Sunday, August 30, 2015

"ஆங்கிலம் தமிழில் இருந்து வந்தது" எனும் பொய் பித்தலாட்டம்!


"தமிழ் மொழி உணர்வாளர்கள்"(?) சிலருக்கு இப்படியும் ஒரு பெருமை: 
//இங்கிலீஷ்க்கு ("ஆங்கிலம்" என்று) பெயர் வைத்த ஒரே மொழி தமிழ்// இதிலே பெருமைப் பட என்ன இருக்கிறது? அந்த வார்த்தையை, தமிழர்கள் அனேகமாக போர்த்துக்கேயரிடம் இருந்து கடன் வாங்கியுள்ளனர்.

16 ம் நூற்றாண்டிலேயே, போர்த்துக்கேயர்கள் கோவா, இலங்கையை பிடித்து ஆண்டனர். ஆகவே, ஆங்கிலம் என்ற தமிழ்ச் சொல்லின் மூலம் போர்த்துகேய மொழி. இன்றைக்கும் போர்த்துகீசு, பிரெஞ்சு போன்ற லத்தீன் மூலத்தை கொண்ட மொழிகளில் ஆங்கிலம் என்ற உச்சரிப்பு வரும் சொற்களை பயன்படுத்துகிறார்கள்.

ஆங்கிலேயர்கள் என்பது இங்கிலாந்தில் குடியேறிய பூர்வகுடி மக்களின் பெயர். பிரித்தானியா தீவை ரோமர்கள் ஆண்ட காலத்தில், ஆங்கிலேஸ், சாக்ஸன் ஆகிய இரண்டு இனங்கள், ஜெர்மனியில் இருந்து சென்று குடியேறின. அவர்கள் தான் இன்றைய இங்லீஷ்காரரின் மூதாதையர். அங்கிலேஸ் என்ற பெயர் மருவி பிற்காலத்தில் இங்லீஷ் ஆனது.

"இங்கிலீஸ் என்ற மொழியின் பெயர், தமிழ் இலக்கண விதிகளுக்கு அமைய ஆங்கிலம் என்று மாறியது" என்றும், "எனக்கு இலக்கணம் தெரியாது" என்றும், ஒரு "தமிழ் அறிஞர்"(?) வகுப்பெடுக்கிறார். அவர் சொல்வது போல எனக்குத் தமிழ் இலக்கணம் தெரியாதென்றே வைத்துக் கொள்வோம். எதற்காக பின்வரும் நாடுகளின் பெயர்கள், முற்றிலும் மாறுபட்ட பெயர்களில் அழைக்கப் படுகின்றன என்பதை விளக்குவாரா?

"மகியார்" என்ற நாட்டை ஏன் ஹங்கேரி என்று சொல்கிறோம்? "டொய்ச் லான்ட்" எவ்வாறு ஜெர்மனி ஆகியது? "சுவோமி" ஏன் பின்லாந்து என மாறியது? "எல்லாஸ்" எப்படி கிரீஸ் ஆனது? "ஷிபெரிசி" என்ற நாட்டை அல்பேனியா என்று சொல்வது ஏன்? பல தமிழர்கள், இப்போது தான் முதன் முதலாக, இந்த நாடுகளின் உண்மையான பெயர்களை கேள்விப் படுவார்கள் என்று நான் நினைக்கிறேன்.

தமிழ் - ஆங்கில சொற்களை ஒப்பிட்டுப் பார்த்து, "தமிழில் இருந்து ஆங்கிலம் வந்தது" என்று கண்டுபிடித்துள்ள "அறிஞர்களுக்கு", பூகோளவியல் மட்டுமல்லாது வரலாறும் தெரியாது என்பது ஆச்சரியத்திற்குரியது. குறைந்த பட்சம் காலனிய கால வரலாறு கூட தெரிந்திருக்கவில்லை. இப்படியான அரைவேக்காடுகள் தான் "மொழி ஆய்வு" செய்கின்றன. 

ஆங்கிலேய காலனிய ஆட்சிக் காலத்தில், அவர்கள் எமக்கு சொல்லிக் கொடுத்த உலக நாடுகளின் பெயர்களை இன்றைக்கும் பயன்படுத்தி வருகிறோம். அவ்வாறு தான், ஜெர்மனி, பின்லாந்து, ஹங்கேரி, கிரீஸ் என்று, ஆங்கிலேயர்கள் அந்த நாடுகளுக்கு சூட்டிய பெயர்களை அப்படியே தமிழில் பாவிக்கிறோம்.

16 ம் நூற்றாண்டிலேயே, தமிழர்களுக்கு போர்த்துக்கேய மொழியுடன் பரிச்சயம் ஏற்பட்டது. அலுமாரி, அலவாங்கு போன்ற பல சொற்கள் தமிழில் கலந்தன. அப்போது ஆங்கிலேயர்கள் பற்றி தமிழர்கள் அறிந்திருக்கவில்லை. தெற்காசியாவில் காலனிகளை பிடிப்பதற்காக போட்டியிட்ட பிரித்தானியர்களை, போர்த்துக்கேயர்கள் "ஆங்கிலேயர்கள்" என்று அழைத்தனர். நாங்களும் அதைக் கற்றுக் கொண்டோம். 

நெதர்லாந்து நாட்டவர்கள், ஈழத் தமிழில் "ஒல்லாந்தர்" என்றும், தமிழ்நாட்டுத் தமிழில் "டச்சுக்காரர்" என்றும் அழைக்கப் படுகின்றனர். ஏனிந்த வித்தியாசம்? போர்த்துகேய மொழியில் "ஹ"(H) சத்தம் கிடையாது. அவர்கள் ஹோலன்ட் என்பதை ஒலாந்த் என்று தான் உச்சரிப்பார்கள்.

ஆகவே அது போர்த்துகேய மொழியின் செல்வாக்குக்கு உட்பட்ட ஈழத் தமிழில் "ஒல்லாந்தர்" ஆயிற்று. அதே மாதிரி, 19 ம் நூற்றாண்டில் ஆங்கிலேய மொழியின் செல்வாக்கினால், தமிழ்நாட்டு தமிழில் "டச்சுக் காரர்" என்று அழைக்கப் படுகின்றது.

உண்மையில், ஹொலன்ட் என்ற அந்த ஐரோப்பிய நாட்டின் பெயர்: "நெடர்லான்ட்". அவர்கள் பேசும் மொழியின் பெயர்: "நெடர்லான்ட்ஸ்". ஆனால், காலனியாதிக்க காலத்தில், ஹொலன்ட் என்ற மாகாணத்தை சேர்ந்தவர்களே கடலோடிகளாக சென்று நாடு பிடித்தார்கள். தேசியவாதக் கருத்தியல்கள் தோன்றியிராத 17 அல்லது 18 ம் நூற்றாண்டில், அவர்கள் தம்மை ஹொலன்ட் காரர் என்று, பிரதேசம் சார்ந்து அழைத்துக் கொண்டதில் வியப்பில்லை.

ஆங்கிலச் சொற்களுக்கும், தமிழ்ச் சொற்களுக்கும் இடையிலான ஒற்றுமைகளை கண்டுபிடித்து, தமிழில் இருந்து தான் ஆங்கிலம் வந்தது என்று நிறுவத் துடிக்கும் அறிஞர் பெருமக்களுக்கு, முதலில் நீங்கள் ஆங்கில மொழி பற்றி ஓரளவாவது அறிந்து வைத்திருப்பது நல்லது. நீங்கள் எப்போதும் நவீன ஆங்கிலத்தை மட்டுமே ஒப்பிட்டுப் பார்க்கிறீர்கள்.

மத்திய கால ஆங்கிலத்தை நீங்கள் படித்ததில்லை. அது ஜெர்மன் மொழி போன்றிருக்கும். பண்டைய ஆங்கிலம் படித்தால் மண்டை பிளந்து விடும். ஏனென்றால் அது ஐஸ்லாண்டிக் மொழி போன்றிருக்கும். ஆங்கிலம் என்பது பல மொழிகள் கலந்து உருவான நவீன மொழி.

ஆங்கிலத்தை நீங்கள் தமிழுடன் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டுமென்றால், ஆங்கிலம் உருவாகக் காரணமாக இருந்த பிரெஞ்சு, சாக்சன் (ஜெர்மன்), டேனிஷ், (பண்டைய) நார்வீஜியன், போன்ற பல மொழிகளையும் ஆராய வேண்டும்.

அதை விட்டு விட்டு, நவீன ஆங்கிலத்தையும், தமிழையும் ஒப்பிட்டுப் பார்த்து விட்டு, தமிழில் இருந்து ஆங்கிலம் வந்தது நிறுவுவது யாரை ஏமாற்றுவதற்காக?

இது தொடர்பாக இணையத்தில் ஒரு வீடியோ உலாவுகின்றது. (தமிழில்லாமல் ஆங்கிலமில்லை!; https://www.youtube.com/watch?v=Z9Ws-DG_HgA&feature=youtu.be) அதில் பல சொற்களை வேண்டுமென்றே திரித்து, தமிழில் இருந்து ஆங்கிலம் வந்தது என்ற மயக்கத்தை உருவாக்கி இருக்கிறார்கள். அந்த வீடியோவை நானும் பார்த்தேன். அதில் எவ்வளவு பொய்கள் சொல்லப் பட்டிருக்கின்றன என்பதை இங்கே பட்டியலிடுகிறேன்:

வீடியோவில் அந்த "ஆய்வாளர்" Button என்ற சொல்லுடன் தொடங்குகிறார். அதற்கு ஆங்கில சொற்களின் வேற்று மொழி வேர்களை கண்டுபிடிக்கும் இணையத் தளமான Online Etymology Dictionary http://www.etymonline.com/index.php ஐ ஆதாரமாக காட்டுகிறார். 

Button என்பது பொத்தான் என்ற தமிழ்ச் சொல்லில் இருந்து தோன்றியது என்பதை அந்த இணையத்தளத்தில் குறிப்பிட்டு இருப்பதாக ஒரு பொய்யை கூறுகின்றார். அதில் அப்படி எதுவும் இல்லை. அதை நீங்களே பார்க்கலாம். (http://www.etymonline.com/index.php?allowed_in_frame=0&search=button&searchmode=none) அது பொத்தோ (boton) என்ற பிரெஞ்சு சொல்லில் இருந்து வந்தாலும், அதன் மூலம் ஜெர்மன் சொல்லான பூட் (butt) என்பதே ஆகும்.

ஆங்கிலேய காலனிய ஆட்சிக் காலத்தில் அறிமுகமான பல சொற்கள், சாதாரண மக்கள் மத்தியில் தமிழ்ப் படுத்தப் பட்டு பாவிக்கப் பட்டன. Bottle என்ற ஆங்கிலச் சொல், தமிழில் போத்தல் ஆகியது. அதே மாதிரித் தான், Button பொத்தான் ஆனது. உண்மையில் காலனிய காலகட்டத்தை வசதியாக மறந்து விடும் "ஆய்வாளர்", பொத்து என்ற தமிழ்ச் சொல்லில் இருந்து பொத்தான் வந்தது என்று அடம் பிடிக்கிறார்.

வீடியோவில் அந்த "ஆய்வாளர்" உதாரணம் காட்டும் பிற சொற்களும், இவ்வாறே தமிழுடன் எந்த வித சம்பந்தமும் இல்லாதவை. மொட்டந் தலைக்கும், முழங்காலுக்கும் முடிச்சுப் போடுவதைப் போன்று, சம்பந்தா சம்பந்தம் இல்லாத சொற்களுக்கு இடையில் தொடர்பை உண்டாக்குகிறார். அவர் காட்டும் உதாரணங்களை, நீங்களாகவே பின்வரும் இணையத் தளத்தில் சரி பார்க்கலாம். (http://www.etymonline.com/index.php)

Architect என்ற ஆங்கிலச் சொல்லின் மூலம் "அரசு+தச்சர்" என்ற தமிழ்ச் சொல்லாம். முதலில் அது ஆங்கிலச் சொல்லே அல்ல. கிரேக்க மொழியில் கட்டிட வல்லுநர் என்ற அர்த்தம் வரும்.

Opera - "ஒப்பாரி" என்ற தமிழ்ச் சொல்லில் இருந்து வந்தது என்பது ஒரு பொய். ஐரோப்பாவில் Opera என்பது நம்மூர் நாட்டுக் கூத்து போன்றது. Opera என்பது ஆங்கிலச் சொல் அல்ல. லத்தீன் மொழியில் Operari என்றால் வேலை செய்வது என்று அர்த்தம். குறிப்பிட்ட ஒரு துறையில் திறமையாக வேலை செய்வதை குறிப்பிடலாம். Operation என்ற சொல் அதிலிருந்து பிறந்தது.

கடலைக் குறிக்கும் Sea என்ற ஆங்கிலச் சொல், "சேய்+மெய்= சீமை" என்ற தமிழ்ச் சொல்லில் இருந்து வந்ததாக பொய்யுரைக்கின்றனர். தமிழில் சீமை என்பது தொலைவில் உள்ள வெளி நாட்டைக் குறிக்கும். ஆனால், ஆங்கில Sea என்ற சொல், "See" என்ற டச்சு சொல்லில் இருந்து வந்தது. "ea" என்பது இரண்டு வேறு எழுத்துக்கள் அல்ல! பழைய ஆங்கிலத்தில் அவை ஒரே எழுத்தாக, "æ" என்றிருந்தது. தற்போதும் நோர்வீஜிய, டேனிஷ் மொழிகளில் பயன்படுத்தப் படுகின்றது. 

"æ" என்ற எழுத்தின் உச்சரிப்பு கிட்டத் தட்ட ஆங்கில "A"(ஏ) மாதிரி இருக்கும். ஆகவே ஆங்கில Sea, தற்போதும் டச்சு மொழியில் பயன்படுத்தப் படும் See (உச்சரிப்பு: சே) என்பதில் இருந்து வந்தது என்பது நிரூபணமாகின்றது. அதன் அர்த்தம் என்ன? நான்கு பக்கமும் நிலத்தால் சூழப் பட்ட ஏரி! (ஐரோப்பாவில் கடல் என்பது நிலத்தால் சூழப் பட்டது. மற்றையது சமுத்திரம், இரண்டுக்கும் வித்தியாசம் உள்ளது.) அதாவது, ஒரே நாட்டிற்குள் உள்ள மிகப் பெரிய குளம். அது எப்படி சீமை ஆகும்?

இவ்வாறு ஒவ்வொரு சொல்லுக்கும் நான் விளக்கம் கொடுத்துக் கொண்டிருக்கலாம். ஆனால், கட்டுரையின் விரிவஞ்சி இத்தோடு முடித்துக் கொள்கிறேன். இறுதியாக இது தொடர்பாக முகநூலில் சிலருடன் நடந்த உரையாடலை குறிப்பிட விரும்புகிறேன்.

Cry என்ற ஆங்கிலச் சொல், "கரை" என்ற தமிழ்ச் சொல்லில் இருந்து வந்தது என்று கூறுகிறார்கள். தமிழ் எழுத்து மொழியில் Cry என்றால், அழுவது என்று அர்த்தம். ஆனால், இவர்கள் "கரைதல்" என்ற வட்டார மொழியை எடுத்துக் காட்டுகிறார்கள். மலையாளத்தில் அழுவதற்கு, கரைவது என்று சொல்வார்கள். அதனால், தமிழ் நாட்டின் சில பகுதிகளில் கரைவது என்று சொல்லப் படலாம் என்பதை ஏற்றுக் கொள்கிறேன். உண்மையில் Cry என்ற சொல், Crier என்ற பிரெஞ்சுச் சொல்லில் இருந்து வந்தது. (ஆதாரம்: http://www.etymonline.com/index.php?allowed_in_frame=0&search=cry&searchmode=none)

ஆனால், இந்தப் பித்தலாட்டக்காரர்கள், அப்பாவித் தமிழர்களை எவ்வாறு ஏமாற்றுகிறார்கள் என்பதையும் கவனிக்க வேண்டும். தமிழ் எழுத்து நடையில் இல்லாத, குறிப்பிட்ட பிரதேசத்தில் புழங்கும் பேச்சு மொழிச் சொற்களை "ஆதாரம்" காட்டுகிறார்கள். அதை எதனுடன் ஒப்பிடுகிறார்கள்? ஆங்கில எழுத்து மொழியுடன் ஒப்பிடுகிறார்கள். எவ்வாறு தமிழில் பல விதமான வட்டார வழக்கு மொழிகள் உள்ளனவோ, அதே மாதிரி ஆங்கிலத்திலும் இருக்கலாம் என்ற உண்மையை உணர மறுக்கிறார்கள். 

வடக்கு இங்கிலாந்தில், லிவர்பூலில் பேசப்படும் ஆங்கிலமும், நியூகாசிலில் (New Castle) பேசப்படும் ஆங்கிலமும் பெருமளவு வித்தியாசம் கொண்டவை. பல சொற்கள் அந்தப் பிரதேசத்திற்கு உரியவை. உண்மையில் லண்டன் ஆங்கிலம் தான், பிற்காலத்தில் தரப் படுத்தப் பட்டது. அதையே நாம் எல்லோரும் கற்றுக் கொள்கிறோம்.

லண்டன் ஆங்கிலத்தில், பெருமளவு பிரெஞ்சுச் சொற்கள் கலந்துள்ளன. அது ஒன்றும் தற்செயல் அல்ல. ஆங்கிலேய அரச வம்சத்தினரின் பூர்வீகம் பிரான்ஸ்! 17 ம் நூற்றாண்டு வரையில், அரச குடும்பத்தினரும், பிரபுக்கள் குடும்பத்தினரும் பிரெஞ்சு மொழி பேசினார்கள்! அவர்கள் பேசியதும் தரப் படுத்தப் பட்ட பிரெஞ்சு மொழி தான். அதாவது "பாரிஸ் பிரெஞ்சு". 

பிரான்சிலும் நிறைய வட்டார மொழிகள் உள்ளன. அதையெல்லாம் நாங்கள் கவனத்தில் எடுப்பதில்லை. இங்கிலாந்தில், பிரான்சில் உள்ள அனைத்து வட்டார வழக்கு மொழிகளையும் படித்து தெரிந்து கொள்வது சாத்தியமில்லை. இருப்பினும், "ஆங்கிலம் தமிழில் இருந்து வந்தது" என்று நிறுவ முனையும் "ஆய்வாளர்கள்", வட்டார மொழிகளையும் ஆராய வேண்டும். குறைந்த பட்சம், அவர்கள் எடுத்துக் காட்டும் சொற்களையாவது தேட வேண்டும்.

அப்படி எதுவும் செய்யாமல், தரப் படுத்தப் பட்ட ஆங்கில எழுத்து மொழியையும், குறிப்பிட்ட பிரதேசத்தில் மட்டும் பேசப் படும் தமிழ் பேச்சு மொழியையும் ஒப்பிடுவது எப்படி சரியாகும்? ஏனென்றால், எல்லா உலக நாடுகளிலும், தரப்படுத்தப் பட்ட எழுத்து மொழி, அந்தந்த நாடுகளில் இருந்த வட்டார மொழிகளை கலந்து தான் உருவானது. 

ஆகவே, முதலில் நாங்கள் ஆங்கிலத்தையும், தமிழையும் தனித் தனியாக ஆராய வேண்டும். அந்தளவு தூரம், எந்த "ஆய்வாளரும்" செல்லப் போவதில்லை. அவர்களது நோக்கம், தமிழர்களில் சிலரை மூளைச் சலவை செய்து, தமது அரசியல் குறிக்கோள்களை நிறைவேற்றிக் கொள்வது மட்டுமே.

Thursday, August 20, 2015

"மாற்று நாணய சமூகங்கள்" : பணமில்லாத சமுதாயத்தை உருவாக்குவது எப்படி?

நீங்கள் வசிக்கும் நாட்டின் பொருளாதாரம் திவாலானால் என்ன செய்ய வேண்டும்? கிரேக்க மக்களிடம் இருந்து கற்றுக் கொள்வோம். அந்த நாட்டில், யூரோ நாணயத்திற்கு பதிலாக, மாற்று நாணயங்களின் பாவனை பெருகி வருகின்றது. ஒரு மாற்று நாணயத்தை உருவாக்குவது, பயன்படுத்துவது எப்படி?

கிரேக்க நாட்டில், குறைந்தது 80 மாற்று நாணயங்கள் பயன்படுத்தும் அமைப்புகள் புழக்கத்தில் உள்ளன. குறைந்தது பத்துப் பேர், அதிகப் படியாக ஆயிரக் கணக்கில் உறுப்பினர்களை கொண்டதாக இந்த அமைப்புகள் உள்ளன. "மாற்று நாணய அமைப்புகள் அரசுக்கு வரி கட்டாமல் தவிர்க்கப் பார்க்கின்றன" என்று கிரேக்க அரசு குற்றஞ் சாட்டினாலும், அதை சட்டவிரோதமாக்க முடியாத நிலையில் உள்ளது.

TEM என்ற மாற்று நாணயம் மிகவும் பிரபலமானது. அதன் உறுப்பினர்கள் ஓராயிரத்தை தாண்டியுள்ளது. வோலோஸ் எனும் நகரிலும், அதை அண்டிய பகுதிகளிலும் உள்ள அனைத்து வர்த்தக நிறுவனங்களினாலும் அங்கீகரிக்கப் பட்டுள்ளது. TEM நாணயத்தின் பெறுமதி யூரோவுக்கு சரி சமமானது. ஆகவே, ஒருவர் யூரோவில் பணம் செலுத்துவது மாதிரி, TEM கொடுத்தும் பொருட்களை வாங்கலாம்.

நாணயப் பரிவர்த்தனை எவ்வாறு இயங்குகிறது? TEM பாவிக்கும் நபர்களின் பட்டியல், அவர்களிடம் உள்ள பணத்தின் எண்ணிக்கை போன்ற விபரங்கள் கணனியில் சேமித்து வைக்கப் பட்டிருக்கும். வர்த்தகர்கள், வாடிக்கையாளர்கள் எங்கேயும் எப்போதும் பயன்படுத்தும் வகையில், இணையத்தில் பார்வையிடலாம். எவ்வளவு TEM செலவாகி உள்ளது, மிச்சம் எவ்வளவு என்பதையும் பார்க்கலாம்.

கடையில் பொருட்களை வாங்குவது மட்டுமல்ல, வைத்தியரை பார்ப்பது, முடி திருத்துவது, கல்வி கற்பது, போன்ற சேவைகளுக்கும் TEM பயன்படுத்திக் கொள்ளலாம். யூரோ நாணயம் மாதிரி, TEM நாணயத்தை கண்ணால் காண முடியாது என்பது மட்டுமே வித்தியாசம். அதாவது, அதற்கு பணத் தாள்கள், சில்லறை குற்றிகள் எதுவும் கிடையாது.

ஒருவர் தனது மாற்று நாணயத்தை எவ்வாறு சேமிக்கிறார்? அதற்கு ஏதென்ஸ் நகரில் இயங்கும் ATX நாணயம் இலகுவான விளக்கம் அளிக்கலாம். 2011 ம் ஆண்டில் இருந்து இயங்கும் ATX வலையமைப்பில், ஆயிரக் கணக்கானோர் சேர்ந்து விட்டனர். அதனை "நேர சேமிப்பு வங்கி" என்று அழைக்கிறார்கள். அதாவது, ஒருவர் செய்த வேலை நேரத்தை சேமித்து அதை பணமாக மாற்றுவது. 

உதாரணத்திற்கு, ஒரு தொழிலாளி ஒரு நிறுவனத்தில் ஒரு நாளைக்கு எட்டு மணி நேரம் உடல் உழைப்பை வழங்குகின்றார். அதே நேரம், ஓர் ஆசிரியர், பாடசாலையில் எட்டு மணி நேரம் படிப்பிக்கிறார். யார் என்ன வேலை செய்தாலும் பரவாயில்லை. வேலை செய்யும் மணித்தியாலம் ஒவ்வொன்றுக்கும் பெறுமதியை பணத்தால் அளக்கிறார்கள். அதைத் தான் நாங்கள் சம்பளம் என்கிறோம்.

ATX வங்கியில், பணமல்ல, வேலை நேரம் மட்டுமே கணக்கு வைக்கப் படுகின்றது. உறுப்பினர்கள் தாம் வேலை செய்த நேரங்களை, அந்த வங்கியில் சேமித்து வருவார்கள். அதைக் கொண்டு, கடையில் பொருட்களை வாங்கலாம்! அதிசயம் ஆனால் உண்மை. இது நடைமுறைச் சாத்தியமான விடயம் தான். உண்மையில், பணம் என்பதன் அர்த்தம் அங்கே தான் உணரப் படுகின்றது.

என்னிடம் நூறு ரூபாய் பணம் இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். அதன் அர்த்தம் என்ன? நூறு ரூபாய்க்கு பெறுமதியான உழைப்பை, சேவையை அல்லது பொருளை வழங்குவதற்கு இன்னொருவருக்கு கடமைப் பட்டுளேன். இன்னொரு விதமாக சொன்னால், எனது சேவை, உழைப்பு, பொருளை பெற்றுக் கொண்ட ஒருவர், தனது கடமைப்பாட்டை நூறு ரூபாய் மூலம் ஈடு கட்டியுள்ளார்.

இது தான் பணம் என்ற பொருளாதாரத்தின் அடிப்படை. அதனால் தான், ATX வங்கியில், பணத்திற்கு பதிலாக நேரத்தை சேமிக்கிறார்கள். இதன் மூலம் எல்லோருக்கும் நன்மை உண்டாகின்றது. பணம் இல்லாதொழிக்கப் பட்டுள்ள படியால், இலஞ்சம், ஊழல் நடக்கவும் வாய்ப்பில்லை. யாரும் செல்வம் சேர்த்து பணக்காரனாகவும் முடியாது. அதே நேரம் யாரும் ஏழ்மையில் கஷ்டப் படவும் மாட்டார்கள்.




Greek town develops bartering system without euro


இது தொடர்பான முன்னைய பதிவுகள்:

Saturday, August 15, 2015

எளிமையின் மறுபெயர் இடதுசாரியம் - ஒரு டச்சு நண்பரின் கதை


நான் நெதர்லாந்துக்கு வந்த புதிதில், ஓர் இடதுசாரி - அனார்க்கிஸ்ட் நண்பருடன் தொடர்பேற்பட்டது. பூர்வீக டச்சுக்காரரான அவர், தமிழ் அகதிகளுக்கு சட்ட ஆலோசனை வழங்கும் தொண்டு நிறுவனம் ஒன்றை நடத்தி வந்தார். இலங்கைக்கும் இரண்டு மூன்று தடவைகள் சென்று வந்துள்ளார். தேர்தல் கண்காணிப்பாளராக கடமையாற்றி உள்ளார்.

எனது வாழ்க்கையில் பெரும் தாக்கத்தை உண்டு பண்ணிய மனிதர்களில் அவரும் ஒருவர். உலகில், நாட்டில் நடக்கும் எல்லா விடயத்திற்கும் கோட்பாட்டு விளக்கம் தருவார். அவரது தெளிவான அரசியல் கண்ணோட்டமும், வர்க்கப் பார்வையும் எனது எழுத்துக்களில் பல இடங்களில் பிரதிபலித்துள்ளன. அதற்காக நான் அவருக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன். குறைந்தது மூன்று வருடங்களாவது, எனது தஞ்சமனு கோரிக்கைக்கு உதவியது மட்டுமல்லாது, அரசியல் கற்பித்த ஆசானாகவும் இருந்தார்.

மேற்கு ஐரோப்பாவில், எல்லோரிடமும் "சொந்த வீடு, சொந்த வாகனம்" இருக்கும் என்று, சாதாரண தமிழ் மக்கள் நினைக்கிறார்கள். ஆனால், உண்மை நிலவரம் அதற்கு மாறானது. எனது இடதுசாரி நண்பர் போன்று பலர், தாம் நம்பும் கொள்கைக்கு ஏற்றவாறு வாழ்கிறார்கள். வசிப்பதற்கு ஒரு வீடு இருந்தால் போதும் என்று இப்போதும் வாடகை வீட்டில் வாழ்கிறார்கள். வாகனமாக சைக்கிள் மட்டுமே பாவிக்கிறார்கள்.

ஒரு முதலாளித்துவ நாட்டில், மனித வாழ்க்கையில் தேவையான அனைத்து அம்சங்களும் முதலாளிகளின் இலாப நோக்கை இலக்காக கொண்டே நடக்கின்றன. "சொந்த வீடு, சொந்த வாகனம்" எதுவும் அதற்கு விதிவிலக்கல்ல. 

எனது டச்சு நண்பரின் (குடும்பப்) பெயர் "கொக்". அப்போது நெதர்லாந்து பிரதமராக இருந்தவரின் பெயரும் (விம்) கொக் தான். அந்தக் கொக் பிரதமர். இந்தக் கொக் தீவிர அரச எதிர்ப்பாளர். ஒவ்வொரு வருடமும், இராணியின் தினம் என்ற பெயரில் டச்சு தேசியப் பெருமை பேசும் தினம் கொண்டாடப்படும் நாட்களில் விடுமுறையில் வெளிநாட்டுக்கு சென்று விடுவார். அப்போது நெதர்லாந்து இராணியாக இருந்தவர் பெயாத்ரிக்ஸ். "அவள் ஒரு கொள்ளைக்காரி. எனக்கு இராணி அல்ல!" என்று சொல்வார்.

கொக் பல வருடங்களாக, சோஷலிச பங்கீட்டு குடியிருப்பு ஒன்றில் வசிக்கிறார். அதாவது, ஒவ்வொரு மாடியிலும் உள்ள வீடுகளில், ஆளுக்கொரு அறை தனியாக வாடகைக்கு எடுத்திருப்பார்கள். சமையலறை, குளியலறை, கழிப்பறை எல்லாம் மூன்று பேருக்கு பொதுவாக இருக்கும். முன்பு சோவியத் யூனியனில் புரட்சிக்குப் பின்னர் அவ்வாறான பங்கீட்டு வீட்டுத் திட்டம் பிரபலமடைந்தது. இன்றைக்கும் நெதர்லாந்தில் பல இடங்களில் நடைமுறையில் உள்ளது.

முன்பு அந்த பங்கீட்டு குடியிருப்புகள் உண்மையிலேயே சோஷலிச கூட்டுறவு அடிப்படையில் இயங்கின. தற்போது தனியார் நிறுவனங்களாகி விட்டன. அனார்க்கிசத்தின் எதிர்மறையான விளைவுகளில் இதுவும் ஒன்று. உதாரணத்திற்கு, XS4ALL என்ற இணைய நிறுவனம் அனார்க்கிஸ்டுகளால் ஆரம்பிக்கப் பட்டது. 

அனைவருக்கும் இணைய சேவை செய்து கொடுப்பது என்ற தாரக மந்திரத்தை கூறி ஆரம்பிக்கப் பட்டது. இன்று அது பல இலட்சம் யூரோ இலாபம் சம்பாதிக்கும் பெரிய வர்த்தக நிறுவனமாகி விட்டது. ஆனால், வணிகத்தில் ஈடுபட்டாலும் பிற முதலாளித்துவ நிறுவனங்கள் மாதிரி முறைகேடுகள் செய்வதில்லை. உழைப்பாளர்களை சுரண்டுவதில்லை. அது வேறு விடயம். எனது நண்பரின் கதைக்கு வருவோம்.

ஆரம்ப காலங்களில், அந்த நண்பரின் எளிமையான வாழ்க்கை முறை என்னைப் பெரிதும் கவர்ந்திருந்தது. அப்போது நான் வதிவிட அனுமதி கூட பெற்றிராத அகதி. நிச்சயமற்ற எதிர்காலம் எதைப் பற்றியும் தீர்மானிக்க விடாமல் தடுத்தது. என்னுடன் கூட இருந்த அகதிகள்,வதிவிட அனுமதி கிடைத்தவுடன் என்னென்ன செய்வோம் என்று கனவுக் கோட்டை கட்டிக் கொண்டிருந்தார்கள். அத்தகைய சூழலில் வாழ்ந்த எனக்கு, ஒரு பூர்வீக டச்சுகாரரின் எளிமையான வாழ்க்கை ஆர்வத்தை தூண்டியதில் வியப்பில்லை.

அவரிடம் ஒரு பழைய சைக்கிள் இருந்தது. அது மட்டும் தான் அவரது வாகனம். கடைக்கு, வேலைக்கு சென்று வருவது அந்த சைக்கிளில் தான். எனக்கு அறிமுகமான, கடந்த பத்து வருடங்களாக அவர் சைக்கிளில் செல்வதை பார்த்திருக்கிறேன். கார் வைத்திருப்பது பற்றிய கதை எழுந்தால், சுற்றுச் சூழல் மாசடைவது முதல், பெட்ரோல் அரசியல் வரையில் நீண்ட விரிவுரை ஆற்றுவார். மக்கள் ஒரே நாளில் மாற மாட்டார்கள். இப்படித்தான் என்று நாங்கள் வாழ்ந்து காட்ட வேண்டும் என்று கூறுவார்.

நெதர்லாந்தில் அனார்க்கிஸ்ட் இடதுசாரிகள் பலர் சைக்கிள் மட்டுமே பாவிக்கின்றனர். குடும்பகாரர்களும் அப்படித்தான். சிறு குழந்தைகள் இருந்தால், அவர்களை ஏற்றிச் செல்வதற்கு "Bakfiets" வைத்திருப்பார்கள். அது கிட்டத்தட்ட ரிக்சா வண்டி மாதிரி இருக்கும். சைக்கிளின் முன்பக்கம் மரத்தால் செய்த பெட்டி ஒன்றிருக்கும். 

ஒரு மத நம்பிக்கை மிக்க கத்தோலிக்க கிறிஸ்தவ குடும்பத்தில் பிறந்தவர் தான் எனது நண்பரும். ஆனால், எல்லாவிதமான கிறிஸ்தவ மத அடையாளங்களையும் கவனமாக தவிர்ப்பார். நெதர்லாந்தில் ஒரு காலத்தில் சமூகப் பிரிவினைகள் தீவிரமாக இருந்தன. அதாவது, கத்தோலிக்க குடும்பங்கள், புரட்டஸ்தாந்து குடும்பங்கள் வெவ்வேறு சமூகங்களில் வாழ்ந்தன. இரண்டுக்கும் இடையில் தொடர்புகள் குறைவாக இருக்கும். அது போன்று இடதுசாரிகள், நாஸ்திகர்கள் தனியான சமூகப் பிரிவு. அவர்களுக்கு இவர்களைப் பிடிக்காது. இவர்களுக்கு அவர்களைப் பிடிக்காது.

இந்த நாட்டில், கல்வி, வேலை போன்றவற்றைக் கூட, முடிந்தளவு கொள்கை அடிப்படையில் தெரிவு செய்கிறார்கள். உதாரணத்திற்கு, தீவிர புரட்டஸ்தாந்து குடும்பப் பெற்றோர், தமது பிள்ளைகள் மதுபான சாலையில் வேலை செய்வதை விரும்புவதில்லை. அதே மாதிரி இடதுசாரிகளுக்கும் சில தெரிவுகள் உள்ளன. எனது நண்பர் வாகெனிங்கன் பல்கலைக்கழகத்தில் விவசாயம் படித்து பட்டம் பெற்றவர். அந்தக் காலத்தில், விவசாயம் இடதுசாரிகளுக்கு மிகவும் விருப்பமான கல்விகளில் ஒன்று.

பல்கலைக்கழக பட்டதாரியாக இருந்தாலும், பிறரைப் போன்று தனியார் நிறுவனம் ஒன்றில் கொழுத்த சம்பளத்திற்கு வேலை செய்யும் எண்ணம் இருக்கவில்லை. முடிந்தளவு அரசாங்க நிறுவனம் ஒன்றில் வேலை தேடி இருக்கிறார். அது கிடைக்கவில்லை என்றதும், இலங்கை அகதிகளுக்கு உதவி செய்யும் தொண்டு நிறுவனத்தை நடத்தி வந்தார்.

அவர் ஒரு தடவை அகதி முகாம் ஒன்றில் வேலை செய்யும் பொழுது, எனக்கு அறிமுகமான தமிழர் ஒருவரை சந்தித்திருக்கிறார். அப்போது அந்தத் தமிழர், "கலையரசன் ஒரு கம்யூனிஸ்ட் தெரியுமா?" என்று கேட்டிருக்கிறார். "ஆமாம், தெரியும்" என்று புன்சிரிப்புடன் பதிலளித்திருக்கிறார். "அதனால் தான் எமக்கிடையிலான புரிந்துணர்வு அதிகம்" என்றும் கூறி உள்ளார். ஆனால், அவர் என்னையும் தன்னைப் போன்று "அனார்க்கிஸ்ட்" என்று தான் அழைப்பார். இலங்கை அரசியல் சம்பந்தமான எந்த விடயத்தையும் என்னிடம் கேட்டு உறுதிப் படுத்திய பின்னர் தான், அதன் தன்மை குறித்து தீர்மானமான முடிவெடுப்பார். 

இங்கே முக்கியமானது சமூகம் தொடர்பான வர்க்கப் பார்வை. அது பெரும்பாலான தமிழர்களிடம் இல்லை என்பதும் அவருக்குத் தெரியும். அப்போது என்னிடம் பூரணமான அரசியல் தெளிவு இருந்தது என்று சொல்ல முடியாது. நானும் பல தடவைகள், (தமிழ்) தேசியவாதக் கருத்துக்களை கூறி இருக்கிறேன். அப்போதெல்லாம், எது தேசியவாதம், எது வர்க்க சிந்தனை என்று திருத்தி விடுவார்.

16 - 17 ஜூன் 1997 அன்று, ஆம்ஸ்டர்டாம் நகரில் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் மிகப்பெரிய உச்சி மகாநாடு நடைபெற்றது. அதற்கு எதிர்ப்புத் தெரிவிப்பதற்காக, ஐரோப்பிய நாடுகளில் இருந்து பெருமளவு இடதுசாரி ஆர்வலர்கள் ஒன்று திரண்டனர். 

கம்யூனிஸ்ட் கட்சிகள், அனார்க்கிஸ்ட் அமைப்புகள், சோஷலிஸ்ட் கட்சிகள், சூழலிய வாதிகள் மற்றும் பல உதிரிகள் கலந்து கொண்ட மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. குறைந்தது ஐம்பதாயிரம் பேர் கலந்து கொண்டதாக பொலிஸ் அறிக்கை தெரிவித்தது. ஆம்ஸ்டர்டாம் நகரமே ஸ்தம்பித்து விட்டது. பல மணிநேரம் எந்த வாகனமும் ஓடவில்லை.

பெர்லின் மதில் வீழ்ந்த பின்னரான காலம் அது. "இடதுசாரிகள், கம்யூனிஸ்டுகள் பலவீனமடைந்து, அழிந்து விட்டதாக நாங்கள் கருதினோம். ஆனால், ஐரோப்பிய அளவில் பார்த்தால் அவர்களின் எண்ணிக்கை இப்போதும் அதிகம். மிகவும் பலமாக இருக்கின்றனர்." என்று வெகுஜன ஊடகங்கள் புலம்பிக் கொண்டிருந்தன. நானும் அடுத்த நாள் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டிருந்தேன். அது பற்றிய கட்டுரை ஒன்றை, இலங்கையில் வெளிவந்த "சரிநிகர்" பத்திரிகைக்கு எழுதி அனுப்பி இருந்தேன்.

எனது டச்சு நண்பரான கொக் கூட ஊர்வலத்திற்கு சென்றிருந்தார். அந்த இடத்தில் பொலிஸ் அடக்குமுறை தீவிரமாக இருந்தது. குறிப்பாக அனார்க்கிஸ்ட் குழுக்கள் பொலிசாரால் சுற்றி வளைக்கப் பட்டன. கறுப்புச் சட்டை (அனார்கிஸ்டுகளின் நிறம்) அணிந்திருந்த எல்லோரையும் கைது செய்தார்கள். அதற்குள் எனது நண்பரும் ஒருவர். அன்று அவரும் கறுப்புச் சட்டை அணிந்திருந்தார். 

அவரை ஒரு நாள் முழுவதும் பொலிஸ் நிலையத்தில் அடைத்து வைத்திருந்து, அடிக்காத குறையாக கடுமையான விசாரணை நடத்தி இருந்தார்கள். உடல் ரீதியான சித்திரவதை செய்யவில்லையே தவிர, மனத் தளர்ச்சி ஏற்படும் வகையில் மறைமுகமான சித்திரவதை செய்தார்கள். பத்துப் பதினைந்து பேரை ஒரே கூண்டுக்குள் அடைப்பது. உணவு, நீராகாரம் கொடுக்க மறுப்பது, மிரட்டல்கள் இது போன்ற பல அத்துமீறல்கள் நடந்துள்ளன.

கொக் அன்று தான் பட்ட துன்பங்களை, பின்னர் ஒரு கட்டுரையாக எழுதி இருந்தார். அதை எனக்கு வாசிக்கத் தந்தார். சிறிலங்காவில் நடக்குமளவிற்கு சித்திரவதைகள் இல்லாவிட்டாலும், "அமைதியாக" இருக்கும் மேற்கத்திய "ஜனநாயக" நாடான நெதர்லாந்தில் இவை பெரிய விடயங்கள் தான் என்றார். கைது செய்யப்படுவோம் என்று தெரிந்த படியால், ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட யாரும் அடையாள அட்டையோ, பிற ஆவணங்களோ எடுத்துச் செல்லவில்லை. 

அதனால், பொலிஸ் அவர்களின் பெயர் விபரங்களை பதிவு செய்ய பெரும் சிரமப் பட்டது. தடுத்து வைக்கப் பட்ட பலர், வேண்டுமென்றே பெயர், விலாசம் பற்றிய விபரங்களை கொடுக்க மறுத்தார்கள். (நெதர்லாந்து சட்டத்தில் அதற்கு இடமிருக்கிறது.) இறுதியில், அவர்கள் எல்லோரும் அரசியல் கைதிகள் என்ற படியால், இரண்டொரு நாட்களில் எல்லோரையும் விடுதலை செய்து விட்டார்கள்.

அந்தக் காலகட்டத்தை திரும்பிப் பார்த்தால், நெஞ்சு கனக்கிறது.  அது ஒரு பொற்காலம். அந்தக் காலம் இனித் திரும்பி வராது. தொண்ணூறுகளின் இறுதி வரையில், அரசு மக்களுக்கு சேவை செய்வதாக காட்டிக் கொண்டது. நாட்டில் சட்டவிரோதமாக இருப்பவர்களுக்கு கூட, மனிதாபிமான அடிப்படையில் உதவிக் கொண்டிருந்தது. (அது இடதுசாரிகளின் பிரதானமான கோரிக்கையாக இருந்தது.) 

ஒரு தடவை, ஆம்ஸ்டர்டாம் நகர பொலிஸ் மா அதிபர் தொலைக்காட்சி பேட்டி ஒன்றில் பின்வருமாறு கூறினார்: "எமது பொலிஸ் பிரிவுக்குள் குடியேறிகள் பலர் சட்டவிரோதமாக தங்கியிருந்து வேலை செய்கிறார்கள் என்பது எமக்குத் தெரியும். ஆனால், அவர்களைப் பிடிப்பது எங்களது வேலை அல்ல! அந்தப் பிரச்சினையை அரசாங்கம் தீர்த்துக் கொள்ள வேண்டும்!" பொதுவாகவே, பொலிஸ் யாரையும் தெருவில் மறித்து அடையாள அட்டை கேட்பதில்லை.  விபத்து போன்ற சில விதிவிலக்குகள் இருந்தன. ஆனால், 9/11 க்குப் பின்னரான காலப் பகுதியில் தான், அடையாள அட்டை பரிசோதிக்கும் சட்டம் வந்தது. 

ஒரு காலத்தில், நாட்டில் இருந்த அகதிகள், சட்டவிரோத குடியேறிகளுக்கு உதவும் பல்வேறு வகையான அமைப்புகள் இயங்கிக் கொண்டிருந்தன. அரசு அவற்றிற்கு நிதி வழங்கி வந்தது. அதனால்,இடதுசாரிகள் பலரும், தமது மனதுக்குப் பிடித்த தொழிலாக கருதி அவற்றில் வேலை செய்து கொண்டிருந்தார்கள். எனது நண்பரும் அவர்களில் ஒருவராக இருந்தார். ஆனால், அடுத்து ஆட்சிக்கு வந்த வலதுசாரி அரசுகள், எல்லாவற்றையும் நிறுத்தி விட்டன. தஞ்சமனு மறுக்கப்பட்ட அகதிகள், சட்டவிரோத குடியேறிகள், பலவந்தமாக பிடித்து திருப்பி அனுப்பப் பட்டனர்.

தொண்டு நிறுவனங்களுக்கு வழங்கி வந்த நிதிகள் ஒரேயடியாக நிறுத்தப் பட்டன. அதனால் அவற்றில் வேலை செய்து வந்த டச்சு பிரஜைகள் பலர் வேலையிழக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. இன்று வரையில் அந்த நிலைமை தொடர்கின்றது. ஆனால், இடதுசாரிகள் எதனை நிறுத்தச் சொல்லிக் கேட்டார்களோ அது இன்னும் தீவிரமாக தொடர்ந்து நடந்து கொண்டிருந்தது. அதாவது, இன்றைக்கும் பல உலக நாடுகளில் உள்நாட்டு யுத்தங்கள் நடக்கின்றன. அங்கிருந்து பெருந்தொகை அகதிகளும் வெளியேறிக் கொண்டிருக்கிறார்கள்.

இதனுடன் தொடர்புடைய முன்னைய பதிவுகள்:

Thursday, August 13, 2015

அமெரிக்காவை நம்பிக் கெட்ட முல்லா ஒமார் - வெளிவராத உண்மைகள்


தாலிபான் தலைவர் முல்லா ஒமார் காலமாகி விட்டார். ஆனால், அவரது மரணச் செய்தி, அவர் இறந்து இரண்டு வருடங்களுக்குப் பின்னர், தற்போது தான் அறிவிக்கப் பட்டுள்ளது. ஏன் இந்த கால தாமதம்?

வெளியில் இருப்போர் நினைத்ததற்கு மாறாக, கடந்த தசாப்த காலமாக தாலிபான் முல்லா ஒமார் கட்டுப்பாட்டின் கீழ் இருக்கவில்லை. இருப்பினும் அவரை சுற்றிப் பின்னப்பட்ட தலைமை வழிபாடு தொடர்ந்தும் இருந்தது. அதுவே முரண்பாடுகள் கொண்ட தளபதிகளையும், அனைத்துப் போராளிகளையும் ஒன்று சேர்க்கும் சக்தியாக இருந்தது. 

கடந்த ஆறாண்டுகளாக, பிரபாகரன் மரணத்தில் மர்மம் இருப்பதாக புலி ஆதரவாளர்கள் சொல்லி வந்தது போன்று தான், தாலிபான் தலைவர்களும் கூறிக் கொண்டிருந்தார்கள். முல்லா ஒமார் மரணமடைந்தது தெரிந்தால், இயக்கத்திற்குள் பிளவு ஏற்படும் என்று ஆவர்கள் அஞ்சி இருக்கலாம்.

முல்லா ஒமார் யார்? அவரது அரசியல் பின்னணி என்ன? ஒரு மேற்கத்திய எழுத்தாளர், முல்லா ஒமார் பற்றிய சுயசரிதை எழுதுவதற்காக, ஒமாரின் மெய்க்காப்பாளர்கள், உறவினர்கள், முன்னாள் போராளிகள் என்று பலரை சந்தித்துப் பேசியுள்ளார். அப்போது தான், அங்குள்ள உண்மை நிலவரம் மேற்குலக பிரச்சாரத்திற்கு மாறாக இருப்பதை கண்டுகொண்டார்.

மேற்குலகில் செய்யப்பட்ட பிரச்சாரத்திற்கு மாறாக, முல்லா ஒமார் என்றைக்குமே அமெரிக்க எதிர்ப்பாளராக இருக்கவில்லை! உண்மையில் அவர் தனது அரசுக்கு அமெரிக்க ஆதரவை எதிர்பார்த்தார்! அப்போது தாலிபான் இயக்கம், ஆப்கானிஸ்தானின் 95 வீத பகுதிகளை கட்டுப்பாட்டில் வைத்திருந்தது. ஆனால், ஐ.நா. மன்றம் முல்லா ஒமாரை ஆப்கானிஸ்தானின் ஜனாதிபதியாக ஏற்றுக் கொள்ள மறுத்து வந்தது. தாலிபான் அரசாங்கத்தையும் அங்கீகரிக்கவில்லை.

மேற்குலகில், "பின்லாடனின் அல்கைதாவும், தாலிபானும் ஒன்று" என தவறான தகவல்கள் பரப்பப் பட்டன. உண்மையில், இரண்டுமே வெவ்வேறு குறிக்கோள்களை கொண்டிருந்தன. ஆப்கானிஸ்தானில் தனது ஆட்சியை நிலைநிறுத்தி, தான் நம்பிய மதக் கோட்பாட்டின் அடிப்படையிலான அரசு அமைப்பது மட்டுமே முல்லா ஒமாரின் நோக்கமாக இருந்தது. 

அதற்கு அமெரிக்கா உதவும் என்று நம்பியுள்ளார். அமெரிக்க பெற்றோலிய நிறுவனம் ஒன்று, ஆப்கானிஸ்தான் ஊடாக எண்ணைக் குழாய் அமைக்க வேண்டுமென அழைப்பு விடுத்தார். அதன் மூலம், அமெரிக்காவுக்கும், தாலிபான் அரசுக்கும் பொருளாதார நன்மை உண்டாகும் என்று நம்பினார்.

இருப்பினும், முல்லா ஒமார் எதிர்பார்த்ததற்கு மாறாக சர்வதேச நிலைமைகள் மாறிக் கொண்டிருந்தன. அமெரிக்காவும், தாலிபான் அரசும் சிறிது காலம் பேச்சுவார்த்தைகள் நடத்தினாலும், பின்னர் தொடர்புகள் துண்டிக்கப் பட்டன. உண்மையில், அமெரிக்கா தான் தொடர்பை முதலில் துண்டித்துக் கொண்டது. அடுத்தடுத்து நடந்த நிகழ்வுகள் முல்லா ஒமாருக்கு ஏமாற்றமளிப்பதாக அமைந்திருந்தன.

9/11 தாக்குதலுக்குப் பின்னர், அமெரிக்கா "பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தம்" ஒன்றுக்கு தயாராகிக் கொண்டிருந்தது. அந்தத் தாக்குதலில் பின்லாடனுக்கு பங்கிருந்ததோ இல்லையோ, முல்லா ஒமாருக்கும் அதற்கும் சம்பந்தம் இருக்கவில்லை. ஆப்கானிஸ்தானில் பின்லாடனும், அல்கைதாவும் தனித்துவமாக இயங்கின. இருப்பினும், அமெரிக்கா தொடர்ந்தும் 9/11 தாக்குதலில் தாலிபானை சம்பந்தப் படுத்தி பிரச்சாரம் செய்து கொண்டிருந்தது.

அநேகமாக, கீழைத்தேய பண்பாடு, பழக்க வழக்கங்கள், மேற்குலகில் தவறான புரிதலை கொடுத்துள்ளன. முல்லா ஒமார் பின்லாடனை ஒப்படைத்த மறுத்ததற்கு பின்னால் கொள்கை, கோட்பாடு எதுவும் காரணமாக இருக்கவில்லை. வீட்டுக்கு வந்த விருந்தாளியை எதிரியிடம் பிடித்துக் கொடுக்கக் கூடாது என்ற பண்பாடு காரணமாக இருந்தது. இருந்தாலும், முல்லா ஒமார் பல தடவைகள் பின்லாடனை ஒப்படைக்க முன்வந்தார்.

9/11 தாக்குதலுக்கான ஆதாரங்களை சமர்ப்பித்தால், பொதுவானதொரு சர்வதேச நீதிமன்றம் ஒன்றில் நிறுத்தி விசாரிப்பதற்கு உதவும் வகையில், பின்லாடனை ஒப்படைக்க விரும்பினார். ஆனால், அந்த நிபந்தனைக்கு அமெரிக்க தரப்பில் மௌனம் நிலவியது. தாலிபானுடன் எந்தவித தொடர்பையும் ஏற்படுத்தாத அமெரிக்கா, "தாலிபானும், அல்கைதாவும் ஒன்று" என்ற பிரச்சாரத்தை தொடர்ந்து கொண்டிருந்தது.

இதற்கிடையே, முல்லா ஒமாரை விட புத்திசாலியான, வெளியுலகம் பற்றி நன்றாக அறிந்து வைத்திருந்த பின்லாடன் எச்சரிக்கையாக நடந்து கொண்டார்.  தாலிபானுடன் தொடர்புகளை துண்டித்துக் கொள்ளுமாறு தனது போராளிகளை எச்சரித்தார்.

அமெரிக்கப் படைகள் ஆப்கானிஸ்தானை கைப்பற்றிய பின்னர் நிலைமை தலை கீழாக மாறியது. அமெரிக்கப் படைகள் நியமித்த ஹாமிட் கார்சாய் பொம்மை ஆட்சியாளராக இருந்தார். அப்போது தாலிபான் சரணடைவதற்கு முன்வந்தது. தம்மை புதிய அரசில் சேர்த்துக் கொண்டால், ஆயுதங்களை ஒப்படைத்து சரணடைவதாகவும், பின்லாடனை கையளிப்பதாகவும் முல்லா ஒமார் கார்சாயுக்கு தூது அனுப்பினார். கார்சாயும் அதனை ஏற்றுக் கொண்டார். இருப்பினும் அமெரிக்க படைகள் தடைக்கல்லாக இருந்தன.

அமெரிக்கர்களினால் ஆக்கிரமிக்கப் பட்ட ஆப்கானிஸ்தானின் உண்மையான அதிகாரம், அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் டொனால்ட் ரம்ஸ்பெல்ட்டிடம் இருந்தது. அவர் தாலிபான்கள் சரணடைவதை விரும்பவில்லை. ஏன்? தாலிபான் சரணடைந்து விட்டால், "பயங்கரவாதத்திற்கு எதிரான போர்" உடனடியாக முடிவுக்கு வந்து விடும். அதனால் அமெரிக்காவின் நோக்கங்கள் நிறைவேறாமல் போகலாம். போர் தொடர வேண்டுமானால் எதிரி இருக்க வேண்டும். இல்லாவிட்டால், புதிதாக ஒன்றை உருவாக்க வேண்டும்.

பெரும்பாலான தாலிபான் போராளிகள், ஆயுதங்கள் எதுவுமின்றி தத்தம் வீடுகளில் இருந்தனர். அவர்கள் யாரும் யுத்ததிற்கு தயாராக இருக்கவில்லை. இருப்பினும், "தாலிபானை தேடியழிப்பது" என்ற பெயரில், முன்னாள் போராளிகளின் வீடுகளுக்குள் அமெரிக்க இராணுவம் புகுந்தது. தாலிபான் உறுப்பினர்களை தேடி, அவர்களது உறவினர்கள் துன்புறுத்தப் பட்டனர். அந்த அடக்குமுறை காரணமாக, தாலிபான் உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் தலைமறைவாக வேண்டிய நிர்ப்பந்தம் உருவானது. இவ்வாறு தான் அமெரிக்கப் படைகள் "புதிய எதிரி" ஒன்றை உருவாக்கின.

ஆரம்பத்தில் ஆப்கானிஸ்தானில் பல பிரதேசங்களில், உள்ளூர் யுத்த பிரபுக்களின் வன்முறை தான் அதிகமாக இருந்தது. பலர் அதிகாரப் போட்டி காரணமாகவும் குழப்பம் விளைவித்தனர். எதிராளிக்கு நிதி செல்வதை தடுப்பதற்காக பாடசாலையை புல்டோசர் கொண்டு இடித்த யுத்த பிரபுக்களுமுண்டு. உள்ளூர் யுத்தபிரபுக்களின், தனிப்பட்ட சுயநலம் காரணமாக நடந்த வன்முறைகள் யாவும், மேற்குலக ஊடகங்களில் "தாலிபான் தாக்குதல்களாக" சித்தரிக்கப் பட்டன. ஒரு கட்டத்தில், இந்த "தவறான தகவல்கள்" தாலிபானின் வளர்ச்சிக்கு உதவின.

நீண்ட காலமாக, புதிய தாலிபான் இயக்கத்திற்கு முல்லா ஒமார் தலைமை தாங்குவதாக தவறாக கருதப் பட்டது. உண்மையில் புதிய தலைமுறை தாலிபான் தளபதிகள் எல்லோரும் முல்லா ஒமாருக்கு விசுவாசமாக இருக்கவில்லை. "முல்லா ஒமார் பின்லாடன் என்ற அரேபியரை கொடுக்காமல் வைத்துக் கொண்டிருந்த படியால் தான், அமெரிக்கப் படைகள் வந்திறங்கி நாட்டை நாசமாக்கி விட்டார்கள்..." என்று அதிருப்தி தெரிவித்தவர்களும் உண்டு. இருப்பினும், முல்லா ஒமார் அனைவராலும் மதிக்கப் பட்ட தலைவராக இருந்தார். இனக் குழுத் தலைவர்கள் யாரும் கடைசி வரையிலும் அவரைக் காட்டிக் கொடுக்கவில்லை.

(De Groene Amsterdammer சஞ்சிகையில் வெளியான கட்டுரையை தழுவி எழுதப் பட்டது.)

மூலக் கட்டுரையை வாசிப்பதற்கு: Mullah Omar 1950-1962 – 23 april 2013 http://www.groene.nl/artikel/het-einde--11

Tuesday, August 11, 2015

இங்கிலாந்து ஏழை பாட்டாளி வர்க்கத்தின் அவலம் பற்றி எங்கெல்ஸ் எழுதிய நூல்


பிரெடெரிக் எங்கெல்ஸ் எழுதிய, "இங்கிலாந்து உழைக்கும் வர்க்க மக்களின் நிலைமை" : 19 ம் நூற்றாண்டில், இங்கிலாந்தின் நகரங்களில் இருந்த சேரிகளில் வாழ்ந்த ஏழை மக்களின் அவல வாழ்க்கை பற்றி, இதை விட சிறப்பாக வேறெந்த நூலிலும் பதிவு செய்யப் படவில்லை. அதனால் இன்று வரைக்கும் உலகப் புகழ் பெற்ற மாபெரும் இலக்கியங்களில் ஒன்றாக போற்றப் படுகின்றது.

19 ம் நூற்றாண்டில், தொழில் துறை வளர்ச்சி கண்ட ஐரோப்பிய நகரங்களில் சேரிகளும் பெருகின. தொழிற்சாலைகளில் வேலை செய்த தொழிலாளர்கள், எந்த வசதியுமற்ற வீடுகளில், கழிவுகள், குப்பைகளுக்கு நடுவில் வாழ நிர்ப்பந்திக்கப் பட்டனர். அது தொழிற் புரட்சியின் விளைவாக ஏற்பட்டது என்பதை, எங்கெல்ஸ் இந்த நூலில் விரிவாகக் கூறுகின்றார்.

இன்றைய காலகட்டத்தில் ஏழைகளின் வாழ்க்கையை சித்தரிக்கும், சினிமாக்கள், நாவல்கள் தாராளமாக வெளிவருகின்றன. ஆனால், 19 ம் நூற்றாண்டு வரையில் அது குறித்து அக்கறை கொண்டவர்கள் மிகக் குறைவு. பிரான்சில் விக்டர் ஹியூகோ Les Misérables (ஏழை படும் பாடு) என்ற நாவலை எழுதினார். இவ்வாறு குறிப்பிட்ட சில எழுத்தாளர்கள் மட்டுமே, ஏழைகளின் வாழ்க்கையையும் பதிவு செய்துள்ளனர்.

எங்கெல்ஸ் எழுதிய இந்த நூல், ஏழைகளின் அவல வாழ்க்கையை ஒரு ஆவணமாக பதிவு செய்துள்ளது. வாசிப்பதற்கு எளிமையாக, ஒரு நாவல் போன்று எழுதப் பட்டுள்ளது. இருப்பினும் இதிலே எதுவுமே கற்பனை அல்ல. அந்தக் காலங்களில் இருந்த இங்கிலாந்தின் நிலைமை, இன்றுள்ள வறிய நாடுகளின் நிலைமை மாதிரி, அல்லது அதை விட மோசமானதாக இருந்தது. 

நெருக்கமான குடியிருப்புகள். ஒடுக்கமான தெருக்கள். அகற்றப்படாத குப்பைகளும், மனிதக் கழிவுகளும். எங்கும் வியாபித்திருக்கும் துர் நாற்றம். எட்டுப், பத்துப் பிள்ளைகளை கொண்ட குடும்பம் முழுவதும் ஒரேயொரு அறைக்குள் அடங்கி வாழும் அவலம். இவையெல்லாம் மிகவும் தெளிவாகவும், விரிவாகவும் இந்த நூலில் பதிவு செய்யப் பட்டுள்ளன.

ஐரோப்பியர்கள் பல நூறாண்டுகளாக செல்வத்தில் வாழ்ந்து வந்ததாக, நம் மத்தியில் உள்ள படித்தவர்கள் கூட நினைக்கிறார்கள். குறிப்பாக முதலாளித்துவத்திற்கு வக்காலத்து வாங்கும் "அறிவுஜீவிகள்", 19 ம் நூற்றாண்டிலும் ஐரோப்பாவில் நிலவிய, வறுமையின் கொடுமைகளை காண மறுக்கிறார்கள். அவர்கள் அது குறித்து எங்கேயும் படிக்கவும் இல்லை, கேள்விப் படவுமில்லை. பூனை கண்களை மூடிக் கொண்டிருப்பதால் உலகம் இருண்டு விடுவதில்லை.

மேற்கத்திய முதலாளித்துவ அறிஞர்கள் சிலர், தமது அரசியல் பக்கச் சார்பு காரணமாக, இந்த நூலில் உள்ள தரவுகள் தவறானவை, கற்பனையானவை என்று கூறுகின்றனர். வரலாறு எப்போதும் மன்னர்களைப் பற்றி எழுதப் படுகின்றது. மக்களைப் பற்றிய வரலாறு அரிதாகவே எழுதப் படுகின்றது. அதற்காக, 19 ம் நூற்றாண்டு இங்கிலாந்தில் தேனும் பாலும் ஆறாக ஓடியதாக வரலாற்றை திரிக்க முடியாது.

மார்க்சியத்தின் மூலவர்கள் என்று கருதப்படும் பிரெடெரிக் எங்கெல்ஸ் ஒரு மேட்டுக்குடியில் பிறந்தவர் தான். பிற மேட்டுக்குடி பிறப்பாளர்கள் போன்று, அவரும் மது, மாது மயக்கத்தில், நரி வேட்டையாடி காலம் கழித்துக் கொண்டிருக்கலாம். ஆயினும் அவரது இதயம் ஏழைகளின் மேல் பரிவு காட்டியது. 

எங்கெல்ஸ் இருபதாண்டு காலம் குடித்தனம் நடத்திய ஐரிஷ் காதலியான மேரி பேர்ன்ஸ், எழுதப் படிக்கத் தெரியாத ஏழைப் பணிப்பெண் என்பது குறிப்பிடத் தக்கது. இன்றைக்கும், ஓரளவு வசதியான குடும்பத்தில் பிறந்த, ஒரு சாதாரண மத்தியதர இளைஞர் கூட, எழுதப் படிக்கத் தெரியாத பணிப் பெண்ணுடன் குடும்பம் நடத்துவதை எதிர்பார்க்க முடியாது. அந்தஸ்து குறைந்து விடும் என்று நினைப்பார்கள்.

எங்கெல்சின் காதலியான மேரி பேர்ன்ஸ், அவரை தனது குடும்பம் வாழும் சேரிப் பகுதிக்கு அழைத்துச் சென்றிருக்கிறார். அதனால், பிற மேட்டுக்குடியினர் எட்டியும் பார்க்காத சேரிகளின் மூலை முடுக்குகள் எல்லாம் எங்கெல்சுக்கு பரிச்சயமாகின. அங்கு ஏழை மக்கள் படும் துயரை நேரில் கண்டு அனுபவித்துள்ளார். ஆகையினால், எங்கெல்ஸ் கற்பனையான தரவுகளை கொண்டு இந்த நூலை எழுதியதாக வாதிடுவது அபத்தமானது.

கார்ல் மார்க்ஸ் மாதிரி, பிரடெரிக் எங்கெல்ஸ் கூட ஒரு ஜெர்மனியர் தான். நெதர்லாந்துக்கு அருகில் உள்ள, பார்மென் (Barmen) எனும் சிறிய நகரத்தில் பிறந்தார். ரைன் நதிக்கரை சார்ந்த அந்தப் பிரதேசம், 19 ம் நூற்றாண்டிலேயே தொழிற்துறை வளர்ச்சியால் முன்னேறி இருந்தது. எங்கெல்சின் தந்தை பார்மென் நகரிலும், இங்கிலாந்தில் மான்செஸ்டர் நகரிலும், பருத்தி நூல் நூற்கும் தொழிற்சாலைகளை வைத்திருந்தார். 

எங்கெல்ஸ் தனது தந்தையின் தொழிற்சாலையை நிர்வகிக்கும் முகாமையாளராக வேலை செய்துமிருக்கிறார். அதன் மூலம், பிற தொழிலதிபர்களுடன் தொடர்பு கொள்ளும் சந்தர்ப்பம் கிட்டியது. ஆகவே, தொழிற்சாலைகளில் வேலை செய்யும் தொழிலாளர்கள் எந்தளவு மோசமாக சுரண்டப் படுகிறார்கள் என்பதை அவர் நேரடியாக கண்டுணர்ந்திருப்பார்.

ஏழைப் பெற்றோரும், சிலநேரம் அவர்களின் வயதுக்கு வராத பிள்ளைகளும் கூட, ஒரே தொழிற்சாலையில் தொழிலாளர்களாக வேலை செய்வது அந்தக் காலத்தில் சர்வசாதாரணம். ஒரு பக்கம், அவர்களின் உழைப்பு முதலாளிகளால் சுரண்டப் படுகின்றது. மறுபக்கம், ஓய்வு நேரத்தில் அவர்களது வாழ்க்கை அவலம் நிறைந்ததாக உள்ளது. எங்கெல்ஸ் இந்த நூலில், இவ்விரண்டு விடயங்களையும் தனித்தனியாக பதிவு செய்துள்ளதுடன், அவற்றுக்கு இடையிலான தொடர்பையும் தெளிவாக விளக்கி உள்ளார். அந்த வகையில் தான் இது உலகப் புகழ் பெற்ற கிளாசிக்கல் நூல்களில் ஒன்று என இன்றைக்கும் போற்றப் படுகின்றது.

"இங்கிலாந்து உழைக்கும் வர்க்க மக்களின் நிலைமை" நூல் எழுதிய காலத்தில், எங்கெல்ஸ் இன்னும் "மார்க்சிஸ்டாக" மாறி இருக்கவில்லை. அதாவது, மார்க்ஸ், எங்கெல்ஸ் சேர்ந்து, கம்யூனிசத்தை அடைவதற்கான "மார்க்சியம்" என்ற சமூக விஞ்ஞானத்தை அதற்குப் பின்னர் தான் கட்டமைத்தார்கள்.

இளம் பராயத்திலேயே எங்கெல்ஸ் ஒரு கம்யூனிஸ்டாக மாறி இருந்தார். ஆனால், அந்தக் காலத்தில் இருந்த கம்யூனிஸ்டுகள் எல்லோரும் மார்க்சிஸ்டுகள் அல்ல! 19 ம் நூற்றாண்டில், ஜெர்மனியிலும், பிரான்சிலும், பொதுவுடமைக் கருத்துக்கள் பரவி இருந்தன. எங்கெல்ஸ் வாழ்ந்த காலத்தில், ஜெர்மனியில் மூன்று புரட்சிகள் நடந்துள்ளன.

அப்போது தான் ஜெர்மனி என்ற தேசம் உருவாகிக் கொண்டிருந்தது. ஆனால், இடதுசாரிக் கொள்கைகளை பின்பற்றியவர்கள், அரச அடக்குமுறை காரணமாக பிரான்ஸில் அகதித் தஞ்சம் கோரி இருந்தனர். அப்போது பிரான்ஸிலும் பொதுவுடைமைக் கொள்கைகள் பிரபலமாக இருந்தன.

19 ம் நூற்றாண்டில், ஜெர்மனியில் வாழ்ந்த தத்துவ அறிஞரான ஹெகல், மார்க்ஸ், எங்கெல்ஸ் போன்ற முற்போக்கு இளைஞர்களின் வழிகாட்டியாக இருந்தார். அவரைப் பின்பற்றிய பல இளைஞர்கள், தம்மை "இடது ஹெகலியன்" என்று அழைத்துக் கொண்டனர். எங்கெல்ஸ் இளம் வயதில் ஒரு இடது ஹெகலியனாக இருந்தார். அதனால், அவரது தந்தை குடும்பத்தோடு இங்கிலாந்துக்கு, மான்செஸ்டர் நகருக்கு குடிபெயர்ந்திருக்கலாம். ஜெர்மனியில் இருந்தால், தனது பையன் "உதவாக்கரை பயல்களுடன் சேர்ந்து கெட்டு குட்டிச் சுவராகி விடுவான்..." என்று எங்கெல்சின் தந்தை நினைத்திருப்பார்.

அதே நேரம், எங்கெல்ஸ் மான்செஸ்டரில் குடியேறுவது தனது கொள்கைக்கு சாதகமான விடயமாக நினைத்திருப்பார். அதாவது, அன்றைய ஐரோப்பாவில் இங்கிலாந்தில் தான் தொழிற்புரட்சி காரணமாக மிகப் பெரியதொரு சமூக மாற்றம் நடந்திருந்தது. தொழிற்சாலைகளும், பாட்டாளி வர்க்கமும் இங்கிலாந்தில் தான் அதிகளவில் இருந்தன. லண்டன் போன்று, மான்செஸ்டரும், தொழிற்துறை வளர்ச்சி கண்ட நகரமாக இருந்தது. ஆகவே, முதலாளித்துவ பொருளுற்பத்தி உச்சத்தில் இருந்த இங்கிலாந்தில் தான், அதன் விளைவால் உருவான பாட்டாளி வர்க்கத்தை சிறப்பாக ஆய்வு செய்ய முடியும் என்று எங்கெல்ஸ் நினைத்திருப்பார்.

இன்று பல இளைஞர்கள் மத்தியில் முற்போக்கான நூல்களை தேடி வாசிக்கும் பழக்கம் பெருகி வருகின்றது. மார்க்சியம் பற்றிய தேடலும் அதிகரித்து வருகின்றது. அவர்களில் பலர் என்னை தொடர்பு கொண்டு சில நூல்களை பரிந்துரை செய்யுமாறு கேட்கின்றனர். அந்த இளைஞர்களுக்கு உதவும் வகையில், இந்த நூல் விமர்சனத்தை எழுதி உள்ளேன்.


இதனுடன் தொடர்புடைய முன்னைய பதிவுகள்:
"இடதுசாரியம் ஓர் இளம்பருவக் கோளாறு" - லெனின்
என்ன செய்ய வேண்டும்? சமூக- ஜனநாயக திருத்தல்வாதத்திற்கு எதிராக...

Sunday, August 09, 2015

முதலாளிய ஆதரவாளர்கள் கம்யூனிசத்தை மறக்கவில்லை!


மிகக் குறைந்தளவே ஆனாலும், மேட்டுக்குடி அறிவுஜீவிகளின் "கம்யூனிச அறிவு" திகைக்க வைக்கின்றது. அவர்கள் கண்மூடித்தனமாக முதலாளித்துவத்தை ஆதரித்தாலும், முதலாளித்துவம் பற்றிய அரிச்சுவடி கூட படித்திருக்கவில்லை என்பது, அவர்களுடனான உரையாடலின் போது தெளிவாகின்றது.

உதாரணத்திற்கு சில:

 - மார்க்ஸ், எங்கெல்ஸ் பற்றி அறிந்து வைத்திருக்கிறீர்கள். நல்ல விடயம். ஆடம் ஸ்மித், ரிக்கார்டோ, கெய்ன்ஸ் பற்றித் தெரியுமா?
"................" ???

- மூலதனம் என்ற நூல் இருப்பதை தெரிந்து வைத்திருக்கிறீர்கள். நல்லது. "தேசங்களின் செல்வம்" என்ற நூல் பற்றிக் கேள்விப் பட்டிருக்கிறீர்களா? "................" ???

- ஸ்டாலின், மாவோ பற்றி அறிந்து வைத்திருக்கிறீர்கள். நல்லது. குரொம்வெல், ரொபெஸ்பியர் பற்றி என்ன தெரியும்?
 ".................." ???

- ரஷ்யப் புரட்சிக்குப் பின்னர் உருவான சோஷலிச நாடுகளை உங்களுக்குத் தெரியும். நல்லது. பிரெஞ்சுப் புரட்சிக்குப் பின்னர் உருவான லிபரல் நாடுகளை குறிப்பிட முடியுமா?
"..............." ???

- கம்யூனிசத்தால் கொல்லப் பட்டவர்கள் பற்றிய புள்ளி விபரங்களை விரல் நுனியில் வைத்திருக்கிறீர்கள். அதே மாதிரி முதலாளித்துவம் கொன்ற மக்களைப் பற்றிய புள்ளி விபரம் கிடைக்குமா?
 "............." ???

இப்படி கேட்டுக் கொண்டே போகலாம். ஆனால், எந்தக் கேள்விக்கும் பதில் வராது. இதிலிருந்து ஓர் உண்மை தெளிவாகின்றது. உண்மையில், முதலாளித்துவம் தான், காலாவதியாகிப் போன டைனோசர் காலத்து சமாச்சாரம். அதனால் தான் அதை ஆதரிப்பவர்களுக்கும் ஒன்றுமே தெரியவில்லை. அதற்கு மாறாக கம்யூனிசம் பற்றி ஓரளவாவது தெரிந்து வைத்திருக்கிறார்கள். அந்தளவுக்கு இன்றைக்கும் உயிர்ப்புடன் இருக்கிறது.

கார்ல் மார்க்ஸ் பற்றி அறிந்திராதவர்கள் மிக மிகக் குறைவு. கம்யூனிசத்தை வெறுப்பவர்கள் கூட அவரைப் பற்றி அறிந்து வைத்திருக்கிறார்கள். ஆனால், ஹெர்பெர்ட் ஸ்பென்சர் (Herbert Spencer) பற்றி எத்தனை பேருக்குத் தெரியும்? முதலாளித்துவ ஆதரவாளர்களே! அவர் தான் உங்களது தத்துவ அறிஞர்! குருவையே மறக்கலாமா?

ஹெர்பெர்ட் ஸ்பென்சர், கார்ல் மார்க்ஸ் வாழ்ந்த அதே காலத்தில் வாழ்ந்த லண்டன்வாசி. இருவரும் ஒருவரை ஒருவர் சந்தித்துள்ளனரா என்பது தெரியாது. ஆனால், இருவரது சமாதிகளும், லண்டன் ஹைகேட் மயானத்தில் அருகருகே உள்ளன!

இதிலே முரண்நகை என்னவென்றால், இருவரும் வாழ்ந்த காலத்தில் எதிரெதிர் துருவங்களில் இருந்தனர். மார்க்ஸின் தத்துவம் ஒட்டு மொத்த மனித இனத்தினதும் முன்னேற்றத்தை கருத்தில் கொண்டிருந்தது. பணக்காரர்களின் செல்வம் திரட்டலுக்கு எதிராக, ஏழைகளின் நல்வாழ்வை முன்நிறுத்தினார்.

அதற்கு மாறாக, ஸ்பென்சரின் தத்துவம், வலியது மட்டுமே பிழைக்கும் என்று ஒரு சிறு மேட்டுக்குடியினரின் முன்னேற்றத்தை மாத்திரம் கருத்தில் கொண்டிருந்தது. இவரது வலியது பிழைக்கும் கொள்கை (உண்மையில் அது டார்வினுடையது அல்ல), இன்றளவும் முதலாளித்துவ ஆதரவாளர்களால் மேற்கோள் காட்டிப் பேசப் படுகின்றது.

ஹைகேட் மயானத்தில் உள்ள கார்ல் மார்க்சின் சமாதி, பிற்காலத்தில் மக்களின் பணத்தில் பெரிதாகக் கட்டப் பட்டது. அதை தரிசிக்க வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வந்த படியால், நினைவுச் சின்னமாக மாற்றப் பட்டது.

இன்றைக்கும் வருடந்தோறும் ஆயிரக் கணக்கான சுற்றுலாப் பயணிகள் மார்க்சின் சமாதியை காண வருகிறார்கள். சீனா, இந்தியா போன்ற தொலைதூர நாடுகளில் இருந்தெல்லாம் வருகிறார்கள். ஆனால், "முதலாளித்துவ அறிஞர்" ஸ்பென்சரின் சமாதி அருகில் கேட்பாரற்றுக் கிடக்கிறது. அங்கே அவரது சமாதி இருப்பது யாருக்கும் தெரியாது. ஸ்பென்சரின் உறவினர்களாவது அங்கே வருவார்களா தெரியாது.

"இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும். இவர் போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும்."

Friday, August 07, 2015

கம்யூனிச எதிர்ப்பு புளுகுகளை எழுதிய போலி "சரித்திர" ஆசிரியர் காலமானார்!


மேற்குலக முதலாளிய எஜமானர்களின் அடியாளாக, வரலாறு என்ற பெயரில் புனைகதைகளை எழுதி வந்த Robert Conquest, தனது 98 வது வயதில் கலிபோர்னியாவில் (3-8-2015) காலமானார். சோவியத் யூனியனில் நடந்த "ஸ்டாலினின் படுகொலைகள்" பற்றிய பொய்களை பரப்புரை செய்த, மேற்குலக "சரித்திர" ஆசிரியர் அவர் தான்.

ஆங்கில-அமெரிக்க பெற்றோருக்கு பிறந்த ரொபேர்ட், பனிப்போர் காலத்தில் டாலர்களை அள்ளிக் கொடுத்த, எஜமானர்களின் விருப்பத்தை பூர்த்தி செய்வதற்காக, "ஸ்டாலினின் பயங்கரம்" (The Great Terror) என்ற நூலை எழுதினார்.

அவர் ஓர் உண்மையான "சரித்திர" ஆசிரியராக இருந்தால், எதற்கு ஸ்டாலினின் படுகொலைகள் பற்றிய நூலை, சோவியத் யூனியனின் ஜென்ம விரோதியான அமெரிக்காவில் இருந்து வெளியிட வேண்டும்? எதிரி தரப்பினால் தெரிவிக்கப் படும் தகவல்கள் நம்பக் கூடியனவா?

ரொபேர்ட் ஒரு நேர்மையான "சரித்திர" ஆசிரியராக இருந்திருந்தால், அன்று அமெரிக்காவை, அல்லது சோவியத் யூனியனை சார்ந்திராத, "அணிசேரா நாடு" ஒன்றில் இருந்து எழுதி வெளியிட்டிருக்கலாமே? அமெரிக்க அரசின் நிதியுதவியுடன், அமெரிக்காவில் வெளியான ஒரு நூல் எந்தளவு நம்பகத் தன்மை வாய்ந்தது?

"கம்யூனிச எதிர்ப்பாளர்களின் பைபிள்" என்று கருதப் படும் அந்த நூலை மேற்கோள் காட்டியே, இன்று வரையில் ஸ்டாலினுக்கு எதிரான அவதூறுகள் பரப்பப் பட்டு வருகின்றன. ஸ்டாலின் இருபது மில்லியன் பேரை கொலை செய்ததாக தெரிவிக்கப்படும் "புள்ளி விபரம்(?)", அந்த நூலில் இருந்து தான் பெறப் பட்டது. (அதற்கு எந்த ஆதாரமும் இல்லாமலே எழுதி இருந்தார்.)

திருஞான சம்பந்தர் தனது ஞானக்கண்ணால் கோயிலைப் பார்த்து தேவாரம் பாடியதைப் போல, இந்த "சரித்திர" ஆசிரியரும், சோவியத் யூனியனுக்கு செல்லாமலே, கற்பனையில் கண்ட காட்சிகளை புத்தமாக எழுதினார். அந்த ஆதாரமற்ற பொய்களை இன்றும் பலர் இரை மீட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

பிரச்சார நோக்கில், வேண்டுமென்றே எண்ணிக்கைகளை மிகைப் படுத்தி எழுதுவதாக, அப்போதே இவர் மீது விமர்சனங்கள் எழுந்தன. சோவியத் யூனியன் கலைக்கப் பட்ட பின்னர் வெளிச்சத்திற்கு வந்த இரகசிய ஆவணங்கள், இவரது "தகவல்கள்" யாவும் மிகைப் படுத்தல்கள் என்பதை நிரூபித்து இருந்தன.

சோவியத் யூனியன் பக்கம் எட்டியும் பார்த்திராத, ரஷ்ய மொழி தெரியாத ரொபேர்ட், தனது நூலுக்கு தேவையான "ஆதாரங்களை" எங்கிருந்து பெற்றார்? சந்தேகத்திற்கிடமின்றி ஜெர்மன் நாஸிகளின் பிரச்சார ஊடகங்களில் இருந்து தான். ஏனென்றால், பல வருடங்களாக ஜெர்மன் உளவுத்துறை தான் சோவியத் யூனியனுக்குள் என்ன நடக்கிறது என்ற உளவுத் தகவல்களை சேகரித்துக் கொண்டிருந்தது. அதற்கான வளங்கள் நிறையவே இருந்தன. 

உதாரணத்திற்கு, உக்ரைனிய பாசிஸ்டுகள் அல்லது தேசியவாதிகள், நாஸிகளுடன் தொடர்பில் இருந்தனர். நாஸி ஆக்கிரமிப்புக் காலத்தில், உக்ரைனிய சுயாட்சிப் பிரதேசத்தை வைத்திருந்தனர். உக்ரைனிய பஞ்சம் தொடர்பான பல தகவல்கள் அங்கிருந்து கிடைத்தவை தான்.

அந்த "ஆதாரங்களின்" அடிப்படையில் தான், "உக்ரைனிய பஞ்சத்தில் பல இலட்சம் பேர் மாண்டதற்கு ஸ்டாலின் தான் காரணம்" என்று தனது நூலில் கூசாமல் புளுகினார். ஆனால், அன்று உக்ரைனின் ஒரு பகுதி மட்டுமே சோவியத் பிரதேசமாக இருந்தது என்பதையும், ஐரோப்பிய நாடுகள் எல்லாவற்றிலும் பஞ்சம் தலைவிரித்தாடியது என்பதும், இந்த போலி "சரித்திர" ஆசிரியருக்கு தெரியாமல் போனதில் வியப்பில்லை. (பார்க்க: உக்ரைனிய பஞ்சம்: உண்மையும், புனை கதைகளும்; http://kalaiy.blogspot.nl/2014/11/blog-post_22.html )

ஒரு பகுதி பஞ்சத்திற்கு ஸ்டாலின் காரணமாக இருந்தாலும் கூட, உண்மையில் ஸ்டாலின் அறிமுகப் படுத்திய விவசாய கூட்டுறவு உற்பத்தி முறை, பஞ்சத்தை முடிவுக்கு கொண்டு வந்தது. ரொபேர்ட் அந்தத் தகவலை தலைகீழாக புரட்டிப் போட்டுள்ளார். பொய் சொல்வதற்கு கூட தைரியம் வேண்டும். அது இந்த போலி "சரித்திர" ஆசிரியர் ரொபேர்ட் இடம் நிறையவே உள்ளது.

அவரால் எப்படி பொய்களை துணிந்து பரப்புரை செய்ய முடிந்தது? சாம்ராஜ்யத்தை ஆளும் சக்கரவர்த்திகள் மனது வைத்தால் எதுவும் சாத்தியமே! மேற்குலகில், முதலாளித்துவ கடும்போக்காளர்கள் என மக்களால் வெறுக்கப் பட்ட ஆட்சியாளர்களான, ரொனால்ட் ரீகன், மார்க்கிரட் தாட்சர் போன்றோருக்கு இவர் தான் குரு நாதர். அதனால் தான், அவர்களே நேரடியாக அழைத்துக் கௌரவித்தார்கள்.

அண்மையில் கூட, இனப்படுகொலையாளி ஜோர்ஜ் புஷ் இவருக்கு விருது வழங்கி இருந்தார். 20 ம் நூற்றாண்டில் நடந்த ஸ்டாலினின் படுகொலைகள் பற்றி நூல் எழுதிய ஒருவர், 21 ம் நூற்றாண்டில் படுகொலைகள் செய்த ஜோர்ஜ் புஷ்ஷின் இரத்தக் கறை படிந்த கரங்களால் விருது வாங்குவதற்கு கூச்சப் படவில்லை!

"ரொபேர்ட் எழுதிய நூலை வாசித்த பின்னர் தான், ஸ்டாலின் நடத்திய படுகொலைகள் பற்றிய "உண்மைகளை" தான் அறிந்து கொண்டதாகவும், மரபு மார்க்சியரான கலையரசனுக்கு இவர் இப்போதும் பொய்யரோ?" என்று முகநூலில் ஒரு கம்யூனிச எதிர்ப்பாளர் ஆதங்கப் பட்டிருந்தார். நண்பர்களே, கலையரசன் சொல்கிறார் என்பதற்காக எதையும் நம்பத் தேவையில்லை. 

Robert Conquest யார் என்பதை நீங்களாகவே தேடிப் பாருங்கள். உலகம் முழுவதும் கம்யூனிசத்தை எதிர்த்து பொய்களை பரப்புவதற்காக நியமிக்கப் பட்ட, பிரிட்டிஷ் அரசின் உளவாளியாக வேலை செய்தவர் தான் இந்த போலி "சரித்திர" ஆசிரியர் Robert Conquest! அதற்கான ஆதாரங்கள் உள்ளன!

Information Research Department (IRD)என்பது பிரிட்டிஷ் வெளிவிவகார அமைச்சின் கீழ் செயற்பட்ட புலனாய்வுத்துறை ஆகும். அதிலே ஏராளமான அறிவுஜீவிகளும், ஊடகவியலாளர்களும் கூலிக்கு அமர்த்தப் பட்டிருந்தனர். அவர்களில் ஒருவர் தான் Robert Conquest! அவர்களது வேலையே புனைகதைகள் எழுதுவது தான். கம்யூனிசம், சோவியத் யூனியன், ஸ்டாலின் பற்றி எப்படியான கட்டுக்கதைகளையும், பொய்களையும் எழுதி பரப்புரை செய்யலாம். மக்கள் மனதில் கம்யூனிசத்தின் மேல் வெறுப்பு வரச் செய்ய வேண்டும். அது தான் முக்கியம்.

பல தடவைகள், CIA, IRD, இரண்டும் சேர்ந்து கூட்டு நடவடிக்கைகளை எடுத்துள்ளன. அதன் நடவடிக்கைகள் ஐரோப்பாவுக்குள் மட்டும் நின்று விடவில்லை. குறிப்பாக, இந்தோனேசியாவில் சுகார்னோ அரசுக்கு ஆதரவளித்து வந்த இந்தோனேசிய கம்யூனிஸ்ட் கட்சி, அதன் பொய்ப் பரப்புரைகளினால் கடுமையான பின்னடைவுகளுக்கு உள்ளானது. இந்தோனேசியாவுக்கு அயலில் இருந்த, பிரிட்டிஷ் காலனி நாடுகளான சிங்கப்பூர், மலேசியாவில், அது தளம் அமைத்து செயற்பட்டது. அங்கிருந்து கொண்டு, வானொலி மற்றும் பல ஊடகங்களை பயன்படுத்தி, கம்யூனிச எதிர்ப்புப் பிரச்சாரம் செய்யப் பட்டது.

ஏற்கனவே பிரிட்டிஷ் புலனாய்வுத்துறைக்கு வேலை செய்த ஜோர்ஜ் ஆர்வெல் என்ற நாவலாசிரியர் எழுதிய "விலங்குப் பண்ணை", அரபி, சீனம், போன்ற பல உலக மொழிகளில் மொழிபெயர்க்கப் பட்டு இலவசமாக விநியோகிக்கப் பட்டது. அதற்கான செலவுகளை IRD பொறுப்பெடுத்தது. அப்படிப் பட்ட IRD இன் சேவையில் இருந்த Robert Conquest எழுதிய, ஸ்டாலினைப் பற்றிய "சரித்திர" நூல், எந்தளவு நம்பகத் தன்மை வாய்ந்தது? கம்யூனிச எதிர்ப்புக் காய்ச்சலால் பீடிக்கப் பட்ட அறிவுஜீவிகளே பதில் சொல்லுங்கள்!

Tuesday, August 04, 2015

"இஸ்ரேலியர்கள் சுட்டு வீழ்த்திய இத்தாலி விமானம்!", மர்மம் துலங்குகிறது


மொசாட்டின் சர்வதேச பயங்கரவாதம், ஒரு இத்தாலி பயணிகள் விமானத்தை சுட்டு வீழ்த்தும் அளவிற்கு சென்றுள்ளது. 1980 ம் ஆண்டு (27 June 1980), இத்தாலியின் வடக்கில் உள்ள பொலோன்ஞோ நகரில் இருந்து, தெற்கில் உள்ள பாலேர்மோ நகரிற்கு சென்று கொண்டிருந்த பயணிகள் விமானம், ஊஸ்திச்சா (Ustica) தீவுக்கு அருகில் விழுந்து நொறுங்கியது.

விமானத்தில் பயணம் செய்த, குழந்தைகள், பெண்கள் உட்பட எண்பது பயணிகள் மரணமடைந்தனர். அன்று அது ஒரு விபத்து என்று அறிவிக்கப் பட்டாலும், நடந்த சம்பவம் ஒரு மர்மமாக இருந்தது. அப்போதே அது சுட்டு வீழ்த்தப் பட்டிருக்கலாம் என்று பல வதந்திகள் உலாவின. ஆனால், யாராலும் அதனை ஊர்ஜிதப் படுத்த முடிந்திருக்கவில்லை.

அண்மையில் பகிரங்கப் படுத்தப் பட்டுள்ள இத்தாலி அரச ஆவணங்களில் இருந்து உண்மை தெரிய வந்துள்ளது. அன்றைய இஸ்ரேலிய பிரதமர் மெனாகிம் பெகினின் நேரடி உத்தரவின் பேரில், மொசாட் செலுத்திய ஏவுகணை விமானத்தை சுட்டு வீழ்த்தியது.

மொசாட் ஒரு இத்தாலி பயணிகள் விமானத்தை சுட்டு வீழ்த்துவதற்கு என்ன காரணம்? அந்தக் காலத்தில், ஈராக்கில் சதாம் ஹுசைன் அணு உலை அமைக்கும் திட்டத்திற்கு, பிரான்சும், இத்தாலியும் இரகசியமாக உதவிக் கொண்டிருந்தன.

பிரான்சின் மார்செய் நகரில் இருந்து, அணு உலைக்கு தேவையான பொருட்களை ஏற்றிக் கொண்டு, பிரெஞ்சு விமானம் ஒன்று பாக்தாத்தை நோக்கி சென்று கொண்டிருந்தது. அனேகமாக, அந்த விமானத்தை தான் இஸ்ரேலியர்கள் குறி வைத்திருந்தனர்.

ஆனால், இறுதி நேரத்தில், இத்தாலி அரசின் ஏற்பாட்டின் படி, பயணப் பாதை மாற்றப் பட்டது. வரப்போகும் ஆபத்தை அறியாமல் சென்று கொண்டிருந்த இத்தாலி பயணிகள் விமானம் ஏவுகணை தாக்குதலில் அகப்பட்டது.

பிரான்ஸ், இத்தாலி அரசுக்களுக்கு மட்டுமல்ல, அமெரிக்க அரசுக்கும், இஸ்ரேலின் தாக்குதல் திட்டம் முன்கூட்டியே தெரிந்திருந்தது. எல்லோரும் சேர்ந்து, ஒன்றுமறியாத அப்பாவி பயணிகளான 81 இத்தாலி பிரஜைகளை பலி கொடுத்திருந்தனர்.

இந்த சம்பவம் நடந்து, சரியாக ஒரு வருடத்தின் பின்னர், ஈராக் வான் பரப்பிற்குள் ஊடுருவிய இஸ்ரேலிய போர் விமானங்கள், அணு உலையை தாக்கி நிர்மூலமாக்கின. அதற்கு பிறகு ஈராக் அரசு அணு உலைத் திட்டத்தை தொடரவில்லை. 

இத்தாலியில் "ஊஸ்திச்சா படுகொலை" (Strage di Ustica) என்று அழைக்கப் பட்ட அந்த சம்பவம், எண்பதுகளில் பரபரப்பாக பேசப் பட்டது. "விமானம் விபத்தில் சிக்குவதற்கு முன்னர் ராடார் திரையில் இருந்து மறைந்து விட்டதாக" அப்போது அறிவிக்கப் பட்டது. "பயணிகள் எல்லோரும் இறந்து விட்டிருப்பார்கள்" என்ற காரணத்தைக் கூறி, அரசு தேடுதல் நடவடிக்கைகளை தாமதப் படுத்தி இருந்தது. இது போன்ற கூற்றுக்கள், அது ஒரு சதியாக இருக்கலாம் என்று பேசப் பட காரணமாக இருந்துள்ளன. 

அண்மைக் காலமாக, சில விமானங்கள் மர்மமான முறையில் விழுந்து நொறுங்கிய சம்பவங்களுக்கு பின்னணியிலும் ஏதாவது சதி இருக்கலாம் என்பதை சந்தேகிப்பதற்கு இடமுண்டு.

ஏவுகணை தாக்குதல் பற்றிய கதைகள் அப்போதே அடிபடத் தொடங்கி விட்டன. அரசு மட்டத்தில் கூட அது பற்றி விவாதிக்கப் பட்டது. அண்மையில் 2013 ம் ஆண்டு, மீண்டும் அது குறித்து ஆராய்ந்து விட்டு "விமானம் ஏவுகணையால் சுட்டு வீழ்த்தப் பட்டமை உறுதியாகின்றது" என்று சொன்னார்கள்.

இருப்பினும், உண்மையான குற்றவாளிகளையும், அணுவாயுத திட்டங்களையும் மறைப்பதற்காக, வேறு பல காரணங்களை சொன்னார்கள். சிலநேரம், அன்றைய லிபிய அதிபர் கடாபியை குறி வைத்திருக்கலாம் என்றும் சொன்னார்கள். பிரெஞ்சு கடற்படையினர் சுட்டு வீழ்த்தியதாகவும் பரவலாக நம்பப் பட்டது. ஆனால், இதுவரையில் யாரையும் நேரடியாக குற்றஞ் சாட்டவில்லை.

ஐரோப்பாவில் மொசாட் பயங்கரவாத செயல்களில் ஈடுபடுவது இதுவே முதல் தடவை அல்ல. ஏற்கனவே இத்தாலியில் நடந்த ஒரு குண்டுவெடிப்பு சம்பவத்திற்கும், மொசாட் காரணமாக இருந்திருக்கலாம் என நம்பப் பட்டது. மேலும், அன்றிருந்த தீவிர வலதுசாரி இயக்கங்களுக்கு மொசாட் ஆயுத விநியோகம் செய்து வந்ததை, முன்னாள் உளவாளிகள் ஏற்கனவே தெரிவித்திருந்தனர்.

ஊஸ்திச்சா படுகொலையில் மொசாட்டின் பங்கு பற்றிய தகவல்கள், பின்வரும் இத்தாலி மொழி இணையத் தளத்தில் விரிவாக எழுதப் பட்டுள்ளன. அதில் பகிரங்கப் படுத்தப் பட்ட இத்தாலி அரச ஆவணங்களும் உள்ளன.

STRAGE DI USTICA: IL SEGRETO DI ITALIA, ISRAELE, FRANCIA; UNITED STATES OF AMERICA
http://sulatestagiannilannes.blogspot.it/2014/11/strage-di-ustica-il-segreto-di-italia.html?m=1

Monday, August 03, 2015

"இடதுசாரியம் ஓர் இளம்பருவக் கோளாறு" - லெனின்


இந்தக் காலத்திற்கும் வழிகாட்டும் லெனின் எழுதிய சிறு நூல்: "இடதுசாரி கம்யூனிசம் - இளம்பருவக் கோளாறு". தற்காலத்திற்கும் பொருந்தும் பல ஆலோசனைகள் அந்த நூலில் உள்ளன. (1920 ம் ஆண்டு எழுதப் பட்டது.)

இன்றைக்கு சமூக வலைத்தளங்களில் இயங்கும் முற்போக்கான நண்பர்களுக்கும் இந்த ஆலோசனை தேவையானது. மக்களை எப்படி அணுகுவது? இன்றைய இளைய தலைமுறையினர் பயன்படுத்தும் பேஸ்புக், வாட்ஸ் அப் போன்ற தளங்களில் பிரச்சாரம் செய்வது ஆரோக்கியமானது தான். அதை விட, நாங்கள் பிற்போக்காளர்களின் ஒன்றுகூடல் என்று ஒதுக்கும், மத நிறுவனங்கள் மற்றும் பிழைப்புவாத அரசியல் கட்சிகள் மத்தியிலும் வேலை செய்ய வேண்டும்.

"ஏன் பெரும்பான்மையான மக்கள், பாராளுமன்ற பிழைப்புவாதிகளை நம்பி இருக்கிறார்கள்? பிற்போக்கான அரசியல் கட்சிகள் தங்களை ஏமாற்றுவது தெரிந்தும் அவற்றை நம்புகிறார்கள்?" 

இன்றைக்கு இருக்கும் தொழிற்சங்கங்கள், பாராளுமன்ற ஜனநாயக அமைப்பு ஆகியன, எந்தளவு பிற்போக்கானதாக, முதலாளித்துவ பிழைப்புவாதக் கட்சிகளின் ஆதிக்கத்தின் கீழ் இருந்த போதிலும், நாங்கள் அவற்றிற்குள் இறங்கி வேலை செய்ய வேண்டும் என்பதை லெனின் வலியுறுத்துகிறார். ஏனென்றால், மக்கள் அங்கே தான் இருக்கிறார்கள்.

லெனின் இந்த நூலில், ஜெர்மனியில் கம்யூனிஸ்ட் கட்சி விட்ட தவறுகளை சுட்டிக் காட்டுகிறார். வழமையான தொழிற்சங்கங்களில் இருந்து விலகி நின்று, தூய்மையான தொழிற்சங்கம் கட்டுவதும், பாராளுமன்ற தேர்தல்களை முற்று முழுதாக நிராகரிப்பதும் "தீவிர இடதுசாரி தன்மை" ஆகும்.


ரஷ்யாவில் போல்ஷெவிக் கட்சி பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை கொண்டிருந்தது. ஒரு பக்கம், இரகசியமான சட்டவிரோதமான வேலைகளை செய்து கொண்டிருந்தது. மறு பக்கம், வெளிப்படையான சட்டபூர்வமான பிரச்சார வேலைகளிலும் ஈடுபட்டது. இவை இரண்டும் அவசியம் என்று லெனின் வலியுறுத்துகிறார்.

லெனின் இந்த இடத்தில், மலினோவ்ஸ்கி என்ற போல்ஷெவிக் கட்சி உறுப்பினரின் உதாரணத்தை எடுத்துக் காட்டுகின்றார். கட்சியின் மத்திய குழு உறுப்பினராகவும் இருந்த மலினோவ்ஸ்கி, சார் அரசினால் அனுப்பப் பட்ட ஊடுருவலாளர். அவர் கட்சிக்குள் இயங்கிய பல செயலூக்கம் கொண்ட உறுப்பினர்களை காட்டிக் கொடுத்து வந்தார். அவரது காட்டிக்கொடுப்புகள் கட்சிக்கு பெரும் பாதிப்புகளை உண்டாக்கி இருந்தது. அவரால் பல தோழர்களை இழக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

இருப்பினும், கட்சியின் நன்மதிப்பை பெறுவதற்காக, மலினோவ்ஸ்கி ஏற்கனவே சட்டபூர்வமான பிரச்சார வேலைகளை செய்ய வேண்டி இருந்தது. சார் அரசின் அனுமதி பெற்ற சட்டபூர்வ ஊடகமான பத்திரிகை ஒன்றை ஸ்தாபித்ததன் மூலம், ஆயிரக் கணக்கான புதிய உறுப்பினர்கள் சேரவும் காரணமாக இருந்தார். உலகின் பல நாடுகளில், வளர்ந்த நாடுகளில் கூட, அரசு பல உளவாளிகளை அனுப்பி கம்யூனிஸ்ட் கட்சிகளுக்குள் ஊடுருவ வைக்கும். இந்த அபாயத்தை எதிர்த்துப் போராட ஒரே வழி, சட்டபூர்வமான வேலைகளையும், சட்டவிரோதமான வேலைகளையும் திறமையாக கையாள வேண்டும்.

இன்றைக்குள்ள தமிழ் மக்களை, அன்றைக்கிருந்த ரஷ்ய, ஜெர்மனிய மக்களுடன் ஒப்பிடலாம். எல்லா நாடுகளிலும் மக்கள் ஒரே மாதிரித் தான் நடந்து கொள்கிறார்கள். பிற்போக்கான அரசியல் செய்பவர்களுக்கு பின்னால் தான் செல்கிறார்கள். அது அவர்களது அறியாமை.

அறியாமையில் கிடக்கும் மக்களுக்கு கற்பிப்பதற்கும், அவர்கள் நம்பும் அதே பாராளுமன்ற அமைப்பின் குறைபாடுகளை சுட்டிக் காட்டுவதற்கும் அங்கே தான் போக வேண்டும். அதன் அர்த்தம் நாங்கள் பிற்போக்காளர்களின் தரத்திற்கு இறங்கிச் செல்வது என்பதல்ல. ஆனால், மக்களை அங்கிருந்து தான் வென்றெடுக்க வேண்டும். அவர்களுக்கு உண்மையை எடுத்துக் கூறி வழிக்கு கொண்டு வர வேண்டும்.

இந்த நூல் எழுதப் பட்ட காலகட்டத்தை மேலெழுந்தவாரியாக பார்ப்பது, இன்னும் அதிக தெளிவைக் கொடுக்கும். இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில், ஐரோப்பிய நாடுகளில் அப்போது தான் கம்யூனிஸ்ட் கட்சிகள் உருவாக ஆரம்பித்தன. அதற்கு முன்னர் இருந்த சமூக ஜனநாயகக் கட்சிகள் தான் மார்க்சியக் கட்சிகளாக இருந்தன. ஆனால், அவை நடைமுறையில் உள்ள, முதலாளித்துவ பாராளுமன்ற ஜனநாயக அமைப்பிற்குள், புரட்சிகர மாற்றங்களை கொண்டு வரலாம் என்று நம்பின, இப்போதும் நம்புகின்றன.

சர்வதேச அமைப்பான இரண்டாம் அகிலத்தில், சமூக ஜனநாயகக் கட்சிகள் மட்டுமே அங்கம் வகிக்கின்றன. அதற்கு மாறாக லெனின் தலைமையில் உருவான மூன்றாம் அகிலத்தில் கம்யூனிஸ்ட் கட்சிகள் அங்கம் வகிக்கின்றன. முதலாளித்துவ அரசுக்களுக்கு முண்டு கொடுத்து வந்த சமூக ஜனநாயகக் கட்சிகளில் இருந்து பிரிந்து சென்றவர்கள் தான் தனியாக கம்யூனிஸ்ட் கட்சிகளை ஸ்தாபித்தார்கள். அதனால், அவர்களுக்கு ஆரம்பத்தில் இருந்தே பாராளுமன்ற முறைமை குறித்து அதிருப்தி காணப்பட்டது. 

முதலாம் உலகப்போர் தொடங்கிய காலத்தில், சமூக ஜனநாயகக் கட்சிகள் போரை ஆதரித்தன. லெனின் அவர்களை "சமூக - பேரினவாதிகள்" (சோஷல் - ஷோவினிஸ்ட்) என்று சாடுகின்றார். ஜேர்மனிய சமூக ஜனநாயகக் கட்சித் தலைவர்களில் ஒருவரான கவுட்ஸ்கி, லெனினால் கடுமையாக விமர்சிக்கப் படுகின்றார். சமூக ஜனநாயகவாதிகளின் கொள்கையானது "வலதுசாரியம்" என்று தெளிவாகக் குறிப்பிடுகின்றார்.

வலதுசாரிய சமூக - பேரினவாதிகளை நாங்கள் இன்றைக்கும் பல நாடுகளில் காணலாம். இலங்கையில் தமிழ் மக்களுக்கெதிரான போரை ஆதரித்த வாசுதேவ நாணயக்கார, விமல் வீரவன்ச போன்றவர்களை, சமூக- பேரினவாதிகள் என்ற பிரிவுக்குள் அடக்கலாம். (ஈழத்தில் வலதுசாரி தமிழ் தேசியர்கள், இவர்களை வேண்டுமென்றே "இடதுசாரிகள்" என்று தவறாக விளிப்பதன் மூலம் இடதுசாரியத்தை கொச்சைப் படுத்துகின்றனர்.)

சமூக ஜனநாயகவாதிகளின் வலதுசாரிய கொள்கை எந்தளவு ஆபத்தானது என்பது தெரிந்தது தான். ஆகவே, லெனின் இந்த நூலில், கம்யூனிஸ்டுகள் மத்தியில் உள்ள தீவிர இடதுசாரிய போக்கை மட்டும் விமர்சனத்திற்கு எடுத்துள்ளார். வலதுசாரியத்துடன் ஒப்பிடும் பொழுது, இடதுசாரிய குறைபாடு மிகவும் சிறியது. அது இப்போது தான் ஆரம்பமாகியுள்ளது. ஆகவே, இந்த நோயை குணப்படுத்துவது இலகுவானது என்பது தான் லெனினுடைய வாதம். அதற்காகத் தான் இந்த நூலுக்கு "இடதுசாரி கம்யூனிசம் - இளம்பருவக் கோளாறு" தலைப்பிட்டுள்ளார்.

குறிப்பாக ஜெர்மனியில், கவுட்ஸ்கி போன்றோரின் சமூக - பேரினவாத நிலைப்பாட்டை எதிர்த்து தான் ஜெர்மன் கம்யூனிஸ்ட் கட்சி உருவானது. அதன் தலைவர்களான ரோசா லக்சம்பேர்க், கார்ல் லீப்னெக்ட் போன்றோர் "இடதுசாரிய" நிலைப்பாடு எடுத்தனர். (அவர்கள் இருவரும் லெனினுடன் கருத்து முரண்பாடு கொண்டிருந்தனர்.) "ஜெர்மன் தொழிலாளர்கள் பெருமளவில், பிற்போக்குவாத கத்தோலிக்க கட்சியை ஆதரிக்கிறார்கள். ஆகவே, பாராளுமன்ற தேர்தல்களில் பங்கெடுப்பது பிரயோசனமற்றது, நேரடியாக தொழிலாளர் சோவியத்துகள் அமைப்பது பற்றி ஆராய வேண்டும்" என்பது அவர்களது வாதம். அதையே லெனின் இங்கு "இடதுசாரியம்" என்று சாடுகின்றார்.

லெனின் அந்த வாதத்தை மேற்கோள் காட்டி இவ்வாறு கேட்கிறார்:"இலட்சக் கணக்கான தொழிலாளர்கள் எதிர்ப்புரட்சியாளர்களான கத்தோலிக்க கட்சியை ஆதரிக்கிறார்கள் என்றால், ஜெர்மனியில் பாராளுமன்ற முறைமை இன்னும் காலாவதியாகவில்லை என்று தானே அர்த்தம்? பாராளுமன்ற முறைமை வரலாற்று ரீதியாக காலாவதியாகி விட்டது, அரசியல் ரீதியாக அல்ல. அதனை உலக வரலாற்றுக் காலகட்டத்தில் புரிந்து கொள்ள வேண்டும். அதாவது, பாட்டாளிவர்க்க சர்வாதிகாரத்திற்கான சகாப்தம் ஆரம்பமாகி விட்ட காலத்தில், முதலாளித்துவ பாராளுமன்ற முறைமை முடிந்து விடும். ஆனால் அது இன்று அரசியல் ரீதியாக காலாவதியாகி விட்டதா என்பதே கேள்வி."

பாராளுமன்ற முறைமை அரசியல் ரீதியாக காலாவதியாகாமல் உயிர்ப்புடன் இருக்கும் நிலையில், மக்களுக்கு அறிவு புகட்டுவதற்கு தேர்தல்களில் பங்கெடுப்பது அவசியமாகின்றது. மதகுருக்களால் முட்டாள்கள் ஆக்கப்பட்ட மக்களை, பிற்போக்கு நிறுவனங்களில் இருந்து மீட்டெடுக்க வேண்டும். நடைமுறையில் உள்ள பாராளுமன்ற அமைப்பையும், அது சார்ந்த பிற்போக்கான நிறுவனங்களையும், எம்மால் கலைக்க முடியாமல் உள்ள இன்றைய நிலையில் இது அவசியமானது. அவற்றிற்குள் ஊடுருவி வேலை செய்தால் தான், அங்குள்ள மக்களுக்கு உண்மையை எடுத்துக் கூற முடியும்.

லெனின் தனது வாதத்திற்கு வலுச் சேர்பதற்காக, பாரிஸ் கம்யூன் காலத்தில் எங்கெல்ஸ் எழுதியதை மேற்கோள் காட்டுகிறார். உண்மையில், பாரிஸ் கம்யூன் புரட்சி தோல்வியடைந்த பின்னர் தான் மார்க்சிய காலகட்டம் தோன்றியது. அதாவது, பாரிஸ் கம்யூனை ஆதரித்தவர்களிடையே கருத்து முரண்பாடு தோன்றியது. பிளாங்கிஸ்டுகள் எனப்படுவோர் பிற்காலத்தில் அனார்க்கிஸ்டுகள் (அராஜகவாதிகள்) என்று அறியப் பட்டனர். 

பிளாங்கிஸ்டுகள் கூட தம்மை கம்யூனிஸ்டுகள் என்று அழைத்துக் கொண்டனர். ஆனால், இடையில் உள்ள எந்தவொரு அமைப்பையும் சார்ந்திராமல், நேரடியாக கம்யூனிச காலகட்டத்திற்கு செல்ல விரும்புகின்றனர். அதாவது, இன்றைக்குள்ள பாராளுமன்ற அமைப்பு முறையை அவர்கள் கணக்கில் எடுக்காமல் கடந்து செல்லப் பார்க்கின்றனர். இதனை சிறுபிள்ளைத்தனம் என்று சாடும் எங்கெல்ஸ், நடைமுறை அமைப்புகளை புறக்கணித்து விட்டு, நாளைக்கே கம்யூனிச சமுதாயத்தை உருவாக்கி விட முடியாது என்று கூறியுள்ளார். 
(Fr. Engels, "Programme of the Communists- Blanquists)

மக்களுக்கு சேவை செய்ய விரும்பினால், மக்களின் ஆதரவையும், நன்மதிப்பையும் பெற விரும்பினால், எதிர்நோக்கும் தடைகளையும், கஷ்டங்களையும் எண்ணி நாம் அஞ்சக் கூடாது. "மக்களின் தற்போதைய தலைவர்கள்", எங்களைப் பார்த்து ஏளனமாக பேசினாலும், அவமானப் படுத்தினாலும், எதற்கும் கலங்காமல் தொடர்ந்து வேலை செய்ய வேண்டும். எங்கெங்கு மக்கள் கூடுகின்றார்களோ, அங்கெல்லாம் சென்று மக்களுக்கு உண்மைகளை கூற வேண்டும். எந்த விதமான அர்ப்பணிப்புக்கும் நாம் தயாராக இருக்க வேண்டும். மக்களை எழுச்சியடைய வைக்கும் பரப்புரைகளை படிப்படியாக கொண்டு செல்ல வேண்டும்.

நாம் செல்லுமிடம் மிக மோசமான, படு பிற்போக்கான ஸ்தாபனமாக இருந்தாலும், அங்கெல்லாம் பாட்டாளி வர்க்க மக்களைக் காணலாம். பாட்டாளி வர்க்க மேட்டுக்குடியினருக்கு எதிராகவும் நாம் போராட வேண்டியிருக்கும். அதாவது பாட்டாளி வர்க்கத்தில் உள்ள வசதி படைத்த பிரிவினர் முதலாளித்துவத்திற்கு ஆதரவாக நின்று, எங்கள் கொள்கைகளை எதிர்த்துக் கொண்டிருப்பார்கள். நாங்கள் மக்களை ஏமாற்றும் சந்தர்ப்பவாதிகளுக்கும், சமூக - பேரினவாதிகளுக்கும் எதிராக போராடி, உழைக்கும் வர்க்க மக்களை எமது பக்கத்திற்கு கவர்ந்திழுக்க வேண்டும்.



இதனுடன் தொடர்புடைய முன்னைய பதிவுகள்:

Saturday, August 01, 2015

இலவச நூலகம், வீட்டுத் தோட்டம், ஆம்ஸ்டர்டாம் நகரவாசிகளின் சோஷலிசம்


ஆம்ஸ்டர்டாம் நகரில் வசிக்கும் இடதுசாரி சிந்தனையாளர்கள், பல தசாப்த காலமாகவே மக்களுக்கான இலவச திட்டங்களை நடைமுறைப் படுத்தி வருகின்றனர். எழுபதுகளில் எழுந்த இலவச சைக்கிள் திட்டம் உலகப் புகழ் பெற்றது. (அன்றைய பொலிஸ் நிர்வாகம், இலவச சைக்கிள்களை பறிமுதல் செய்து வந்த படியால், பின்னர் அந்தத் திட்டம் கைவிடப் பட்டது.)

அண்மைக் காலமாக, "இலவச நூலகத் திட்டம்", ஆம்ஸ்டர்டாம் நகரின் பல பகுதிகளிலும் பரவி வருகின்றது. பலர் தமது வீடுகளுக்கு அருகில், தெருவோரமாக புத்தக அலுமாரிகளை வைக்கின்றனர். அவற்றில் பாவித்த புத்தகங்கள் உள்ளன. யார் வேண்டுமானாலும் அவற்றை எடுத்துச் சென்று வாசிக்கலாம்.

புத்தகங்களை வாசித்து முடித்து விட்டு, திரும்பக் கொண்டு வர வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. ஆனால், மற்றவர்களும் படிக்க வேண்டும் என்ற உணர்வில், பலர் நூல்களை திரும்பக் கொண்டு வந்து வைக்கிறார்கள். இது ஒரு பரிமாற்றமாக நடப்பதால், எல்லோருக்கும் வெவ்வேறு தலைப்புகளினான நூல்களை வாசிக்கும் வாய்ப்புக் கிட்டுகிறது. நூல்கள் மட்டுமல்ல, பிள்ளைகளின் விளையாட்டுப் பொருட்கள் போன்றவற்றையும் இவ்வாறு பரிமாறிக் கொள்கிறார்கள்.

இலவச நூலகத் திட்டத்தின் நோக்கம் என்ன? மேலை நாடுகளிலும் மக்களிடையே வாசிப்புப் பழக்கம் குறைந்து வருகின்றது. அதனால், இது போன்ற திட்டங்கள் வாசிப்பை தூண்டலாம். அதை விட மிக முக்கியமானது இடதுசாரிகளின் பாரம்பரிய சிந்தனை மரபு. அதாவது, பூமியில் உள்ள அத்தனை வளங்களும், அனைத்து மக்களுக்கும் கிடைக்க வேண்டும் என்று நினைப்பது இடதுசாரிய சிந்தனை. 

முதலாளிகள் இலாபம் கருதி, எல்லாவற்றையும் சந்தைப் படுத்தும் நடைமுறை, இன்று தண்ணீரையும், வெகு விரைவில் காற்றையும், விற்பனை செய்யுமளவிற்கு கொண்டு வந்து விட்டுள்ளது. அதனால், முதலாளித்துவ பொருளாதாரம், பலரின் வெறுப்பை சம்பாதித்திருப்பதில் வியப்பில்லை. இருப்பினும், ஒரு சிலரே மாற்று வழி என்னவென்று தேடுகின்றார்கள்.


ஆம்ஸ்டர்டாம் நகரிலும், பிற நகரங்களிலும் வீட்டுத் தோட்டம் செய்யும் நடைமுறையும் பெருகி வருகின்றது. முன்னாள் சோஷலிச நாடுகளிலும், (கியூபாவில் இன்றைக்கும் உள்ளது), வீட்டுத் தோட்டம் வைத்திருப்பது ஊக்குவிக்கப் பட்டது. அதாவது, நாங்களே சில காய்கறிகளை வீட்டில் வளர்க்கலாம். பூஞ்சாடிகளில் பூக்களுக்கு பதிலாக, காய்கறிகளை வளர்க்குமாறு அரச மட்டத்திலான பாரிய பிரச்சாரம் முன்னெடுக்கப் பட்டது. ஒவ்வொருவரும் தமது உணவுத் தேவையில் ஒரு பகுதியை, தாமாகவே பூர்த்தி செய்து கொள்ள வேண்டுமென்பது தான் அதன் நோக்கம்.

முதலாளித்துவ நாடுகளில், பல தசாப்த காலமாக, வீடுகளுக்குள் பூஞ் செடிகளை வைப்பது தான் "வழமையாக" இருந்தது. அண்மையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிக்குப் பின்னர், காய்கறிகளை வைக்கும் பழக்கம் உருவாகி உள்ளது. நகரங்களில் வாழும் மக்கள் பெரும்பாலும் அடுக்குமாடிக் கட்டிடங்களில் தான் வாழ்கிறார்கள். அதனால், தோட்டம் வைத்திருப்பது நினைத்துப் பார்க்க முடியாத விடயமாக இருந்தது. 

ஆனால், நகரசபையில் உள்ள இடதுசாரி கட்சிகளின் உறுப்பினர்களின் விடா முயற்சி காரணமாக, அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு அருகில் காய்கறித் தோட்டங்கள் உருவாகின. நகரசபை நிர்வாகம், அதற்கான நிலம் ஒதுக்குவதுடன், விதைகளையும் இலவசமாக வழங்கியது. யார் வேண்டுமானாலும் தோட்டம் செய்ய உரிமையுண்டு. இருப்பினும், நிலப் பற்றாக்குறை காரணமாக, முன்கூட்டியே பதிவு செய்யுமாறு கோரப் படுகின்றது. சில இடங்களில் சுழற்சி முறையில், பலருக்கு பகிர்ந்தளிக்கப் படுகின்றது.

இவற்றைத் தவிர, பணமில்லாத சமுதாயத்தை உருவாக்குவதற்கும் சிலர் முயற்சித்து வருகின்றனர். அதாவது, ஒவ்வொருவரிடமும் ஏதாவது ஒரு திறமை இருக்கும். ஒருவர் சிற்பக் கலைஞராக இருக்கலாம். ஒருவர் கற்பிக்கும் திறமை கொண்டவராக இருக்கலாம். எதுவும் இல்லாவிட்டாலும், உடல் ரீதியாக உழைக்கக் கூடியவராக இருக்கலாம். இவர்கள் எல்லோரும் ஒருவருக்கொருவர் உதவியாக இருக்கலாம்.

உதாரணத்திற்கு, நீங்கள் ஒரு வீட்டில் பிள்ளைகளுக்கு பாடம் சொல்லிக் கொடுக்கிறீர்கள். அதற்கு செலவிட்ட நேரத்தையும், "பணத்தையும்" குறித்து வைத்துக் கொள்ள வேண்டும். உங்கள் சேவையை பெற்றவர் அதற்கு உடன்பட்டு கையெழுத்திட்டு கொடுப்பார். எதிர்காலத்தில் உங்களுடைய வீடு திருத்த வேண்டியிருக்கலாம். அதற்கு அவரைக் கூப்பிடுகிறீர்கள். அவர் வந்து செய்த வேலையை, அதே மாதிரி நேரத்தையும், "பணத்தையும்" கணக்கிட்டு குறித்துக் கொள்கிறார். 

இங்கே "பணம்" என்பது, நாம் கண்ணால் காணும் பண நோட்டுக்கள் அல்ல. உழைப்பை அளவிடும் கருவி மட்டுமே. அதைக் கண்ணால் பார்க்க முடியாது. பரிமாற்றம் செய்ய முடியாது. அதற்குப் பதிலாக, மனிதர்கள் தமது உழைப்பை மட்டுமே பரிமாற்றம் செய்து கொள்கிறார்கள்.

இதை வாசிக்கும் பலர், "இதெல்லாம் உண்மையா?" என்று திகைப்படையலாம். நெதர்லாந்தில் பல நகரங்களில், இது பல தசாப்த காலமாகவே நடந்து கொண்டிருக்கிறது. பிற ஐரோப்பிய நாடுகளிலும் நடைமுறையில் உள்ளது. பணமற்ற சமுதாய அமைப்பில் யார் வேண்டுமானாலும் சேரலாம். எந்த சந்தர்ப்பத்திலும் பணம் பயன்படுத்தக் கூடாது என்பது மட்டுமே நிபந்தனை. 

தவிர்க்க முடியாத சில விடயங்களுக்கு மட்டும் பணம் செலவிடப் படுகின்றது. உதாரணத்திற்கு, முன்னர் இதற்காக ஒரு மாத இதழ் வெளியிட வேண்டி இருந்தது. அதில் ஒவ்வொருவரும் தமக்கு என்னென்ன வேலை தெரியும் என்று விளம்பரம் செய்வார்கள். அதற்கு ஒரு சிறிய கட்டணம் கட்ட வேண்டி இருந்தது. மற்றும் படி, சேவைகள் யாவும் "இலவசம்". அதாவது, ஒவ்வொருவரும் மற்றவர்களுக்கு கடமைப் பட்டுள்ளனர்.


இதனோடு தொடர்புடைய முன்னைய பதிவுகள்:
முதலாளித்துவ அமைப்பில் வேலை ஒரு சாபம்!
மேற்கு ஐரோப்பாவில் கணக்காளருக்கும், கட்டிடத் தொழிலாளிக்கும் ஒரே சம்பளம்!
இனவெறிக்கு எதிராக நெதர்லாந்தில் நடந்த புரட்சிகர ஆயுதப் போராட்டம்