Saturday, July 25, 2015

உழைக்கும் தாய்மாரின் உரிமைகளை பாதுகாத்த சோஷலிச கிழக்கு ஜெர்மனி


சோஷலிச நாடுகள் என்றால், "சர்வாதிகாரம், ஜனநாயக மறுப்பு, சுதந்திரமின்மை..." இப்படியான கருத்துக்கள் தான் பரப்பப் பட்டு வந்துள்ளன. தானும், தன் குடும்பமும் மட்டும் வாழ்க்கை வசதிகளை அனுபவித்தால் போதும் என்ற சுயநலம் மிக்க தமிழ் மேட்டுக்குடியினரும் அப்படித் தான் பிரச்சாரம் செய்வார்கள். ஆனால், எதிர்மறையான பிரச்சாரங்களுக்கு அப்பால், சோஷலிச நாடுகளில் நிலைமை எப்படி இருந்தது என்று ஆராய விட மாட்டார்கள்.

பிரான்ஸ் நாட்டில் கற்றோரினால் மதிக்கப்படும் Le Monde தினசரிப் பத்திரிகையின் மாத இதழான Le Monde diplomatique, முன்னாள் கிழக்கு ஜெர்மனியில் பெண்களின் நிலைமை பற்றி ஒரு கட்டுரை பிரசுரித்துள்ளது. அதில் வந்த தகவல்களை இங்கே தருகிறேன்:

பெர்லின் மதில் விழுந்த பின்னர், இரண்டு ஜெர்மனிகளிலும் வாழும் பெண்களின் வாழ்க்கைத்தரம் ஒரே மட்டத்திற்கு வரும் என்று சமூக விஞ்ஞானிகள் எதிர்பார்த்தார்கள். ஜெர்மன் சமஷ்டிக் குடியரசு என்று அழைக்கப் பட்ட முன்னாள் மேற்கு ஜெர்மனியில், ஐந்து வயதிற்குட்பட்ட பிள்ளைகளை வைத்திருந்த 16% தாய்மார் மட்டுமே முழுநேர ஊழியர்களாக இருந்தார்கள். ஆனால், ஜெர்மன் ஜனநாயகக் குடியரசு என்று அழைக்கப்பட்ட முன்னாள் கிழக்கு ஜெர்மனியில், 52% தாய்மார்கள் முழுநேர வேலை செய்து கொண்டிருந்தார்கள்.

ஜெர்மன் ஒன்றிணைவின் பின்னர், முன்னாள் கிழக்கு ஜெர்மனியை சேர்ந்த தாய்மார் அதிகமாக பாதிக்கப் பட்டுள்ளனர். முன்பு சோஷலிச நாடாக இருந்த காலத்தில், பெண்கள் மிக இலகுவாக குடும்பத்தை பராமரித்துக் கொண்டே வேலைக்கும் சென்று வர முடிந்தது. அதே நேரம், முன்னாள் மேற்கு ஜெர்மனியில் வாழ்ந்த பெண்களுக்கு அது மிகவும் சிரமமான விடயமாக இருந்தது. தற்போது, வேலைவாய்ப்பு கிடைக்காத கிழக்கு ஜெர்மன் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அது அவர்களது வாழ்க்கை முறைகள், எதிர்காலத் திட்டங்களிலும் மாற்றங்களை உண்டாக்கி உள்ளது. அது மட்டுமல்லாது, அவர்களது தன்னம்பிக்கையும் குறைந்துள்ளது.

1950 ம் ஆண்டுக்குப் பிறகு, ஐரோப்பிய நாடுகள் எங்கிலும் வேலை செய்யும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்தது. இருப்பினும், முதலாளித்துவ மேற்கு ஜெர்மனியுடன் ஒப்பிடும் பொழுது, சோஷலிச கிழக்கு ஜெர்மனியில், உழைக்கும் பெண்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகமாக இருந்தது! பெர்லின் மதில் விழும் வரையில், 92% கிழக்கு ஜெர்மன் பெண்கள் நிரந்தரமாக வேலை செய்து கொண்டிருந்தார்கள். 60% பெண்கள் மாத்திரமே வேலைக்கு சென்று கொண்டிருந்த மேற்கு ஐரோப்பாவுடன் ஒப்பிடும் பொழுது, கிழக்கு ஜெர்மன் உழைக்கும் பெண்களின் விகிதாசாரம் உலகிலேயே மிக அதிகமானதும், தனித்துவமானதும் ஆகும்.

92% பெண்கள் வேலைக்கு சென்ற யதார்த்தத்தை கவனத்தில் எடுத்தால், கிழக்கு ஜெர்மன் பெண்கள், ஆண்களுக்கு நிகரான சம உரிமைகளை அனுபவித்தனர் என்பது தெளிவாகும். மேற்கு ஜெர்மன் பெண்கள், "குழந்தைகளை பராமரிப்பதற்காக வீட்டில் இருக்க வேண்டும்" என்ற நிலப்பிரபுத்துவ மரபில் இருந்து விடுபட முடியாமல் இருந்தனர். அதே நேரம், கிழக்கு ஜெர்மன் பெண்கள், கணவனின் சம்பாத்தியத்தை நம்பியிராமல் சுயமாக சம்பாதித்து சொந்தக் காலில் நின்றனர்.

எழுபதுகளில் கிழக்கு ஜெர்மனியில் குழந்தைகள் பிறக்கும் விகிதம் குறைந்தது. அதனால், திருமணமாகாத யுவதிகளும், விவாகரத்து செய்த பெண்களும், குழந்தை பெற்றுக் கொள்வதை அரசு ஊக்குவித்தது. "சோஷலிச சமுதாயத்தை கட்டியெழுப்புவதற்கான மனித வலு" என்று சாமானிய மக்களால் நையாண்டி செய்யப்பட்டாலும், அரசு அவர்களுக்கு வேண்டிய விசேட சலுகைகளை செய்து கொடுத்ததன் மூலம், சமூக அந்தஸ்தை உயர்த்தியது. அதே நேரம், மேற்கு ஜெர்மனியில் வாழ்ந்த பெண்களில் பலர், விவாகரத்துக்குப் பின்னர் வறுமைக்குள் தள்ளப் பட்டனர். தாய்மை அடைவது, பெண்களின் பின்னடைவாக கருதப் பட்டது.

அதனால், ஜெர்மன் ஒன்றிணைவின் பின்னர், முன்னாள் கிழக்கு ஜெர்மன் பெண்கள் அதிகளவில் பாதிக்கப் பட்டதில் வியப்பில்லை. எந்தக் காலத்திலும் வேலையில்லாப் பிரச்சினையை அனுபவித்திராதவர்கள், தமக்கு பல சலுகைகளை வழங்கிய அரசமைப்பு நொறுங்கிப் போனதை உணர்ந்து கொண்டார்கள். தற்போது (ஒன்றிணைந்த ஜெர்மன்) அரசின் தொழில் முகவர் நிலையத்திற்கு செல்லும் ஓர் இளம் தாய், "எனக்கு ஒரு குழந்தை இருக்கிறது" என்று சொன்னால், அலுவலர்கள் முகத்தைத் திருப்பிக் கொள்கிறார்கள். (ஏனென்றால் அவருக்கான வேலை வாய்ப்பு மிக மிகக் குறைவாகும்.)

முன்னாள் கிழக்கு ஜெர்மனியில், அரசு எல்லாப் பொறுப்பையும் ஏற்றுக் கொண்டிருந்தது. ஒரு வேலைக்குப் போகும் தாய், தனது குழந்தைகளை பராமரிப்பதற்கு குடும்ப உறுப்பினர்களை பிடித்து விடத் தேவையில்லை. வேலைக்கு செல்லும் கணவனும் நேரத்தை ஒதுக்கத் தேவையில்லை. அரசே குழந்தைகள் பராமரிப்பு நிலையங்களை ஒழுங்கு படுத்திக் கொடுத்தது. இதனால், தாய்மார்கள் மற்றவர்களில் தங்கியிருக்க வேண்டி இருக்கவில்லை. ஜெர்மன் ஒன்றிணைவு, முன்னாள் கிழக்கு ஜெர்மன் பெண்களின் சுதந்திரத்தை பறித்தெடுத்து விட்டது.

2000 ம் ஆண்டு எடுக்கப்பட்ட கருத்துக் கணிப்பின் படி, முன்னாள் கிழக்கு - மேற்கு ஜெர்மனிகளை சேர்ந்த பெண்கள், வேலை, குழந்தைகள் பற்றி, இரண்டு மாறுபட்ட கருத்துக்களை கொண்டிருந்ததை அவதானிக்க முடிந்தது. பொதுவாக எல்லாப் பெண்களும் பிள்ளைகள் தமக்கு முக்கியம் என்று சொன்னார்கள். இருப்பினும், மேற்கு ஜெர்மன் பெண்கள், தொழிலை விட, பிள்ளை வளர்ப்புக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தார்கள். தம் முன்னால் இருந்த அனைத்து வகையான கஷ்டங்களையும் பார்த்த பின்னரும், வேலையில்லாத காலத்தை, குழந்தை பராமரிப்பில் செலவிடுவது சிறந்தது என்று நம்பினார்கள்.

அதற்கு மாறாக, கிழக்கு ஜெர்மன் பெண்கள், தொழிலையும், குழந்தை வளர்ப்பையும் சமமான கடமைகளாக கருதினார்கள். தங்கள் பிள்ளைகளின் படிப்புக்கும், எதிர்காலத்திற்கும் வேலை செய்யும் தாய் முன்னுதாரணமாக இருப்பார் என்று நம்புகிறார்கள். வேலைக்கு செல்வதால் தாம் மகிழ்ச்சியாக இருப்பதாகவும், அதனால் தாயின் கடமைகளை நிறைவேற்றுவதற்கு எந்த இடையூறும் வராது என்றும் சொல்கின்றனர். தங்களது பொருளாதார சுதந்திரம், முழுக் குடும்பத்திற்கும் நன்மை பயக்கும் என்று வாதிடுகின்றனர்.

மேற்கு ஜெர்மன் பெண்கள், (வேலைக்கு போகாமல்) வீட்டில் இருந்து குழந்தைகளை பராமரிப்பது, தாயின் கடமை என்று கூறுகின்றனர். குழந்தைகள் பராமரிப்பு நிலையங்களின் பயன்பாட்டை அங்கீகரித்தாலும், அதன் திறக்கும் நேரங்களுடன் ஒத்துப் போகின்றனர். (குழந்தை பராமரிப்பு நிலையங்கள் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரையில் மட்டுமே திறந்திருக்கும்.) கிழக்கு ஜெர்மன் பெண்கள், முன்பு இது போன்ற பிரச்சனைகளை சந்தித்து இருக்கவில்லை. (அதாவது, அதிகாலையோ, இரவோ, வேலைக்கு செல்லும் நேரம் எதுவாக இருந்தாலும், குழந்தை பராமரிப்பு நிலையங்கள் எந்த நேரமும் திறந்திருக்கும்.) அதனால், குழந்தை பராமரிப்பு நிலையங்களின் சேவை, எல்லா நேரத்திலும் இலகுவில் கிடைக்கக் கூடியதாக இருக்க வேண்டும் என்று, கிழக்கு ஜெர்மன் பெண்கள் எதிர்பார்க்கிறார்கள். அப்போது தான், வேலை வாய்ப்பும் இலகுவாக கிடைக்கும்.

ஒரு வேலையற்ற இளம் தாய், தனக்கு இரண்டு குழந்தைகள் இருக்கும் காரணத்தை காட்டி, பல இடங்களில் வேலை மறுக்கப் பட்டதாகக் கூறுகின்றார். தன்னால் குழந்தையை பராமரிப்பதற்கு ஒழுங்கு படுத்த முடியும் என்று சொன்ன போதிலும் யாரும் காது கொடுத்துக் கேட்கத் தயாராக இருக்கவில்லை. அடுத்த குழந்தைக்கு எதிர்பார்ப்பதாக எந்த இடத்திலும் உண்மையை கூற முடியாது. இதனால், வேலைக்கான நேர்முகத் தேர்வில், இன்னொரு குழந்தைக்கு ஆசையில்லை என்று கூற வேண்டிய நிர்ப்பந்தம் உருவாகின்றது. கம்யூனிச ஆட்சிக் காலத்தில் நடக்கும் நேர்முகத் தேர்வுகளில், அப்படி ஒன்றை கூறும் நிலைமையை கற்பனை செய்து கூட பார்க்க முடியாது.

முன்னாள் கிழக்கு ஜெர்மனியை சேர்ந்த தாய்மார் எல்லோரும், தமது அவமானத்தை பொறுத்துக் கொண்டு, புதுமையான விதிகளுடன் கூடிய விளையாட்டுக்களை விளையாட வேண்டியுள்ளது. அதே நேரம், முன்னாள் மேற்கு ஜெர்மன் தாய்மாரைப் பொறுத்தவரையில் இது வாழ்க்கையின் யதார்த்தம்.

(விவாகரத்து பெற்று தனியாக வாழும்) இளம் தாய் ஒருவர் தனது அனுபவத்தைக் கூறினார்:
"ஒரு தடவை எனது வீட்டுக்கு அருகாமையில் இருந்த நிறுவனம் ஒன்றில் அலுவலகப் பணியாளர் வேலை கிடைத்தது. எனது நிர்வாகி, அவரும் ஒரு பெண், ஒரு நாள் என்னைக் கூப்பிட்டு பேசினார். வாரத்திற்கு நாற்பது மணித்தியாலத்திற்கும் அதிகமாக, அல்லது வார இறுதி நாட்களில் வேலை செய்ய வேண்டும் என்றும் நாங்கள் உன்னைக் கேட்போம் என்றார். அதற்கு நான் முடியாதென்று மறுத்து விட்டேன். அது எனது தவறு. அவருக்கு என் மேல் கோபம் வந்து விட்டது. ஊரில் எத்தனை ஆயிரம் பேர் வேலையில்லாமல் இருக்கிறார்கள் தெரியுமா? இந்த வேலை கிடைத்ததற்காக சந்தோஷப் பட வேண்டும் என்று சத்தம் போட்டார்." 

தனது அனுபவக் கதையை கூறி விட்டு அந்தத் தாய் கேட்டார்:"எனக்கு வேலை முக்கியம் தான். ஆனால், வேலை காரணமாக காலை முதல் இரவு வரையில் எனது குழந்தையை பார்க்க முடியாதென்றால் அது என்ன வாழ்க்கை? என்ன மாதிரியான சமுதாயத்தில் வாழ்கிறோம்?"

சமூக விஞ்ஞானிகளான Jutta Gysi, Dagmar Meyer ஆகியோரின் கூற்றின் படி: "முன்னாள் கிழக்கு ஜெர்மனியின் குடும்ப நலக் கொள்கையானது பெண் விடுதலையை அடிப்படையாகக் கொண்டிருந்தது. அது இன்றைக்கு நடக்க முடியாத ஒன்று. பெரும்பாலான பெண்கள் செய்து வந்த தொழில்கள், ஆண்களுடையதை விட தரம் குறைந்ததாக இருந்தது உண்மை. அதனால் 30% குறைந்த சம்பளம் கிடைத்தது. இருப்பினும், (வாடகை கட்ட முடியாமல்) வீட்டை இழக்க வேண்டுமென்ற பயம் இருக்கவில்லை. குழந்தை பரமாரிப்பு நிலையத்தில் இடம் கிடைக்குமா என்ற கவலை இருக்கவில்லை. ஏனென்றால், அவர்கள் அரசின் நம்பகமான சமூகநலத் திட்டங்களில் தங்கி இருந்தார்கள். பெண்களுக்கு சம உரிமை வழங்க வேண்டுமென்றால், அது கவனத்தில் எடுக்கப் பட வேண்டிய, மிக முக்கியமான விடயம்."

பெர்லின் மதில் விழுந்தவுடன், கிழக்கு ஜெர்மனியின் பாலின சமத்துவமும் விழுந்து விட்டது. ஆயினும், கால் நூற்றாண்டுக்குப் பின்னரும், அது சமூகத்தில் தாய்மாரின் சிந்தனைப் போக்கை தீர்மானிக்கிறது.

(நன்றி: Le Monde diplomatique, June 2015)

(பிற்குறிப்பு: ஐரோப்பாவில் வசிக்காத தமிழ் வாசகர்கள் புரிந்து கொள்வதற்காக, நான் கட்டுரையில் சில இடங்களில் மேலதிக விளக்கம் கொடுத்துள்ளேன்.)

Wednesday, July 22, 2015

புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்திற்குள் சி.ஐ.ஏ. ஊடுருவியது எப்படி?


உலகில் பல நாடுகளில், உள்நாட்டு யுத்தங்களை உருவாக்குவது மட்டுமல்ல, முடித்து வைப்பது கூட சி.ஐ.ஏ. யின் பணிகளில் ஒன்றாக இருந்துள்ளது. இலங்கையிலும், கடந்த பல தசாப்த காலமாக சி.ஐ.ஏ. ஊடுருவி செயற்பட்டு வந்துள்ளது. முன்னாள் பிரதமர் பண்டாரநாயக்க கொலையிலும் அது சம்பந்தப் பட்டிருப்பதாக நம்பப் பட்டது.

அண்மைக் காலமாக, சி.ஐ.ஏ. நேரடியாக தலையிடுவதை குறைத்துக் கொண்டு, பல தொண்டு நிறுவனங்களின் ஊடாக உளவு வேலைகளில் ஈடுபட்டு வருகின்றது. USAID எனும் தொண்டு நிறுவனம், சி.ஐ.ஏ. தன்னை உருமறைப்பு செய்து கொள்வதற்கு பயன்படுகின்றது. அண்மைக் காலத்தில், USAID ஊழியர்கள் உளவு பார்த்த குற்றச்சாட்டில், கியூபா, பொலீவியா, எக்குவடோர் ஆகிய லத்தீன் அமெரிக்க நாடுகளில் இருந்து வெளியேற்றப் பட்டனர்.

இறுதிப்போருக்கு முன்னரும், பின்னரும், இலங்கையின் வடக்கு கிழக்குப் பகுதிகளில், USAID பலவிதமான திட்டங்களை நடைமுறைப் படுத்தி வருகின்றது. "தமிழர்களுக்கு ஜனநாயகம் போதிப்பது" என்ற பெயரின் கீழ், ஊடகத்துறையில் இருப்பவர்களுக்கு, அல்லது ஆர்வம் உள்ளவர்களுக்கு வகுப்புகள் நடந்துள்ளன. சி.ஐ.ஏ.யினால் பயிற்றுவிக்கப்பட்ட "ஊடகவியலாளர்கள்" யாரென்பதை இனங்காண்பது மிகவும் எளிது. 

சி.ஐ.ஏ. இடம் பயிற்சி பெற்ற தமிழ் பேசும் "ஊடகவியலாளர்கள்", வெளியில் "தமிழ் தேசியம்" பேசினாலும், உள்ளுக்கு அமெரிக்காவுக்கு விசுவாசமாக இருப்பார்கள். வலதுசாரி சிந்தனையுடன் முதலாளித்துவத்திற்கு ஆதரவாக வக்காலத்து வாங்குவார்கள். கியூபா, வெனிசுவேலா, பொலீவியா, வட கொரியா போன்ற நாடுகளைப் பற்றி, எதிர்மறையான பிரச்சாரங்களில் ஈடுபடுவார்கள். 

சுருக்கமாக: சி.ஐ.ஏ. கற்பித்த பாடங்களை, தமது சொந்தக் கருத்துக்கள் மாதிரி சொல்லிக் கொண்டிருப்பார்கள். தமிழ் தொலைக்காட்சி, வானொலி, பத்திரிகை, இணையத்தளம் எங்கும், சி.ஐ.ஏ. ஆசிரியர்களிடம்  அரசியல் பயின்ற மாணவர்களை காணலாம்.

முன்பு பனிப்போர் நிலவிய காலத்தில், சி.ஐ.ஏ. ஊடுருவல் குறித்த எச்சரிக்கை உணர்வு இருந்தது. யாழ்ப்பாணத்தில், அலன் தம்பதிகள் என்ற இரண்டு அமெரிக்கப் பிரஜைகள், ஈ.பி.ஆர்.எல்ப். இனால் கடத்திச் சென்று பயணம் வைக்கப் பட்டனர். அவர்கள் சி.ஐ.ஏ. உளவாளிகள் என்று குற்றஞ் சாட்டப் பட்டது. இருப்பினும் அந்தக் குற்றச்சாட்டுகளை நிரூப்பிக்க முடியாமல் போனது. 

ஈழப்போர் தொடங்கிய ஆரம்ப காலங்களில், Tamil Refugee’s Rehabilitation Organisation (TRRO) என்ற தொண்டு நிறுவனத்தை நடத்தி வந்த கந்தையா கந்தசாமி, ஈரோஸ் இயக்கத்தினரால் கடத்திச் செல்லப் பட்டார். அவரைக் கொண்டு செல்லும் வழியில் மாரடைப்பினால் மரணமடைந்து விட்டதால், உடலைத் தூக்கி கழிவுத் தொட்டிக்குள் போட்டு விட்டுச் சென்று விட்டனர்.

TRRO தலைவர் கந்தசாமி "கொலை", அன்று பல வதந்திகளுக்கு காரணமாகி இருந்தது. அந்த சம்பவத்திற்குப் பின்னர், மேற்கத்திய நாடுகளில் இயங்கிய TRRO அமைப்புகளை புலிகள் பொறுப்பேற்றுக் கொண்டனர். அண்மைக் காலம் வரையில், வெளிநாடுகளில் பெரும்பாலான புலிகளின் செயற்பாடுகள் யாவும், TRRO என்ற பெயரின் கீழ் தான் நடந்து வந்தன. ஆகையினால், கந்தசாமி கொலையில் புலிகள் சம்பந்தப் பட்டிருந்ததாக கருதப் பட்டது. ஆனால், அது உண்மையல்ல.

உண்மையில், கந்தசாமி ஒரு சி.ஐ.ஏ. உளவாளி என்ற சந்தேகத்தின் பெயரில் தான் கடத்தப் பட்டார். ஈரோஸ் இயக்கத்திற்கு, RAW அது குறித்த தகவல்களை வழங்கியது. அன்றைய பனிப்போர் காலத்தில், இந்தியா சோவியத் முகாமுக்குள் இருந்தது என்பதையும், அதனால் சி.ஐ.ஏ. ஊடுருவல் குறித்து எச்சரிக்கை உணர்வுடன் இருந்தது என்பதையும் இங்கே குறிப்பிடத் தேவையில்லை. (பார்க்க:The truth behind TRRO Kandiah Kandasamy's death; http://www.srilankaguardian.org/2012/03/truth-behind-trro-kandiah-kandasamys.html?utm_source=feedburner&utm_medium=email&utm_campaign=Feed%3A+srilankaguardian%2FIGKI+%28Sri+Lanka+Guardian%29)

எண்பதுகளில், ஈரோஸ் இயக்கத்தினர், சர்வோதயா இயக்கத்தின் யாழ் மாவட்டத் தலைவர் கதிரமலையை கடத்தி கொலை செய்திருந்தனர். சர்வோதயா அமைப்பு காந்திய வழியில் அமைக்கப் பட்ட தொண்டு நிறுவனமாகும். இலங்கையின் முதலாவதும், பெரியதுமான சர்வோதயா அமைப்பு, பௌத்த - மேட்டுக்குடியினரின் உள்நாட்டு தொண்டு நிறுவனம் (NGO) ஆகும். அதற்குள் நீண்ட காலமாகவே சி.ஐ.ஏ. ஊடுருவல் இருந்து வந்துள்ளது. அன்று கதிரமலையை ஈரோஸ் இயக்கத்தினர் கொலை செய்வதற்கும், அவர் ஒரு சி.ஐ.ஏ. உளவாளி என்ற சந்தேகம் காரணமாக இருந்தது.

அன்று ஈரோஸ் கதிரமலையை கொன்றதற்கு பலர் கண்டனம் தெரிவித்திருந்தனர். "காந்திய பாணி தொண்டு நிறுவனம்" என்ற போர்வை அதன் உண்மையான நோக்கத்தை மறைப்பதற்கு பெரிதும் உதவியது. தனிநபர் வாதம், நுகர்வுக் கலாச்சாரத்தை ஊக்குவிப்பதால் முதலாளித்துவத்தை ஏற்றுக் கொள்ளவில்லை என்று சொன்னாலும், சர்வோதயா அடிப்படையில் ஒரு கம்யூனிச எதிர்ப்பு இயக்கம் ஆகும். ஈழப்போருக்கும், சர்வோதயா அமைப்பிற்கும்,சி.ஐ.ஏ.க்கும் இடையிலான தொடர்பு இன்னும் அறுந்து விடவில்லை.

2009, இறுதிப்போரின் பின்னர், சிறிலங்கா அரச படைகளிடம் சரணடைந்த புலிப் போராளிகள், புனர்வாழ்வு முகாம்களுக்கு அனுப்பப் பட்டமை அனைவரும் அறிந்ததே. அங்கு முன்னாள் போராளிகளுக்கு ஆங்கில மொழிக் கல்வியும், மொபைல் தொலைபேசிகளை திருத்துவது போன்ற தொழில்நுட்பப் பயிற்சிகளும் வழங்கப் பட்டன. அதன் மூலம், முன்னாள் போராளிகள், உலகமயமாக்கப் பட்ட முதலாளித்துவத்திற்கு சேவை செய்யும் தொழிலாளர்களாக மாற்றப் பட்டனர்.

முன்னாள் புலிப் போராளிகளுக்கான புனர்வாழ்வு முகாம்கள் பற்றி, பலருக்குத் தெரியாத உண்மை ஒன்றுள்ளது. அந்த முகாம்களை யார் நடத்தினார்கள்? யார் நிதி வழங்கினார்கள்? பெரும்பாலான முகாம்கள், சர்வோதயா தொண்டு நிறுவனத்தின் நிர்வாகத்தின் கீழ் நடந்தன. அவர்களுக்கு தேவையான நிதியை USAID வழங்கிக் கொண்டிருந்தது. 

முன்னாள் புலிப் போராளிகளின் புனர்வாழ்வுக்கு, சி.ஐ.ஏ. மறைமுகமாக உதவிக் கொண்டிருந்தது. (பார்க்க: USAID SUPPORT FOR RECONSTRUCTION OF EASTERN SRI LANKA; http://leakwire.org/cables/cable/09COLOMBO1109.html) இந்த உண்மை தெரியாத சில தமிழ் இன உணர்வாளர்கள், சிறிலங்கா படைகள் முன்னாள் புலிப் போராளிகளை இன்னும் விடுவிக்கவில்லை என்று, அமெரிக்காவிடம் முறைப்பாடு செய்து கொண்டிருந்தார்கள்!

சிலநேரம், "சி.ஐ.ஏ. யார்? அது ஈழத்தில் என்ன செய்கின்றது?" என்பன போன்ற விபரங்கள், அன்று புலிகளின் தலைவர்களுக்கே தெரியாமல் இருந்திருக்கலாம். வலதுசாரி - "தமிழ் தேசிய" அறிவுஜீவிகளின் அறிவுரைகளை நம்பி, அமெரிக்கர்கள் தமது கட்டுப்பாட்டுப் பிரதேசத்திற்குள் உளவு பார்ப்பதற்கு, தாமே அனுமதித்து இருக்கலாம். பிரபா-ரணில் ஒப்பந்தம் கைச்சாத்திடப் பட்ட பின்னரே, வடக்கு, கிழக்கில் சி.ஐ.ஏ. ஊடுருவல்கள் அதிகரித்தன. அதற்கு அவர்கள் ஒரு அபிவிருத்தித் திட்டம் ஒன்றை உருவாக்கி, புலிகளின் நன்மதிப்பை சம்பாதித்து இருந்தனர்.

Office of Transition Initiatives (OTI) என்ற பெயரில், USAID, மற்றும் அமெரிக்க தூதுவராலயத்தினால், திருகோணமலையில் ஒரு அபிவிருத்தித் திட்டம் தொடங்கப் பட்டது.இது ஏற்கனவே பல உலக நாடுகளில் இயங்கி வருகின்றது. அது நிகரகுவாவில் இருந்த சான்டிஸ்டா கம்யூனிசப் புரட்சியாளர்களின் அரசைக் கவிழ்க்கும் நோக்கில், கொன்றாஸ் கிளர்ச்சியாளர்களுக்கு உதவி வந்துள்ளது. 

வெனிசுவேலாவில் சாவேஸ் அரசைக் கவிழ்ப்பதற்காக நடந்த சதிப்புரட்சியிலும் OTI சம்பந்தப் பட்டிருந்தது. அண்மையில், கியூபாவில் காஸ்ட்ரோ எதிர்ப்பாளர்கள் தொடர்பு கொள்வதற்கு வசதியமைத்துக் கொடுக்கும் டிவிட்டர் வலைத்தளத்தை உருவாக்கி அம்பலப் பட்டது. (பார்க்க: US secretly created 'Cuban Twitter' to stir unrest; http://bigstory.ap.org/article/us-secretly-created-cuban-twitter-stir-unrest)

2003 ம் ஆண்டு, அம்பாறை மாவட்டத்தில், புலிகளின் அக்கரைப்பற்று அலுவலகத்தில், USAID பிரதிநிதிகள், அன்றைய பொறுப்பாளர் கௌசல்யனை சந்தித்துப் பேசி உள்ளனர். அதைத் தவிர, கிளிநொச்சி, திருகோணமலையிலும், USAID, புலிகள் சந்திப்பு நடந்துள்ளது. (பார்க்க: USAID WORKING-LEVEL MEETING WITH LTTE IN AMPARA; https://www.wikileaks.org/plusd/cables/03COLOMBO2025_a.html

USAID நிறுவனமானது, தனது Office of Transition Initiatives திட்டத்திற்கு புலிகளின் ஒப்புதல் வாங்கிக் கொள்வதை பிரதான நோக்கமாக கொண்டிருந்தது. புலிகளைப் பொறுத்தவரையில், தமக்கு சார்பான NGO நிறுவனங்களுக்கு அமெரிக்க நிதியுதவியை பெற்றுக் கொள்ள முடியும் என்று நம்பினார்கள். அதை அவர்கள் USAID இடம் நேரடியாகவே கேட்டுமுள்ளனர்.

USAID, யாழ்ப்பாணத்தில் இருந்த தனது அலுவலகத்திற்கு, வன்னி ஊடாக நிவாரணப் பொருட்களை அனுப்புவதற்கு புலிகளின் ஒத்துழைப்பை எதிர்பார்த்தது. (அன்றைய நிலையில், புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தை தவிர்க்க வேண்டுமானால், விமானம் மூலம் போக்குவரத்து செய்வது செலவு பிடிக்கும் விடயமாக இருந்தது.) USAID, ஒரு சி.ஐ.ஏ. நிறுவனம் என்ற உண்மையை அறிந்திராத புலிகளும் அதற்கு அனுமதி கொடுக்க சம்மதித்தனர்.

அது மட்டுமல்ல, புலிகள் அமெரிக்க நிவாரணப் பொருட்களுக்கு வரி விலக்கு அளிக்கவும் சம்மதித்திருந்தனர். இது அன்று பல தொண்டு நிறுவனங்களுக்கு பொறாமையை ஏற்படுத்தி இருக்கும். ஏனெனில், அன்று புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதி ஊடாக சென்ற அனைத்து வாகனங்களும் மறிக்கப் பட்டு, தனி நபர்களுக்கும், பொருட்களுக்கும், அளவுக்கு அதிகமான வரி அறவிடப் பட்டு வந்தது. USAID புலிகளுடனான ஒத்துழைப்புடன் வட மாகாணத்தில் எந்தத் தடையும் இன்றி இயங்கிக் கொண்டிருந்தது. இத்தனைக்கும், அமெரிக்க அரசு புலிகளை வெளிநாட்டு பயங்கரவாத இயக்கங்களின் பட்டியலில் இருந்து எடுக்கவில்லை.

மேலதிக விபரங்களுக்கு: 
USAID WORKING-LEVEL MEETING WITH LTTE IN AMPARAhttps://www.wikileaks.org/plusd/cables/03COLOMBO2025_a.html
USAID opens new office in Trincomalee;
 https://www.tamilnet.com/art.html?catid=13&artid=10724
USAID SUPPORT FOR RECONSTRUCTION OF EASTERN SRI LANKA;
 http://leakwire.org/cables/cable/09COLOMBO1109.html


இதனுடன் தொடர்புடைய முன்னைய பதிவுகள்:
IMF, உலகவங்கி ஆதரவில் நடந்த தமிழின அழிப்பு! "தமிழ் தேசியவாதிகள்" இருட்டடிப்பு!
யார் இந்த சுப்பிரமணிய சாமி? ஒரு சி.ஐ.ஏ. ஆசாமி!
கயானா நாட்டுப் பிரதமர் ஒரு "சென்னைத் தமிழர்"! ஆனால் சி.ஐ.ஏ. கைக்கூலி!
யாசின் மாலிக்கின் வருகையும், சீமானின் சி.ஐ.ஏ. தொடர்பாடலும்

Sunday, July 19, 2015

"புலிகள் இடதுசாரிகளா? அல்லது வலதுசாரிகளா?" - ஒரு விவாதம்


புலிகளின் இராணுவ வெற்றிகளுக்கு காரணமான கம்யூனிச போரியல் உத்திகள் (http://kalaiy.blogspot.nl/2015/07/blog-post_16.html) என்ற கட்டுரைக்கு இவ்வாறு ஒரு இடதுசாரி நண்பர் எதிர்வினையாற்றி உள்ளார்: "வலதுசாரி பாசிஸ்டுகளான புலிகள் இடதுசாரிகளை கொன்று குவித்தார்கள். அவர்களுக்கு நீங்கள் இடதுசாரி சாயம் பூசாதீர்கள்!" 

பிரபாகரனோ, புலிகளோ தங்களை இடதுசாரிகள் என்று அழைத்துக் கொள்ளவில்லை. தங்கள் உறுப்பினர்களை தோழர் என்று கூட அழைக்காதவர்கள். அதற்காக, புலிகள் இயக்கத்தினுள் இடதுசாரியம் இருக்கவில்லை என்று கூற முடியாது.

முதலில் இடது, வலது பற்றிய சரியான புரிதல் இல்லாதவர்களுக்காக, அது பற்றி கட்டுரையாளர் என்ன நினைக்கிறார் என்பது குறித்த சிறு விளக்கம்:
 ஒரு சமூகத்தில் பெரும்பான்மையாக உள்ள உழைக்கும் மக்களின் நலன்களுக்காக முன்னெடுக்கப்படும் அரசியல் இடதுசாரியம். சமூகத்தில் சிறுபான்மையாக உள்ள முதலாளிகளின் அல்லது மேட்டுக்குடி வர்க்கத்தின் நலன்களுக்காக முன்னெடுக்கும் அரசியல் வலதுசாரியம். இடதுசாரி, வலதுசாரி என்பது பொதுப்படையான இரண்டு பிரிவுகள். இரண்டுக்கும் நடுவில் நிற்கும் அரசியல் கட்சிகளும் உள்ளன. இந்தக் கலைச்சொற்கள், அரசியலை எளிமைப் படுத்தி புரிந்து கொள்வதற்காக பாவிக்கப்படுகின்றன. இடதுசாரிகள் எல்லோரும் மார்க்சிஸ்டுகள் அல்ல. அப்படி இருக்க வேண்டிய அவசியமும் இல்லை. 

புலிகள் தமிழ் மக்களின் நலன்களை கவனத்தில் எடுத்திருந்தால் அது இடதுசாரியம் தான். இல்லை, முதலாளிகளின் திறந்த சந்தை முக்கியம் என்று நினைத்திருந்தால் அது வலதுசாரியம் தான்.

"ஒரு தேசிய இனத்தின் விடுதலைப் போராட்டம், முதலாளித்துவ நலன் சார்ந்ததாக இருந்தாலும், வரலாற்றுப் போக்கில் அது முற்போக்கான பாத்திரம் வகிக்கின்றது." 150 வருடங்களிற்கு முன்னர் அயர்லாந்தின் விடுதலையை ஆதரித்த கார்ல் மார்க்ஸின் கூற்று அது. கார்ல் மார்க்ஸ் பிறப்பதற்கு முன்பிருந்த ஐரோப்பாக் கண்டத்தில், பிரெஞ்சுப் புரட்சியும், நெப்போலியனின் நாடு பிடிக்கும் போர்களும் நடந்து முடிந்திருந்தன.

இருபதாம் நூற்றாண்டின் அரசியல் கோட்பாட்டுக் கண்ணாடி அணிந்து பார்த்தால், "நெப்போலியன் ஒரு வலதுசாரி பாசிஸ்ட்" தான். ஆனால், அந்தப் போர்களுக்குப் பின்னர் ஐரோப்பாவில் ஏற்பட்ட லிபரல் அரசுகளும், முதலாளித்துவ பொருளாதாரமும், இன்று பலரும் ஜனநாயகம் பற்றி பெரிதாக பீற்றிக் கொள்வதற்கு காரணமாக அமைந்திருந்தன. (இருபதாம் நூற்றாண்டின் தொடக்கம் வரையில், ஐரோப்பாவில் எந்த நாட்டிலும் ஜனநாயகம் இருக்கவில்லை என்பதையும் இங்கே குறிப்பிட வேண்டும்.)

புலிகள் இயக்கத்தில் காணப்பட்ட இடதுசாரியம் பற்றி எழுதினால், அதனை எந்தவொரு "புலி ஆதரவு வலதுசாரியும்" எதிர்ப்பதில்லை. தமிழ் மக்கள் மத்தியில் அம்பலப் பட்டு விடுவோம் என்று மௌனமாக இருப்பதை புரிந்து கொள்ளலாம். ஆனால், "புலி எதிர்ப்பு இடசாரிகள்" அதை மறுத்துப் பேசுவதற்கு என்ன காரணம்?

ஒரு தடவை, வட கொரிய எதிர்ப்பாளர் ஒருவரை, புலி எதிர்ப்பாளர்களுடன் ஒப்பிட்டு விமர்சித்து இருந்தேன். தன்னை ஒரு புலி ஆதரவாளர் மாதிரி காட்டிக் கொள்ளும் வலதுசாரியான அவருக்கு அது பிடிக்கவில்லை என்று சொல்வதை விட, அவருக்கு ஒன்றுமே புரியவில்லை என்று சொல்வது தான் பொருத்தமாக இருக்கும்.

புலி எதிர்ப்பாளர்கள், ஈழத்தின் யதார்த்தத்தை, மக்களின் மனப்போக்குகளை புரிந்து கொள்ளத் தவறுகிறார்கள். புலிகளின் மனித உரிமை மீறல்களுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். அதே தவறை தான் அந்த வட கொரிய எதிர்ப்பாளரும் செய்திருந்தார்.

வட கொரிய மன்னராட்சியை தூற்றுவதாலும், மனித உரிமை மீறல்களை கண்டிப்பதாலும், அங்குள்ள மக்களை இவர்கள் பிரதிநிதித்துவப் படுத்த முடிவதில்லை. இன்றோ, நாளையோ, வட கொரிய மக்களின் எழுச்சி நடக்கும் என்று, அமெரிக்காவும் இலவு காத்த கிளியாக காத்திருந்து ஏமாந்து போனது.

ஒரு தடவை, மலேசிய கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்த தமிழர் ஒருவருடன் பேசிக் கொண்டிருந்தேன். அவர் தமிழர் என்பதால் ஈழப் போராட்டம் பற்றியும், புலிகள் பற்றியும் நிறையவே அறிந்து வைத்திருந்தார். ஒரு கம்யூனிஸ்டான அவர், தமிழ் தேசியப் புலிகளை (அல்லது வலதுசாரி பாசிசப் புலிகளை) தீவிரமாக ஆதரித்து வந்தார். "புலிகள் இடதுசாரிகளை கொன்று குவித்த" தகவல் கூட அறிந்து வைத்திருந்தார். புலிகளின் மனித உரிமை மீறல்கள், குற்றங்களை அவர் இவ்வாறு நியாயப் படுத்தினார்: 
  • "சீனப் புரட்சியின் போது கொலைகள் நடக்கவில்லையா? மாவோவின் கம்யூனிஸ்ட் கட்சி பிற இயக்கங்களை தடை செய்து அழிக்கவில்லையா?" 
  • "அவர்கள் சோஷலிசத்தின் பெயரால் செய்ததை, புலிகள் தேசியவாதத்தின் பெயரால் செய்தார்கள்." 
  • "இது ஒரு புரட்சிகர காலகட்டம். எல்லா நாடுகளிலும் போராட்டம் நடக்கும் பொழுது, கொலைகள், மனித உரிமை மீறல்கள், குற்றங்கள் நடக்கவே செய்யும். இவை இல்லாமல் போராட்டம் நடப்பதில்லை."


பலர் இங்கே நினைவுகூர விரும்பாத உண்மை ஒன்றுள்ளது. புலிகள் வலதுசாரிகளையும் கொன்றார்கள். அது மட்டுமல்ல, தமிழ் தேசியவாதிகளையும் கொன்றார்கள்! புலிகளால் கொல்லப் பட்ட அமிர்தலிங்கம் போன்றோர் யார்? இடதுசாரிகளா? இல்லை, வலதுசாரி தமிழ் தேசியவாதிகள். புலிகள் அவர்களை தான் முதலில் அழித்தொழித்தார்கள். அதற்குப் பிறகு புலிகள் சொல்வது மட்டுமே தமிழ் தேசியம் என்று ஏற்றுக் கொள்ளும் புதிய தலைமுறை தமிழ் தேசியவாதிகளை உருவாக்கினார்கள்.

ஒரு நாட்டில் நடக்கும் தேசிய இனத்தின் விடுதலைப் போராட்டம், மார்க்சிய பார்வையில் முற்போக்கானது. அது ஒரு ஜனநாயகப் புரட்சி என்ற உண்மையை பலர் உணர்வதில்லை. வலதுசாரிகளுக்கு இப்படி ஒரு மார்க்சியக் கோட்பாடு இருப்பது தெரியவே தெரியாது. இடதுசாரிகள் பலர் அதைக் கடந்து செல்லப் பார்க்கின்றனர். லெனின் அப்படியானவர்களை கம்யூனிஸ்ட் கட்சியில் உள்ள "தீவிர இடதுசாரிகள்" என்று அழைக்கிறார். லெனின் எழுதிய "இடதுசாரிக் கம்யூனிசம் - ஓர் இளம்பருவக் கோளாறு" என்ற நூல், அவர்கள் மீது கடுமையான விமர்சனங்களை வைக்கின்றது.

இறுதிப்போர் காலத்தில், மக்களின் எதிர்ப்பை சம்பாதித்து இருந்தாலும் கூட, ஒரு குறிப்பிட்ட காலகட்டம் வரையில், புலிகளுக்கு மக்களின் தார்மீக ஆதரவு இருந்து வந்தது என்ற உண்மையை மறுக்க முடியாது. அறிவுஜீவிகள் இதற்கு "Populist Strategy" என்று விளக்கம் கொடுக்கலாம். தீவிர வலதுசாரி சக்திகள் கூட, எப்போதும் இடதுசாரிய தந்திரோபாயத்தை வைத்து தான் மக்களை அணிதிரட்டுகின்றன.

ஈராக்கில் சதாம் ஹுசைன் ஆட்சியின் இறுதிக் காலத்தில், அந்த நாடு ஏகாதிபத்திய நெருக்குதலுக்குள் சிக்கித் தவித்தது. அந்தக் காலகட்டத்தில், ஐரோப்பிய இடதுசாரிகள் சதாம் ஆட்சியை ஆதரித்துப் பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது ஐரோப்பாவில் இருந்த ஈராக்கிய இடதுசாரிகள் அந்த நிலைப்பாட்டை கடுமையாக எதிர்த்தார்கள்.

சதாம் ஆட்சியை எதிர்ப்பதற்கு ஈராக்கிய இடதுசாரிகள் கூறிய காரணம்:"வலதுசாரி பாசிஸ்டான சதாம் ஹுசைன் ஈராக்கில் இருந்த இடதுசாரிகளை கொன்று குவித்தார். அவருக்கு இடதுசாரி சாயம் பூசாதீர்கள்!" அதையே இன்று எனக்கு ஒரு நண்பர் கூறுகிறார்: "வலதுசாரி பாசிஸ்டுகளான புலிகள் இடதுசாரிகளை கொன்று குவித்தார்கள். அவர்களுக்கு நீங்கள் இடதுசாரி சாயம் பூசாதீர்கள்!"

அந்த உண்மைகளை மறுக்க முடியாது என்பது மட்டுமல்ல, அவர்களைப் பொறுத்தவரையில் அது நியாயம் தான். ஆனால், அரசியலில் ஆர்வமற்ற பெரும்பான்மை மக்களுக்கு, வலதுசாரி, இடதுசாரி அரசியல் ஒன்றும் புரியப் போவதில்லை. தமிழ் தேசியவாதிகள் தமிழீழம் அமைத்து தருகிறோம் என்றால் அதை நம்புவார்கள். இஸ்லாமியவாதிகள் கிலிபாத் அரசு அமைக்கிறோம் என்றால் அதையும் நம்புவார்கள். மக்கள் எப்போதும் அப்படித் தான்.

ஈழப் போர் உச்சத்தில் இருந்த காலத்தில், ஒரு தடவை, கொழும்பில் தங்கியிருந்த என்னைப் பார்ப்பதற்கு, யாழ்ப்பாணத்தில் இருந்து அம்மா வந்திருந்தார். புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் இருந்து, விமானக் குண்டுவீச்சுகளுக்கு தப்பி, மிகுந்த சிரமங்களுடன் வந்திருந்தார். சொல்லொணா துன்பங்களை அனுபவித்த போதிலும், மீண்டும் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த யாழ்ப்பாணத்திற்கே திரும்பிச் சென்றார். "இனிமேல் எந்தக் காலத்திலும் இராணுவம் அங்கே வராது. பெடியள் விட மாட்டாங்கள்..." என்று, புலிகளின் இராணுவ பலத்தின் மீது நம்பிக்கை வைத்திருந்தார்.

சாதாரண மக்கள் அப்படித் தான். அவர்கள் புலிகளை பாசிஸ்டுகள் என்று ஒதுக்கவில்லை. சிங்கள இனவாத இராணுவத்தின் ஆக்கிரமிப்பில் இருந்து தப்புவதற்கு, புலிகள் தங்களுக்கு பாதுகாப்பு அளிக்கிறார்கள் என்று நம்பிக் கொண்டிருந்தார்கள். முன்னாள் பிரிட்டிஷ் காலனிய ஆட்சியின் நிர்வாகக் கட்டமைப்பை, இன்றைய சிங்கள பேரினவாத அரசு பாதுகாத்து வருகின்றது என்ற உண்மை மக்களுக்கு புரியாது. தீவிரமாக அரசியல் பேசும், வலதுசாரி- தமிழ் தேசியவாதிகளுக்கே இன்னும் தெரியாத விடயம் அது. மக்களுக்கு தெரியும் என்று எப்படி எதிர்பார்க்க முடியும்?

"2009 மே மாதம் என்ன செய்து கொண்டிருந்தாய்?" என்று, இன்றைக்கு கட்டப்பொம்மன் வசனம் பேசும் வலதுசாரி "டமில் தேசியவாதிகள்", புலிகள் பலமாக இருந்த காலங்களில் வாய்களை மூடிக் கொண்டிருந்தார்கள். சொந்தக் கருத்து எதுவுமின்றி, கிளிப்பிள்ளை மாதிரி, புலிகள் சொன்னதை ஒப்புவித்துக் கொண்டிருந்தார்கள். "புலிகள் சொன்னதெல்லாம் வேதம். செய்வதெல்லாம் சரியாகும்." என்று பக்கப் பாட்டுப் பாடிக் கொண்டிருந்தார்கள்.

"உலகில் சிறந்த கல்விமான்களை கொண்ட, யூதர்களுக்கு நிகரான ஈழத் தமிழ் சமூகம்" என்று பெருமையடித்துக் கொண்டிருந்த, உயர் கல்வி கற்ற தமிழ் மேட்டுக்குடி வர்க்கம், பத்தாம் வகுப்பு கல்வியைக் கூட முடித்திராத புலிப் போராளிகளுக்கு அடிபணிந்து வாழ்ந்தது. ஈழத்தில் இப்படி ஒரு சமூகப் புரட்சி நடக்கும் என்று, அவர்கள் கனவு கூட கண்டிருக்க மாட்டார்கள். இன்றைக்கு புலிகள் அழிந்த பின்னர் ஏற்பட்ட வெற்றிடத்தில் அவர்கள் மீண்டும் தமது மேதாவிலாசத்தை காட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

மேற்படி சமூக மாற்றத்தை பல "இடதுசாரிகள்" கவனிக்கத் தவறி விடுகின்றனர். வாழ்க்கையில் கிடைக்கும் உயர்தரமான வசதி வாய்ப்புகள் என்ற மாயை, இடதுசாரிகளையும் வலதுசாரிகளாக மாற்றும் சக்தி படைத்தது. எங்களுக்கு பிரபாகரனோ அல்லது புலிகளின் தலைமையோ முக்கியமல்ல. அவர்கள வலதுசாரி பாசிஸ்டுகளாக இருக்கலாம். ஆனால், அவர்களுக்கு பின்னால் சென்ற மக்கள் தான் எமக்கு முக்கியம். இறுதிப்போரில் தனது இயக்கம் செய்த தவறுகளை விமர்சிக்கும், சாதாரணமான முன்னாள் புலிப் போராளி, இன்றைக்கும் தனது தலைவனின் வழிகாட்டல் சரியானது என்று நம்புகிறான். அப்படியானவர்களை எவ்வாறு வென்றெடுப்பது?

"மக்களிடம் செல்லுங்கள். அவர்களிடம் இருந்து கற்றுக் கொள்ளுங்கள். அவர்களுக்கு கற்றுக் கொடுங்கள்." - மாவோ




இதனுடன் தொடர்புடைய முன்னைய பதிவுகள்:

Thursday, July 16, 2015

புலிகளின் இராணுவ வெற்றிகளுக்கு காரணமான கம்யூனிச போரியல் உத்திகள்


தமிழீழ விடுதலைப் புலிகள் என்ற இயக்கம் உருவான எழுபதுகளின் பிற்பகுதியில், தெற்காசியப் பிராந்தியத்தில் ஒரு சிறிய நாடான இலங்கையில் அமெரிக்க ஏகாதிபத்தியம் கால் பதித்து விட்டிருந்தது. புத்தளத்தில் வாய்ஸ் ஒப் அமெரிக்கா தொலைத்தொடர்பு கோபுரம் அமைக்கப் பட்டமை இந்தியாவை அச்சுறுத்தியது. மேலும், இஸ்ரேலுடனான இராஜதந்திர உறவுகள் புதுப்பிக்கப் பட்டன.

"தமிழ்ப் பயங்கரவாதத்தை" எதிர்த்துப் போராடுவதற்காக, மொசாட், SAS, வழிகாட்டலின் கீழ் சிறப்பு அதிரடிப் படை அமைக்கப் பட்டது. ஐம்பதுகளில் திருகோணமலையில் இருந்த பிரிட்டிஷ் கடற்படை தளம் வாபஸ் வாங்கப் பட்ட பின்னர் ஏற்பட்ட முதலாவது சர்வதேச நெருக்கடி அதுவாகும்.

இந்தப் பின்னணியில் தான், 1977 இனக் கலவரத்திற்குப் பின்னர் இனப்பிரச்சினை கூர்மையடைந்தது. கலவரத்தின் பின்னர், கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்ற "லங்கா ராணி" என்ற கப்பலில் பயணம் செய்த தமிழ் அகதிகள் மத்தியில், ஈழத்திற்கான ஆயுதப்போராட்டம் நடத்துவது பற்றி விவாதிக்கப் பட்டது. 

அப்போது நடந்த உண்மைச் சம்பவங்களை வைத்து எழுதப்பட்ட லங்காராணி என்ற நாவலில் வரும் ஒரு பாத்திரம் பின்வருமாறு பேசும்:"நாங்கள் கியூபாவுக்கு செல்வோம். காஸ்ட்ரோவுடன் தொடர்பு கொள்வோம். ஈழத்திற்கான ஆயுதப்போராட்டம் நடத்த அவர்கள் எமக்கு உதவி செய்வார்கள்."

எழுபதுகளில் கியூபாவில் நடந்த சர்வதேச மாணவர், இளைஞர் மன்ற மகாநாட்டில் புலிகளின் சார்பாக இருவர் கலந்து கொண்டனர். அப்போது ஆயுதப் போராட்டத்திற்கான உதவி கோரப் பட்டதா என்பது குறித்து எந்தத் தகவலும் இல்லை. அப்படியே கியூபாவிடம் உதவி கேட்டிருந்தாலும், ஆசிய நாடுகளைப் பொறுத்தவரையில், அது குறித்து முடிவெடுக்க வேண்டிய பொறுப்பு சோவியத் யூனியனிடம் இருந்தது. ஆயினும் பனிப்போர் காலகட்டத்தில் சோவியத் நேரடியாக தலையிடவில்லை. அன்றிருந்த பல ஆயுதபாணி இயக்கங்களை, பாலஸ்தீன விடுதலை இயக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறு அறிவுறுத்தப் பட்டது.

ஈழ விடுதலை இயக்கங்களுக்கும், பாலஸ்தீன விடுதலை இயக்கங்களுக்குமான தொடர்பு பற்றி நிறைய ஆதாரபூர்வமான தகவல்கள் உள்ளன. அப்போது லண்டனில் இயங்கிய மார்க்சிய லெனினிச இயக்கமான ஈரோஸ், வன்னிக் காடுகளுக்குள் மறைந்திருந்த புலிகள் அமைப்புடன் தொடர்பை ஏற்படுத்தி இருந்தனர். அந்தத் தொடர்பின் மூலம் பல புலி உறுப்பினர்கள் லெபனான் பயிற்சிக்கு அனுப்பப் பட்டனர். அன்று ஏராளமான ஈழத் தமிழ் போராளிகள் லெபனானில் தங்கியிருந்து பயிற்சி பெற்றனர். அங்கு நடந்த யுத்தங்களிலும், சில நேரம் இஸ்ரேலிய இராணுவத்திற்கு எதிரான மோதல்களிலும் நேரடியாக பங்கெடுத்தனர்.

லெபனான் பயிற்சிக்கு அனுப்பப் பட்ட ஒவ்வொரு போராளிக்கும் பல ஆயிரம் ரூபாய்கள் செலவாகின. அன்றைய நிலையில், பத்து, பதினைந்து உறுப்பினர்களுக்கு, சாப்பாடு போடுவதற்கே கஷ்டப்பட்டுக் கொண்டிருந்த, மிகச் சிறிய இயக்கமான விடுதலைப் புலிகள், அந்தளவு பணம் செலவு பண்ணி உறுப்பினர்களை லெபனானுக்கு அனுப்பி இருப்பார்களா? 

லெபனான் பயிற்சிக்கான செலவுகளை யார் பொறுப்பெடுத்தார்கள்? பாலஸ்தீன விடுதலை இயக்கம் பொறுப்பு என்று அறிவிக்கப் பட்டது. ஆனால், மறைமுகமாக சோவியத் உதவி செய்து கொண்டிருந்தது. தொண்ணூறுகளில் சோவியத் யூனியன் விழுந்த பின்னர் தான், சிலநேரம் அதற்கு முன்னர் கோர்பசேவ் காலத்தில், சோவியத் உதவி முடிவுக்கு வந்தது.

லெபனானில் பாலஸ்தீன விடுதலை இயக்கங்களுடனான தொடர்பு, எந்தளவு தூரம் புலிகளின் போராட்டத்தில் தாக்கம் உண்டாக்கியது என்பதை பின்வரும் உதாரணத்தின் மூலம் விளக்கலாம். புலிகள் வைத்திருந்த தற்கொலைப் படையான கரும்புலிகள் பற்றி பலரும் அறிந்து வைத்திருப்பார்கள்.


"ஜூலை 5, கரும்புலிகள் தினம்". புலிகள் பலமாக இருந்த காலங்களில், அது ஒவ்வொரு வருடமும் நினைவுகூரப் பட்டு வந்தது. தற்போது, ஒரு சில தீவிர புலி ஆதரவாளர்கள் மட்டுமே அதை நினைவுபடுத்திக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், அவர்களும் உலகமயமாக்கப் பட்ட உலகில், புலிகள் நடத்திய தற்கொலைத் தாக்குதல்கள் ஏற்படுத்திய விளைவுகளை கவனிக்கத் தவறி விடுகின்றனர்.

ஒரு விடுதலை இயக்கத்தின் ஆயுதப்போராட்டம், உலகில் இன்னொரு மூலையில் நடந்த போராட்டங்களில் இருந்து படிப்பினைகளை பெற்றுக் கொள்கின்றது. புலிகளும் அதற்கு விதிவிலக்கல்ல. 1987 ம் ஆண்டு, ஜூலை 5, நெல்லியடியில் இருந்த சிறிலங்கா படையினரின் முகாமுக்குள், வெடிகுண்டு நிரப்பிய டிரக் வண்டி ஒன்று மோதியது.

அதிக பட்சம் நூறு படையினர் கொல்லப் பட்ட அந்த சம்பவம், முழு இலங்கையிலும் மட்டுமல்லாது, எல்லை கடந்து உலகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. கேப்டன் மில்லர் என்பவர் முதலாவது தற்கொலைப் போராளியாக தாக்குதலை நடத்தி இருந்தார். அதற்குப் பிறகு கரும்புலிகள் என்ற தனியான படையணியை நிறுவி, பல நூறு தற்கொலைத் தாக்குதல்களை திறம்பட நடத்தியமை வரலாறு.

தற்கொலைத் தாக்குதல் நடத்தும் போர்த் தந்திரத்தை புலிகள் எங்கே இருந்து கற்றுக் கொண்டார்கள்? லெபனான், பெய்ரூட் நகரம், 23 அக்டோபர், 1983, உலகைக் குலுக்கிய தற்கொலைத் தாக்குதல் ஒன்று இடம்பெற்றது. அமெரிக்க மரைன் படையினரும், பிரெஞ்சு படையினரும் தங்கியிருந்த இராணுவ முகாமை இலக்கு வைத்து ஒரு டிரக் வண்டி மோதியது. அந்தத் தாக்குதலில் 299 அமெரிக்கப் படையினரும், சில பத்து பிரெஞ்சு வீரர்களும் கொல்லப் பட்டனர்.

அந்தத் தாக்குதலை நடத்தியவர்கள் பின்னர் ஹிஸ்புல்லா என்று அறியப்பட்ட இயக்கத்தினர். அவர்களும் தனியான தற்கொலைப் போராளிகளின் படையணியை உருவாக்கி வைத்திருந்தனர். நிச்சயமாக, 1983 ம் ஆண்டு லெபனானில் நடந்த தற்கொலைத் தாக்குதல், இலங்கையில் எல்லோருக்கும் தெரிந்திருந்தது. அன்றைய ஊடகங்கள் லெபனான் போருக்கு முக்கியத்துவம் கொடுத்து செய்தி தெரிவித்து வந்தமையினால், இந்தத் தகவலையும் அறிவிக்கத் தவறவில்லை.

இன்றைக்கு புலி ஆதரவு அரசியல் பேசும் பலர், மத்தியதர வர்க்க அறிவுஜீவிகளாக இருக்கலாம். அவர்கள் தமது சொந்த வர்க்க நலன் சார்ந்து, புலிகளை வலதுசாரிகளாக கட்டமைக்க விரும்பலாம். ஆனால், உண்மை நிலவரமோ அதற்கு நேர்மாறானது. அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் மேலாதிக்கத்திற்குள் அடங்காத பலவீனமான பிராந்தியமான இலங்கையில், புலிகளின் போராட்டம் வெற்றிகரமாக முன்னேறிக் கொண்டிருந்தது. அதனை அமெரிக்க ஏகாதிபத்தியம் மிகுந்த எரிச்சலுடன் கவனித்துக் கொண்டிருந்தது.

ஏகாதிபத்திய அடிவருடிகளான வலதுசாரி தமிழ் தேசியவாதிகள், புலிகளை "தூய தமிழ் தேசிய" அல்லது "தமிழ் இனவாத" இயக்கமாக சித்தரிக்க விரும்புகின்றனர். அவர்களது பங்காளியான சிறிலங்கா பேரினவாத அரசும், அதையே எதிர்பார்க்கின்றது. அப்போது தான் தமிழ் மக்களின் நியாயமான விடுதலைப் போராட்டத்தை, சிங்கள மக்களிடமிருந்தும், சர்வதேச சமூகத்திடம் இருந்தும் அன்னியப் படுத்த முடியும் என்பது அரசின் நோக்கமாக இருந்தது.

உலகில் உள்ள பல விடுதலை இயக்கங்களின் மத்தியில், புலிகள் பலமானதாகவும், நீண்ட காலம் தாக்குப் பிடிக்கக் கூடியவர்களாகவும் இருந்தனர். "ஒரு தேசிய இராணுவம் நீண்ட காலமாக போரிட்டுக் கொண்டிருந்தால், அது தோல்வியடைந்து கொண்டிருக்கிறது. ஆனால், ஒரு கெரில்லாப் படை நீண்ட காலம் போரிட்டுக் கொண்டிருந்தால் அது வெற்றி பெற்றுக் கொண்டிருக்கிறது." என்ற மாவோவின் கூற்றை மெய்ப்பித்துக் காட்டினார்கள். இந்தக் கருத்தை அப்போதே பல சர்வதேச அரசியல் ஆய்வாளர்கள் எதிரொலித்திருந்தனர்.

ஈழப்போரில் புலிகள் ஈட்டிய இராணுவ வெற்றிகளுக்குப் பின்னால், கம்யூனிச போரியல் உத்திகள் மறைந்திருந்தன. இருப்பினும் அதை உணர முடியாத அல்லது வேண்டுமென்றே புறக்கணிக்கும் வலதுசாரி தமிழ் அறிவுஜீவிகள், "பண்டைய தமிழரின் வீரக் கலை" என்று கற்பனையான கோட்பாடு ஒன்றை கட்டமைக்க முனைகின்றனர். அந்த அறிவு "மரபணு வழியாக கடத்தப் பட்டிருக்கலாம்" என்று ஒரு வேடிக்கையான காரணத்தைக் கண்டுபிடிக்கின்றனர்.

புலிகள் என்பது, இருபதாம் நூற்றாண்டில் தோன்றிய நவீன ஆயுதபாணி இயக்கம். அதற்கும் "பண்டைய தமிழரின் வீரக் கலைக்கும்" எந்தத் தொடர்பும் இல்லை. கியூப, வியட்நாமிய, பாலஸ்தீன விடுதலை இயக்கங்கள் தான் புலிகளுக்கு முன்னோடிகளாக இருந்தனர். அதை நிரூபிப்பதற்கு நாங்கள் பெரிதாக சிரமம் எடுக்கத் தேவையில்லை. கியூபாவில் காஸ்ட்ரோ-சேகுவேரா தலைமையிலான கெரில்லா இயக்கம் நடத்திய தாக்குதல்கள், அந்தக் காலத்தில் இயங்கிய உலக விடுதலை இயக்கங்களுக்கு வழிகாட்டியாக இருந்தன. புலிகளும் அதில் இருந்து பலவற்றைக் கற்றுக் கொண்டிருந்தார்கள்.

யாழ்ப்பாண குடாநாட்டில், புலிகளின் கெரில்லா தாக்குதல்கள் முளை விடத் தொடங்கிய காலத்தில், "கியூபாவின் விடுதலைப் போராட்டம்" பற்றிய விரிவான நூல் ஒன்று, ஈழப் போராட்டத்திற்கு ஆதரவான இளைஞர்கள் மத்தியில் விரும்பி வாசிக்கப் பட்டது. புலிகள் இயக்கத்திற்காக அரசியல் வேலை செய்து கொண்டிருந்த நண்பர் ஒருவரிடமிருந்து கிடைத்த அந்த நூலை நானும் வாசித்து இருக்கிறேன். அதன் தலைப்பு சரியாக நினைவில்லை. ஒவ்வொரு அத்தியாயத்திலும், காஸ்ட்ரோவின் ஜூலை 26 இயக்கம் நடத்திய இராணுவ தாக்குதல்கள் விளக்கமாக எழுதப் பட்டிருந்தன.

அதில் விபரிக்கப் பட்டிருந்த தாக்குதல் முறைகள், அடுத்தடுத்த வருடங்களில் நடந்த புலிகளின் தாக்குதல்களுக்கு அடிப்படையாக அமைந்திருந்தன. உதாரணத்திற்கு, பெரிய இராணுவ முகாமை முற்றுகையிடும் முன்னர், மினி முகாம்களை தாக்கி அழிப்பது.

கியூபாவில் நடந்த அதே போராட்டம் ஈழத்தில் நடந்து கொண்டிருந்தது. இதிலே வேடிக்கை என்னவென்றால், "கியூப பாணி கெரில்லாப் போராட்டம் காலாவதியாகி விட்டது" என்று, உலகளவில் வலதுசாரிகள் பிரச்சாரம் செய்து கொண்டிருந்தனர். ஆனால், ஈழத்தில் புலிகள், வலதுசாரிகளின் முகத்தில் கரி பூசிக் கொண்டிருந்தார்கள்.

பலருக்கு புரட்சி என்றால் கம்யூனிஸ்டுகள் தான் நினைவுக்கு வருவார்கள். புரட்சிக்கும், கம்யூனிசத்திற்கும் அந்தளவு நெருக்கமான தொடர்பு இருப்பதைப் போன்று, கெரில்லா யுத்தத்திற்கும், கம்யூனிசத்திற்கும் நெருங்கிய தொடர்பு இருந்தது. நவீன கால உலக வரலாற்றில், கம்யூனிஸ்டுகள் தான் கெரில்லாப் போரை ஒரு கோட்பாடாகவும், நடைமுறை சார்ந்தும் முன்னெடுத்து வந்தனர். இதற்குப் பல உதாரணங்களை அடுக்கலாம்.

இரண்டாம் உலகப்போர் நடந்த காலத்தில், ஐரோப்பாக் கண்டத்தில் அனைத்துப் பகுதிகளிலும் கம்யூனிஸ்டுகளின் கெரில்லாப் படைகள் இயங்கிக் கொண்டிருந்தன. நாஸிகளால் ஆக்கிரமிக்கப் பட்ட சோவியத் யூனியனின் பகுதிகள், யூகோஸ்லேவியா, போன்ற இடங்களில் நடந்த கெரில்லாப் போராட்டம், பிரமாண்டமான, சக்தி வாய்ந்த ஜெர்மன் இராணுவத்தை பின்வாங்க வைத்திருந்தது. இத்தாலியில் அமெரிக்க-பிரிட்டிஷ் படைகள் வந்திறங்குவதற்கு முன்னரே, கம்யூனிச கெரில்லா அணிகள் வடக்கு இத்தாலியை விடுதலை செய்து விட்டன.

ஐம்பதுகளில் கியூபாவில் நடந்த கெரில்லா யுத்தத்தை முன்னர் பார்த்தோம். சேகுவேரா எழுதிய "கெரில்லாப் போர்" என்ற நூல், உலக கெரில்லா இயக்கங்களின் கைநூலாக இருந்தது. கிட்டத்தட்ட அதே காலகட்டத்தில், சீனாவில் மாசேதுங் தலைமையில் ஒரு கெரில்லாப் போராட்டம் நடந்தது. மாவோ எழுதிய இராணுவ போர்த் தந்திரங்கள் பற்றிய நூல்களில், கெரில்லாப் போர் முறைக்கும் சில அத்தியாயங்கள் ஒதுக்கப் பட்டுள்ளன. மாவோவின் இராணுவப் படைப்புகளின் தமிழ் மொழியாக்கம், ஏற்கனவே பரவலாக கிடைத்து வந்தது.

மேலும், புலிகள் இயக்கம் ஆரம்பிக்கப் பட்ட எழுபதுகளில், வியட்நாம் போர் தீவிரமாக நடந்து கொண்டிருந்தது. அதன் தாக்கம் உலகம் முழுவதும் எதிரொலித்தது. உலகமெங்கும் சிறிய, பெரிய நகரங்களில் எல்லாம், யாழ் நகரில் கூட, வியட்நாம் போரை நிறுத்தக் கோரும் ஆர்ப்பாட்ட ஊர்வலங்கள் நடந்துள்ளன. வியட்காங் படையினரின் கெரில்லாத் தாக்குதல்கள் உலகம் முழுவதும் சிலாகித்துப் பேசப் பட்டது. அது பற்றிய தகவல்கள், அன்று தமிழ் இடதுசாரிகள் மத்தியில் திரும்பத் திரும்ப பேசப் பட்ட விடயமாக இருந்தது.

இன்று ஏகாதிபத்திய ஆதரவு வலதுசாரிகள் ஏற்றுக் கொள்ள விரும்பாத ஓர் உண்மை என்னவெனில், விடுதலைப் புலிகள் கூட ஒரு இடதுசாரி விடுதலை இயக்கமாகத் தான் தொடங்கப் பட்டது. அதன் ஸ்தாபகர்கள் பலர் ஊரறிந்த இடதுசாரிகள். ட்ராஸ்கிச இடதுசாரியான அன்டன் பாலசிங்கம், இறுதி வரை அதன் அரசியல் ஆலோசகராக அல்லது தத்துவ ஆசிரியராக இருந்தார். ஆஸ்தான கவிஞரான புதுவை இரத்துனதுரை ஒரு மாவோயிஸ்ட். அனைத்துத் தரப்பினராலும் மதிக்கப் பட்ட பாலகுமார் ஒரு ஸ்டாலினிஸ்ட்.

இவ்வாறு பல உதாரணங்களைக் காட்டலாம். புலிகளின் போராட்டத்தில், இடதுசாரிகள் வகித்த பாத்திரம் என்ன, அவர்கள் உருவாக்கிய யுத்த தந்திரங்கள் எவை என்ற விபரம் கிடைக்கவில்லை. எனினும், தவிர்க்க முடியாமல் புலிகளின் போரியல் தந்திரம் கம்யூனிச கெரில்லாக்களை ஆதாரமாகக் கொண்டிருந்தது. கொழும்பு நகரில், பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த இலக்குகளை குறி வைத்த குண்டுத் தாக்குதல்கள் நடைபெற்ற தருணங்களில், பல ஆய்வாளர்கள் அது பற்றி பேசியுள்ளனர்.

அப்போது புலிகளுடன் சேர்ந்திருந்த, மார்க்சிய- ஈரோஸ் தலைவர் பாலகுமார் ஆலோசனை வழங்குவதாக நம்பப் பட்டது. அப்படி சந்தேகிப்பதற்கு காரணம் இருந்தது. ஈழ விடுதலைப் போராட்டம் தொடங்கிய ஆரம்ப நாட்களில், முதன் முதலாக ஈரோஸ் மட்டுமே கொழும்பு நகரில் வெடிகுண்டுத் தாக்குதல்களை நடத்தி இருந்தது. எழுபதுகளில், மத்திய கிழக்கிலும், ஐரோப்பிய நகரங்களிலும், பாலஸ்தீன இயக்கங்களும், கம்யூனிச புரட்சிக் குழுக்களும் நடத்திய தாக்குதல்களின் பாணியை, ஈழப் போராட்ட வரலாற்றில் பின்பற்றி இருந்தார்கள்.

ஈழப் பகுதிகளை இந்திய இராணுவம் ஆக்கிரமித்திருந்த காலத்தில், எதிரி ஒரு வித்தியாசமான கெரில்லாப் போருக்கு முகம் கொடுக்க வேண்டி இருந்தது. "வியட்நாம் கெரில்லாக்கள் பாவித்த அனைத்து போர்த் தந்திரங்களையும், புலிகள் தமக்கு எதிராக பயன்படுத்தியதாக" இந்திய இராணுவ அதிகாரிகள் அளித்த பேட்டியில் தெரிவித்து இருந்தனர். 

உதாரணத்திற்கு, காடுகளுக்குள் மரங்களில் பொருத்தப் பட்டிருந்த வெடிகுண்டு, பொறிக்குள் அகப்படும் படையினரை குறி வைத்துக் காத்திருந்தது. இந்தத் தந்திரங்களை, புலிகள் வியட்நாமிய கெரில்லாக்களிடம் இருந்து கற்றுக் கொண்டிருந்தனர் என்பது அன்று வெளிப்படையாக பேசப் பட்ட விடயமாக இருந்தது. புலிகளுக்கு ஆதரவாக ஆலோசனை வழங்கிக் கொண்டிருந்த புத்திஜீவிகள், அதனை பகிரங்கமாகவே குறிப்பிட்டு எழுதிக் கொண்டிருந்தார்கள்.

"ஓயாத அலைகள்" என்பது புலிகளின் பிரபலமான போரியல் தந்திரங்களில் ஒன்று. முல்லைத்தீவு இராணுவ முகாம் தாக்குதல் மூலம் உலகப் பிரசித்தி பெற்றது. அது பின்னர், புலிகளின் அனைத்து தாக்குதல்களிலும் பயன்படுத்தப் பட்டது. அதாவது, பெருந்தொகையான போராளிகள் ஒன்று சேர்ந்து ஒரு இராணுவ முகாமை தாக்கும் தந்திரமாகும்.

பெரும் எண்ணிக்கையிலான போராளிகள் போரிடும் பொழுது, இழப்புகளும் அதிகமாக இருக்கும். ஆயினும், ஒரு கெரில்லா இராணுவத்திடம் இருந்து, அது போன்ற தாக்குதல்களை எதிர்பார்க்காத எதிரிப் படையினர் மிகுந்த அதிர்ச்சி அடைந்து பின்வாங்கி ஓடுவார்கள். அதனால் எதிரிகள் தரப்பு இழப்பும் அதிகமாக இருக்கும்.

புலிகளின் ஓயாத அலைகள் தாக்குதல்கள், சிறிலங்கா இராணுவ முகாம்கள் அடுத்தடுத்து விழக் காரணமாக இருந்தன. பூநகரி, முல்லைத்தீவு, கிளிநொச்சி, ஒட்டிசுட்டான், இவ்வாறு கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த, மிகப் பெரிய இராணுவ முகாம்கள் புலிகளால் தாக்கி அழிக்கப் பட்டன. 

"ஓயாத அலைகள்" போரியல் உத்திகளை, புலிகள் எங்கிருந்து கற்றுக் கொண்டார்கள்? சந்தேகத்திற்கிடமின்றி, சீனக் கம்யூனிஸ்ட் கட்சியிடம் இருந்து தான்! மாஓசேதுங் எழுதிய இராணுவப் படைப்புகளை வாசித்த எவருக்கும், இந்த விடயம் வியப்புக்குரியதாக இருக்கப் போவதில்லை.  

மாவோவின் மக்கள் விடுதலைப் படை, சீனப் புரட்சியின் போது வெற்றிகரமாக நடைமுறைப் படுத்திய "ஓயாத அலைகள்" (ஆங்கிலத்தில் Human Waves என்று சொல்வார்கள்), உலகம் முழுவதும் போரியல் நிபுணர்களால் வியப்புடன் நோக்கப் பட்டது. கொரிய யுத்தத்தின் போது, அமெரிக்க இராணுவம், சீன கம்யூனிச தொண்டர் படையின் ஓயாத அலைகள் தாக்குதல்களை எதிர்கொண்டது. அதன் மூலம் உலகப் புகழ் பெற்றது.

ஈழப்போர் உச்சத்தில் இருந்த காலத்தில், சண்டே டைம்ஸ் பத்திரிகையில், புலிகளின் தாக்குதல்களைப் பற்றி விரிவான கட்டுரைகள் எழுதிய இக்பால் அத்தாஸ் கூட அதைக் குறிப்பிட்டு எழுதி இருந்தார்.

தெற்காசிய நாடான மியான்மரில் எழுபதுகளில் பர்மிய கம்யூனிஸ்டுகளின் போராட்டம் நடந்தது. அவர்களும் மாவோயிச போர்த் தந்திரமான ஓயாத அலைகளை பயன்படுத்தி தான், பர்மிய இராணுவ முகாம்களை நிர்மூலமாக்கினார்கள். அதன் மூலம் தமது கட்டுப்பாட்டுப் பிரதேசங்களை உருவாக்கிக் கொண்டார்கள். 

இரண்டு தசாப்தங்களுக்குப் பின்னர், தொண்ணூறுகளில் புலிகள் அதே போரியல் உத்தியை பயன்படுத்தி வெற்றி பெற்றார்கள். அதைப் பற்றி நான் இங்கே விரிவாக எழுதத் தேவையில்லை. ஆனால், புலிகளின் போராட்டத்திற்கு பர்மிய கம்யூனிஸ்ட் கட்சி முன்னோடியாக இருந்தது என்பதை மட்டும் இங்கே குறிப்பிடலாம்.

ஓயாத அலைகள் போரியல் முறை பர்மிய கம்யூனிஸ்ட் கட்சியில் ஏற்படுத்திய அதே பின்னடைவு, பிற்காலத்தில் புலிகளுக்கும் ஏற்பட்டது. உலகில் அதிகளவு மக்கட்தொகை கொண்ட சீனாவில் அது பிரயோசனமாக இருந்தது. ஆனால், குறைந்தளவு சனத்தொகை கொண்ட சிறுபான்மையின மக்கள் மத்தியில் அது எதிர்மாறான விளைவுகளை உருவாக்கியது. 

பர்மிய கம்யூனிஸ்ட் கட்சியின் பெரும்பான்மையான போராளிகள், வா மற்றும் காரென் மொழிகளை பேசும் சிறுபான்மையின மக்கள் ஆவர். இலங்கையிலும் ஈழத் தமிழர்கள் சிறுபான்மையினர் என்பதை நான் இங்கே குறிப்பிடத் தேவையில்லை.

ஓயாத அலைகள் போரியல் உத்திகளின் விளைவாக, போராளிகளின் தரப்பில் ஏற்பட்ட பெருமளவு இழப்பு எளிதில் ஈடுசெய்ய முடியாததாக இருந்தது. பல தாப்தங்களுக்குப் பின்னர், தன்னை தயார் படுத்திக் கொண்ட அரச படைகள், பெரும் எண்ணிக்கையில் முன்னேறிய பொழுது ஓயாத அலைகளின் பலவீனம் உணரப் பட்டது. மியான்மரிலும், வன்னியிலும், இறுதிப்போரானது அரச படைகளினால் ஒரே மாதிரித் தான் முன்னெடுக்கப் பட்டது.

புலிகள் இயக்கத்தை தமிழ் தேசியவாதம் வழிநடத்தி இருக்கலாம். அதற்கு வலதுசாரி சக்திகள் நிதி வழங்கி இருக்கலாம். ஆனால், ஒரு விடுதலை இயக்கம் போரில் வெல்வதற்கு, நவீன போரியல் உத்திகளும் மிக அவசியமானவை. ஒரு வெற்றிகரமான போர்த்தந்திரம் வகுப்பதற்கு, புலிகள் கம்யூனிஸ்டுகளிடம் தான் கடன் வாங்க வேண்டும். அது தவிர்க்க முடியாதது. ஏனென்றால், புரட்சி மாதிரி, கெரில்லாப் போராட்டத்திற்கும், கம்யூனிஸ்டுகளுக்கும் நெருங்கிய உறவு இருக்கிறது.

தீக்கோழி மண்ணுக்குள் தலையை புதைப்பதைப் போன்று, தமிழ் வலதுசாரிகள் இந்த உண்மையை ஏற்றுக் கொள்ள மறுக்கலாம். ஆனால், பூனை கண்ணை மூடிக் கொள்வதால் உலகம் இருண்டு விடுவதில்லையே? அமெரிக்க அடிவருடிகளான தமிழ் பேசும் வலதுசாரிகளின், ஒரு பக்கச் சார்பான பிரச்சாரங்களால், ஈழப் போராட்டத்தின் இடதுசாரித் தன்மையை மறைக்க முடியாது.




இது தொடர்பான முன்னைய பதிவுகள்: 
இடதுசாரி புலிகள் உருவாக்கிய முதலாளிகள் எனும் வலதுசாரி அழிவு சக்திகள்!
காஸ்ட்ரோவை மறக்காத மண்டேலாவும், புரிந்து கொள்ளாத தமிழர்களும்
புலிகளின் வீழ்ச்சியும், சர்வதேச சூழ்ச்சியும்

Monday, July 13, 2015

பிரபாகரன் மீண்டும் வந்தால் "புலி ஆதரவாளர்களே" காட்டிக் கொடுப்பார்கள்!


தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களுக்கு,

நீங்கள் எந்த நாட்டில் ஒளிந்திருந்தாலும் பரவாயில்லை. தமிழீழத்தில் மட்டும் காலடி எடுத்து வைத்து விடாதீர்கள்! "இந்த நன்றி மறந்த தமிழர்களுக்காகவா போராடினேன்" என்று, வருந்த வேண்டி இருக்கலாம்!

நீங்கள் மீண்டும் தமிழ் தேசிய அரசியலுக்கு வந்தால், உங்களுக்கும் "புலனாய்வுத் துறையின் கைக்கூலி" முத்திரை குத்துவார்கள். நீங்கள் மீண்டும் ஆயுதமேந்தினால், சிங்கள இராணுவத்திடம் பிடித்துக் கொடுக்கவும் தயங்க மாட்டார்கள்.

அவர்கள் வேறு யாருமல்ல. நீங்கள் நம்பிக் கெட்ட, அதே "புலி ஆதரவாளர்கள்" தான்! நீங்களே உருவாக்கி விட்ட, தமிழ் முதலாளிகளும், தமிழ் வலதுசாரிகளும், தற்போது சிறிலங்காவின் "ஜனநாயக நீரோட்டத்தில்" ஐக்கியமாகி விட்டார்கள்.

இந்தத் துணுக்கு சிரிப்பதற்கு மட்டுமல்ல, சிந்திப்பதற்கும் தான். இலங்கையில் இன்றைக்கு தமிழ் தேசிய அரசியலுக்குள் நடக்கும் கூத்துக்களைப் பார்க்கும் பொழுது இதெல்லாம் நடப்பதற்கான சாத்தியக்கூறுகள் நிறையவே உள்ளன.
(பார்க்கவும்: 1.தமிழ் வாக்குகள் சிதறுமா? திரளுமா?; 2.பாட்டாளி வர்க்க புலிப் போராளிகளை ஒதுக்கும் கூட்டமைப்பின் மேட்டுக்குடி அரசியல்)

தேர்தல் வரும் காலங்களில் தான், பல கட்சி ஜனநாயகம் பற்றிப் பீற்றிக் கொண்டிருக்கும், போலி ஜனநாயகவாதிகளின் முகமூடிகள் கிழிந்து தொங்குகின்றன. அவர்களது "ஜனநாயகம்" எப்போதும், இரண்டு கட்சிகளின் சர்வாதிகார ஆட்சி தான் என்பதை புரிந்து கொள்வது மிகவும் எளிது.

இலங்கை அரசியல் நிலவரத்தில், "தனித் தமிழீழத்திற்கான சுதந்திர தாகம்" கொண்ட, போலித் தமிழ் தேசியவாதிகள் கூட, சிங்களப் பேரினவாத SLFP க்கு எதிராக, இன்னொரு சிங்களப் பேரினவாத கட்சியான UNP யை ஆதரிப்பார்கள். காரணம் கேட்டால், "அது தாண்டா ஜனநாயகம்!" என்பார்கள்.

அதே நேரம், வடக்கு, கிழக்கு மாகாணங்களில், எப்போதும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு மட்டுமே வெல்ல வேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள். காரணம் கேட்டால், "அது தாண்டா தமிழ் தேசியம்" என்பார்கள். எல்லாத் தேர்தல்களிலும் ஒரே கட்சி தான் வெல்ல வேண்டுமென்றால், அதற்குப் பெயர் ஜனநாயகமா? மெத்தப் படித்த அறிவாளிகளே பதில் கூறுங்கள்.

இலங்கையில் மீண்டும் பாராளுமன்ற பொதுத்தேர்தல் கூத்துக்கள் ஆரம்பமாகி விட்டன. முன்னர் ஒரு தடவை, ஜனாதிபதி தேர்தல் நடந்த நேரம், நான் பொதுத் தேர்தல்களின் ஜனநாயகமற்ற தன்மையை விமர்சித்து எழுதி இருந்தேன்.

அப்பொழுது, முன்னாள் போலித் தமிழ் தேசியவாதியும், இந்நாள் போலி ஜனநாயகவாதியுமான ஒருவர், பின்வருமாறு எதிர்வினையாற்றினார்:
  "மிஸ்டர் கலையரசன், இலங்கையில் ஒரு புரட்சி நடக்கும் என்று கனவு காணாதீர்கள்!"

இந்தப் போலி ஜனநாயகவாதி முன்னொருகாலத்தில் புலிகளை ஆதரித்தவர், அல்லது அப்படி பாசாங்கு செய்தவர். அந்தக் காலத்தில் புலிகள் நடத்தியது புரட்சி இல்லாமல், புடலங்காயா? உங்களது பாராளுமன்ற தேர்தல்களில் நம்பிக்கை இழந்த படியால் தானே புலிகள் ஆயுதமேந்தினார்கள்?

ஏற்கனவே இருக்கும் அரச கட்டமைப்பை மாற்றியமைப்பதற்குப் பெயர் தான் புரட்சி. அதைப் புலிகள் நடைமுறையில் செய்து காட்டினார்கள். நீங்கள் விரும்பினால் அதற்கு "தமிழ் தேசியப் புரட்சி" என்று பெயரிட்டுக் கொள்ளுங்கள்.

கம்யூனிஸ்டுகள் மட்டும் தான் புரட்சி நடத்த வேண்டுமென்ற கட்டாயம் இல்லை. ஈரானில் இஸ்லாமியப் புரட்சி நடக்கலாம் என்றால், இலங்கையில் தமிழ் தேசியப் புரட்சி நடக்க முடியாதா?

தமிழர் விடுதலைக் கூட்டணி பாராளுமன்ற வாக்குகளால் சாதிக்க முடியாத பல விடயங்களை, புலிகள் ஆயுத பலத்தால் செய்து காட்டினார்கள். சிறிலங்கா பாராளுமன்ற அதிகார மையத்தின் உத்தரவுகளுக்கு கீழ்ப்படியாத கட்டுப்பாட்டுப் பிரதேசம் ஒன்றை உருவாக்கி ஆட்சி நடத்தினார்கள்.

இறுதிப்போர் நடப்பதற்கு சில மாதங்களுக்கு முன்னர் கூட, புலிகளை ஜனநாயக வழிக்கு திரும்புமாறு அமெரிக்கா வலியுறுத்தி இருந்தது. ஏன் அதை உதாசீனப் படுத்தினார்கள்? போலி ஜனநாயகவாதிகள் பெருமையுடன் பீற்றிக் கொள்ளும் பாராளுமன்ற ஜனநாயக அமைப்பு சிறந்தது என்றால், அதை அன்று ஏற்றுக் கொண்டிருக்கலாமே?

வசதி படைத்த தமிழ் மேட்டுக்குடியினருக்கு, பதவிகளை அமைத்துக் கொடுப்பதற்காக புலிகள் போராடவில்லை. தமிழ்ச்செல்வன் போன்ற அடித்தட்டு உழைக்கும் வர்க்க சமூகத்தை சேர்ந்த உறுப்பினர்களும் உயர்ந்த அந்தஸ்துக்கு வருவதற்கு உதவினார்கள். அந்த சமூகத்து மக்களைப் பொறுத்தவரையில், அது ஒரு புரட்சி தான்.

ஈழத் தமிழ் மேட்டுக்குடி வர்க்கமும், தமிழ் முதலாளிய வர்க்கமும், புலிகளை தமது கருவிகளாக நினைத்து பயன்படுத்தி வந்தனர். அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் உத்தரவை ஏற்று, சிங்களப் பேரினவாத அரசுடன் கூட்டுச் சேர்ந்தவுடன் புலிகளை கை கழுவி விட்டனர். அதன் விளைவாகத் தான், முன்னாள் புலிப் போராளிகள் தற்போது தீண்டத்தகாதவர்களாக சமூகத்தில் ஒதுக்கப் படுகின்றனர். இதே நிலைமை, புலிகளுக்கு தலைவராக இருந்த பிரபாகரனுக்கும் ஏற்படாது என்பதற்கு என்ன உத்தரவாதம்?



இதனுடன் தொடர்புடைய முன்னைய பதிவுகள்:
பாட்டாளி வர்க்க புலிப் போராளிகளை ஒதுக்கும் கூட்டமைப்பின் மேட்டுக்குடி அரசியல்
தீவிர- மிதவாத ஈழத் தமிழ் தேசியவாதிகளுக்கு இடையிலான பனிப்போர்
தேர்தலில் மலர்ந்த "தமிழர் அரசு"! - ஓர் ஆய்வு

Saturday, July 11, 2015

பாட்டாளி வர்க்க புலிப் போராளிகளை ஒதுக்கும் கூட்டமைப்பின் மேட்டுக்குடி அரசியல்


முன்னாள் புலிப் போராளிகள் அரசியலில் ஈடுபடுவதை, தமிழ் தேசியக் கூட்டமைப்பு தலைவர்கள் தடுக்கிறார்களா? இப்படி ஒரு குற்றச்சாட்டை முன்னாள் போராளிகள், தமிழ் தேசியத் தலைவர்கள் மீது சுமத்தியுள்ளனர். அது எந்தளவு தூரம் உண்மை என்பதை சம்பந்தப் பட்டவர்கள் தான் கூற வேண்டும்.

தற்போது பாராளுமன்ற பொதுத் தேர்தல் வரும் நேரம், எதிர்பாராத விதமாக முன்னாள் புலிப் போராளிகளின் விடயம் சூடு பிடித்துள்ளது. அவர்கள் தனிக் கட்சியாக பதிவு செய்தமை ஒரு முக்கிய காரணம். அரசின் ஆசீர்வாதத்துடன், கூட்டமைப்பு பிரமுகரான வித்தியாதரன் அவர்களை அணிசேர்த்து நிறுவனமயப் படுத்தி உள்ளார்.

யுத்தம் முடிந்த பின்னர், தமிழ் சமூகத்தால் இரக்கமற்று ஒதுக்கப் பட்டு, பல அவலங்களை சந்தித்துக் கொண்டிருக்கும் முன்னாள் போராளிகளின் அவலம் புறக்கணிக்கத் தக்கதல்ல. இதிலே வர்க்கம் சார்ந்த பிரச்சினை இருப்பதை நாங்கள் மறுக்க முடியாது. வசதியான குடும்பங்களை சேர்ந்த முன்னாள் போராளிகள், ஏதோ ஒரு வகையில் நன்றாக வாழ்கிறார்கள். ஒன்றில் அவர்கள் வெளிநாடுகளுக்கு சென்று விட்டனர், அல்லது உள்நாட்டில் ஏதாவது தொழிலை தேடிக் கொண்டுள்ளனர். அவர்களது பெற்றோர் வசதியாக இருந்த படியால் தான் அதெல்லாம் சாத்தியமானது.

இங்கே நாங்கள் கவனம் செலுத்த வேண்டிய முன்னாள் போராளிகள், வறுமையான குடும்பங்களை சேர்ந்தவர்கள். போராளியாவதற்கு முன்னரும், போர் முடிந்த பின்னரும், அவர்களது குடும்ப வறுமை மாறவில்லை. சிலநேரம், அவர்களது ஏழைப் பெற்றோர் தான் போரினால் அதிகளவில் பாதிக்கப் பட்டிருப்பார்கள். தமது பிள்ளைகளுக்கு உள்ளூரில் தொழில் வாய்ப்பை பெற்றுத் தரும் அளவு வசதியற்ற பெற்றோரால், வெளிநாட்டுக்கு அனுப்பி வைக்க முடியுமா?

முன்னாள் புலிப் போராளிகளின் வர்க்கப் பிரச்சினை, எம்மில் பலரின் கவனத்தைப் பெறாமல் இருக்கலாம். ஆனால், எதிர்காலத்தில் அவர்களால் ஏற்படக் கூடிய ஆபத்தை, அரசு நன்றாகப் புரிந்து வைத்திருக்கிறது. எம்மில் பலர் தவறாக நினைப்பது போல, புலிகளின் முப்பதாண்டு கால ஆயுதப் போராட்டம் வெற்றிகரமாக நடந்ததற்கு காரணம், "தமிழ் இன உணர்வு" மட்டும் அல்ல. அதுவும் ஒரு காரணம் தான். ஆனால், அது மட்டுமே காரணம் அல்ல.

ஈழப் போராட்டத்திற்கு உந்துசக்தியாக இருந்த பொருளாதாரக் காரணிகளை பலர் கவனிப்பதில்லை. வடக்கு-கிழக்கு மாகாணங்களின் பின்தங்கிய நிலைமை. குறிப்பாக, வன்னியிலும், கிழக்கு மாகாணத்திலும் நிலவிய வறுமை. சிங்களம், தமிழ், முஸ்லிம் இனங்களுக்கு இடையிலான நிலத்திற்கான போராட்டம். இது போன்ற பல காரணங்கள் போராளிகளை உருவாக்கி விட்டிருந்தன.

மேற்குறிப்பிட்ட பிரச்சினைகள் எதுவும் இன்று வரையில் தீர்க்கப் படவில்லை. முதலாளித்துவ நலன் சார்ந்த சிறிலங்கா அரசு, அவை குறித்து பாராமுகமாக இருக்கிறது. இனப்பிரச்சினை தீர்க்கப் பட வேண்டுமானால், பொருளாதாரப் பிரச்சினையையும் தீர்க்க வேண்டி இருக்கும். அது மறுபக்கத்தில் முதலாளித்துவ வர்க்கத்தின் சுரண்டலையும் வெளிப்படுத்தி விடும். ஆகவே, இனப்பிரச்சினை தொடர்ந்திருக்க வேண்டுமென்று தான், முதலாளித்துவ- சிறிலங்கா அரசும் எதிர்பார்க்கும்.

இது போன்ற சூழ்நிலை, மீண்டும் ஒரு புலிகள் இயக்கத்தையும், ஆயுதப் போராட்டத்தையும் தூண்டி விடாதா? தமிழ் இன உணர்வாளர்கள் சொல்லிக் கொள்வதைப் போன்று, அந்தப் போராட்டம் புலிகளின் பெயரில் நடக்கப் போவதுமில்லை, பிரபாகரன் தலைமை தாங்கப் போவதுமில்லை. இனிவரப்போகும் ஆயுதப்போராட்டமானது, வேறொரு இயக்கத்தின் பெயரில், வேறொரு வடிவத்தில் நடக்கலாம்.

இலங்கையில் இனிமேல் ஒரு ஆயுதப்போராட்டம் நடக்கும் நிலைமை தோன்றினால், போர்க்கள அனுபவம் பெற்ற முன்னாள் போராளிகள் அதில் இணைந்து போராட மாட்டார்கள் என்பதற்கு என்ன நிச்சயம்? இந்த ஆபத்தை உணர்ந்து கொண்ட இலங்கை அரசு, தமிழ் தேசியப் பிரமுகர் வித்தியாதரனுடன் கூட்டுச் சேர்ந்து, அதைத் தடுப்பதற்காக "தமிழ் ஜேவிபி" ஒன்றை உருவாக்கி உள்ளது.

TNA பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன், இதனை கோடிட்டுக் காட்டி உள்ளார். முன்னொரு காலத்தில் ஆயுதமேந்திப் போரிட்ட ஜேவிபி உறுப்பினர்களை, "ஜனநாயக அரசியல் நீரோட்டத்தினுள்" இழுத்து வந்ததைப் போன்று, முன்னாள் புலிப் போராளிகளும் கொண்டு வரப் பட வேண்டும் என்று கூறினார். முதலாளித்துவ மேலாதிக்கத்திற்குட்பட்ட பாராளுமன்ற- ஜனநாயக சாக்கடைக்குள் இறங்கிய ஜேவிபி அதற்குள் அமிழ்ந்து போனது. 

பன்றியுடன் சேர்ந்த பசுக்கன்றும் மலம் தின்னும் என்பது ஒரு பழமொழி. ஆயினும், முதலாளித்துவ நலனைப் பாதுகாக்கும், சிறிலங்கா அரசும், தமிழ் தேசியவாதிகளும் அதையே "வெகுஜன அரசியல்" என்று காட்டி வருகின்றனர்.

முன்னாள் புலிப் போராளிகள் "ஜனநாயக அரசியல் நீரோட்டத்திற்குள்" இழுத்து வரப் பட்ட பின்னணி அது தான். இந்த உண்மைகள் தமிழ் தேசியக் கூட்டமைப்பினருக்கு தெரியாது என்று நினைக்கவில்லை. இருப்பினும்,  புலிப் போராளிகளின் அரசியல் பிரவேசத்தை ஒரு வித வன்மத்துடன் அணுகுகின்றனர்.

இவ்வளவு காலமும் புலிகளை ஆதரிப்பதாக நடித்துக் கொண்டிருந்த போலித் தமிழ் தேசியவாதிகள் பலர், முன்னாள் புலிப் போராளிகள் பற்றி காழ்ப்புணர்ச்சியுடன் பேசி வருகின்றனர். உதாரணத்திற்கு, பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரனின் புலிப் போராளிகளைப் பற்றிய கூற்று, பலத்த சர்ச்சையை உருவாக்கி விட்டுள்ளது.(அதாவது உண்மையான போராளிகள் , முள்ளிவாய்க்காலிலேயே சயனைட் அடித்து இறந்துவிட்டதாக இவர் தெரிவித்திருந்தார்)

முன்னாள் புலிப் போராளிகள் அரசியலில் ஈடுபடுவதை, இனவாதக் கட்சியான ஜாதிக ஹெல உறுமய உட்பட, சிங்களக் கட்சிகள் எதுவும் தடுக்கவில்லை. முன்பொரு தடவை, யாழ் மாவட்ட இராணுவ தளபதி, "முன்னாள் புலிப் போராளிகள், இடதுசாரிக் கட்சிகளைத் தவிர, வேறெந்தக் கட்சியிலும் சேர்ந்து அரசியல் நடத்துவதற்கு தடையில்லை...!" என்று தெரிவித்திருந்தார். 

அதாவது, இடதுசாரி அரசியல் தமது இருப்பிற்கு ஆபத்தானது என்பதை, இந்தக் கூற்றின் மூலம் அரசு நேரடியாகவே தெரிவித்துள்ளது. தமிழ் தேசியக் கூட்டமைப்பு "ஒரு பிரிவினைவாதக் கட்சியாக" இருந்தாலும், அது ஒரு வலதுசாரிக் கட்சி என்பதால், சிறிலங்கா அரசின் அபிலாஷைகளை பூர்த்தி செய்கின்றது. ஆகவே, முன்னாள் புலிப் போராளிகளை ஏதாவது ஒரு வலதுசாரிக் கட்சியில் சேருமாறு அரசே அறிவுறுத்தியுள்ளது. 

இயற்கையாகவே, முன்னாள் புலிப் போராளிகளின் தெரிவு தமிழ் தேசியக் கூட்டமைப்பாக இருக்கும். TNA தான் நம்பகமான "ஈழத் தமிழர்களின் பிரதிநிதிகள்", "தமிழ் தேசியத் தலைவர்கள்", இது போன்ற கருத்துக்கள் அவர்கள் மனதிலும் இருந்திருக்கலாம். அதனால், அரசியல் உணர்வு கொண்ட முன்னாள் போராளிகள் பலர், கூட்டமைப்பில் உறுப்பினராவதற்கும், வேட்பாளராக நிற்பதற்கும் விண்ணப்பித்ததாகவும், ஆனால் அவை நிராகரிக்கப் பட்டதாகவும் கூறுகின்றனர்.

முன்னாள் புலிப் போராளிகளின் விண்ணப்பங்களை நிராகரித்தமைக்கு கூட்டமைப்பு தகுந்த காரணம் எதையும் கூறவில்லை. ஆனால், "ஆயுதமேந்திய நபர்களை சேர்க்க விரும்பவில்லை" என்று ஒரு நொண்டிச்சாட்டு சொல்லப் படுகின்றது. "அப்படியானால், தமிழரசுக் கட்சியைத் தவிர, கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் பிற மூன்று கட்சிகளும் ஒரு காலத்தில் ஆயுதபாணிகளாக இருந்தவை தானே?" என்று முன்னாள் புலிப் போராளிகள் கேட்பதிலும் நியாயமிருக்கிறது.

உண்மையில், தமிழ் தேசிய அரசியல் களத்தில் ஒரு சதிப்புரட்சி நடந்து கொண்டிருக்கிறது. கூட்டமைப்பின் முன்னோடிகளான கூட்டணியின் இடத்தைப் பிடிப்பதற்கு, தமிழரசுக் கட்சியினர் முயன்று வருகின்றனர். அன்றிருந்த தமிழர் விடுதலைக் கூட்டணி, அனைத்துத் தமிழ் மக்களின் பிரதிநிதிகளாக காட்டிக் கொண்டாலும், அடிப்படையில் மேட்டுக்குடியினரின் கட்சியாக இருந்தது. அந்தக் கட்சியின் பெரும்பாலான பாராளுமன்ற உறுப்பினர்கள் சட்டத்தரணிகள் என்பது தற்செயல் அல்ல.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு, "சட்டத்தரணிகளின் கட்சியாக" மேட்டுக்குடி வர்க்க நலன்களை மட்டுமே பாதுகாக்க விரும்புகிறது. அது தேர்தலில் நிறுத்தும் வேட்பாளர்களின் விளம்பரங்களை எடுத்துப் பார்த்தாலே தெரியும். பெரும்பாலான வேட்பாளர்களின் பெயர்களுக்குப் பின்னால், ஆங்கில எழுத்துக்களில் உள்ள பட்டங்கள், சாமானிய மக்களைப் பயமுறுத்தும். படிக்க வேண்டிய வயதில் போராட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் புலிப் போராளிகள், அந்தப்  பட்டங்களுக்கு எங்கே போவார்கள்?

ஆகவே, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் புறக்கணிப்பினால் தான், முன்னாள் புலிப் போராளிகள் தனிக் கட்சியாக பதிவு செய்து கொண்டுள்ளனர் எனத் தெரிய வருகின்றது. அது NGO பாணியில், ஒரு குறிப்பிட்ட சமூகப் பிரிவினரின் நலன்களை பேசுவதாக மட்டுமே இருக்கும். தமிழ் தேசிய அரசியலில் தலைமையை கைப்பற்றும் அளவுக்கு பலமானதாக இருக்காது. இருப்பினும், ஏதோ ஒரு வகை அச்சம் கூட்டமைப்பு தலைவர்கள் முகத்தில் தெரிகின்றது.

ஈழத் தமிழ் சமூகமும், தனக்குள்ளே வர்க்க முரண்பாடுகளைக் கொண்ட சமூகம் தான். போலித் தமிழ் தேசியவாதிகள் அதனை ஏற்றுக் கொள்ள மறுப்பதற்கு காரணம், அவர்களும் வர்க்க அரசியலில் பங்காளிகள் என்பதால் தான்.

கார்ல் மார்க்ஸ் பிரபலமான கூற்றான, "இழப்பதற்கு எதுவுமற்ற பாட்டாளி வர்க்கம்" தான் புலிகள் இயக்கத்தின் முதுகெலும்பாக இருந்தனர். பாட்டாளி வர்க்கத்தை சேர்ந்த முன்னாள் புலிப் போராளிகள் பலர், ஈழப் போராட்டத்தின் ஊடாகத் தான் அரசியல் முனைப்புப் பெற்றனர். " அரசியல் என்பது இரத்தம் சிந்தாத போர். போர் என்பது இரத்தம் சிந்தும் அரசியல்" என்று மாவோ சொன்னதை நடைமுறை அனுபவத்தின் ஊடாக புரிந்து வைத்திருக்கின்றனர்.

முன்னாள் புலிப் போராளிகள் நம்பிக் கொண்டிருக்கும், தமிழ் தேசிய அரசியல், இன்று மேட்டுக்குடி வலதுசாரிகளால் அவர்களது வர்க்க நலன்களுக்காக நடத்தப் படுகின்றது என்ற உண்மை இப்போது தான் உறைக்கிறது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பின்னணியில் தமிழ் முதலாளிகள் இருப்பது ஒன்றும் இரகசியமல்ல. வடக்கு- கிழக்கு மாகாணங்களில் பலருக்கும் தெரிந்த உண்மை அது.

கூட்டமைப்பின் பிரபல பாராளுமன்ற உறுப்பினரான சரவணபவன், உதயன் பத்திரிகை நிறுவனத்தின் முதலாளியாகவும் இருக்கிறார். அவரது உதயன் நிறுவனம் பத்திரிகை மட்டும் வெளியிடவில்லை. தங்குவிடுதிகள் போன்ற பிற துறைகளிலும் முதலிட்டுள்ளது. இது ஒரு உதாரணம் மட்டுமே. 

கூட்டமைப்பினர் தமது வர்த்தக, வர்க்க நலன்களை பாதுகாத்துக் கொள்வதற்காக, பின் கதவால் சிறிலங்கா அரசுடன் பேரம் பேசுவதும் அனைவருக்கும் தெரிந்த விடயம் தான். முதலாளித்துவ நலன்களை பாதுகாப்பதற்காக உருவாக்கப்பட்ட பாராளுமன்ற ஜனநாயக அரசியல் ஒரு சாக்கடை என்ற உண்மையை, முன்னாள் புலிப் போராளிகளும் உணர்ந்து கொள்ளும் காலம் வெகு தூரத்தில் இல்லை. 

அதற்குப் பிறகு... என்ன செய்ய வேண்டும்? அதற்கான பதிலை லெனின் நூறு வருடங்களுக்கு முன்னரே எழுதியிருக்கிறார். இன்றைய ஈழத் தமிழ் அரசியல் சூழ்நிலைக்கும் அது பொருந்தும். 

Wednesday, July 08, 2015

கிரேக்க கடன் நெருக்கடி பற்றி ஒரு வலதுசாரியின் பிதற்றல்கள்

கிரீஸ் நாஸி ஜெர்மனியின் ஆக்கிரமிப்பின் கீழிருந்த காலத்தில்... 

கிரேக்க நிலவரம் தொடர்பாக, ஏன் இன்னும் எந்தவொரு வலதுசாரியும் எதிர்வினையாற்றவில்லை என்று பலர் நினைத்திருக்கலாம். தமிழ் பேசும் வலதுசாரிகளில் முக்கிய பிரமுகரான பத்ரி சேஷாஸ்திரி, தனக்குப் பிடித்த கட்டுரை ஒன்றை எங்கேயோ தேடி எடுத்துப் போட்டிருக்கிறார்.

நமது தமிழ் வலதுசாரிகள் பலருக்கு, அமெரிக்கா, பிரிட்டன் போன்ற காலனிய எஜமான்களின் நாடுகளை விட்டால், ஏனைய நாடுகளைப் பற்றிய அறிவு பூஜ்ஜியமாக இருக்கும். ஐந்து வருடங்களுக்கு முன்னர் வரை கூட, கிரீஸ் பற்றிய தகவல் எதுவும் தமிழ் ஊடகங்களில் இடம்பெறுவதில்லை. 

கிரேக்க நாட்டில், எண்பதுகள் வரையில் இராணுவ சர்வாதிகார ஆட்சி நடந்தது என்பது பலருக்குத் தெரியாது. இராணுவ கொடுங்கோல் ஆட்சிக்கு எதிராக கிளர்ந்தெழுந்த மாணவர்கள், மக்களின் போராட்டங்கள் பற்றிய தகவல்கள் மேற்கத்திய ஊடகங்களிலேயே இருட்டடிப்பு செய்யப்பட்டன. தமிழ் ஊடகங்கள் பற்றி சொல்லவே தேவையில்லை. இந்த விடயங்களை எல்லாம், நானும் ஐரோப்பா வந்த பின்னர் தான் தெரிந்து கொண்டேன்.

மேற்கத்திய நாடுகளில், வெள்ளையும், சொள்ளையுமாக இருப்பவர்கள், பொய் பேசாத அரிச்சந்திரர்கள் என்று தான் தமிழ் வலதுசாரிகள் நினைக்கிறார்கள் போலிருக்கிறது. அதனால் தான், ஊடகவியலாளர் என்ற பெயரில், ஜெர்மன் அரசுக்கு ஆதரவான ஒருவர் எழுதிய அரசியல் பிரச்சாரக் கட்டுரையை பத்ரி சேஷாஸ்திரி எம்முடன் பகிர்ந்திருக்கிறார்.







"Germany Deserved Debt Relief, Greece Doesn't" (http://www.bloombergview.com/articles/2015-01-27/germany-deserved-debt-relief-greece-doesn-t-i5fdca2y) என்ற அந்தக் கட்டுரை, இது வரையில் நான் வாசித்த மகா மொக்கையான பதிவு. Leonid Bershidsky என்ற அதன் எழுத்தாளர், தனது ஒரு பக்கச் சார்பான அரசியலை நிறுவுவதற்காக முட்டாள்தனமான வாதங்களை அடுக்குகிறார்.

"இரண்டாம் உலகப்போரில் ஜெர்மனியின் கடன்களை தள்ளுபடி செய்தது மாதிரி, தற்போது கிரீஸ் பட்ட கடன்களை தள்ளுபடி செய்தால் என்ன?" என்று கிரேக்க அரசு முன்வைத்த வாதத்தில் இருந்து தொடங்குகிறார். அவரைப் பொறுத்தவரையில், அப்படி ஓர் ஒப்பீட்டை செய்வதே அபத்தமானது என்கிறார். ஏன் என்பதற்கு அவர் கூறும் காரணங்கள் தான் சிரிப்பை வரவழைக்கின்றன.

"ஜெர்மனி பட்ட கடன்கள் முதலாம் உலகப்போர் முடிந்த காலத்தில் கட்டியிருக்க வேண்டியவை. அதனால் தான் நாஸிகள் ஆட்சியைப் பிடித்தார்கள். அந்தக் கடன்கள் இரண்டாம் உலகப்போர் முடிந்த பின்னரும் கட்டி முடிக்கவில்லை. போருக்கு முன்னர் இருந்த நாணய மதிப்புகள் சீர்குலைந்திருந்தன. அதனால் கடன்களின் மதிப்பை கணக்கெடுக்க முடியவில்லை."

இவை அந்த எழுத்தாளர் முன்வைக்கும் வாதங்கள். அவை எவ்வளவு முட்டாள்தனமானவை என்பது ஓரளவு வரலாறு, பொருளாதாரம் பற்றிய அறிவுள்ளவர்களுக்கு தெரியும். முதலாம் உலகப்போர் முடிந்த பின்னர், ஜெர்மனியின் கடன்கள் இமய மலை அளவு அதிகரித்திருந்தமையும், அதன் விளைவாக நாஸிகள் ஆட்சியைக் கைப்பற்றியதும் உண்மை தான். ஆனால், இந்த எழுத்தாளர் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தை முற்றாக மறந்து அல்லது மறைத்து விடுகிறார். நாஸிகளின் ஆட்சிக் காலத்தில் ஜெர்மனியின் பொருளாதாரம் எப்படி இருந்தது?

நாஸிகளின் ஆட்சிக் காலத்தில் ஜெர்மனியின் பொருளாதாரம் வளர்ச்சி அடைந்திருந்தது. முழு ஐரோப்பாக் கண்டத்திலும் முன்னேறிய தொழிற்துறை வளர்ச்சி கண்டிருந்தது. நாஸிகள் ஆட்சிக்கு வந்தவுடனே, அமெரிக்கா தனது முந்திய கடன்களை தள்ளுபடி செய்து விட்டிருந்தது. பிரிட்டன் தவிர்ந்த பிற ஐரோப்பிய நாடுகளை பற்றி சொல்லத் தேவையில்லை. அவை ஜெர்மனியின் தயவில் வாழ வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. அன்றைய நிலவரம் அப்படி இருக்கையில், ஜெர்மனி முதலாம் உலகப்போர் காலத்தில் கட்டியிருக்க வேண்டிய கடன்களை, இரண்டாம் உலகப்போர் வரைக்கும் இழுத்துச் சென்றது என்பது அறியாமை.

இவர் கூறும் அடுத்த அபத்தம், நாணயங்களின் பெறுமதி குறைந்தது காரணமாக, போருக்கு முந்திய கடன்களின் மதிப்பை யாராலும் கணக்கிட முடியவில்லையாம். அன்றைய ஐரோப்பாவில், ஒவ்வொரு நாட்டினதும் நாணய மதிப்பு, போருக்கு முன்னரும், பின்னரும் எப்படி இருந்தது என்பதை வரலாற்றுப் புத்தகங்களை புரட்டிப் பார்த்தால் தெரிந்து கொள்ளலாம். அது ஒன்றும் பெரிய ராக்கட் தொழில்நுட்பம் அல்ல. கறுப்புச் சந்தையில் விசாரித்தால் பணத்தின் உண்மையான மதிப்புத் தெரியும்.

இந்த வலதுசாரி எழுத்தாளர், இன்னொரு "நியாயமான" வாதத்தையும் வைக்கிறார். இரண்டாம் உலகப்போரில் ஜெர்மனி மிக மோசமான அழிவுகளை சந்தித்திருந்தது. அதனால் அழிவுகளில் இருந்து மீண்டெழுந்து, நாட்டைக் கட்டியெழுப்ப கடன் தள்ளுபடி செய்தல் அவசியமானது என்கிறார். அப்பப்பா! என்னே மனிதநேயம்! நினைத்தால் புல்லரிக்கிறது. ஜெர்மனி பேரழிவை சந்தித்தது உண்மை தான். ஆனால், இரண்டாம் உலகப்போரில் பாதிக்கப் பட்டது ஜெர்மனி மட்டுமல்லவே? சோவியத் யூனியனின் மேற்குப் பகுதிகளில் ஜெர்மன் படைகள் ஏற்படுத்திய அழிவுகள் அதை விட பல மடங்கு அதிகம். அதற்கெல்லாம் எவனிடம் போய் நஷ்டஈடு கேட்பதாம்?

இரண்டாம் உலகப்போரில் கிரீஸ் கூட, ஜெர்மன் படைகளினால் ஆக்கிரமிக்கப் பட்டதும், அவை அங்கே விமானக் குண்டுகளை வீசி பெரும் நாசம் விளைவித்திருந்ததும் வரலாறு. கிரீஸ் நாட்டில் பண்டைய காலத்து நாகரிகங்களின் அழிபாடுகள் மட்டுமே இருக்கின்றன என்று இந்த எழுத்தாளர் கிண்டல் அடிக்கிறார். 

இந்த சிறுபிள்ளைத்தனமான உளறலைக் கேட்டு சிரிப்பு வரவில்லை. அருவருப்பு தான் வருகின்றது. அன்று கிரீஸ், நாஸிகளால் தனக்கு ஏற்பட்ட அழிவுகளுக்கு, ஜெர்மனியிடம் நஷ்டஈடு கோராதது மட்டுமல்ல, தனக்கு கொடுக்க வேண்டிய கடன்களைக் கூட தள்ளுபடி செய்த பெருந்தன்மையை மெச்ச வேண்டும்.

கிரீஸ் போன்ற நட்பு நாடுகளின் பெருந்தன்மை காரணமாகத் தான், ஐரோப்பாவின் வளர்ச்சி அடைந்த நாடாக மாறியது. அதை இந்தக் கட்டுரையாளரே ஏற்றுக் கொள்கிறார். கிரேக்கம் அன்று செய்த உதவிக்கு பிரதியுபகாரமாக, இன்று கஷ்டப்படும் தனது நண்பனுக்கு ஜெர்மனி உதவி செய்தால் என்ன குறைந்து விடும்? 

செய்நன்றி மறப்பது தான் ஜெர்மனியின் கொள்கை என்றால், அதைவிட அயோக்கியத்தனம் உலகில் வேறு இருக்க முடியாது. கட்டுரையாளர் திரிப்பது போல, இது "வெறும் ஒப்பீடு" அல்ல. நன்றி கெட்ட ஜெர்மனியின் சுயநலத்தை தோலுரித்துக் காட்டும் யதார்த்தம்.

"போரில் அழிவை சந்தித்த நாட்டின் கடன்களை தள்ளுபடி செய்வது முறையானது." ஒரு பேச்சுக்கு, அப்படியே வைத்துக் கொள்வோம். கடந்த பல தசாப்த காலங்களாக, உலகில் எத்தனை நாடுகளில் பேரழிவைத் தந்த போர்கள் நடந்துள்ளன? உதாரணத்திற்கு, முன்னாள் பிரெஞ்சுக் காலனியான இந்தோசீனாவில் அமெரிக்கா ஏற்படுத்திய அழிவுகள் எத்தனை? 

இரண்டாம் உலகப்போர் முழுவதும் போடப்பட்ட குண்டுகளின் எண்ணிக்கையை விட, மூன்று மடங்கு அதிகமான குண்டுகள் அங்கே போடப்பட்டதாக சொல்லப் படுகின்றது. அத்தனை அழிவுகளுக்குப் பின்னர் சுதந்திரம் அடைந்த, வியட்நாம், லாவோஸ், கம்போடியா ஆகிய மூன்று நாடுகளின் கடன்கள் தள்ளுபடி செய்யப் பட்டனவா?

இவரது இன்னொரு நகைச்சுவை, ஜெர்மனி இரண்டாகப் பிரிந்தது பற்றியது. கிழக்கு ஜெர்மன் பகுதிகளை சோவியத் இராணுவம் ஆக்கிரமித்த படியால், அங்கிருந்து "பத்து மில்லியன்" அகதிகள் மேற்கு ஜெர்மனியில் தஞ்சம் கோரினார்களாம். அதனால் ஏற்பட்ட மனிதப் பேரவலம் காரணமாக, மேற்கு ஜெர்மன் அரசு அவர்களையும் பராமரிக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டதாம். 

இதற்கெல்லாம் எவ்வளவு செலவாகியிருக்கும் என்று எம்மையெல்லாம் பரிதாபப்பட வைக்கிறார். இவரது கணக்குப் படி, கிழக்கு ஜெர்மனியில் இருந்து, ஏறக்குறைய அத்தனை மக்களும், ஒருவர் விடாமல் மேற்கு ஜெர்மனிக்குள் ஓடி விட்டார்கள். பெர்லின் மதில் கட்டப்படும் வரையிலும், அந்த நகரத்தில் இரண்டு பக்கமும் மக்களின் போக்குவரத்து நடந்து கொண்டிருந்தது என்பதை அவர் படிக்கவில்லை போலும்.

கிரீஸின் கடன் பிரச்சினைக்கு என்ன காரணம் என்பதையும் அவரே கண்டுபிடித்து சொல்லி விடுகிறார். ஐந்தாண்டுகளுக்கு முன்னர், கிரேக்க பொருளாதார நெருக்கடி தோன்றிய காலத்தில் இருந்து கேட்டுக் கேட்டுப் புளித்துப் போன காரணங்கள் தான். நமது தமிழ் வலதுசாரிகள் அதை தமது சட்டைப் பைக்குள் எப்போதும் கொண்டு திரிவார்கள். வேறென்ன? இந்தப் பாழாப் போன "சோஷலிசம்" தான் காரணம்! "கிரீஸ் என்றைக்கு சோஷலிச நாடாக இருந்தது?" என்று யாரும் குறுக்குக் கேள்வி கேட்டு விடக் கூடாது.

உலகில் எந்த நாட்டில் பொருளாதாரப் பிரச்சினை வந்தாலும், அதற்கு அடிப்படைக் காரணம் "சோஷலிசமாகத் தானிருக்கும்"! வலதுசாரிகளின் "கண்டுபிடிப்பு" எப்போதும் அப்படித் தானிருக்கும். ஒரு அரசாங்கம், சாதாரண மக்களின் நன்மையை கருத்தில் கொண்டு என்ன செய்தாலும் அது "சோஷலிசம்" தான்! அரசு தனது செலவில், பொது மக்களுக்கான கழிப்பறை கட்டிக் கொடுக்கிறதா? அதுவும் "சோஷலிசம்" தான்! "கண்ட கண்ட இடங்களில் சிறுநீர் கழிப்பதும், மலம் கழிப்பதற்கும் என்ன பெயர்? திறந்த சந்தைப் பொருளாதாரமா?" என்று கேட்டு விடாதீர்கள். வலதுசாரிகளுக்கு பிடிக்காது.

கட்டுரைக்கு வருவோம். 1974 ம் ஆண்டு, "இராணுவ சர்வாதிகார ஆட்சி" முடிந்த பின்னர்... என்று ஆரம்பிக்கிறார். அடடே.... இராணுவ சர்வாதிகாரிகள் வலதுசாரிகளின் கூட்டாளிகள் போலிருக்கிறது. அதனால் தான் "இராணுவ ஆட்சியின் முடிவின் பின்னர்..." பார்க்கச் சொல்கிறார். 

அதற்குப் பின்னர் வந்த ஜனநாயக அரசு, பெருந்தொகை ஓய்வூதியம், அனைவருக்கும் மருத்துவ வசதி, அரசு வேலை வாய்ப்பு, என்று அரசு கஜானாவை காலியாக்கி, பொருளாதாரத்தை பாழ் படுத்தி விட்டதாம். ம்ம்ம்...அப்புறம்... பயணிகளில் இல்லாமல் ஓடிய ரயில்களில் வேலை செய்த ஊழியர்கள் அதிகமாம். இதைத் தானே நமது இந்திய வலதுசாரிகளும் "நேரு சோஷலிசம்" என்று சொல்லிக் கொண்டு திரிகிறார்கள்?

வலதுசாரி "அறிவாளிகளே"! ஒரு பேச்சுக்கு, நீங்கள் சொல்வது போன்று "சோஷலிசம்" தான் கிரேக்க பொருளாதார வீழ்ச்சிக்கு காரணம் என்று வைத்துக் கொள்வோம். எனக்குத் தெரிந்த வரையில், கிரேக்க வயோதிபர்களின் ஓய்வூதியம், என்றைக்குமே ஜெர்மனியில் இன்றிருப்பதை விட அதிகமாக இருந்ததில்லை. பிரிட்டனிலும் அனைவருக்கும் அரசு செலவில் மருத்துவ வசதி செய்து கொடுத்திருக்கிறார்கள். பிரான்ஸ், நோர்வே போன்ற நாடுகளில், பொருளாதாரத்தில் அரசுத் துறை நிறுவனங்களின் பங்கு, கிரீஸில் இருப்பதை விட மிகவும் அதிகம்.

ஸ்கண்டிநேவிய நாடுகளில், இன்றைக்கும் அமுல்படுத்தப்படும் "சோஷலிசத்" திட்டங்களை, கிரீசுடன் ஒப்பிடவே முடியாது. அந்த நாடுகளில் வாழும் மக்கள் அனுபவிக்கும் வசதி வாய்ப்புகள் பலவற்றை, கிரீசில் உள்ளவர்கள் கேள்விப் பட்டிருக்கவே மாட்டார்கள். வலதுசாரி ஆய்வாளர்களின் கணிப்பு சரியாக இருக்குமானால், "சோஷலிச" ஸ்கண்டிநேவிய நாடுகள் தான் முதலில் பொருளாதார வீழ்ச்சி கண்டிருக்க வேண்டும். அப்படி எதுவும் நடக்கவில்லையே?

இப்படியான மொக்கையான கட்டுரைகளுக்கும், முட்டாள்தனமான வாதங்களுக்கும் பதில் கூறிக் கொண்டிருப்பதே நேர விரயம். ஆனால், பாவம் வலதுசாரிகள்! காலங்காலமாக மக்களை ஏமாற்றியவர்கள், இப்போது நடக்கும் பிரச்சினைகளுக்கு காரணம் கூறத் தெரியாமல் முழிக்கிறார்கள். அதனால், நாளைக்கு தமது இருப்பிற்கு பாதிப்பு வந்து விடும் என்ற அச்சத்தில் ஏதோதோ உளறிக் கொட்டுகிறார்கள். 

பொது வாக்கெடுப்பில், பெரும்பான்மை மக்கள் இடதுசாரி சீரிசா அரசின் கொள்கைகளுக்கு ஆதரவாக வாக்களித்திருந்தனர். அதைக் கண்டு மருண்டு போயுள்ள கிரேக்க மேட்டுக்குடி வர்க்கம், விரைவில் கிரேக்கம் சோவியத் யூனியனாகி விடும் என்று பிதற்றிக் கொண்டிருக்கிறார்கள். 

அதே மாதிரித் தான், நமது வலதுசாரிகளின் பிரபல அரசியல் ஆய்வாளரும் கூறுகின்றார்:  "ஆளும் இடதுசாரிக் கட்சியான சீரிசா தலைமையில், கிரீஸ் கிழக்கு ஜெர்மனி போன்று சோஷலிச நாடாகப் போகின்றது..." என்று இந்த எழுத்தாளர் எம்மை எல்லாம் பயமுறுத்துகிறார். "கிரீஸ் நாட்டில், கம்யூனிச டைனோசர் உயிர் பெற்று வருகின்றது." பால்குடிக் குழந்தைகள் நாங்கள் எல்லாம், அதைக் கேட்டு அப்படியே பயந்து விட்டோம். 


கட்டுரையை வாசிப்பதற்கு:
Germany Deserved Debt Relief, Greece Doesn't 
http://www.bloombergview.com/articles/2015-01-27/germany-deserved-debt-relief-greece-doesn-t-i5fdca2y

Sunday, July 05, 2015

IMF, உலகவங்கி ஆதரவில் நடந்த தமிழின அழிப்பு! "தமிழ் தேசியவாதிகள்" இருட்டடிப்பு!


ஈழப்போரின் இறுதியில் நடந்த தமிழின அழிப்பில், அமெரிக்கா, IMF, உலகவங்கி ஆகியவற்றின் பங்களிப்பை பலர் ஆராய்வதில்லை. தாம் மட்டுமே தமிழினத்தின் பாதுகாவலர்கள் என்பது போன்று வேஷம் போடும் போலித் தமிழ் தேசியவாதிகள், அப்படி ஒரு கருதுகோளை கனவிலும் நினைத்துப் பார்ப்பதில்லை. 

தமது அமெரிக்க அடிவருடித்தனத்தை மறைப்பதற்காக, தமிழ் மக்களுக்கு உண்மையை மறைக்கும் அரசியல்வாதிகளும், அரசியல் ஆய்வாளர்களும் இன்றைக்கும் அதைப் பற்றிப் பேசுவதில்லை. எப்படியாவது புலிகளை அழித்தொழிக்க வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டு, IMF ம், உலகவங்கியும் மகிந்த ராஜபக்சவின் சிங்களப் பேரினவாத அரசுக்கு பக்கபலமாக நின்று உதவின. அதற்கான ஆதாரம் தற்போது வெளியாகி உள்ளது.

உலக முதலாளித்துவத்தின் பிரதிநிதிகளான IMF, உலகவங்கி ஆகியன, மிக நீண்ட காலமாகவே இலங்கைக்கு கடன் வழங்கி வந்துள்ளன. ஈழப்போர் மிகத் தீவிரமாக நடந்து கொண்டிருந்த காலங்களிலும், சிறிலங்கா படையினரால் தமிழ் மக்கள் கொன்று குவிக்கப் பட்ட போதிலும், IMF, உலகவங்கி கடன்கள் குறையாமல் வந்து கொண்டிருந்தன. மேற்கத்திய நாடுகளில் இயங்கிய புலி ஆதரவு அமைப்புகள், அந்தக் கடனை நிறுத்துவதற்கு அழுத்தம் கொடுக்க முயற்சித்தன. ஆனால், அவர்களது கோரிக்கைகள் செவிடன் காதில் ஊதிய சங்காகியது.

IMF, உலகவங்கி மட்டுமல்ல, எந்தவொரு மேற்கத்திய நாடும், இலங்கை அரசுக்கு வழங்கிய கடனில் ஒரு ரூபாய் கூட குறைக்க முன்வரவில்லை. விதிவிலக்காக சில நாடுகள் நடந்து கொண்டாலும், அது வர்த்தக நோக்கில் சிறிலங்கா அரசுக்கு அழுத்தம் கொடுப்பதாகவே அமைந்துள்ளது. அதாவது, இலங்கையில் நடக்கும் மனித உரிமை மீறல்களை காரணமாகக் காட்டி, கடன் "உதவியை" நிறுத்தப் போவதாக பயமுறுத்தின. அதன் மூலம், அரசு நிறுவனங்களை தனியாரிடம் கொடுப்பதற்காக திரை மறைவில் பேரம் பேசப் பட்டது. அதைத் தவிர, எந்த நடவடிக்கையும் தமிழ் மக்கள் சார்பாக அமையவில்லை.

2009 ம் ஆண்டு, இறுதிப்போர் நடந்து கொண்டிருந்த காலத்தில், அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட்ட ஹிலாரி கிளிண்டன், இலங்கைக்கான IMF கடனை நிறுத்தும் முயற்சியில் இறங்கி இருக்கிறார். அப்போது வன்னியில் நடந்து கொண்டிருந்த, ஆயிரக் கணக்கான அப்பாவி மக்களை பலி கொண்ட போரின் கொடுமைகளை கண்டதால், ஹிலாரி அப்படி ஒரு யோசனையை முன்வைத்திருக்கலாம். அன்றைய அமெரிக்க நிதித்துறை துணை அமைச்சர் Timothy Franz Geithner உடனான உரையாடலில் அது தெரிவிக்கப் பட்டுள்ளது.

ஹிலாரியின் யோசனையை, IMF மிகக் கடுமையாக கண்டித்திருக்கும் என்பது, IMF வரலாறு தெரிந்தவர்களுக்கு வியப்புக்குரிய விடயம் அல்ல. உலக நாடுகளில் நடந்த, நடந்து கொண்டிருக்கும், பல உள்நாட்டுப் போர்களிலும், இனப்படுகொலைகளிலும் IMF நேரடியாகவோ, அல்லது மறைமுகமாகவோ பங்களித்துள்ளது. ஹிலாரி கிளிண்டனின் மூத்த ஆலோசகர் Burns Strider அனுப்பிய மின்னஞ்சல் அதைத் தான் நிரூபிக்கின்றது. அண்மையில் அமெரிக்க அரசினால் பகிரங்கப் படுத்தப் பட்டுள்ள ஹிலாரி கிளிண்டனின் மின்னஞ்சல்களில் அது கண்டுபிடிக்கப் பட்டது.

ஹிலாரி கிளிண்டனுக்கான மின்னஞ்சலில், அவரது ஆலோசகர் Burns Strider பின்வருமாறு எழுதியுள்ளார்: "புலிகள் முற்றுமுழுதாக தோற்கடிக்கப் பட வேண்டும் என்றே IMF, உலகவங்கியில் உள்ளவர்கள் நம்புகிறார்கள். அதற்கான நடவடிக்கையில், மகிந்த ராஜபக்ச அரசினால் ஏற்படுத்தப்படும் மனித அழிவுகள் ஏற்றுக் கொள்ளத் தக்கவை தான்!"

இதற்குப் பிறகும், "அமெரிக்காவும், மேற்கத்திய நாடுகளும், தமிழ் மக்களுக்கு ஐ.நா.வில் தமிழீழம் வாங்கித் தரப் போகின்றன..." என்று சொல்லிக் கொண்டு திரியும் அமெரிக்க விசுவாசிகள், உண்மையில் தமிழ் மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள். அப்படியானவர்கள், தம்மை "தமிழ் இன உணர்வாளர்கள்" என்று கூறிக் கொண்டாலும், அவர்கள் உண்மையில் "டாலர் பண உணர்வாளர்கள்".

அதனால் தான், அரசியல் விழிப்புணர்வு பெற்ற தமிழ் மக்கள் அவர்களை "போலித் தமிழ் தேசியவாதிகள்" என்று அழைக்கிறார்கள். ஒரு பக்கம் தமிழ் தேசியம் பேசிக் கொண்டே, மறுபக்கம் தமிழினப் படுகொலையில் பங்களித்த அமெரிக்காவையும், IMF யும் ஆதரிப்பவர்களை வேறெப்படி அழைக்க முடியும்?

ஹிலாரி கிளிண்டனுக்கு Burns Strider அனுப்பிய மின்னஞ்சல் இது:

From: Bums Strider
To: H
Sent: Mon May 04 09:36:17 2009
Subject: Some intel for you...

This is about Sri Lankan Govt and the Tigers... I have a good source. This was shared to me at my and Karen's Derby Party yesterday (can you believe the 50 to 1 odds winner?).

There was a meeting held with Geitner asked for and led by IMF... They told him you were intruding into his domain by ordering/telling IMF to suspend funding to Sri Lakan Govt.

UNCLASSIFIED
U.S. Department of State Case No. F-2014-20439
Doc No. C05761169
Date: 06/30/2015

My take is that the people on the ground both with World Bank and IMF believe the Tigers need to be completely defeated and any collateral damage inflicted on private people by SL govt in process is ok... They also believe Tigers are better at propaganda than SL govt...

I have no idea what reality is... I know all about the conflict because there's been so much written over time but no idea of reality on ground.

My point is that IMF/World Bank is hoping to get Geitner to intervene and they recently played to his sense of who is US point person on IMF... So, that's what I know. I'll keep my ears open.



இதனுடன் தொடர்புடைய முன்னைய பதிவுகள்: