும், கிழக்கு ஜெர்மனி பற்றித் தான் எழுத வேண்டியுள்ளது.

பொதுவாக, இன்றைக்கும் அனைத்து ஐரோப்பிய நாடுகளிலும் இருப்பதைப் போன்று, கோடை காலமான ஜூலை, ஆகஸ்ட் மாதங்கள் தான், சோஷலிச நாடுகளிலும் விடுமுறைக் காலமாக இருந்தது. கிழக்கு ஜெர்மனியில் இருந்த மிகப் பெரிய தொழிற்சங்கமான FDGB (Freier Deutscer Gewerkschaftbund), சுற்றுலாத் துறையையும் நிர்வகித்தது. அனைத்து தொழிலாளர்களும் விடுமுறையை பயனுள்ளதாக கழிக்க வேண்டும் என்பதற்காக, ஒவ்வொரு தொழிற்சாலைக்கு தனித்தனியாக சுற்றுலா ஒழுங்குபடுத்தப் பட்டது.

இதிலே குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால், அனைத்துப் பிரஜைகளும், செய்யும் தொழிலில் பேதமின்றி, சுற்றுலா செல்லும் வகையில் வசதி செய்து கொடுக்கப் பட்டது. அதற்காக அவர்கள் மிகச் சிறிய தொகையை கட்டணமாக செலுத்தினார்கள். சுற்றுலா செல்வதற்கான செலவு மிகவும் குறைவாக இருந்தது மட்டுமல்ல, எத்தனை வருடங்கள் சென்றாலும், விலை மாறப் போவதில்லை.

FDGB க்கு சொந்தமான ஹோட்டல்கள், நாடு முழுவதும் இருந்தன. அவை "Ferienheime" (விடுமுறை இல்லம்) என்று அழைக்கப் பட்டன. பெரும்பாலும் கிழக்கு ஜெர்மனியின் வடக்கே இருந்த, கிழக்குக் கடல் தான் பிரசித்தி பெற்ற சுற்றுலா ஸ்தலமாக இருந்தது. பெரும்பான்மையான மக்கள் கடற்கரையை தெரிவு செய்த படியால், அங்கே தான் அதிகமான தங்குவிடுதிகள் காணப் பட்டன.

கோடை காலத்தில், கடற்கரைகள் சுற்றுலாப் பயணிகளால் நிரம்பி வழியும். சுருக்கமாக சொல்வதென்றால், இந்தியாவில் கோவா கடற்கரைகள், அல்லது தென்னிலங்கை கடற்கரைகள் போன்று காட்சி தரும். ஆனால், ஒரு வித்தியாசம் என்னவென்றால், அங்கே வருவோரில் பெரும்பான்மையானோர் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள். ஆனால், கிழக்கு ஜெர்மன் கடற்கரையில் உள்நாட்டு சுற்றுலாப் பயணிகள் ஆக்கிரமித்திருந்தனர்.

ஒவ்வொரு வருடமும், விடுமுறையை கழிப்பதற்கு கடற்கரைக்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. குளிர்காலத்தில் பனிச்சறுக்கல் விளையாட்டுகளில் ஆர்வமுள்ளவர்களுக்கு, மலைப் பகுதிகளிலும் விடுமுறைத் ஸ்தலங்கள் இருந்தன. அதுவும் வேண்டாமென்றால், ஓர் ஏரிக்கரையில், அல்லது புல்வெளியில் கூடாரம் அடித்து தங்கிக் கொள்ளலாம்.

கிழக்கு ஜெர்மன் பிரஜைகள் வெளிநாடுகளுக்கு சுற்றுலாப் பயணிகளாக செல்ல முடியுமா? ஆம்! மேற்கத்திய நாடுகளுக்கு பயணம் செய்வது தடுக்கப் பட்டது உண்மை தான். ஆனால், அவை மட்டுமே உலகம் அல்லவே? சகோதர சோஷலிச நாடுகளுக்கு எங்கு வேண்டுமானாலும் பயணம் செய்யும் சுதந்திரம் இருந்தது. 

சோவியத் யூனியன் மட்டுமல்லாது, ஹங்கேரி, செக்கோஸ்லாவாக்கியா, யூகோஸ்லாவாக்கியா போன்ற பல கிழக்கு ஐரோப்பிய நாடுகளுக்கு, கிழக்கு ஜெர்மன் சுற்றுலாப் பயணிகள் சென்றனர். அது மட்டுமல்ல, சிறந்த நட்புறவு பேணப்பட்ட, அல்ஜீரியா, லிபியா போன்ற வட ஆப்பிரிக்க நாடுகளுக்கும், சுற்றுலா செல்ல முடிந்தது. கியூபாவுக்கு செல்வது மிகுந்த செலவு பிடிக்கும் விடயமாகையால், அரசுத் தலைவர்கள், இராஜதந்திரிகள் தவிர வேறு யாரும் செல்லவில்லை.

தொழிலாளர்கள் பயணம் செய்த உல்லாசப் பயணக் கப்பலின் உள்புறம் 

FDGB, இரண்டு உல்லாசப் பயணக் கப்பல்களை வைத்திருந்தது. Cruise Ship எனப்படும் பிரமாண்டமான ஆடம்பரக் கப்பல்கள், இன்றைக்கும் பணக்காரர்கள் மட்டுமே பயணம் செய்யக் கூடியதாக உள்ளது. ஆனால், கிழக்கு ஜெர்மனியில் இருந்த ஆடம்பரக் கப்பல்களில், சாதாரண தொழிலாளர்களும் பயணம் செய்தனர் என்று சொன்னால் நம்புவீர்களா?

Arkona, Völkerfreundschaft ஆகிய இரண்டு ஆடம்பரக் கப்பல்களில், இடப்பற்றாக்குறை காரணமாக, குறிப்பிட்ட பிரிவினருக்கு மட்டுமே முன்னுரிமை வழங்கப் பட்டது. திறமையாக வேலை செய்து, அதிகமாக உற்பத்தி செய்து சாதனை செய்த தொழிலாளர்களுக்கு எப்போதுமே முன்னுரிமை உண்டு. அது அவர்களை ஊக்குவிக்கும் பரிசாக வழங்கப் பட்டது. அதற்கு அடுத்த படியாக, நிறைய பிள்ளைகளை கொண்ட, பெரிய குடும்பங்களுக்கு இடம் ஒதுக்கப் பட்டது. சிலநேரம், மக்களுடன் சேர்ந்து, ஆளும் கட்சி அரசியல் தலைவர்களும் பயணம் செய்தனர்.

உல்லாசக் கப்பல் என்றால், உள்நாட்டுக் கடலுக்குள் சுற்றிக் கொண்டிருக்க முடியுமா? வெளிநாடுகளுக்கு போக வேண்டாமா? ஆமாம், அந்தக் கப்பல்கள் வெளிநாடுகளில் இருந்த கடற்கரைப் பட்டினங்களை நோக்கிப் பயணம் செய்தன. கப்பல் பயணிகள் அந்த நாடுகளையும் சுற்றிப் பார்த்து விட்டு ஊர் திரும்புவார்கள். Völkerfreundschaft கப்பல், எந்தெந்த நகரங்களுக்கு செல்கின்றது என்ற விபரம் பொறிக்கப் பட்ட பீங்கான் தட்டு, கப்பல் பயணிகளுக்கு விநியோகிக்கப் பட்டது. அவற்றை இன்றைக்கும் பல கிழக்கு ஜெர்மன் மக்கள், நினைவுப் பரிசாக வீடுகளில் வைத்திருக்கிறார்கள்.

Völkerfreundschaft கப்பல் பயணம் செய்த வெளிநாட்டு நகரங்களின் விபரம்:


Algier (அல்ஜீரியா)
Tripolis (லிபியா)
Dubrovnik (யூகோஸ்லேவியா, தற்போது குரோவாசியா)
Constanta (ருமேனியா)
Batumi (சோவியத் யூனியன், தற்போது ஜோர்ஜியா)
Varna (பல்கேரியா)








மேலதிக தகவல்களுக்கு:
Fascinatie DDR, Friso de Zeeuw 
Völkerfreundschaft
Tourismus in der DDR


வீடியோ: விடுமுறையை உல்லாசமாகக் களிக்கும் கிழக்கு ஜெர்மன் பிரஜைகள்


இது தொடர்பான முன்னைய பதிவுகள்:
உழைக்கும் தாய்மாரின் உரிமைகளை பாதுகாத்த சோஷலிச கிழக்கு ஜெர்மனி
பெர்லின் சுவரின் மறுபக்கம் : கிழக்கு ஜெர்மனியில் அமெரிக்க அகதிகள்