Tuesday, July 22, 2014

சோஷலிச போலந்தின் வீழ்ச்சிக்கு காரணமான முதலாளித்துவ சீர்திருத்தங்கள்


கிழக்கு ஐரோப்பாவில் இருந்த முன்னாள் சோஷலிச நாடுகளில், முதன்முதலாக போலந்து தான் மேற்கத்திய பாணி முதலாளித்துவ ஜனநாயகத்திற்கு மாறியது. அப்போது பெர்லின் மதிலும், சோவியத் ஒன்றியமும் வீழ்ச்சி அடையவில்லை. 

2 ம் உலகப் போரின் முடிவில், போலந்து சோஷலிச நாடாக பிரகடனம் செய்து கொண்டாலும், சோஷலிச பொருளாதாரம் முழுமையாக நடைமுறைப் படுத்தப் படவில்லை. தேவாலயங்கள் மூடப் படவில்லை. கத்தோலிக்க மதகுருக்களுக்கு அரசை எதிர்த்து பிரச்சாரம் செய்யும் சுதந்திரம் இருந்தது. 

போலந்தில், எழுபதுகளிலேயே மேற்கத்திய மூலதனம் நுளைவதற்கு அனுமதிக்கப் பட்டது. உலகவங்கி, IMF கடனுதவியை பெற்றுக் கொண்டது. மேற்கத்திய முதலாளிகளின் ஆலோசனைப் படி பொருளாதார சீர்திருத்தங்களை புகுத்தியது. அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசி உயர்ந்தது. இறுதியில் தொழிலாளர்களின் வேலை நிறுத்தப் போராட்டம் காரணமாக, போலி சோஷலிச அரசாங்கம் கவிழ்ந்தது. 

முன்னாள் "சோஷலிச" நாடான போலந்திற்குள் நடந்த முதலாளித்துவ மீட்சி பற்றி எந்த அறிவும் இல்லாதவர்கள், அதனை "கம்யூனிசத்தின் தோல்வியாக" நம்பிக் கொண்டிருக்கிறார்கள். இருபதாம் நூற்றாண்டின் போலந்து வரலாற்றை ஆய்வு செய்வதன் மூலம் தான் உண்மையை அறிந்து கொள்ள முடியும்.

முதலாம் உலகப் போருக்கு முன்னர், சுமார் நூறாண்டுகள் போலந்து இரண்டு வல்லரசுகளுக்கு இடையில் பிரிக்கப் பட்டிருந்தது. மேலெழுந்தவாரியாக பார்க்கும் பொழுது, போலந்து ஒரு மேற்கத்திய சார்பு நாடாகத் தெரியும். இன்று எல்லா கிழக்கு ஐரோப்பிய நாடுகளிலும் போலந்து மக்கள் தான் அதிகளவு அமெரிக்கா சார்பானவர்களாக இருக்கின்றனர். 

கடந்த நூறாண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து கொண்டிருக்கும் மேற்கு நோக்கிய புலம்பெயர்வு ஒரு முக்கிய காரணம். எமது நாடுகளிலும், மேலைத்தேய பணக்கார நாடுகளுக்கு புலம்பெயர்ந்தால் செல்வம் சேர்க்கலாம் என்ற எண்ணம், பலரை மேற்குலக ஆதரவளர்களாக மாற்றி வைத்திருக்கிறது. போலந்திலும் அது தான் நிலைமை.

19 ம் நூற்றாண்டில் தான் ஐரோப்பிய கண்டத்தில் தேசிய அரசுகள் தோன்றின. நெப்போலியனின் போருக்கு பின்னர், பல தடவைகள் பலமான ஐரோப்பிய நாடுகள் ஒன்று கூடி, புதிய எல்லைகளை வகுத்துள்ளன. அப்படியான தருணங்களில், போலந்து தனி நாடாகும் வாய்ப்புக் கிட்டும் என்று போலிஷ் தேசியவாதிகள் எதிர்பார்த்தார்கள். இறுதியில் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அந்த வாய்ப்புக் கிட்டியது. 

ரஷ்யாவின் ஆக்கிரமிப்பின் கீழ் இருந்த போலந்து பகுதி தான் முதலில் தன்னாட்சி அதிகாரத்தை பெற்றுக் கொண்டது. ரஷ்யாவில் போல்ஷெவிக் புரட்சி வென்றதும், லெனின் போலந்துக்கு முழுமையான சுதந்திரம் வழங்கினார். ஆயினும், போல்ஷெவிக் புரட்சியாளர்கள், வெள்ளை ரஷ்யர்கள், உக்ரைனியர்கள் வாழ்ந்த பகுதிகளை சோவியத் ஒன்றியத்துடன் சேர்த்துக் கொண்டார்கள்.

போலந்துக்கு தன்னாட்சி அதிகாரம் கிடைத்த முதல் நாளில் இருந்து, அங்கே இராணுவ சர்வாதிகாரிகள் தான் ஆட்சி செய்தனர். இன்று மூன்றமுலக நாடுகளில் நடப்பதைப் போல, சதிப்புரட்சிகள் நடப்பதும், புதிய இராணுவ சர்வாதிகாரிகள் அதிகாரத்தை கைப்பற்றுவதுமாக சில வருடங்கள் உருண்டோடின. முதலாம் உலகப் பொறுக்கும், இரண்டாம் உலகப் பொறுக்கும் இடைப்பட்ட இருபது வருட காலம் மட்டுமே, பல கட்சி ஜனநாயகம் நிலவியது. 

அப்போது ஒரு போலிஷ் கம்யூனிஸ்ட் கட்சியும் இயங்கியது. ஆனால், நாஸி ஆக்கிரமிப்புடன் அது காணாமல் போய் விட்டது. இரண்டாம் உலகப் போருக்கு பின்னர், செம்படைகள் விடுதலை செய்த போலந்தில் உருவான சோஷலிச அரசின் அடித்தளம் மொஸ்கோவில் இடப் பட்டது. அதாவது, மொஸ்கோவில் புலம்பெயர்ந்து வாழ்ந்த போலிஷ் கம்யூனிஸ்ட் அகதிகள் மத்தியில் இருந்து புதிதாக உருவாக்கப் பட்டிருந்தது.

ஆரம்பத்தில், கொமுல்கா தலைமையிலான பிரிவினர், “தேசிய கம்யூனிசம்” என்ற புதிய கொள்கையின் கீழ் ஆண்டனர். அதாவது, சோவியத் ஒன்றியம் சொல்வதற்கு எல்லாம் தலையாட்டாமல், சுதந்திரமாக முடிவுகளை எடுக்கக் கூடிய தலைமையை கொண்டிருந்தது. அப்போதும் சோவியத் படைகள் போலந்தில் இருந்தன. வார்சோ ஒப்பந்த கூட்டமைப்பு உருவாகி இருந்தது. ஆயினும், சோவியத் ஒன்றியம் போலந்தின் உள் விவகாரங்களில் பெரிதாக தலையிடவில்லை. இருப்பினும், ஸ்டாலினின் கொள்கைகளுக்கு ஆதரவான ஒரு பிரிவினர், கொமுல்காவை வீட்டுக் காவலில் வைத்து விட்டு சில வருட காலம் ஆண்டனர்.

போலந்து, வெளியில் இருப்பவர்கள் நினைத்தது மாதிரி, ஒரு முழுமையான சோஷலிச நாடாக இருக்கவில்லை. சோவியத் ஒன்றியத்தில் இருந்தது மாதிரி, கூட்டுத்துவ பண்ணை முறை (Collectivization) எங்கேயும் நடைமுறைப் படுத்தப் படவில்லை. விவசாயம் முழுக்க முழுக்க தனியாரின் கைகளில் இருந்தது. அதாவது, விவசாய நிலங்கள், பண்ணைகள் யாவும் அந்தந்த பகுதிகளில் வாழ்ந்த சிறு விவசாயிகளின் சொந்த சொத்துக்களாக தொடர்ந்தும் இருந்து வந்தன.

சோஷலிச போலந்தில், பெரிய தொழிற்துறை நிறுவனங்கள் மட்டுமே தேசிய மயப் படுத்தப் பட்டன. ஆரம்பத்தில் அது ஜெர்மனியருக்கு எதிரான நடவடிக்கை என்று நியாயப் படுத்தப் பட்டது. இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர், ஜெர்மனியின் கிழக்குப் பகுதிகள் போலந்துக்கு தாரை வார்க்கப் பட்ட விடயம் அனைவரும் அறிந்ததே. அங்கு வாழ்ந்த ஜெர்மனியர்கள் அனைவரும் வெளியேற்றப் பட்டனர். பெரிய தொழிற்துறை நிறுவனங்கள் யாவும் ஜெர்மன் முதலாளிகள் வசம் இருந்த படியால், அவை அனைத்தையும் போலந்து அரசு எடுத்துக் கொண்டது. இருப்பினும், பிற்காலத்தில் படிப் படியாக, போலந்து முழுவதும் இருந்த தொழில் நிறுவனங்கள் அத்தனையும் அரசுடமை ஆக்கப் பட்டன.

கத்தோலிக்க மத நிறுவனம், எப்போதும் அரசுக்குப் போட்டியாகவே இருந்து வந்தது. இயல்பாகவே வலதுசாரி அரசியல் சார்பான கத்தோலிக்க குருமாரை வழிக்குக் கொண்டு வர முடியவில்லை. போலந்து சோஷலிச நாடாக இருந்த நாற்பது வருட காலங்களில் ஒரு தடவையாவது ஒரு தேவாலயம் கூட மூடப் படவில்லை. ஆயினும், அரசு இடைக்கிடையே நாஸ்திக பிரச்சாரம் செய்பவர்களை தூண்டி விட்டது. “முற்போக்கு கத்தோலிக்கர்கள்” என்றொரு சமூகப் பிரிவை உருவாக்கி விட்டது. அந்த முற்போக்காளர்கள் நவ நாகரிகத்தை பின்பற்றிய இளைஞர் கூட்டம் தான். (இன்று சர்வ சாதாரணமாக கருதப் படும் ஐரோப்பிய நாகரிகம், அன்றைக்கு பெரும் எதிர்ப்பின் மத்தியில் திணிக்கப் பட்டது.)

அறுபதுகளில், எழுபதுகளில் ஏற்பட்ட வசதி வாய்ப்புகள் காரணமாக வாழ்க்கைத் தரம் உயர்ந்தது. அதன் பலனாகத் தான் மக்களையும், தேவாலயங்களையும் பிரிக்க முடிந்தது. அரசின் கொள்கைகளில் பெருமளவு மக்கள் ஆர்வம் காட்டவில்லை. அவர்கள் தமது மதகுருக்கள் சொல்வதைக் கேட்டார்கள். இன்று, சில முஸ்லிம் நாடுகளில், இஸ்லாமிய மதத் தலைவர்கள் மக்களைக் கவரும் வகையில் பேசி வருவதைப் போன்று, அன்றைய கத்தோலிக்க மதத் தலைவர்கள் பேசி வந்தனர். உண்மையில், அன்றைய போலந்தில் இருந்த தேவாலயங்கள் எதிர்க் கருத்தாளர்களின் கூடாரங்களாக இருந்தன.

கத்தோலிக்க பாதிரிமார், மதப் பிரசங்கங்களை விட, அரசியல் பிரச்சாரம் செய்வதிலேயே அதிக ஆர்வம் காட்டினார்கள். போலந்தின் தலைமை பிஷப், ஒரு எதிர்க் கட்சித் தலைவர் போன்று நடந்து கொண்டார். அரசால் அவரை ஒன்றும் செய்ய முடியவில்லை. போதாததற்கு, வத்திக்கானில் ஒரு போலந்துக்காரர் புதிய போப்பாண்டவராக தெரிவு செய்யப் பட்டார். ஜான் பால் என்ற அந்த போலிஷ் போப்பாண்டவர், இரண்டு தடவைகள் போலந்துக்கு விஜயம் செய்தார். இலட்சக் கணக்கான மக்கள் முன்னிலையில், இரட்டை அர்த்தம் வரும் வசனங்களை பேசி, சாடைமாடையாக கம்யூனிஸ்ட் அரசுக்கு எதிராக அரசியல் பேசினார்.

கத்தோலிக்க திருச் சபையின் செல்வாக்கு, சோஷலிச போலந்தின் வீழ்ச்சிக்கு ஒரு காரணம் மட்டுமே. குறிப்பாக அறிவுஜீவிகள் தேவாலயங்களை புகலிடமாகப் பயன்படுத்தி வந்தனர். இருப்பினும், இன்னொரு சக்தியும், அரசுக்கு எதிராக செயற்பட்டு வந்தது. துறைமுக நகரமான கிடான்ஸ்கில் தோன்றிய “சொலிடாரிநொஸ்க்” என்ற தொழிற்சங்கம் தான் அது. தொழிலாளர்களின் சொர்க்கமாக கருதப் படும் ஒரு சோஷலிச நாட்டில், தொழிற்சங்கம் அரசைக் கவிழ்த்தது என்பது முரண்நகையாக தெரியலாம். ஆனால், அப்படி ஒரு கிளர்ச்சி இயக்கம் தோன்றுவதற்கு ஏதுவாக இருந்த பொருளாதாரக் காரணிகளை பலர் நினைவு படுத்துவதில்லை.

குறிப்பாக ஸ்டாலினின் மறைவுக்குப் பின்னர், பல முன்னாள் சோஷலிச நாடுகளில் பொருளாதார மாற்றங்கள் ஏற்பட்டன. போலந்தில் அறுபதுகள், எழுபதுகளிலேயே முதலாளித்துவம் அனுமதிக்கப் பட்டிருந்தது! ஆமாம், முதலாளிகளின் அதிகாரம் அங்கு இருக்கவில்லை. ஆனால், ஒரு சோஷலிச அரசு, போலந்தில் முதலாளித்துவ பொருளாதாரத்திற்கு சுதந்திரம் வழங்கியது. அதற்கு முதல், மேற்கத்திய நாடுகளிடம் இருந்து நிறைய கடன் பெற்றுக் கொண்டது. 

அவர்கள் விதித்த நிபந்தனையை ஏற்று, மேலைத்தேய முதலாளிகள் போலந்தில் முதலிட அனுமதி வழங்கியது. அது மட்டுமல்ல, அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கு வழங்கிய மானியங்களை இரத்து செய்தது. அதனால், உணவுப் பொருட்களின் விலைகள் திடீரென நான்கு மடங்காக உயர்ந்தன. விலைவாசி உயர்வுக்கு ஏற்றவாறு தொழிலாளர்களின் சம்பளம் உயரவில்லை. அதன் விளைவு? தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்தனர். அவ்வாறு தான் “சொலிடாரிநொஸ்க்” என்ற தொழிற்சங்கம் தோன்றியது.

போலந்து அரசால் “சொலிடாரிநொஸ்க்” கின் வளர்ச்சியை கட்டுப்படுத்த முடியவில்லை. ஏனெனில், முதலாளித்துவ சீர்திருத்தம் காரணமாக ஏற்பட்ட பொருளாதார பிரச்சினைகளின் எதிர் விளைவு தான் தொழிற்சங்கப் போராட்டம். முன்னாள் இராணுவ ஜெனரலான ஜெருசெல்ஸ்கி திடீரென ஒரு சதிப்புரட்சியை நடத்தினார்.நகரத் தெருக்களில் இராணுவ கவச வாகனங்கள் ஓடின. எங்கு பார்த்தாலும் இராணுவத்தினர் குவிக்கப் பட்டனர். அவசர காலச் சட்டம் பிரகடனம் செய்யப் பட்டது. அரச எதிர்ப்பாளர்கள் சிறைகளில் அடைக்கப் பட்டனர்.

பிற்காலத்தில், அந்த சதிப்புரட்சியை ஜெருசெல்ஸ்கி பின்வருமாறு நியாயப் படுத்தினார். “அன்று ஒரு சதிப்புரட்சி நடந்திரா விட்டால், சோவியத் ஒன்றியம் படையெடுத்து வந்திருக்கும். அப்போது அதன் எதிர்விளைவுகள் பயங்கரமாக இருந்திருக்கும்….” ஆனால், சோவியத் யூனியனின் உடைவின் பின்னர் கிடைத்த அறிக்கைகளின் படி, அப்படி ஒரு “சோவியத் படையெடுப்பு” நடந்திருக்க வாய்ப்பில்லை என்று தெரிய வந்தது. அன்றைய போலிஷ் ஆளும் வர்க்கம், தனது அதிகாரத்தை தக்க வைக்க செய்த திட்டமாகவே அந்த சதிப்புரட்சி கருதப் படுகின்றது.

ஏனெனில், போலிஷ் அரசுக்கு எதிர்ப்பு பல இடங்களிலும் உருவாகி இருந்தது. கத்தோலிக்க சபை, அறிவுஜீவிகள், தொழிற்சங்கம் போன்ற வலதுசாரி சக்திகள் மட்டுமே வெளியுலகத்திற்கு தெரியும். கம்யூனிஸ்ட் கட்சிக்குள்ளும் ஒரு பிரிவு எதிர் அரசியல் செய்து கொண்டிருந்தது. அவர்கள் “நவ - ஸ்டாலினிஸ்டுகள்” என்று அழைக்கப் பட்டனர். அதாவது, முன்பிருந்த ஸ்டாலினின் அரசியல் - பொருளாதாரக் கொள்கைகள் தான் சரியான சோஷலிசம் என்று நம்பியவர்கள். அவர்களை ஓரம் கட்ட வேண்டிய தேவையும், ஜெருசெல்ஸ்கி போன்ற சதிப்புரட்சியாளர்களுக்கு இருந்தது.

இறுதியில், சோவியத் ஒன்றியத்தில் கோர்பசேவ் அதிகாரத்தை கைப்பற்றியதும், போலந்து திரிபுவாதிகள் அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டார்கள். இனிமேல் போலந்து வெளிப்படையாகவே முதலாளித்துவ - ஜனநாயக நாடாக இருக்க முடியும் என்பதை உணர்ந்து கொண்டனர். முன்னாள் சோஷலிச கிழக்கு ஐரோப்பிய நாடுகளில், போலந்தில் தான் முதன் முதலாக பல கட்சிகள் கலந்து கொண்ட பொதுத் தேர்தல் இடம்பெற்றது. 

1989 ம் ஆண்டு, அதாவது பெர்லின் மதில் வீழ்வதற்கு சில மாதங்களுக்கு முன்னராகவே, போலந்தில் ஆட்சி மாற்றம் நடந்துள்ளது. முன்பு சோஷலிச அரசாங்கத்தை நடத்திய திரிபுவாத கம்யூனிஸ்ட் கட்சியினர், பொதுத் தேர்தலில் சமூக - ஜனநாயகக் கட்சி என்ற பெயரில் போட்டியிட்டனர்.

போலந்தின் முன்னாள் கம்யூனிஸ்ட் கட்சியான, இந்நாள் சமூக - ஜனநாயகக் கட்சி, இன்றைக்கும் பெரும்பான்மைக் கட்சிகளில் ஒன்றாக இயங்கிக் கொண்டிருக்கிறது. சில தடவைகள் தேர்தலில் வென்று ஆட்சியையும் பிடித்துள்ளது. ஆனால், உண்மையில் அதனை மேற்கு ஐரோப்பிய கட்சிகளுடன் தான் ஒப்பிட முடியும். உதாரணத்திற்கு, பிரிட்டனின் லேபர் கட்சி போன்றது.

இருப்பினும், முன்னாள் “கம்யூனிச ஆட்சியாளர்களுக்கும்”, முன்னாள் “எதிர்ப் புரட்சியாளர்களுக்கும்” இடையிலான பிளவு, அடுத்து வந்த இருபது வருடங்களுக்கும் தொடர்ந்து இருந்தது. அது இரண்டு ஆளும் வர்க்கங்களுக்கு இடையிலான பிரச்சினை மட்டுமே. பெரும்பான்மை போலிஷ் மக்கள், தாம் அன்றாடம் எதிர்நோக்கும் பொருளாதாரப் பிரச்சினைகள் குறித்து மட்டுமே கவலைப் படுகிறார்கள்.

இதனோடு தொடர்புடைய முன்னைய பதிவு:

1 comment:

Vel Tharma said...

பயனுள்ள படிக்க வேண்டிய பதிவு