Wednesday, January 26, 2011

எகிப்தில் மக்கள் எழுச்சி! துனிசிய புரட்சியின் எதிரொலி!!

"ஊழல், வேலையில்லாப் பிரச்சினை, விலைவாசி உயர்வு, இவற்றை எதிர்த்தே போராட்டத்தில் குதித்துள்ளேன். எமது சிறிய கனவுகளைத் தான் கேட்டுப் போராடுகிறோம்." - கெய்ரோ ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட 26 வயது இளைஞனான ரத்வா கபாணி.

எகிப்தில் முபாரக்கின் முப்பதாண்டு கால சர்வாதிகார ஆட்சி முடிவுக்கு வருகின்றதா? ஜனவரி 25 ம் தேதி, எகிப்தில் "தேசிய போலிஸ் தினம்" என்பதால், அன்று விடுமுறை. ஆயிரக்கணக்கான மக்கள் வீதியில் இறங்கி அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர். தலைநகர் கெய்ரோவில் மட்டுமல்லாது, அலெக்சாண்ட்ரியா போன்ற பிற நகரங்களிலும் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றன. எகிப்தில் பல தசாப்தங்களாக, இந்தளவு மக்கள் கலந்து கொண்ட ஆர்ப்பாட்டம் எதுவும் இடம்பெறவில்லை. கலவரத் தடுப்பு போலிசின் பிரசன்னத்தைக் கண்டு அஞ்சாமல், மக்கள் ஆக்ரோஷமாக போராடினார்கள். ஆர்ப்பாட்டத்தைக் கலைக்க தண்ணீரை பீச்சியடித்த வாகனம் ஒன்றைக் கூட கைப்பற்றினார்கள். சில இடங்களில் போராடும் மக்களுடன் மோத முடியாது போலிஸ் பின்வாங்கியது. இருப்பினும் போலிஸ் தாக்குதலில் மூன்று பேர் கொல்லப்பட்டனர். முப்பது பேர் கைது செய்யப்பட்டனர்.

துனிசியாவில் நடந்த புரட்சி, எகிப்திய மக்களையும் எழுச்சி கொள்ள வைத்தது. "துனிசிய மாதிரி", எகிப்திலும் பின்பற்றப்பட்டது. பேஸ்புக் மூலம் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடப்பட்டது. சுமார் 90000 பேர் கலந்து கொள்வதாக தெரிவித்தனர். தற்போது எகிப்தில், டிவிட்டர் இணையத்தளம் முடக்கப்பட்டுள்ளது. துனிசியாவில் முகம்மது வுவாசி என்ற வேலையற்ற இளைஞனின் தீக்குளிப்பு மக்கள் எழுச்சிக்கு வித்திட்டது. அதே போன்று ஒரு மாதத்திற்கு முன்னர் போலிஸ் வன்முறைக்கு பலியான காலித் சைத் என்ற இளைஞனின் மரணம் எகிப்தியர்களை எழுச்சியுற வைத்தது. காலித் சைத் போலிசின் அத்துமீறல் வீடியோவை இணையத்தில் வெளியிட்டதால், பொலிசாரால் கொல்லப்பட்டதாக மக்கள் நம்புகின்றனர். காலித் சைத் போதைப்பொருள் உட்கொண்டதால் மரணமுற்றதாக போலிஸ் சோடித்த கதையை யாரும் நம்பவில்லை. மனித உரிமை நிறுவனங்களின் வற்புறுத்தலால், அரசே சம்பந்தப்பட்ட போலீசாரை கைது செய்து வழக்கு தொடுத்தது. மக்களை போராட்டத்திற்கு தள்ளிய காரணிகளில் போலிஸ் அராஜகமும் ஒன்று.

எகிப்தின் என்பது மில்லியன் சனத்தொகையில் அரைவாசிப் பேர் வறுமையில் வாடுகின்றனர். அவர்களது நாளாந்த வருமானம் இரண்டு டாலர் என்று ஐ.நா. அறிக்கை ஒன்று தெரிவிக்கின்றது. வேலையில்லாப் பிரச்சினை, தரமற்ற கல்வி, ஏழைகளை எட்டாத மருத்துவம் போன்ற குறைபாடுகளால் தமது அடிப்படை தேவைகள் பறிக்கப்பட்டதை எகிப்தியர்கள் உணர்கின்றனர். சர்வதேச சந்தையில் உணவுப்பொருட்களின் விலையேற்றம் எகிப்தையும் பாதித்துள்ளது.
விலைவாசி உயர்வால் பாதிக்கப்பட்ட அடித்தட்டு மக்கள் அடிக்கடி கலவரத்தில் ஈடுபடுகின்றனர். துனிசியாவில் நடந்ததைப் போல, பெரும்பான்மை மக்களின் தார்மீகக் கோபம் அரசுக்கு எதிராக திரும்பியுள்ளது. துனிசிய சர்வாதிகாரியை வீழ்த்திய மக்கள் புரட்சியின் பின்னர், உலகெங்கும் கொடுங்கோல் ஆட்சியாளர்கள் அச்சத்தில் உறைந்து போயுள்ளனர். "எமக்கு உணவும், சுதந்திரமும், ஜனநாயகமும் வேண்டும். தேசத்திற்காக உயிரையும் கொடுப்போம்." போன்ற கோஷங்களை எழுப்பும் மக்கள், சர்வாதிகாரம் வீழும் வரை போராட்டத்தை தொடரப் போவதாக சூளுரைக்கின்றனர். முப்பதாண்டு காலம் தேசத்தை பாழாக்கிய சர்வாதிகாரியின் முன்னாள் ஒரேயொரு தெரிவு மட்டுமே உள்ளது. "முபாரக், உனக்காக விமானம் காத்துக் கொண்டிருக்கிறது!"
எகிப்திய மக்கள் எழுச்சியை பேஸ்புக்கில் பின்தொடர்வதற்கு இந்த சுட்டியை சொடுக்கவும்.
We are all Khaled Said
ஆர்ப்பாட்டங்களை காட்டும் வீடியோக்கள் இணைக்கப்பட்டுள்ளன:
Chasing the Egyptian riot police

கெய்ரோ நகரின் மையப் பகுதியான Tahrir சதுக்கத்தில் போலிஸ் வாகனத்தை தடுக்கும் ஆர்ப்பாட்டக்காரர்கள்.

Sunday, January 23, 2011

துனிசிய மக்கள் புரட்சியின் படிப்பினைகள்

"குறிப்பாக ஒடுக்கப்பட்ட அரபு மக்களுக்கும், முழு உலகிற்கும் துனிசிய மக்கள் ஒரு செய்தியை தெரிவிக்க விரும்புகின்றனர். எவரிடமிருந்தும் எதனையும் எதிர்பார்க்காதீர்கள். எல்லாமே உங்களிடம் உண்டு. மனதையும், சக்தியையும் முடமாக்கும் அச்சத்தில் இருந்து விடுபட்டு மேலெழுந்து வாருங்கள்."
- ஒரு துனிசிய பதிவர்

துனிசிய புரட்சி ஒன்றுமில்லாத இடத்தில் இருந்து எழவில்லை. வெறும் கலவரங்கள் மட்டும் புரட்சியை தோற்றுவிப்பதில்லை. காட்டுத்தீ பரவுவதற்கு காய்ந்த மரங்களும், வெப்பநிலை அதிகரிப்பும் காரணமாக இருந்திருக்கும். அத்தகைய அகவய, புறக் காரணிகள் நமது கண்களுக்கு தெரிவதில்லை. துனிசிய மக்களின் எழுச்சியையும், பி.பி.சி. போன்ற சர்வதேச ஊடகங்கள் நீண்ட காலமாக இருட்டடிப்பு செய்து வந்தன. அதனால் தமிழிலும் அது குறித்த ஆய்வுகள் எதுவும் இல்லை. தகவல்கள் கூட குறைவாகவே ஊடகங்களில் தெரிவிக்கப்பட்டன. துனிசிய புரட்சியில் இருந்து பெற்ற படிப்பினைகளை, தமிழ் உழைக்கும் மக்களுக்கு கொண்டு சென்று சேர்க்கும் வரலாற்றுக் கடமை எமக்குண்டு. துனிசிய புரட்சி எவ்வாறு சாத்தியமாகிற்று? எத்தகைய அரசியல் சக்திகள் வழிநடத்தின? அது ஒரு பாட்டாளி வர்க்கப் புரட்சியா? பிரான்ஸ் போன்ற ஏகாதிபத்திய நாடுகள் ஏன் தலையிடவில்லை?

முதலில் துனிசிய மக்கள் எழுச்சி பற்றிய செய்திகள், ஏன் இவ்வளவு காலதாமதமாக நமக்கு வந்து சேர்ந்தன என்று பார்ப்போம். ஒரு மாதத்திற்கு முன்பு வரை, மக்கள் எழுச்சியினால் துனிசிய ஜனாதிபதி பென் அலி நாட்டை விட்டு தப்பியோடுவார், என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. நீண்ட காலமாக, துனிசியா எந்தவிதமான உள்நாட்டுப் பிரச்சினைகளுமற்ற ஸ்திரமான ஆட்சியைக் கொண்ட நாடாக அறியப்பட்டது. அயல்நாடுகளில் நடந்த அசம்பாவிதம் எதுவும் துனிசியாவில் நடக்கவில்லை. மத அடிப்படைவாதிகளுக்கு எதிரான போர், குண்டுவெடிப்பு, எதுவுமே இன்றி துனிசியா அமைதிப்பூங்காவாக காட்சியளித்தது. டிசம்பர் 17 , "சிடி புசிட்" என்ற சிறிய நகரத்தில், முஹமட் புவாசிசி என்ற இளைஞன் தீக்குளித்து மரணமடைந்தான். ஜனவரி 14 , ஜனாதிபதி பென் அலி நாட்டை விட்டு தப்பியோடினார். இடைப்பட்ட ஒரு மாத காலத்தில் நடந்த மாற்றங்கள் தாம், அரபுலகின் முதலாவது மக்கள் புரட்சிக்கு வழிவகுத்தது.

பென் அலியின் வெளியேற்றத்திற்கு ஒரு சில நாட்களுக்கு முன்னர் இருந்து தான் பி.பி.சி. துனிசியா பக்கம் கவனத்தை திருப்பியது. அது வரையில் அல்ஜசீரா மட்டுமே செய்தி தெரிவித்துக் கொண்டிருந்தது. துனிசியாவின் பெரு நகரங்களில் லட்சக்கணக்கான மக்கள் பங்குபற்றிய ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றன. கடந்த ஒரு மாத காலமாக, நாட்டின் பல பாகங்களிலும், தினசரி அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் நடந்து கொண்டிருந்தன. ஆர்ப்பாட்டம் செய்தவர்கள் மீது போலிஸ் சுட்டது. குறைந்தது பத்துப் பேராவது மரணமடைந்தனர். மரணமடைந்தோர் எண்ணிக்கை என்பது என்று, ஊர்ஜிதப் படுத்தப் படாத தகவல்கள் தெரிவிக்கின்றன. வலைப்பதிவுகளில் எழுதிக் கொண்டிருந்த பதிவர்கள் பலர் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த செய்திகள் எதுவுமே வெளியுலகத்தை எட்டவில்லை. சர்வதேச ஊடகங்கள் அத்தனை கரிசனையுடன் நடந்து கொண்டன.

சர்வதேச ஊடகங்களின் மௌனத்திற்கு காரணம், இது மேற்குலகின் நிகழ்ச்சிநிரலின் படி நடக்கவில்லை என்பது தான். ஈரானில் தேர்தல் முடிவுகளை எதிர்த்து மாணவர்கள் நடத்திய ஆர்ப்பாட்டங்களுக்கு, மேற்குலக ஊடகங்களில் இரட்டிப்பு முக்கியத்துவம் அளிக்கப்பட்டன. போலிஸ் துப்பாக்கிச் சூட்டில் ஒரு மாணவி கொல்லப்பட்டதும், அந்த மாணவியின் இரத்தம் தோய்ந்த முகம் அனைத்து பத்திரிகைகளின் முதல் பக்கத்தில் பிரசுரமானது. மேற்குலக தலைவர்கள், கண்டனத்திற்கு மேல் கண்டனங்களை விடுத்துக் கொண்டிருந்தார்கள். துனிசிய சம்பவங்களை யாரும் அந்தளவு கவனம் எடுத்து பொருட்படுத்தியதாக தெரியவில்லை. பென் அலி தப்பியோடிய விமானம் மேலெழும் வரையில், அமெரிக்க அரசு வாய் திறக்கவில்லை. மிகவும் தாமதமாகத் தான் வாஷிங்டனில் இருந்து அறிக்கை வந்தது. அதுவும் எப்படி? "துனிசிய அரசின் நடவடிக்கைகளையிட்டு கவலையடைகிறோம். ஆர்ப்பாட்டக்காரர்களின் நடவடிக்கைகளும் சமாதான வழியில் இருக்காததால் கவலையடைகிறோம்." (இது தானா நடுநிலைமை?)

துனிசிய மக்கள் தமது புரட்சியை, "மல்லிகைப்பூ புரட்சி" என்று பெயரிட்டு அழைக்கிறார்கள். மேற்குலக ஊடகங்கள் அந்த சொற்பிரயோகத்தை புறக்கணித்துள்ளன. இதே ஊடகங்கள், லெபனானில் நடந்ததை "சிடர் புரட்சி" என்று வர்ணித்தன. (அமெரிக்கா அப்படி பெயரிட்டு அழைத்தது.) லெபனானின் சிடர் புரட்சி, சிரிய நாட்டு படைகளை வெளியேற்றுவதை மட்டுமே குறிக்கோளாக கொண்டிருந்தது. ஜோர்ஜியாவில் "ரோஸ் புரட்சி", உக்ரைனில் "ஆரஞ்சுப் புரட்சி" என்று கலர் கலரான புரட்சிகள் நடந்துள்ளன. பிற்காலத்தில் அதிகாரத்திற்கு வந்த, மேற்குலக சார்பு எதிர்க்கட்சிகளின் வர்ணத்தின் பெயரால் புரட்சிகள் நடந்தன. அந்தப் புரட்சிகளுக்கு எல்லாம், வெளிநாட்டு நிதி, மேற்குலக தொண்டு நிறுவனங்கள் ஊடாக கிடைத்துக் கொண்டிருந்தது. குறிப்பாக அமெரிக்க கோடீஸ்வரரின் "சோரோஸ் நிதியம்" ஆர்ப்பாட்டங்களை ஒழுங்குபடுத்த தேவையான செலவுகளை பொறுப்பேற்றது. துனிசிய புரட்சி இவற்றில் இருந்து பெருமளவு வேறுபடுகின்றது. எந்தவொரு வெளிநாட்டு சக்தியின் தூண்டுதலோ, நிதியுதவியோ இன்றி, தன்னெழுச்சியாக திரண்ட மக்கள் சர்வாதிகார அரசை தூக்கியெறிந்தனர்.

ஈரானில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் டிவிட்டரை பயன்படுத்தியதை, மேற்குலக ஊடகங்கள் "டிவிட்டர் புரட்சி" என்று பெருமையாக குறிப்பிட்டன. துனிசியாவிலும் டிவிட்டர், பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களை பயன்படுத்தி புரட்சி நடந்தது. நிச்சயமாக, இணையப் பாவனையாளர்கள் மட்டுமே புரட்சி நடத்தி விட முடியாது. வேலையற்ற இளைஞர்களின் கலவரம், உழைக்கும் வர்க்க மக்களின் ஆர்ப்பாட்டம், தொழிற்சங்கங்களின் வேலைநிறுத்தம் போன்ற பல்வேறு காரணிகளும் கவனத்தில் எடுக்கத் தக்கன. இணையத்தை விட, இன்னொரு தொழில்நுட்பக் கண்டுபிடிப்பு புரட்சிக்கு பெரிதும் உதவியது. வீடியோ கமெரா கொண்ட செல்லிடத் தொலைபேசிகள், இன்று எல்லோர் கைகளிலும் பரவலாக புழங்குகின்றன. தெருவில் நடந்த ஒவ்வொரு நிகழ்வும் உடனுக்குடன் படமாக்கப்பட்டன. இப்போது தான் நேரடியாக தொலைபேசியில் இருந்து இணையத்திற்கு அனுப்பும் வசதி வந்து விட்டதே? கலவரங்கள், ஆர்ப்பாட்டங்களை காட்டும் வீடியோக்கள் சுடச்சுட "யூ டியூப்" பில் வெளியிடப்பட்டன. துனிசிய அரசின் அடக்குமுறையினால், பல யூடியூப் வீடியோக்கள் பின்னர் அழிக்கப்பட்டன. ஏற்கனவே துனிசியாவில் எதிர்க்கட்சிகளின் இணையத்தளங்களை பார்வையிடத் தடை இருந்தது. ஆயினும், டிவிட்டர், பேஸ்புக் தடை வருவதற்கு முன்னர், புரட்சியாளர்கள் முந்திக் கொண்டனர். கடுமையான செய்தித் தணிகை இருந்த நாட்டில், டிவிட்டர், பேஸ்புக் மூலம் தகவல்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டன. பின்னர் அந்தத் தகவல்கள், தெருவில் ஆர்ப்பாட்டம் செய்த பாமரர்களுக்கும் எடுத்துச் செல்லப்பட்டது. ஆர்ப்பாட்டக்காரர்கள், பதிவர்கள், இணையப் பாவனையாளர்கள் அனைவரதும் கூட்டு முயற்சி இன்றி புரட்சி சாத்தியமாகி இருக்காது.

துனிசிய பதிவர்கள், டிவிட்டர், பேஸ்புக் பாவனையாளர்கள் மட்டுமல்ல, ஐரோப்பாவில் புலம்பெயர்ந்து வாழ்ந்த துனிசியர்களும் விரைவான தகவல் பரிமாற்றத்திற்கு உதவியுள்ளனர். ஆனால் எந்தவொரு மேற்குலக ஊடகமும் இவற்றை கூர்ந்து கவனித்ததாக தெரியவில்லை. (ஈரான் மாணவர்களின் டிவிட்டர் தகவல்களுக்கு அவை தமது இணையத்தளத்தில் இடம் ஒதுக்கிக் கொடுத்திருந்தன.) துனிசிய மக்களில் பெரும்பான்மையானோர், அல்ஜசீரா தொலைக்காட்சி மூலமே தமது நாட்டில் நடக்கும் மாற்றங்களை அறிந்து கொண்டனர். சம்பவங்களை உடனுக்குடன் தெரிவித்தது மட்டுமல்ல, விவாதங்கள், ஆய்வுகள் மூலம், அல்ஜசீரா மக்கள் மனதை மாற்றிக் கொண்டிருந்தது. இவை எல்லாவற்றையும் விட, துனிசிய மக்களின் மனவுறுதி இறுதி வெற்றியை தேடித் தந்தது. அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் செய்தால் தண்டனைக்குள்ளாவோம் என்று தெரிந்து கொண்டும் வீதியில் இறங்கி போராடினார்கள். சனத்தொகையில் சரிபாதியான பெண்களும் தீரத்துடன் போராட்டத்தில் குதித்தனர். புரட்சியில் பலதரப்பட்ட மக்கள் பங்குபற்றினர். ஆண்கள், பெண்கள், சிறுவர்கள், வேலையற்றவர்கள், உழைக்கும் வர்க்க மக்கள், நடுத்தர வர்க்க மக்கள் எல்லோரும் கலந்து கொண்டனர்.

எந்த நாட்டிலும் பாட்டாளிகளின் எழுச்சி மட்டுமே புரட்சியை வெல்ல போதுமானதல்ல. நடுத்தர வர்க்கம் எந்தப் பக்கம் சாய்கின்றது என்பதும் அவசியம். பொருளாதார நெருக்கடியினால் ஒரு சிறிய மேட்டுக்குடியினர் மட்டுமே தப்பிப் பிழைக்க, பெரும்பான்மை நடுத்தர வர்க்கமும் மோசமாகப் பாதிக்கப்பட்டது. நடுத்தர வர்க்கத்திற்கு ஊதியம் குறைவது பிரச்சினை. தொழிலாளர்களுக்கு வேலையிழப்பு பிரச்சினை. வேலையற்றவர்களுக்கோ உணவு வாங்க பணமற்ற பிரச்சினை. ஒரு நாட்டின் மொத்த சனத்தொகையில் பெரும்பான்மையாக உள்ள உழைக்கும் வர்க்கமும், நடுத்தர வர்க்கமும் ஒன்று சேரும் போது தான் புரட்சி சாத்தியமாகின்றது. துனிசியாவில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம் செய்தவர்களின் பக்கம் சார்ந்திருந்தமை பெரிய பலமாகும். துனிசிய தொழிலாளர் கூட்டமைப்பு, வேலைநிறுத்தங்களை ஒழுங்குபடுத்தியது. குறிப்பாக மக்கள் எழுச்சி நகரங்களில் பரவிய பொழுது, ஒரே நாளில் நாடளாவிய வேலை நிறுத்த போராட்டங்கள் அறிவிக்கப்பட்டன.

அரசியல் கொள்கையைப் பொறுத்தவரை, "இஸ்லாமிய- தேசியம்" அல்லது "அரபு- தேசியம்" பேசிய யாருமே ஊர்வலங்களில் பங்குபற்றவில்லை. அவர்களுக்கு வர்க்க அரசியல் ஒத்துக் கொள்ளாது. ஒதுங்கியே இருந்தார்கள். கம்யூனிஸ்டுகள், சோஷலிஸ்டுகள், பல்வேறு இடதுசாரி சிந்தனை கொண்டவர்களை அதிகமாக காண முடிந்தது. இதே நேரம், இராணுவம் எந்தப் பக்கம் நிற்கின்றது என்பது குறித்து தெளிவான விளக்கம் இல்லை. இராணுவம் மக்களின் பக்கம் நிற்பதாக பரவலாக நம்பப்படுகின்றது. ஆனால் எந்த நேரமும் எதுவும் நடக்கலாம். உண்மையில் பென் அலி வெளியேறுவதை இராணுவமும் விரும்பியதால், அமைதியான சதிப்புரட்சிக்கு உடந்தையாக இருந்திருக்கும் என்ற சந்தேகமும் உண்டு. இதுவரை காலமும் பாதுகாப்புப் படைகள் வசம் மட்டுமே ஆயுதங்கள் இருந்துள்ளன. தற்போது பொதுமக்கள் கைகளில் ஆயுதங்கள் சென்று விட்டதாக வதந்திகள் உலாவுகின்றன. இராணுவத்தில் புரட்சிக்கு ஆதரவான சிலராலேயே அப்படி நடந்திருக்க வாய்ப்புண்டு என்பதால், இராணுவம் எந்தவித நடவடிக்கையிலும் இறங்கவில்லை என்றும் கருதப்படுகின்றது.

துனிசியாவின் புரட்சி எத்தகைய குணாம்சத்தைக் கொண்டிருந்தது என்பதை ஆராய்வது அவசியம். எப்போதும் மேற்குலக நிலைப்பாட்டில் இருந்து உலகைப் பார்ப்பது பல தவறான புரிதலுக்கு வழிவகுக்கின்றது. மேற்குலக ஊடகங்கள் சில இதனை "விக்கிலீக்ஸ் புரட்சி" என்று குறிப்பிட்டன. விக்கிலீக்ஸ் கசிய விட்ட இரகசியங்கள் பல ஏற்கனவே பலருக்கு தெரிந்த சங்கதி தான். அவற்றை இப்போது தான் மேலைத்தேய வெகுஜன ஊடகங்கள் கண்டுபிடித்துள்ளன. தாங்கள் சொல்லித் தான் உலக மக்களுக்கு இவை எல்லாம் தெரிய வேண்டும், என்பது போன்ற நினைப்பில் மிதக்கின்றனர். துனிசியாவில் சர்வாதிகாரி பென் அலி குடும்பத்தின் ஊழல் குறித்து, விக்கிலீக்ஸ் சொல்லித் தான் தெரிய வேண்டும் என்று நினைப்பது மகா அபத்தம். அந்த கேபிளை எழுதிய அமெரிக்க தூதரக அதிகாரிக்கு அப்போது தான் ஞானம் பிறந்திருக்கலாம். 23 வருடங்களாக கொடுங்கோல் சர்வாதிகாரியின் கீழ் வாழும் துனிசிய மக்களுக்கு, இவை எல்லாம் அன்றாட வாழ்வியல் அனுபவம். சர்வாதிகாரத்தை எதிர்த்து போராடிய எத்தனையோ அரசியல் ஆர்வலர்கள், இரு தசாப்தங்களாக பிரான்சில் வாழ்கின்றனர். அவர்கள் அங்கிருந்த படியே பென் அலியின் அடக்குமுறை ஆட்சி பற்றியும், ஊழல் பற்றியும் தமக்கு தெரிந்த வழிகளில் எல்லாம் வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். துனிசிய சர்வாதிகாரி மேற்குலக சார்பானவர் என்ற ஒரே காரணத்திற்காக, சர்வதேச ஊடகங்கள் அரச எதிர்ப்பாளர்களை புறக்கணித்து வந்துள்ளன.

கடந்த வருடம் பெல்ஜியத்தில் நடந்த சர்வதேச கம்யூனிஸ்ட் கட்சிகளின் மகாநாடு நடந்தது. பிரான்சில் அரசியல் அகதியாக வாழும், துனிசிய கம்யூனிஸ்ட் கட்சி பிரதிநிதி ஒருவரும் வந்திருந்தார். அவர் உரையாற்றும் பொழுது இஸ்லாமிய- தேசியவாதிகளுடனான வெகுஜன எதிர்ப்பு முன்னணியில் தமது கட்சி பங்கெடுப்பதை குறிப்பிட்டார். குறிப்பாக ரஷ்யாவை சேர்ந்த கம்யூனிஸ்டுகளுக்கு, "பிற்போக்கு மதவாதிகளுடனான கூட்டமைப்பு" என்ற கோட்பாட்டை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. காரசாரமான விவாதத்தின் முடிவிலும், அவர்களை தனது கருத்தோடு இணங்க வைக்க துனிசிய பிரதிநிதியால் முடியவில்லை. அரபுலகில் புரட்சி என்பது, "இன்டிபதா" என்றே புரிந்து கொள்ளப்படுகின்றது. இன்டிபதா என்றால் "அநீதிக்கு எதிரான மக்கள் எழுச்சி" என்றும் அர்த்தம் கொள்ளலாம். இன்டிபாதாவில் பாட்டாளி வர்க்கம் மட்டுமல்லாது, பிற பாதிக்கப்பட்ட வர்க்கங்களும் கலந்து கொள்வார்கள். அது சிறு முதலாளிகளாக இருக்கலாம், மத்தியதர வர்க்கமாக இருக்கலாம். மேற்கத்தய அரசியல் சித்தாந்தப்படி புரிந்து கொள்ள வேண்டுமானால், இதனை "ஜனநாயகப் புரட்சி" என்று அழைக்கலாம். சோஷலிசப் புரட்சிக்கு முந்திய, புதிய ஜனநாயகப் புரட்சி குறித்து மாவோ கூட நிறைய எழுதியுள்ளார். பிரெஞ்சுப் புரட்சி, பூர்ஷுவா வர்க்கத்தின் எழுச்சியாக இருந்த போதிலும், அது வரலாற்றில் முற்போக்கான பாத்திரம் வகித்ததை கார்ல் மார்க்ஸ் வரவேற்றுள்ளார்.

துனிசியாவில் இடம்பெற்றது பாட்டாளி வர்க்கப் புரட்சியோ, அன்றி சோஷலிசப் புரட்சியோ அல்ல. அத்தகைய மாயை யாருடைய மனதிலும் இல்லை. துனிசிய மக்கள் மேற்குலகில் நிலவுவதைப் போல, அடிப்படை ஜனநாயக உரிமைகளுக்காக போராடினார்கள். கருத்துச் சுதந்திரம், அரசியல் சுதந்திரம், வேலைவாய்ப்புக்கான உத்தரவாதம், எல்லோருக்கும் உணவு கிடைக்கும் வசதி, இவை எல்லாம் மேற்கு ஐரோப்பாவில் தனி மனிதனுக்கு உறுதிப்படுத்தப்பட்ட உரிமைகள். மேற்கத்திய நெறிகளுக்கு உட்பட்ட தனி மனித உரிமைகள் தான், துனிசிய மக்களின் குறிக்கோளாக இருந்துள்ளது. புரட்சி அவற்றை சாத்தியமாக்கும் என்றே எல்லோரும் நம்புகின்றனர். அத்தகைய உரிமைகளை பெற்றுக் கொடுப்பதற்காக துனிசிய மக்களுக்கு உதவ வேண்டிய மேற்குலகம், ஒதுங்கியிருந்து மௌனம் சாதிக்கின்றது. ஜனநாயக விழுமியங்களை உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்வதாக கூறும் மேற்குலகின் இரட்டைவேடம் அம்பலமாகிக் கொண்டிருக்கிறது.

துனிசிய தொழிற்துறையில் 40 % முதலீட்டை செய்துள்ள பிரான்ஸ், சர்வாதிகாரி பென் அலிக்கு அடைக்கலம் கொடுக்க மறுத்தது. அதற்கு காரணம், பிரான்ஸ் துனிசிய மக்கள் பால் கொண்ட கரிசனை அல்ல. பிரான்சில் லட்சக்கணக்கான புலம்பெயர்ந்த துனிசியர்கள் வாழ்கிறார்கள். தனது நாட்டினுள்ளும் துனிசிய மக்களின் எழுச்சியை எதிர்கொள்ள பிரான்ஸ் தயாராக இல்லை. துனிசியா எண்ணெய் வளமற்ற சிறிய நாடு. அதனால் அமெரிக்காவும் தலையிடாமல் பிரச்சினையை தவிர்த்துக் கொள்கின்றது. "எண்ணெய் இல்லாத சின்னச்சிறு துனிசியாவில் வாழ்ந்த அதிர்ஷ்டசாலிகள் நாங்கள்." என்று புரட்சி வென்றதற்கான காரணமாக துனிசியர்கள் கருதுகின்றனர்.


தற்போது எழுந்துள்ள அபாயம் என்னவெனில், சர்வதேசம் ஒத்துழையாமை இயக்கம் நடத்துவதன் மூலம் புரட்சியை தோல்வியடைய வைக்க முனையலாம். வேலையில்லாப்பிரச்சினை, உணவுப்பொருள் விலையேற்றம் போன்ற பொருளாதார பிரச்சனைகளை தீர்க்க, திறந்த சந்தைக் கொள்கையை முன்வைக்கலாம். "சந்தைக்கு அதிக சுதந்திரம் அளிக்கப்பட்டிருக்க வேண்டும்." என்று நவ-தாராளவாத பொருளாதாரக் கொள்கையை போதிப்பார்கள். ஏற்கனவே ஐ.எம்.எப். ஆலோசனைப் படி, திறந்த சந்தை, உலகமயமாக்கல் என்று கிளம்பித் தான் பிரச்சினை இந்தளவு விஸ்வரூபம் எடுத்தது. சர்வதேச சமூகம் அந்த உண்மையை மறைக்கப் பார்க்கும். சிறிது காலத்தின் பின்னர் துனிசியர்கள் மீண்டும் ஒரு புரட்சியை நோக்கி தள்ளப்படுவார்கள். துனிசிய புரட்சியை, உலக நாடுகளில் தோன்றும் பல புரட்சிகளின் ஓர் அங்கமாகவே கருதப்பட வேண்டும்.

Wednesday, January 19, 2011

"லைலா": துனிசியாவின் தனியார்மயக் கொள்ளைக்காரி

துனிசியாவின் முதல் பெண்மணியும், முன்னாள் அதிபர் பென் அலியின் இரண்டாவது தாரமுமான லைலா, அந் நாட்டு மக்களால் அதிகம் வெறுக்கப்பட்ட நபராவார். லைலா பற்றிய மரியாதையான வார்த்தை எதுவும் சாதாரண மக்கள் வாயில் இருந்து வராது.
முதல் பெண்மணி பெயரை சொன்னால், பொது மக்கள் அவரை ஒரு "விலைமாது" என்று தூற்றுகின்றனர். டியூனிஸ் நகரில் சிகையலங்கார நிபுணராக பணியாற்றியவர், எப்படியோ பென் அலியின் மனத்தைக் கவர்ந்து விட்டார். பிடித்தாலும் புளியங் கொம்பாக பிடித்தார். வேறு யாரையாவது மணந்திருந்தால், தேசத்தின் பொருளாதாரத்தையே குடும்பச் சொத்தாக மாற்றியிருக்க முடியுமா?

லைலாவின் குடும்பப் பெயர் டிரபெல்சி (Trabelsi). (லிபிய தலைநகரமான திரிபோலியை சேர்ந்தவர்கள் என்று அர்த்தம்.) பென் அலி, 1992 ல் லைலாவை திருமணம் செய்து பட்டத்து ராணியாக்கியதுடன் நின்றிருந்தால் பரவாயில்லை. அவரது பத்துக்கும் குறையாத சகோதரர்கள், உறவினர்கள் எல்லோருக்கும் குறைந்தது ஒரு வர்த்தக நிறுவனமாவது பரிசாகக் கிடைத்தது. துனிசியா புரட்சிக்கு வித்திட்ட காரணிகளில் ஒன்றாக கருதப்படும் விக்கிலீக்ஸ் கேபிளிலும் அந்த தகவல் குறிப்பிடப்பட்டது. துனிசியா ஊழலினால் உள்ளுக்குள் அழுகிக் கொண்டிருப்பதை அமெரிக்க தூதுவரே எழுதியுள்ளார். பென் அலியின் மனைவி லைலாவும், அவரது டிரபல்சி இனக்குழுவும் மாபியா கிரிமினல்கள் போன்று செயற்படுவதாக குற்றஞ்சாட்டியிருந்தார். மக்கள் எழுச்சியின் பொழுது, லைலாவினதும், அவரது உறவினர்களுக்கும் சொந்தமான நிறுவனங்கள் யாவும் தாக்கப்பட்டன. அவை சூப்பர் மார்க்கெட்கள் என்றால், அங்கிருந்த பொருட்களை மக்கள் கொள்ளையடித்துச் சென்றனர்.

ஐ.எம்.எப். முன்னெடுக்கும் பொருளாதாரத்தை தனியார்மயமாக்கும் திட்டம் பல நாடுகளில் ஊழலுக்கு காரணம். முன்பெல்லாம் இதைச் சொன்னால், "இடதுசாரிகளின் வெற்றுப் பேச்சு" என்று முதலாளித்துவ ஆதரவாளர்கள் நிராகரித்து வந்தார்கள். ஆனால் துனிசியா தொடர்பான விக்கிலீக்ஸ் கேபிள், தனியார்மயத்தினால் விளைந்த தீமைகளை விலாவாரியாக எடுத்துச் சொல்கின்றது. ஐ.எம்.எப். தனியார்மயத் திட்டத்தை செயற்படுத்த ஆலோசனை கூறிய உடனேயே, பென் அலியின் குடும்ப உறுப்பினர்கள் அரச நிறுவனங்களை வாங்கி விட்டார்கள். ஆளும் வர்க்கம் என்பதால், தனியார்மயமாக்கல் என்ற பெயரில், அவர்களே அரச நிறுவனங்களை அடிமாட்டு விலைக்கு வாங்கினார்கள். பின்னர் அதே நிறுவனங்களை பிற தொழிலதிபர்களுக்கு இலாபத்துடன் விற்றுள்ளனர். விக்கிலீக்ஸ் கேபிளில் அமெரிக்க இராஜதந்திரியே அப்படியான சம்பவம் ஒன்றைக் குறிப்பிடுகின்றார்.

ஐ.எம்.எப். தனியார்மயத்தை அறிவிப்பதற்கு முன்னமே, பென் அலியின் புதல்வன் மார்வன் மப்ரூக் "Attijari வங்கி" யின் 17 % பங்குகளை வாங்கினார். தனியார்மய அமுலாக்கத்தின் போது, 35 % பங்குகளாக அதிக லாபத்திற்கு விற்கப்பட்டன. துனிசியாவில் தனியார்மயமாக்கல், அந்த "தேசத்தின் மாபெரும் பகற்கொள்ளை" என்று அழைக்கப்படுகின்றது. துனிசியாவின் பொருளாதாரத்தில் எந்தத் துறையையும் டிரபல்சி குழுவினர் விட்டு வைக்கவில்லை. வங்கி,ஹோட்டல், வீட்டு மனை, போக்குவரத்து, தொலைத்தொடர்பு எல்லாவற்றிலும் அவர்களின் ஆதிக்கம் கொடி கட்டிப் பறந்தது. தனியார்மயமாக்கல் என்ற பெயரில் நாட்டை கொள்ளையடித்த டிரபல்சி ஆளும் வர்க்கம், மக்கள் எழுச்சியைக் கண்டு ஓடி ஒளிந்தது. விமான நிலையத்தில் தப்பியோட முயன்ற டிரபல்சி உறுப்பினர் ஒருவர், இனந்தெரியாத நபர்களால் குத்திக் கொல்லப்பட்டார்.

ஜனாதிபதி பென் அலி குடும்பம் நாட்டை விட்டு தப்பியோடும் பொழுதும் வெறுங்கையோடு ஓடவில்லை. மத்திய வங்கியின் சேமிப்பில் இருந்த தங்கத்தை கொள்ளையடித்துக் கொண்டு சென்றார்கள். 45 மில்லியன் யூரோ பெறுமதியான, ஒன்றரை தொன் தங்கப்பாளங்கள் பென் அலியின் மனைவி லைலா தன்னோடு எடுத்துச் சென்றுள்ளார். முதலில் லைலாவின் கையில் தங்கத்தை கொடுக்க மத்திய வங்கி நிர்வாகி மறுத்து விட்டாலும், பென் அலி வற்புறுத்தியதால் கொடுத்திருக்கிறார். பென் அலி குடும்பம் தற்போது சவூதி அரேபியாவின் ஜெத்தா நகரில், கொள்ளையடித்த தங்கத்துடன் ஓய்வெடுக்கின்றனர். லைலா சவூதி அரேபியாவில் தஞ்சம் புகுந்த செய்தியை கேள்விப்பட்ட துனிசியா மக்கள் விழுந்து விழுந்து சிரிக்கிறார்கள். ஏனென்றால், துனிசியாவில் பெண்கள் பர்தா அல்லது முக்காடு அணிவதை தடை செய்யும் சட்டத்தை கொண்டு வந்தவர் அவர் தான். இன்று பழமைவாத சவூதி அரேபியாவில், லைலா கருப்பு ஆடையால் போர்த்து மூடிக் கொண்டு செல்லும் காட்சியை மனக்கண்ணால் கண்டு இரசிக்கின்றார்கள்.

துனிசிய புரட்சியில் இஸ்லாமிய- அரசியல்வாதிகள் பங்கெடுத்ததாக இது வரை எந்த தகவலும் இல்லை. வேலையில்லாப் பிரச்சினை, உணவுப் பொருட்களின் விலை உயர்வு, போன்ற பொருளாதாரக் காரணிகள் தான் துனிசியாவில் மக்கள் எழுச்சியை தூண்டியது. இஸ்லாமியவாதிகளைப் பொறுத்த வரை, இவையெல்லாம் "காலாவதியான இடதுசாரிகளின் கொள்கைகள்." "மக்களுக்கு வாயும், வயிறும் முக்கியமல்ல. உயிரை விட மத உணர்வு மேலானது." என்று நம்மூர் தமிழ் உணர்வாளர்கள் போல வாதாடுகிறவர்கள். அவர்கள் இந்த புரட்சியில் கலந்து கொள்வார்களா? அரபுலகின் முதலாவது புரட்சியில் துனிசிய கம்யூனிஸ்ட்கள், சோஷலிஸ்டுகள் பெருமளவில் கலந்து கொண்டனர். கணிசமான அளவு பெண்களும் ஆர்ப்பாடங்களில் பங்கெடுத்துள்ளமை குறிப்பிடத் தக்கது.

Tuesday, January 18, 2011

"பென் அலி" : ஒரு அமெரிக்க அடிவருடியின் பரிதாபக் கதை

அமெரிக்காவின் உதவியுடன் பதவியை காப்பாற்றிக் கொள்பவர்கள். அமெரிக்காவை திருப்திப்படுத்த இஸ்ரேலுக்கு ஆதரவாக இருப்பவர்கள். எல்லோருக்கும் பென் அலியின் கதை ஒரு சிறந்த பாடம். அரபுலகின் முதலாவது மக்கள் எழுச்சியின் விளைவாக, உயிருக்கு பயந்து நாட்டை விட்டோடிய துனிசியா ஜனாதிபதி பென் அலி, இன்று சவூதி அரேபியாவில் சிறைக்கைதி போல வாழ்கின்றார். அதிகார மமதையுடன், டாம்பீகமான பணக்கார வாழ்வு வாழ்ந்தவர். துனிசியாவில் பல வர்த்தக நிறுவனங்களின் சொந்தக்காரர். 23 வருடங்களாக ஒரு தேசத்தின் அதிபதியாக எதிர்க்க ஆளின்றி அதிகாரம் செலுத்தியவர். இன்று உடல் தளர்ந்த வயோதிபராக, 74 வயதில் ஒதுங்க இடமின்றி பரிதாபகரமாக அலைந்தார். முதலில் மால்ட்டாவிடம் அடைக்கலம் கேட்டார். பின்னர் நெருக்கமான அயலுறவுக் கொள்கையைக் கொண்டுள்ள பிரான்சிடம் தஞ்சம் கோரினார். ம்ஹ்ம்.... யாருமே அந்த அரசியல் அகதியை ஏற்றுக் கொள்ள முன்வரவில்லை. இத்தனை காலமும் அமெரிக்காவின் விசுவாசியாக இருந்ததால், ஒபாமாவுக்கு தொலைபேசிப் பார்த்தார். வாஷிங்டனில் பென் அலியின் அழைப்புக்கு யாரும் பதில் சொல்லவில்லை. இறுதியில் மதச்சார்பற்ற கொள்கைப் பிடிப்பாளரான பென் அலி, மத அடிப்படைவாத சவூதி அரேபியாவில் தஞ்சம் புகுந்தார்.

பென் அலி காலம் பூராவும் யார் யாருக்கு சேவை செய்தாரோ, அவர்கள் யாரும் ஆபத்து நேரத்தில் உதவவில்லை. அரேபிய சகோதரர்களை பகைத்துக் கொண்டு, இஸ்ரேலுடன் நட்பு பாராட்டினார். ஒரு காலத்தில் துனிசியாவில் PLO தலைமையகத்தை இஸ்ரேல் குண்டு வைத்து தகர்த்தது. அப்படியிருந்தும் அதை எல்லாம் மன்னித்து விட்டு, முன்னாள் பிரதமர் ஆரியல் ஷரோனை கூப்பிட்டு விருந்து கொடுத்தார். ஆரியல் ஷரோன் ஒரு போர்க்குற்றவாளி என்று உலகமே குற்றஞ்சாட்டினாலும், தயக்கமின்றி கை குலுக்கினார். இருந்தும் என்ன? ஆபத்து நேரத்தில் உற்ற நண்பனுக்கு உதவ இஸ்ரேல் முன் வரவில்லை. இது தான் யதார்த்தம். சில தமிழர்கள் இப்போதும் இஸ்ரேலுக்கு ஆதரவாக செயல்படுமாறு எங்களை அழைக்கிறார்கள். அவர்களுக்கும் பென் அலி போல அடி பட்டால் தான் ஞானம் பிறக்கும்.

சுமார் ஐந்து வருடங்களுக்கு முன்னர், தலைநகரான தியூனிசில் டாக்சியில் பயணம் செய்து கொண்டிருந்த பொழுது, அமெரிக்க தூதரகத்தின் முன்னாள் செல்லும் பாதை தடுக்கப் பட்டிருந்தது. வேறு வழியால் சுற்றிச் சென்றதால் 20 நிமிடம் அதிகமாக பிடித்தது. டாக்சி சாரதி வழி நெடுக, அமெரிக்கர்கள் கேட்பதை எல்லாம் செய்து கொடுத்துக் கொண்டிருக்கும் தனது அரசை திட்டிக் கொண்டிருந்தார். அப்போது பொருளாதாரம் நல்ல நிலையில் இருந்த காலம். அயல் நாடான அல்ஜீரியாவுடன் ஒப்பிடும் போது, துனிசியாவில் தனி நபர் வருமானம் அதிகம். அதனால் பெரும்பாலான துனிசியர்கள் பென் அலியின் சர்வாதிகாரத்தை பொறுத்துக் கொண்டார்கள். ஆனால் முன்பு பிரான்ஸ் இருந்த இடத்தில் இன்று அமெரிக்காவின் ஆதிக்கம் அதிகரிப்பதை அவர்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அன்று நடந்து கொண்டிருந்த ஈராக் போரினால், அரபு இன உணர்வுகள் கொந்தளித்துக் கொண்டிருந்த காலகட்டம். அதனால் அரசு பகிரங்கமாக அமெரிக்கா பக்கம் நின்றதை, துனிசிய மக்கள் விரும்பவில்லை. துனிசியாவில் பயணம் செய்த நாட்களில் நான் சந்தித்த அனைவரும் அந்த விஷயத்தில் ஒத்த கருத்தைக் கொண்டிருந்தனர்.

துனிசியா முன்னாள் பிரெஞ்சுக் காலனி என்பதால், அங்கே போவதற்கு முன்னம் எனது பிரெஞ்சு மொழி அறிவை சற்று மெருகூட்டிக் கொண்டேன். நான் தட்டித் தடுமாறி துனிசியர்களுடன் பிரெஞ்சில் சம்பாஷணையை தொடங்கினால், அவர்கள் சரளமாக ஆங்கிலத்தில் பதிலளித்தார்கள். சுற்றுலாப்பயணிகளின் வருகை மட்டுமல்ல, அமெரிக்காவின் நெருக்கமும் ஆங்கில மொழி கற்றோரின் அதிகரிப்புக்கு காரணம். சர்வதேச வர்த்தக சமூகத்திற்காக, துனிசியாவில் ஒரு ஆங்கில வாரப் பத்திரிகை கூட வெளி வந்து கொண்டிருந்தது. அமெரிக்கா அல்கைதாக்கு எதிரான போரில் வென்றதோ இல்லையோ. துனிசியாவில் அத்தகைய அமைப்புகளை அடியோடு அழித்து விட்டார்கள். மசூதியில் அரசியல் பேசினால் கூட, இரகசியப் போலீசார் பிடித்துச் சென்று சிறையில் போட்டார்கள். தற்போது நடந்துள்ள புரட்சியில் இஸ்லாமிய மத அரசியல் வாசகங்களைக் கொண்ட பதாகைகளை காணவில்லை என்று பலர் "வருத்தப்பட்டார்கள்." அப்படி வருத்தப் பட்டவர்கள் மேற்குலக ஊடகவியலாளர்கள். புரட்சிக்கு இஸ்லாமிய முலாம் பூச முடியாத வருத்தம் அவர்களுக்கு.

இதுவரை துனிசியாவை பார்க்காதவர்கள், அது துபாய், குவைத் போலிருக்கும் என்று நினைத்தால், அந்த எண்ணத்தை மாற்றிக் கொள்ளுங்கள். பிரான்சில் வாழும் ஒருவரை கண்ணைக் கட்டி கூட்டி வந்து டியூனிஸ் நகரில், அல்லது வட துனிசியா பகுதியொன்றில் கொண்டு வந்து விட்டால், வித்தியாசம் கண்டுபிடிக்க முடியாது. இயற்கை, நில அமைப்பு மட்டுமல்ல, கட்டிடங்கள் தெருக்கள் எல்லாமே பிரான்சின் தெற்குப் பகுதி போன்றிருக்கும். ஒரு சராசரி "முஸ்லிம் நாட்டில்" நீங்கள் எதிர்பார்க்கும் எதுவும் அங்கே கிடையாது. தெருவோர பெட்டிக் கடையில் சாதாரணமாக பியர், வைன் வாங்கலாம். பெண்கள் சுதந்திரமாக திரிகிறார்கள். நகரங்களில் நட்சத்திர ஹோட்டல் டிஸ்கோதேக்கில் நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த நங்கைகளைக் காணலாம். துனிசிய பெண்கள் மிகவும் அழகானவர்கள். ஐரோப்பிய மகளிரைப் போல கவர்ச்சியான உடை அணிவதும் சர்வசாதாரணம். ஆனால்... ஆனால்... தலையில் முக்காடு போட்ட பெண்ணை துனிசியாவில் மிக மிக அரிதாகவே காண முடியும்.

பிரான்சில் முக்காடு தடைச் சட்டம் அமுலுக்கு வந்த பொழுது, உலகம் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டது. பிரான்சில் அப்படி ஒரு சட்டம் வருவதற்கு பல வருடங்களுக்கு முன்னரே, துனிசியா அரசு முக்காடு அணிவதை தடை செய்து விட்டது. முக்காடு அணிந்தவர்கள் எல்லாம் இஸ்லாமிய மத அடிப்படைவாதிகள் என்று பென் அலி நினைத்தாரோ என்னவோ? அல்லது மதச்சார்பற்ற லிபரல் கொள்கையை பின்பற்றுவதில் தான் மேற்குலகின் சிறந்த மாணவன் என்று காட்ட விரும்பினாரோ? காரணம் என்னவாக இருந்தாலும், பாடசாலை, கல்லூரி, அலுவலகம் போன்ற பொது இடங்களில் பெண்கள் முக்காடு அணிவதும், ஆண்கள் தாடி வைப்பதும் தடை செய்யப்பட்டது. தடையை மீறுபவர்களை காவல்துறை கைது செய்தது. ஒரு நாளாவது போலிஸ் நிலையத்தில் வைத்திருந்து விட்டு விட்டார்கள். எவராவது பிடிவாதமாக தொடர்ந்து செய்தால், மதத் தீவிரவாதியாக கணிக்கப்பட்டார்.

அமெரிக்காவும், இஸ்ரேலும் எந்தளவு மகோன்னத நட்பு கொண்டிருந்தாலும், ஆபத்து நேரத்தில் உதவ வர மாட்டார்கள். அமெரிக்காவை, இஸ்ரேலை விமர்சித்து நான் எழுதும் கட்டுரைகளை கடுமையாக எதிர்க்கும் "தமிழர்கள்" இருக்கிறார்கள். அவர்கள் யாரும் பென் அலி அளவுக்கு அமெரிக்க/இஸ்ரேல் விசுவாசம் காட்டியிருக்க முடியாது. பென் அலியின் கதை மேற்குலக விசுவாசிகளுக்கு ஒரு பாடமாக அமையட்டும். பென் அலி மட்டுமா அவரது மேற்குலக நண்பர்களால் கைவிடப்பட்டார்? ஈரானில் ஷா, பிலிபைன்சில் மார்கோஸ்.... மக்கள் புரட்சியால் விரட்டப்பட்டு நாடு நாடாக அலைந்தார்கள். எந்தவொரு மேற்குலக நாடும் அவர்களுக்கு அடைக்கலம் கொடுக்க முன்வரவில்லை. இன்னும் சில துரதிர்ஷ்டசாலிகளின் பெயர்கள் வேண்டுமா? பனாமாவில் நொரீகா, ஈராக்கில் சதாம், ஆப்கானிஸ்தானில் பின்லாடன்... இவர்கள் எல்லோரும் ஒரு காலத்தில் சி.ஐ.ஏ. யின் சம்பளப் பட்டியலில் இருந்தவர்கள். முற்காலத்தில் ஆதரித்து அரவணைத்த அதே அமெரிக்கா, பிற்காலத்தில் அவர்களை வில்லன்களாக்கியது. இந்த முன்னாள் அமெரிக்க விசுவாசிகளின் பரிதாபகரமான நிலைமை உங்களுக்கும் வர வேண்டுமா? தாராளமாக அமெரிக்காவையும், இஸ்ரேலையும் ஆதரியுங்கள்.

Monday, January 17, 2011

விக்கிலீக்ஸ் உள்ளே, ராஜபக்ச வெளியே!

அமெரிக்க அரசின், வெளிவிவகார பொறுப்புகளை கவனிக்கும் அதிகாரிகள் பதிவு செய்து வைத்திருந்த இரகசிய தகவல்களை, விக்கிலீக்ஸ் கசிய விட்டு வருகின்றது. விக்கிலீக்ஸ் ஆரம்பத்தில், ஈராக்கில் அமெரிக்க இராணுவத்தின் அத்துமீறல்களை வெளிக்கொணர்ந்தது. அண்மைக் காலமாக உலக நாடுகளுடன் அமெரிக்கா கொண்டுள்ள இராஜதந்திர உறவுகளை நெருக்கடிக்கு உள்ளாக்கும் தகவல்கள் கசிய விடப் பட்டுள்ளன. அமெரிக்க நண்பர்களான மேற்கு ஐரோப்பிய நாடுகள் உட்பட, சீனா, ரஷ்யா, ஈரான், லெபனான் ஆகிய நாடுகள் குறித்து அமெரிக்கா கொண்டிருந்த கருத்துக்கள் வெளிவருகின்றன. இவை யாவும், இராஜதந்திர உறவுகள் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக, இதுவரை வெளிப்படையாக பேசப்படாதவை. கேபிள்கள் மூலம் தனிச்சுற்றுக்கு விடப்பட்ட தகவல்கள், இன்று அனைவரும் பார்க்கும் வண்ணம் தெருவிலே வீசப் படுகின்றன. அந்த வகையில், கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் இலங்கை அரசியல் நிலைமை குறித்து தெரிவித்த தகவல்களும் வெளிவந்துள்ளன. இந்த கேபிள்கள் கொழும்பில் இருந்து அமெரிக்காவுக்கு இரகசியமாக அனுப்பப்பட்டவை.

அமெரிக்க தூதரகம் இலங்கை நிலவரம் பற்றி, குறைந்தது ஐயாயிரம் அல்லது பத்தாயிரம் கேபிள்கள் இதுவரை வெளியாகி உள்ளன. இவை யாவும் பிரிட்டனின் கார்டியன் நாளேட்டின் வசம் உள்ளன. விக்கிலீக்ஸ் இவற்றை பொது மக்கள் பார்வையிடலாம் என்று பகிரங்கப் படுத்தி உள்ள போதிலும், தெரிந்தெடுக்கப் பட்ட கேபிள்கள் மட்டுமே வெளியாகின்றன. நாங்கள் யாரும் எமது வேலைகளை ஒதுக்கி வைத்து விட்டு, ஐயாயிரம் கேபிள்களை வாசித்து கொண்டிருக்கப் போவதில்லை. அதனால் கார்டியன் அவ்வப்போது வெளிவிடும் கேபிள் தகவல்கள் மட்டுமே, அனைத்து அச்சு, இலத்திரனியல் ஊடகங்களிலும் மறுபிரசுரமாகின்றது. விக்கிலீக்சிடம் இருந்து அவற்றைப் பெற்றுக் கொண்ட கார்டியன், தான் விரும்பும் தகவல்களை மட்டும் தேர்ந்தெடுக்கின்றது. தான் விரும்பும் நேரத்தில் அவற்றை வெளியிட்டு வருகின்றது. விக்கிலீக்ஸ் டெர் ஸ்பீகல் (ஜெர்மனி) போன்ற பிற நாட்டு ஊடகங்களுக்கும் ஒரே நேரத்தில் அனுப்பி வைத்துள்ளது. ஆயினும் காலனிய தொடர்பு காரணமாக, இங்கிலாந்து ஊடகங்களுக்கு இலங்கை மீதுள்ள அக்கறை, பிற நாட்டு ஊடகங்களுக்கு இல்லை.

இலங்கை நிலவரம் தொடர்பாக இதுவரை குறைந்தது ஐந்து கேபிள் தகவல்களை கார்டியன் வெளியிட்டுள்ளது. (இன்னும் வெளிவராதவை ஆயிரக்கணக்கில் உள்ளன.) முதலாவது கேபிள், இலங்கை அரசுத் தலைவர்கள் போர்க்குற்றவாளிகள் என்று அறிவித்தது. போர்க்குற்ற விசாரணை குறித்து தமிழர்கள் கருத்து என்ன? என்று ஆராய்ந்தது. இரண்டாவது கேபிள், இலங்கை அரசுடன் சேர்ந்தியங்கிய ஈ.பி.டி.பி., கருணா குழு போன்றவர்களின் குற்றங்களை எடுத்துக் கூறியது. வர்த்தகர்களை கடத்தி கப்பம் வசூலிப்பது மட்டுமல்ல, பாலியல் தொழில் போன்ற கிரிமினல் குற்றங்கள் மூலம் பணம் சம்பாதிக்கிறார்கள் என்றது. மூன்றாவது கேபிள், புலிகளின் மனித உரிமை மீறல்களை பட்டியலிட்டது. வன்னியில் இடம்பெற்ற கட்டாய ஆட்சேர்ப்பு, வெளிநாட்டு தொண்டு நிறுவனங்களுக்கு வரும் நிதியை TRO மூலம் எடுத்துக் கொண்டமை, ஆகியவற்றை கூறியது. நான்காவது கேபிள், இந்திய அதிகாரி ஒருவரின் கருத்தைக் கூறியது. இலங்கை அரசும், புலிகளும் சர்வதேச சமூகத்தை மதிப்பதில்லை என்று அவர் போர் தீவிரமடைந்திருந்த காலத்தில் குற்றஞ்சாட்டி இருந்தார். ஐந்தாவது கேபிள், போருக்குப் பின்னர் மனித உரிமை மீறல்கள் குறைந்து விட்டதாகவும், பெருமளவு அகதிகள் மீள்குடியேற்றப் பட்டு விட்டனர் என்றும், இலங்கை அரசுக்கு பாராட்டுப் பத்திரம் வாசித்தது.

2007 ல் அனுப்பப்பட்ட கேபிள்கள் காலத்தால் முந்தியவை. அதாவது இறுதி யுத்தம் ஆரம்பமாகி முழு வீச்சில் நடந்தது கொண்டிருந்த காலம் அது. முதலில் இலங்கை குறித்து இந்தியா கொண்டிருந்த கருத்துக்கள் சில. மோகன் என்ற இந்திய வெளிவிவகார அமைச்சு அதிகாரி ஒருவர் கூறிய தகவல்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. தெற்காசிய நிபுணரான அவர் இலங்கைப் பிரச்சினை குறித்து கூறியதாவது: "இலங்கை நிலவரம் மோசமாக உள்ளது. இலங்கை அரசும், விடுதலைப் புலிகளும் சர்வதேச சமூகத்தை அநேகமாக மதிப்பதில்லை. தமிழ் நாட்டிலிருந்து புலிகள் ஆயுதம் கடத்துவதை தடுக்க, இலங்கை, இந்திய கடற்படைகள் பாக்கு நீரிணையில் கூட்டாக ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ளன." ( US embassy cables: Indian officials tell US neither Sri Lanka government nor Tamil Tigers respect international community , Friday, 27 April 2007, 12:27 C O N F I D E N T I A L SECTION 01 OF 02 NEW DELHI )

அன்று போரில் ஈடுபட்ட இரு தரப்பினரும் யார் சொல்வதையும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை. முள்ளிவாய்க்கால் முடிவு வரை, பிடிவாதமாக போரை தொடர்ந்தனர். இலங்கையில் போரை இந்தியா வழிநடத்திக் கொண்டிருந்தது. அதே நேரம், தன்னை நடுநிலைமையாளனாக காட்டுவதற்கு முயன்றது. அமெரிக்காவின் தெற்காசிய பிரதிநிதியாக இந்தியா செயல்பட்டுள்ளமையை கேபிள் தகவல் மூலம் அறிய முடிகின்றது. இலங்கைப் பிரச்சினையில் அமெரிக்காவின் வெளிவிவகார கொள்கைக்கு ஏற்றவாறு தான் இந்தியா நடந்து கொண்டுள்ளது. தமிழ்நாட்டில் இருந்து ஆயுதக் கடத்தலை தடுப்பதற்கான, கடற்படை கூட்டு ரோந்து நடவடிக்கை பற்றியும் சுட்டிக்காட்டத் தக்கது. புலிகளுக்கான ஆயுதக் கடத்தலை தடுத்து பலவீனப்படுத்திய, இலங்கை, இந்திய கூட்டு நடவடிக்கைக்கு அமெரிக்காவும் ஒப்புதல் வழங்கியுள்ளது. மேலும் சீனா ராஜபக்சவுடன் நெருக்கமாகி வருவதை அதே கேபிளில் குமார் தெரிவித்துள்ளார்.

2007 ல், அமெரிக்க தூதுவர் ரொபேர்ட் ஒ.பிளேக் அனுப்பிய கேபிள், இலங்கை இராணுவத்துடன் சேர்ந்தியங்கும் தமிழ் துணைப்படைகளை கடுமையாக விமர்சிக்கின்றது. "புலிகளில் இருந்து பிரிந்த கருணா குழு, ஈபிடிபி போன்ற துணைப்படைகள், புலிகளின் ஆதரவாளர்களை கடத்திச் செல்வதிலும், நீதிக்குப் புறம்பான கொலைகளிலும் ஈடுபட்டிருந்தனர். இந்த ஆயுதக்குழுக்களுடன் தொடர்பில்லை என்று கூறும் இலங்கை அரசு, மனித உரிமைகள் மீறல் குற்றச்சாட்டில் இருந்து தப்பிக் கொள்கின்றது. யாழ்ப்பாணத்தில் ஒவ்வொரு தெரு மூலையிலும் ஒரு இராணுவவீரனை நிறுத்து வைக்க முடிந்தளவு, படையினர் நிலை கொண்டுள்ளனர். முகமூடி அணிந்த நபர்கள் சட்டவிரோத கொலைகளில் ஈடுபடும் தருணம் பார்த்து காவலில் உள்ள படையினர் ஓய்வெடுக்கின்றனர். கொலை நடந்த இடத்தில் போலிஸ் விசாரணை நடந்தாலும் யாரும் கைது செய்யப்படுவதில்லை. ஈபிடிபி சந்தேகநபர்கள் பின் விளைவுகளை பற்றி கவலையின்றி கொலைகளில் ஈடுபடுகின்றனர். சிறுவர்களை கடத்தி இந்தியா, மலேசியாவுக்கு அடிமைகைகளாக அனுப்புவதாகவும், பெண்களை பாலியல் தொழிலாளர்களாக இராணுவத்திற்கு அனுப்புவதாகவும், ஈபிடிபி மீது குற்றச்சாட்டுகள் அடுக்கப்பட்டுள்ளன. (SRI LANKA: GSL COMPLICITY IN PARAMILITARY , Classified By: Ambassador Robert O. Blake, Friday, 18 May 2007, 09:22)

ஈழப்போரின் ஆரம்ப காலங்களில் அதிகளவு பொது மக்களை படுகொலைகளை புரிந்த இலங்கை இராணுவம் காலப்போக்கில் அதனை குறைத்துக் கொண்டது. அன்று சிங்கள இராணுவத்தின் கண்களுக்கு தமிழர்கள் எல்லோரும் பயங்கரவாதிகளாக தெரிந்தார்கள். பிற்காலத்தில் புலிகளை முதன்மை எதிரிகளாக கருதிய தமிழ் துணைப்படைகள் உருவாகின. இந்த தமிழ் துணைப்படைகளின் உதவியின்றி இராணுவம் போரை வென்றிருக்க முடியாது. புலி உறுப்பினர்களை, ஆதரவாளர்களை இனம் காண்பதற்கும், அழிப்பதற்கும் அவர்களின் உதவி அவசியமாகப் பட்டது. சட்டவிரோத ஆயுதக்குழுக்களை பயன்படுத்துவதன் மூலம், ஒரு இறைமையுள்ள தேசத்தின் அரச படைகள் பொறுப்பில் இருந்து தப்பிக் கொள்கின்றன. சிறுவர்களை கடத்தி விற்றது, பெண்களை பாலியல் தொழில் ஈடுபடுமாறு கட்டயப்படுத்தியது போன்றன இதற்கு முன்னர் வெளிவராத புதிய தகவல்கள். அன்றிருந்த போர்ச் சூழல், கிரிமினல் குற்றவாளிகளுக்கு பல வாய்ப்புகளை வழங்கி இருந்தது. போர் நடந்த காலத்தில் மக்கள் ஆயுதமேந்திய நபர்களுக்கு அடிபணிந்து நடக்க வேண்டி இருந்தது. ஆயுதம் வைத்திருந்தவர்கள் பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டு பணம் சம்பாதித்தது அங்கிருந்த மக்களுக்கு தெரிந்த விடயம். கருணா குழு வர்த்தகர்களை கடத்தி சென்று கப்பப்பணம் வாங்கியதையும் மேற்படி கேபிள் குறிப்பிட்டுள்ளது.

அமெரிக்கா போன்ற "ஜனநாயக நாடுகள்" தாம் யாரையும் ஆதரிப்பதில்லை என்று காட்டுவதற்காக, இரு தரப்பு குற்றங்களை பட்டியல் போடுவதுண்டு. அதனை "நடுநிலை தவறாமை" என்று கூறிக் கொள்கிறார்கள். அதன் படி இன்னொரு கேபிள் புலிகள் இழைத்த குற்றங்களை அமெரிக்க அரசுக்கு அறிவிக்கின்றது. புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த வன்னியில் குடும்பத்திற்கு ஒரு பிள்ளை என்று கட்டாய ஆட்சேர்ப்பு நடந்துள்ளது. அது மட்டுமல்ல, சர்வதேச தொண்டு நிறுவனங்களின் பணப்பரிமாற்றம், எவ்வாறு புலிகளின் வன்னி நிர்வாகத்திற்கு திருப்பி விடப்பட்டது என்று தெரிவிக்கின்றது. TRO என்ற புலிகள் சார்பு தொண்டு நிறுவனம், அல்லது புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த உள்ளூர் தொண்டு நிறுவனங்களின் கணக்கிற்கு அனுப்பப்பட வேண்டுமென கட்டாயப் படுத்தப்பட்டது. புலிகளின் ஆயுதக் கொள்வனவுக்கு புலம்பெயர்ந்த தமிழர்களின் நிதி பயன்படுத்தப்பட்டது. வெளிநாட்டு தொண்டு நிறுவனங்கள் ஊடாக கிடைத்த நிதி, உள்நாட்டு நிர்வாக செலவினங்களுக்கு பயன்பட்டது." (SRI LANKA: TAMIL TIGERS SIPHON OFF PART OF INTERNATIONAL RELIEF FUNDS , Classified By: Ambassador Robert O. Blake, Tuesday, 12 June 2007, 03:23)

புலிகளின் யுத்த நிறுத்த மீறல்களை, கண்காணிப்புக் குழு கண்டு கொள்ளாமல் விட்டிருந்ததாகவும், அதே கேபிளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. புலிகள் மீண்டும் யுத்தத்தில் குதிக்கக் கூடாது என்பதற்காக, சர்வதேச சமூகம் புலிகள் அமைப்பிற்கும் சாதகமாக நடந்து கொண்டது. இலங்கை அரசுடனான பேச்சுவார்த்தையில் அதிகாரத்தை பகிர்ந்து கொள்ள வேண்டும், என எதிர்பார்த்தன. புலிகளின் அத்துமீறல்கள் குறித்த குற்றச்சாட்டுகள் அப்போதே எழுப்பப்பட்ட போதிலும், யுத்த நிறுத்த ஒப்பந்தம் முறியக் கூடாது என்பதில் கவனமாக இருந்துள்ளனர். ஆயினும் சர்வதேச சமூகத்தின் எதிர்பார்ப்புக்கு மாறாக, இலங்கை அரசும், புலிகளும் போரில் குதித்தன. அத்தகைய தருணத்தில் புலிகளுக்கு உதவுவது, பிரிவினைவாதத்தை ஆதரிப்பது போலாகும். இதனால் அமெரிக்கா, இலங்கை அரசு பக்கம் சாய்ந்தது. உண்மையில் இறுதிப்போரின் போது இடம்பெற்ற தமிழினப் படுகொலையில் அமெரிக்க அரசுக்கும் பங்குண்டு. அவர்களைப் பொறுத்தவரை, இனப்படுகொலை போரில் தவிர்க்கவியலாத அம்சம் என்று நம்பினார்கள். (அமெரிக்க அரசு வெளிப்படையாக பேசாத போதிலும், சில அரசியல்வாதிகளும், ஊடகவியலாளரும் அந்தக் கருத்தை தெரிவித்தனர்.) சமீபத்தில் வெளியான கேபிள், போர்க்குற்றங்களை விசாரிப்பதில் அமெரிக்கா எந்தளவு அசிரத்தையாக இருந்துள்ளது என்பதை எடுத்துக் காட்டுகின்றது.

"ராஜபக்ச சகோதரர்களும், சரத் பொன்சேகாவும் போற்குற்றத்திற்கு பொறுப்பாளிகள். ஆனால் போர்க்குற்றம் தொடர்பான சர்வதேச விசாரணைக்கு இந்த அரசாங்கம் பதவியில் இருக்கும் வரையில் எந்தவொரு விசாரணையும் நடைபெறப் போவதில்லை. அரசுத் தலைவர்கள் நேரடியாக பொறுப்பேற்க வேண்டும் என்பதாலே, இலங்கை அரசு போர்க்குற்றங்களை விசாரணைக்கு எடுக்கத் தயங்குவதன் காரணம். இலங்கை அரசுப் படைகள் புரிந்த போர்க்குற்றம் சம்பந்தமான விசாரணைகள், இந்த அரசு பதவியில் இருக்கும் வரை நடக்கப்போவதில்லை. போர்க்குற்ற விசாரணையை, போரில் வெற்றியீட்டிய வீர நாயகர்களுக்கு எதிரான சர்வதேச சதியாகவே, இலங்கை அரசு கருதுகின்றது. இலங்கையின் இராணுவ, அரச அதிகாரிகளும், ஆட்சியில் இருக்கும் ராஜபக்ச சகோதரர்களும், எதிர்க்கட்சி வேட்பாளர் சரத் பொன்சேகாவும் போர்க்குற்றங்களுக்கான பொறுப்பை ஏற்க வேண்டியிருக்கும். புலிகள் அமைப்பின் சிரேஷ்ட தலைவர்கள் பெருமளவில் கொல்லப்பட்டு விட்டனர். கனிஷ்ட தரத்திலான ஆயிரக்கணக்கான புலிகள் அரச படைகளினால் சிறைப்பிடிக்கப் பட்டுள்ளனர். எதிர்காலத்தில் போர்க்குற்ற விசாரணைக்கு, அரசு இவர்களையும் கொண்டு வந்து நிறுத்துமா என்பது குறித்த தெளிவில்லை. அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் அறிவிப்புக்கு பின்னர், "குற்றங்களை விசாரிக்கும் ஆணைக்குழு" ஒன்றை இலங்கை அரசு நியமித்தது." (SRI LANKA WAR-CRIMES ACCOUNTABILITY: THE TAMIL PERSPECTIVE, Classified By: AMBASSADOR PATRICIA A. BUTENIS, Friday, 15 January 2010, 12:23 )

இதற்கு முந்திய கேபிள்களை விட, இவ்வருடம் ஜனவரி மாதம் அனுப்பிய கேபிள் பெரும் மாற்றத்தை உண்டுபண்ணியுள்ளது. பாதுகாப்புப் படைகளுக்கு பொறுப்பானவர்கள் என்ற வகையில், ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவும், அவரது சகோதரர் கோத்தபாய ராஜபக்சவும் போர்க்குற்றங்களுக்கும் பொறுப்பேற்க வேண்டும். அமெரிக்க தூதுவர் தனது மேலாளர்களுக்கு அனுப்பிய கேபிள், தர்க்கரீதியிலான நியாயத்தை முன்வைக்கும் அதே வேளை, அமெரிக்காவின் அழுத்தம் தொடர்வதையும் காட்டுகின்றது. இலங்கை அரசு புலிகளுக்கு எதிரான போரை, அமெரிக்காவின் பயங்கரவாதத்திற்கு எதிரான போரின் ஓர் அங்கமாக காட்டிக் கொண்டிருந்தது. ஆனால் அமெரிக்காவை பொறுத்த வரையில், புலிகள் அல்கைதாவின் கூட்டாளிகள் அல்ல. புலிகளின் செயற்பாடுகள், அமெரிக்க நலன்களுக்கு எதிரானதாக இருக்கவில்லை. மறுபக்கத்தில், இலங்கைப் பிரச்சினையில் சர்வதேச சமூகத்தின் அலட்சியப் போக்குக்கும் அதுவே காரணமாக அமைந்தது. அமெரிக்கா ராஜபக்ச சகோதரர்கள் மீது போர்க்குற்ற குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ள போதிலும், அவர்களை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தும் என எதிர்பார்க்க முடியாது. இன்னொரு கேபிளின் படி, போர்க்குற்ற விசாரணை குறித்து ஐ.நா. என்ன கருத்தைக் கொண்டுள்ளது? என்று அமெரிக்கா வினவியுள்ளது. இராஜதந்திர மொழியில் இது அமெரிக்க அரசின் மெத்தனப் போக்கை குறிக்கும். ஏனெனில், உண்மையிலேயே குற்றவாளிகளை கூண்டில் நிறுத்த வேண்டுமென்றால், அமெரிக்காவே ஐ.நா. ஆசனத்தில் இருந்து கொண்டு அதனை செய்து முடிக்கும்.

ராஜபக்சாவை குற்றவாளி என்று அமெரிக்க தூதுவர் எழுதிய குறிப்புகளை கொண்ட கேபிள் பிரசுரமான நேரம் அவதானிக்கத் தக்கது. ராஜபக்சவின் லண்டன் விஜயத்தின் போது, சனல் 4 தொலைக்காட்சி போர்க்குற்றம் சம்பந்தமான வீடியோவை ஒளிபரப்பியது. இன்னொரு பக்கத்தில் பிரிட்டன் வாழ் தமிழரின் ஆர்ப்பாட்டம், அவரது ஒக்ஸ்போர்ட் உரையை இரத்து செய்ய வைத்தது. ஜனாதிபதியினது தனிப்பட்ட விஜயம் என்ற போதிலும், இந்த நிகழ்வுகள் யாவும் சர்வதேச கவனத்தை ஈர்த்தன. "ஜனாதிபதி ராஜபக்சவின் அவமானகரமான இராஜதந்திர தோல்வி," என்று இலங்கை ஊடகங்களே விமர்சித்தன. சனல் 4 தொலைக்காட்சியின் போர்குற்ற வீடியோ ஒளிபரப்பும், ஜனாதிபதியின் லண்டன் விஜயமும் "தற்செயலாக நடந்த நிகழ்வுகள்" என்று அந்த தொலைக்காட்சி அறிவித்தது. அதே காலத்தில், இன்னொரு "தற்செயல் நிகழ்வாக" கார்டியன் பத்திரிகை விக்கிலீக்ஸ் கேபிளை பிரசுரித்தது. இராஜதந்திர நெருக்கடிகளை ஏற்படுத்தக் கூடிய அந்த கேபிள் தகவல் குறித்து அமெரிக்க, இலங்கை அரசுகள் கருத்தேதும் கூறவில்லை. அதே நேரம், விக்கிலீக்ஸ் கேபிள் ஏற்படுத்திய தாக்கம், சில நாட்களின் பின்னர் உணரப்பட்டது.

முதலாவதாக, பிரிட்டிஷ் பாதுகாப்பு அமைச்சர் லியாம் பொக்ஸின் இலங்கை விஜயம் இரத்து செய்யப்பட்டது. வெளிவிவகார அமைச்சர் ஹேக் தடுத்து விட்டதாகவும், இலங்கை அரசின் போர்க்குற்ற ஆதாரங்கள் மேலே வருவதும் காரணம் என்றும் கூறப்பட்டது. இலங்கைக்கும், பிரிட்டனுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகள், முன்னர் என்றும் இல்லாதவாறு மோசமடைந்துள்ளது. மகிந்த ராஜபக்சவின் இரண்டாவது பதவிக்காலம் ஆரம்பமான போது, பிரிட்டிஷ் பிரதமர் கமரூன் அனுப்பிய கடிதம் ஒன்று இன்னமும் வெளியிடப் படவில்லை. ஜனாதிபதியாக பொறுபேற்கும் ராஜபக்சவுக்கு வாழ்த்துச் செய்தியை அறிவிக்கும் அதே வேளை, "எவ்வாறு ஆட்சி நிர்வாகம் நடத்தப்பட வேண்டும்" என்று புத்திமதிகளை கூறுவதாக அந்தக் கடிதம் எழுதப்பட்டுள்ளதாம். ஏற்கனவே, பிரிட்டன் காலனித்துவ மனோபாவத்துடன் நடந்து கொள்வதாக அதிருப்தி நிலவுகின்றது. இன்னொரு சம்பவத்தில், பதவி விலகிச் செல்லும் பிரிட்டிஷ் தூதுவரின் விருந்துபசாரத்தில் கலந்து கொள்ள ஜனாதிபதி மறுத்து விட்டார். (The Sunday Times, 19 December 2010) இதற்கிடையே விக்கிலீக்ஸ் கசிய விட்ட அமெரிக்க தூதரக கேபிள் ஒன்று, பிரிட்டனின் இலங்கை மீதான அக்கறையை வெளிச்சம் போட்டுக் காட்டியது. "பிரிட்டனில் வாழும் மூன்று லட்சம் தமிழ் வாக்களர்களை குறி வைத்து நடந்து கொள்வதாக," அமெரிக்க தூதரகத்தில் கடமையாற்றிய ரிச்சார்ட் மில்ஸ் எழுதியுள்ளார். ( WikiLeaks: David Miliband 'championed aid to Sri Lanka to win votes of Tamils in UK', The Telegraaf, 20 December 2010)

இரண்டாவதாக, ஆறு மாதங்களுக்கு முன்னர் நியமிக்கப்பட்ட ஐ.நா. ஆலோசனைக் குழுவுக்கு இலங்கை வர அனுமதிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் போர்க்குற்றங்கள் இடம்பெற்றுள்ளனவா என்பதை கண்டறிவதற்காக, ஐ.நா. செயலாளர் பான் கி மூன் நியமித்த குழுவை, முன்னர் இலங்கை அரசு எதிர்த்து வந்தது. ஆலோசனைக் குழு உறுப்பினர்களுக்கு இலங்கை வர விசா தர மறுத்து வந்தது. அமைச்சர் விமல் வீரவன்ச ஐ.நா. அலுவலகத்தை முற்றுகை இட்டு உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தி இருந்தார். இலங்கை அரசின் தற்போதைய மாற்றத்திற்கு காரணம் என்ன? உண்மையில் நியமிக்கப்பட்ட ஆலோசனைக்குழு போர்க்குற்ற விசாரணைக்குழு அல்ல என்று, பான் கி மூனே அன்றே தெரிவித்திருந்தார். இன்று வரை, ஐ.நா. எடுத்துள்ள அதிக பட்ச நடவடிக்கை அது. போர்க்குற்றம் என்ற பெயரில் எந்தவொரு தலையீட்டையும் இலங்கை அரசு கடுமையாக எதிர்த்து வந்தது. இருப்பினும் சர்வதேச அழுத்தங்களுக்கு விட்டுக் கொடுக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. அண்மைய விக்கிலீக்ஸ் கேபிளின் படி, ராஜபக்ச சகோதரர்களும் சாட்சியமளிக்க அழைக்கப்படலாம்.

இதன் அர்த்தம், "இலங்கை அரசு போர்க்குற்ற விசாரணைக் கூண்டில் ஏற்றப்படுவது நிச்சயமாகி விட்டது," என்பதல்ல. ஐ.நா. ஆலோசனைக் குழுவின் வருகையானது, சில சமரசங்களுக்குப் பின்னரே எட்டப்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது. ராஜபக்ச மட்டுமல்ல, பான் கி மூன் கூட சில அழுத்தங்களுக்கு ஏற்ப செயற்பட வேண்டியுள்ளது. ஐ.நா. ஆலோசனைக்குழு, இலங்கை அரசு நியமித்த நல்லிணக்க ஆணைக்குழுவின் செயற்பாடுகளை ஆராயவிருப்பதாக பான் கி மூன் அறிவித்துள்ளார். தென்னாபிரிக்காவில் நடந்ததைப் போல, இனங்களுக்கு இடையில் நல்லுறவு ஏற்பட வழிவகுக்கும் என்று தெரிவிக்கப்பட்டாலும், போர்க்குற்றங்களை மூடி மறைக்கவும் நல்லிணக்க ஆணைக் குழு குழு பயன்படலாம். இதுவரை நல்லிணக்க ஆணைக் குழு முன், சாட்சியம் அளித்த மக்கள் இலங்கை இராணுவம் புரிந்த குற்றங்களைப் பற்றியும் விபரமாக எடுத்துக் கூறியுள்ளனர். ஆனால் அவை தலைமையில் இருப்பவர்களை சம்பந்தப் படுத்தப் போவதில்லை. மேலும் நல்லிணக்கக் குழு நடந்த குற்றங்களை பதிவு செய்து வைக்குமே தவிர, குற்றவாளிகள் மீது சட்ட நடவடிக்கை எடுக்காது. போர் நடந்த காலத்தில் இராணுவம், புலிகள் என்ற இரு தரப்பினர் இழைத்த குற்றங்களையும் பாதிக்கப்பட்ட மக்கள் எடுத்துக் கூறினர். இருப்பினும், அவர்களின் வாக்குமூலத்தின் படி, இது வரை எவரும் தண்டிக்கப்படவில்லை. ஐ.நா. ஆலோசனைக்குழுவும் அதே பாதையில் பயணம் செய்யும் போலத் தெரிகின்றது.

அமெரிக்கா போன்ற பலம் மிக்க சர்வதேச சமூகம், ராஜபக்ச சகோதரர்களை குற்றவாளிக் கூண்டில் ஏற்றி தண்டனை வழங்கும் என்று எதிர்பார்ப்பது நிராசையாகும். ஏனெனில் போற்குற்றத்தில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் இன்னும் பலர் இருக்கின்றனர். தமிழர் தரப்பில், இலங்கை அரசு, படையினரைத் தவிர, வேறு யாரும் கண்ணுக்கு புலப்படுவதில்லை. (தமிழ் ஊடகங்களும் அதிகம் ஆராய்வதில்லை.) சர்வதேச நீதிமன்றம் ஒன்று, இலங்கையில் நடந்த போர்க்குற்றங்களை விசாரிக்க தொடங்கினால், இராணுவத்தினர் பிடித்து வைத்துள்ள புலிகள் அமைப்பின் தலைவர்கள் மீதும் போர்க்குற்றச்சாட்டு சுமத்தப்படும். அதற்கான சாத்தியம் இருப்பதை விக்கிலீக்ஸ் கேபிளில் அமெரிக்க தூதுவர் குறிப்பிட்டுளார்.(SRI LANKA WAR-CRIMES ACCOUNTABILITY: THE TAMIL PERSPECTIVE, Classified By: AMBASSADOR PATRICIA A. BUTENIS, Friday, 15 January 2010, 12:23 ) மேலும் ஐ.நா. சபை கூட, குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்படுவதை தவிர்க்கவியலாது. நடேசன் தலைமையில் சரணடைந்த புலிகளின் தலைவர்கள் கொல்லப்பட்ட விவகாரத்தை ஒரு முறை நினைவுபடுத்திப் பார்க்கவும். சரணடைதலை மேற்பார்வையிடச் செல்லவிருந்த ஐ.நா. அதிகாரி விஜய் நம்பியார் சாட்சியமளிக்க அழைக்கப்படலாம். அந்த தருணத்தில் கொழும்பிலேயே தங்கி விட்ட நம்பியார் கடமை தவறியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும் யூகோஸ்லேவிய நீதிமன்ற அமர்வில், அமெரிக்கா ஒரு காலத்தில் போர்க்குற்றவாளி மிலோசொவிச்சுக்கு உதவிய தகவல்கள் அம்பலமாகின. அதனால் விழிப்புற்ற அமெரிக்கா, சதாம் ஹுசைன் மீதான விசாரணைகளை சர்வதேச நீதிமன்றம் வரை எடுத்துச் செல்லவில்லை. ராஜபக்ச விவகாரத்திலும் அதனை எதிர்பார்க்கலாம்.

போர்க்குற்றங்களை விசாரிப்பது சம்பந்தமாக, இலங்கையில் வாழும் தமிழர்களும், புலம்பெயர்ந்த தமிழர்களும் கருத்து முரண்பாடுகளை கொண்டிருப்பது தெரிய வந்துள்ளது. அதனையும் விக்கிலீக்ஸ் கேபிளில் விரிவாக வாசிக்கலாம். (SRI LANKA WAR-CRIMES ACCOUNTABILITY: THE TAMIL PERSPECTIVE, Classified By: AMBASSADOR PATRICIA A. BUTENIS, Friday, 15 January 2010, 12:23 ) இலங்கையில் தமிழ் தேசியக் கட்சிகளின் பிரதிநிதிகளை சந்தித்த அமெரிக்க தூதுவர், போர்க்குற்ற விசாரணைக்கு அவர்களின் ஒத்துழைப்பு கிட்டாததை குறிப்பிட்டுள்ளார். தமிழ்க்கட்சிகள் போர்க்குற்ற விசாரணைகளை வரவேற்கும் அதே சமயம், தமது அச்சத்தையும் வெளிப்படுத்தி உள்ளனர். தமிழ் தேசியக் கூட்டமைப்பு தலைவர் சம்பந்தன் பாராளுமன்றத்தில் தான் இது பற்றி விவாதிக்க மாட்டேன் என்று தெரிவித்துள்ளார். பின்விளைவுகளையிட்டு அவர் அஞ்சுகிறார். போர்க்குற்ற விசாரணைகள் நடந்தால், அது தமிழர்களுக்கே பாதகமாக அமையும் என்று பலரும் ஒருமித்த குரலில் கூறுகின்றனர். விசாரணைக்கு சாட்சியமளிக்க செல்பவர்களுக்கும், அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கும் உயிராபத்து ஏற்படும் என்ற அச்சம் ஒரு காரணம். அதே நேரம், பெரும்பான்மை சிங்களவர்கள் தமிழர்கள் மீது வஞ்சம் தீர்க்க முற்படலாம் என்ற எதிர்காலம் குறித்த கவலை கொண்டுள்ளனர். ராஜபக்ச மட்டுமல்ல, பெரும்பான்மை சிங்கள மக்களும் இராணுவ வீரர்களை நாயகர்களாக கருதுகின்றனர். பெரும்பான்மை தமிழர்கள் புலிகள் மீது எந்தளவு மதிப்பு வைத்துள்ளனரோ, அந்தளவு மதிப்பு இராணுவம் மீது சிங்களவர்களுக்கு உண்டு. ஆகவே, "போரில் வென்ற எமது நாயகர்களை தமிழர்கள் குற்றவாளிக் கூண்டில் ஏற்றுகிறார்கள்..." என்ற ஒரு செய்தி போதும், சிங்கள பேரினவாதிகளின் செல்வாக்கு அதிகரிக்கும். அதன் விளைவு, அப்பாவி தமிழ் மக்களை பழிவாங்குவது வரை போனாலும் யாராலும் தடுக்க முடியாது. புலம்பெயர்ந்த தமிழர்களுக்கு அப்படி எந்த விதமான பாதிப்பும் வரப்போவதில்லை. சர்வதேச சமூகம் தமிழ் மக்களுக்கு பாதுகாப்பு அரணாக நிற்கும் என்று எதிர்பார்ப்பது, ஒரு சிறந்த நகைச்சுவை. ஏற்கனவே முள்ளிவாய்க்கால் வரை நடந்த இனப்படுகொலையை தடுக்காமல் கைகட்டி வேடிக்கை பார்த்த சர்வதேச சமூகம், இனியும் தமிழருக்கு உதவும் என்று எதிர்பார்ப்பது மடமை.

2007 ம் ஆண்டு கேபிள்கள் வெளியான நேரம் தான் இலங்கையில் போர் தீவிரமடையத் தொடங்கியது. போர்க்காலத்தில் மனித உரிமை மீறல்கள் அதிகரிக்கும், போர்க்களத்தில் படையினரின் குற்றங்கள் அதிகரிக்கும், என்பது ராஜபக்ச நிர்வாகத்திற்கு நன்றாகவே தெரியும். அதனால் முன்கூட்டியே வெளிநாட்டு தொண்டு நிறுவனங்கள் வெளியேற்றப்பட்டன. அரச ஊடகங்களைத் தவிர்ந்த பிற ஊடகவியலாளர்கள் செய்தி சேகரிக்க அனுமதி மறுக்கப்பட்டது. எதிர்காலத்தில் போர்க்குற்ற விசாரணை என்ற ஒன்று வருமானால், இவர்கள் மூலமே ஆதாரங்கள் திரட்டப்படும் என்பதை சரியாக கணித்திருந்தனர். இருப்பினும் அரசு தானே அறிவித்த, பொது மக்களுக்கான பாதுகாப்பு வலையம் மீதே கனரக ஆயுதங்களைப் பாவித்தமை, சரணைடைந்த போராளிகளை சுட்டுக் கொன்றமை, போன்ற குற்றங்கள் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. படையினர் போர்க்குற்றங்களைப் புரிந்தால், அவர்களுக்கு உத்தரவுகளைப் பிறப்பித்த அதிகாரிகளும், அமைச்சரும் பொறுப்பாளிகள் என்பது வெள்ளிடைமலை. போர் முடிந்த பின்னர், ராஜபக்ச சகோதரர்கள் மட்டுமல்ல, சரத் பொன்சேகா போன்ற இராணுவ தளபதிகளும் அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகளுக்கு பயமின்றி சென்று வந்தார்கள். யாரும் கைது செய்யப்படவுமில்லை. விசாரிக்கப்படவுமில்லை. அதற்கான முயற்சிகள் கூட எடுக்கப்படவில்லை.

அண்மையில் ராஜபக்ச தனது பரிவாரங்களுடன் பிரிட்டன் வந்து போகும் வரை, பிரிட்டிஷ் அரசு எந்தத் தொந்தரவும் செய்யவில்லை. இவ்வளவுக்கும் அவர்கள் லண்டனில் தங்கி நின்ற நாட்களில், சனல் 4 முதல் விக்கிலீக்ஸ் வரை போர்க்குற்ற செய்திகளை வெளியிட்டு பரபரப்பூட்டின. இந்த சம்பவம் நடந்து சில நாட்களின் பின்னர், விக்கிலீக்ஸ் நிறுவனர் அசாஞ்சே பிரிட்டனில் கைது செய்யப்பட்டு சிறை வைக்கப்பட்டார். ஒரு அவுஸ்திரேலியப் பிரஜையான அசாஞ்சேயை தன்னிடம் ஒப்படைக்குமாறு அமெரிக்கா கேட்டுக் கொண்டிருந்தது. அசாஞ்சே உலகில் மிக முக்கியமாகத் தேடப்படும் கிரிமினல் குற்றவாளியாக, அல்லாது போனால் பயங்கரவாதியாக கருதப்பட்டார். இத்தனைக்கும் அசாஞ்சே எந்தவொரு போர்க்குற்றத்திலும் ஈடுபடவில்லை. இதுவரை ஒருவரையேனும் கொலை செய்யவில்லை. அமெரிக்க அரசு அசாஞ்சே முக்கியமான குற்றவாளியாக கருதக் காரணம், அவர் ஈராக்கில் அமெரிக்காவின் போர்க்குற்றங்களை நிரூபிக்கும் ஆவணங்களை பகிரங்கப்படுத்தினார். விக்கிலீக்ஸ் "அமெரிக்கப் பிரஜைகள் (அதாவது, போர்க்குற்றவாளிகள்) உயிருக்கு ஆபத்தை உண்டாக்கி விட்டதாக" ஒபாமா குற்றஞ்சாட்டினார். "இரகசிய ஆவணங்கள்" (அதாவது, போர்க்குற்ற ஆதாரங்கள்) பகிரங்கப் படுத்தப் படுவதால், தேசத்தின் பாதுகாப்புக்கு தீங்கு விளைவிக்கும் என்றார்.

விக்கிலீக்ஸ் அமெரிக்க நலன்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதால், ஊடக தர்மத்தை மீறி சட்ட நடவடிக்கை எடுக்கப்படுகின்றது. ராஜபக்ச அமெரிக்க நலன்களை அனுசரித்து நடந்து கொள்வதால், அவரை சுதந்திரமாக நடமாட அனுமதிக்கப்படுகின்றது. நம்மில் பலர், ஊடகங்கள் தெரிவிப்பதைப் போலத் தான் உலகம் இயங்கிக் கொண்டிருப்பதாக நம்பிக் கொண்டிருக்கிறோம். அமெரிக்கா, பிரிட்டன் போன்ற மேற்குலக நாடுகள் தமது நலன்களுக்காக பிற நாடுகளில் தலையிடுகிறோம் என்று, ஒரு நாளும் வெளிப்படையாக கூறுவதில்லை. "மனித உரிமைகளை மதிப்பது", "ஜனநாயகத்தை மீட்பது" போன்ற மனதை மயக்கும் சொற்தொடர்களை பாவிப்பார்கள். ஒரு கொள்கைக்காக போராடுவதாக காட்டிக் கொள்ளும் போக்கு, எப்போதும் பயனளிப்பதில்லை. இலங்கை விவகாரத்தில் மேற்குலக நாடுகள் இதனை உணர ஆரம்பித்துள்ளன. அதனாலேயே அதிக அழுத்தம், நெருக்குவாரங்களை பிரயோகிப்பதில்லை. இலங்கை அரசியல் தலைவர்கள், "மேற்குலக நாடுகளின் மிரட்டல்களுக்கு அடிபணியப் போவதில்லை," என்று வீராவேசமாக மேடையில் முழங்குவார்கள். ஆனால் பொருளாதார சீர்திருத்தம் யாவும், மேற்குலகின் விருப்பப் படியே நடந்து கொண்டிருக்கிறது. பொது மக்களின் அத்தியாவசிய தேவைகளான, இலவசக் கல்வியை, இலவச மருத்துவ வசதியை, தனியாரிடம் தாரை வார்ப்பதற்கு, ராஜபக்ச அரசு தயாராகத் தான் இருக்கிறது. (தமிழ் தேசியக் கூட்டமைப்பு கூட ஆதரவளிக்கின்றது.) ஆனால் மக்கள் தான் எதிர்க்கிறார்கள்.

போர்க்குற்ற விசாரணையை நடைமுறைப்படுத்தி, ராஜபக்சவை குற்றவாளிக் கூண்டில் ஏற்றுவதற்கு மேற்குலகம் தயாராக இல்லை. அமெரிக்க தூதுவர் போர்க்குற்ற விசாரணை குறித்து ஆராய்ந்து அனுப்பிய கேபிள் இதனை தெளிவாக உணர்த்துகின்றது. "புலம்பெயர்ந்த தமிழர்கள் போர்க்குற்ற விசாரணைகள் உடனடியாக ஆரம்பமாக வேண்டுமென்று எதிர்பார்க்கின்றார்கள். ஆனால் இலங்கை வாழ் தமிழர்களைப் பொறுத்த வரை, அது நடைமுறைச் சாத்தியம் அல்லாதது மட்டுமல்ல, எதிர்மறையான தாக்கத்தை உருவாக்கும் எனக் கருதுகின்றனர். சர்வதேச சமூகம் இதனை முன்னெடுக்க வேண்டுமென சில தமிழர்கள் எதிர்பார்க்கின்றார்கள். ஆனால் அவ்வாறான எந்த முயற்சியும் ராஜபக்சவுக்கும், அவரது கூட்டாளிகளுக்கும் சாதகமாகவே முடியும். சர்வதேச சமூகம், இலங்கைக்கும், அதன் நாயகர்களுக்கும் எதிராக சூழ்ச்சி செய்வதாக தீவிர பரப்புரைகளை மேற்கொள்வார்கள்." (SRI LANKA WAR-CRIMES ACCOUNTABILITY: THE TAMIL PERSPECTIVE, Classified By: AMBASSADOR PATRICIA A. BUTENIS, Friday, 15 January 2010, 12:23 )



(ஜனவரி மாத "காலச்சுவடு" இதழில் பிரசுரமானது.)

Saturday, January 15, 2011

துனிசியாவில் வேலையற்ற மக்களின் புரட்சி

26 வயதேயான வேலையற்ற பட்டதாரி இளைஞன் முஹமத்தின் தற்கொலை மரணம்,ஒரு மக்கள் புரட்சியாக மாறும் என்று எவரும் கனவிலும் நினைத்திருக்க மாட்டார்கள். பட்டப் படிப்பு முடித்தும் வேலை வாய்ப்பு இல்லை. ஜீவனத்திற்காக நடைபாதையோரமாக காய்கறி விற்றுக் கொண்டிருந்தவன். போலிஸ் லைசன்ஸ் கேட்டு தொந்தரவு செய்ததன் காரணமாக மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டான். ஊர், பேர் தெரியாத இளைஞனின் மரணச் சடங்கில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர். விரைவிலேயே அவர்களது சீற்றம் அதிகார வர்க்கம் மீது திரும்பியது. அரச நிறுவனங்கள் தாக்கப்பட்டன. கடைகள் சூறையாடப்பட்டன. 23 வருடங்களாக துனீசியாவின் சர்வாதிகார ஆட்சி நடத்த உறுதுணையாக இருந்த பிரெஞ்சு தூதரகம் கூட சுற்றி வளைக்கப்பட்டது. வேலையற்ற இளைஞர்களின் கலகமாக ஆரம்பித்தாலும், வழக்கறிஞர்களும், தொழிற்சங்கமும் தமது ஆதரவை தெரிவிக்கும் வகையில் போராட்டத்தில் குதித்தனர். உழைக்கும் வர்க்கமும், இழப்பதற்கு எதுவுமற்ற மக்களும் ஒன்று சேர்ந்து போராடினால் புரட்சி நிச்சயம் என்பதை துனீசியா மக்கள் சாதித்துக் காட்டியுள்ளனர்.

அரபுலகில் முதன் முதலாக இணையம் மூலம் ஒழுங்கமைக்கப்பட்ட புரட்சியும் இதுவாகும். கொடுங்கோல் அரசின் இணையத் தடையை மீறி, டிவிட்டர், முகநூல் (Facebook) போன்ற சமூக வலையமைப்புகள் எதிர்ப்பு நடவடிக்கைகளை உடனுக்குடன் அறிவித்துக் கொண்டிருந்தன. போலிஸ் அடக்குமுறைகளை காட்டும் வீடியோக்களை, Youtube உடனுக்குடன் அழித்துக் கொண்டிருந்தது. ஆயினும் எல்லாவித தடைகளையும் மீறி, இறுதியில் புரட்சி வென்றது. "இணையத்தில் புரட்சி செய்கிறார்கள்!" என்று பரிகசிக்கும் கூட்டத்திற்கு இது சமர்ப்பணம்.

கலகத்தை அடக்க அனுப்பப்பட்ட போலிஸ் படை, வழமையான துப்பாக்கிச் சூடு, கைதுகள், என்று மக்கள் எழுச்சியை அடக்கப் பார்த்தது. இறுதியில் துனிசியா சர்வாதிகாரி பென் அலியே முன் வந்து கைது செய்தவர்களை விடுதலை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. திடீரென்று உறக்கத்தில் இருந்து விழித்துக் கொண்ட பென் அலி, வேலையற்ற மக்களுக்கு வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தப் போவதாக விடுத்த அறிவிப்பை யாரும் பொருட்படுத்தவில்லை. இறுதியில் நாட்டை விட்டு வெளியேறி, சவூதி அரேபியாவில் அகதித் தஞ்சம் கோர வேண்டிய அவல நிலை ஏற்பட்டது. உல்லாசப் பயணிகளால் அதிக வருமானம் கிடைக்கும் கரையோர நகரங்கள் என்றும் போல அமைதியாக தான் இருந்தன. ஆனால் பொருளாதார ரீதியாக பின்தங்கிய உள்நாட்டு நகரங்களில் தான் மக்கள் வீதிக்கு வந்து போராடத் தொடங்கினார்கள். உணவுப் பொருட்களின் விலையேற்றம், ஏற்கனவே தொழில் வாய்ப்பற்ற பகுதிகளை மோசமாகத் தாக்கியது.

உலகம் முழுவதும் பொருளாதார பிரச்சினைகளால் மக்கள் கிளர்ச்சிகள் வெடிப்பதைப் பற்றி நான் எழுதினால், பலருக்கு பிடிப்பதில்லை. "மக்களுக்கு வாயும், வயிறும் முக்கியமல்ல, இன மான உணர்வே பெரிதென்று" வாதாடுகின்றார்கள். ஊடகங்களும் அரபு நாடுகளைப் பற்றியும் அப்படியான கருத்துகளை தான் பரப்பி வந்தன. "கலாச்சார மோதல்" தத்துவப் படி, அரேபியர்கள் முஸ்லிம்கள், வயிற்றை விட மதமே பெரிதென்று வாழ்பவர்கள் என்று தான் பிரச்சாரம் செய்தார்கள். "அரபு நாடுகளில் அல்கைதாவும் இல்லை, அரேபியர்கள் எல்லோரும் முஸ்லிம் மத அடிப்படைவாதிகளும் இல்லை," என்று கடந்த பத்து வருடங்களாக எழுதிக் கொண்டிருக்கிறேன். உண்மையான பிரச்சினை என்ன என்றும் தெளிவு படுத்தியிருந்தேன்.

மேற்கத்திய நாடுகளால் ஆதரவளிக்கப்படும் சர்வாதிகாரிகள், ஜனநாயக சுதந்திரத்தை மறுக்கும் அரச அடக்குமுறை, வேலைவாய்ப்பின்மை, வறுமை, இவை சாதாரண மக்களை பாதிக்கும் பிரச்சினைகள். விரக்தியுற்ற இளைஞர்கள் பட்டப் படிப்பு படித்தாலும் வேலையின்றி, வெளிநாடுகளுக்கு ஓடிக் கொண்டிருக்கிறார்கள். வெளிநாடு போக வசதியற்றவர்கள், தீவிரவாதிகளாக மாறுகிறார்கள். அமெரிக்காவும், உள்நாட்டு சர்வாதிகாரிகளும் அவர்களை அல்கைதா என்று முத்திரை குத்தி அடக்கினார்கள். துனிசியாவில் கலகம் செய்தவர்களையும், பென் அலி அப்படி சொல்லிப் பார்த்தார். யாரும் நம்பியதாகத் தெரியவில்லை. கடைசியாக அவரே முன் வந்து, நாட்டில் வேலையில்லாப் பிரச்சினையை தீர்ப்பது முக்கியம் என்பதை ஒத்துக் கொண்டார். கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் செய்ய முடியுமா? மக்களின் கோபாவேசத்திற்கு முகம் கொடுக்க முடியாமல், நாட்டை விட்டு தப்பியோடி விட்டார்.

துனிசியா கலவரத்தை சர்வதேச பொருளாதார நெருக்கடியில் இருந்து பிரித்துப் பார்க்க முடியாது. கிரேக்க மக்கள் என்ன காரணத்திற்காக கிளர்ந்தெழுந்தார்கள்? வேலை, ஊதியம், உணவு பறிபோவதை எந்த மனிதன் தான் பொறுத்துக் கொண்டிருப்பான்? (இனமான உணர்வாளர்களுக்கு சுடலை ஞானம் பிறப்பதற்கு இன்னும் காலம் இருக்கிறது.) வளர்ச்சியடைந்த ஐரோப்பாவை சேர்ந்த கிரேக்கர்களாக இருந்தால் என்ன, வறிய நாடான மொசாம்பிக்கை சேர்ந்த மக்களாக இருந்தால் என்ன, எல்லோரும் வயிற்றுக்காக போராடக் கிளம்புகின்றனர். "முஸ்லிம் நாடுகளான" துனீசியா, அல்ஜீரியா, சூடான் போன்ற நாடுகளிலும் உணவுப் பொருட்களின் விலையேற்றம் மக்களை போராடத் தூண்டுகின்றது. "சிங்களப் பேரினவாதிகளின்" சிறிலங்காவிலும், "தமிழ் இனப்பற்றாளர்களின்" ஈழத்திலும் மக்கள் பொருளாதார பின்னடைவுகளை எதிர்த்து போராடுகின்றனர். முதலாளித்துவ தமிழ் ஊடகங்கள் அத்தகைய செய்திகளை கூறாமல் இருட்டடிப்பு செய்கின்றன. எல்லா நாடுகளிலும் அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கு அரசு மானியம் அளிக்கின்றது. அரசு மானியத்தை விலக்கிக் கொண்டால் விலை ஏறும் என்பதும், அதனால் மக்கள் கலகம் செய்வார்கள் என்பதும், ஓரளவு பொருளாதாரம் தெரிந்த அனைவருக்கும் தெரியும்.

2009 ம் ஆண்டு ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி துனிசியாவையும் பாதித்தது. பெருமளவு அந்நிய செலாவணியை ஈட்டித் தந்த உல்லாசப் பயணத் துறை, நஷ்டத்தை நோக்கி சென்றது. ஏற்றுமதி, அந்நிய முதலீடு அரைவாசியாக குறைந்தது. இதனால் வேலையற்றோர் தொகை அதிகரித்தது. பொருளாதாரம் நல்ல நிலையில் இருந்த காலத்தில், துனிசியா அரசு அனைவருக்கும் இலவசக் கல்வி வழங்கியது. இதனால் படித்த வாலிபர்கள் பெருகினார்கள். அரபு நாடுகளில் அதிகளவு படித்த மத்தியதர வர்க்கத்தை கொண்ட நாடுகளில் துனிசியா முன்னணியில் திகழ்கின்றது. அது மட்டுமல்ல, ஒரு சராசரி ஐரோப்பிய நாட்டில் உள்ளதைப் போல, பெண்கள் சம உரிமையுடன் அனைத்து துறைகளிலும் பிரகாசித்தனர். ஆனால் அத்தகைய அபிவிருத்திக்குப் பின்னால், சர்வாதிகார கொடும்கோன்மை மக்களை அடக்கி வைத்திருந்தது. அரசியல் கட்சிகள், தொழிற்சங்கங்கள் தடை செய்யப்பட்டன.

எகிப்து போன்ற நாடுகளில் இருப்பதைப் போல, அன்றாட உணவுக்கே அல்லாடும் பரம ஏழைகள் துனிசியாவில் இல்லை. இருப்பினும்,Tunis, Sousse , Sfax, போன்ற நகரங்கள் சுற்றுலாத் துறை, சர்வதேச வணிகம் காரணமாக அதிக வளர்ச்சியடைந்திருந்தன. அப்படி எந்த அதிர்ஷ்டமும் வாய்க்கப் பெறாத பிரதேசங்களில் வாழும் மக்களுக்கு, குறைந்த ஊதியத்துடன் வறுமைக் கோட்டுக்கு கீழே வாழ வேண்டிய நிர்ப்பந்தம். மொத்த தேசிய வருமானத்தில் 30 % செல்வத்தை, 10 % பணக்கார கும்பல் அனுபவிக்கின்றது. கீழ் மத்தியதர வர்க்கத்தை சேர்ந்த மக்கள் பொருளாதார பிரச்சினைகளால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். திறந்த சந்தை, நவ தாராளவாத பொருளாதார சீர்திருத்தங்கள் எதுவும் அவர்கள் வாழ்வில் மறுமலர்ச்சியை தோற்றுவிக்கவில்லை. சாதாரண பணியாளர்களும், பாவனையாளர்களும் வரி செலுத்திக் கொண்டிருக்கையில், பணக்காரர்களும், வணிக நிறுவனங்களும் வரிச் சலுகை பெற்று வந்தனர். நாட்டின் பெரிய வர்த்தக நிறுவனங்கள் ஜனாதிபதி பென் அலியின் குடும்ப சொத்தாக இருந்தன. பென் அலி குடும்பத்தின் பேராசையும், அகங்காரமும் ஊழலுக்கு காரணம் என்று துனீசியா பொது மக்கள் குறைப் பட்டுக் கொள்கின்றனர்.

துனிசியா மக்களின் புரட்சியை சர்வதேச சமூகம் இரு கரம் நீட்டி வரவேற்க தயாராக இல்லை. மேற்குலக ஊடகங்கள் ஏதோ கடமைக்கு செய்தி வாசித்து விட்டுப் போகின்றன. உலகம் முழுவதும் மனித உரிமைகளை ஏற்றுமதி செய்யும் மேற்கத்திய நாடுகள் மௌனம் சாதிக்கின்றன. இரு வருடங்களுக்கு முன்னர் துனிசியாவுக்கு அரசு முறை விஜயம் செய்த பிரெஞ்சு ஜனாதிபதி சார்கோசி, "மனித உரிமைகள் நிலவரம் திருப்தியளிப்பதாக" நற்சான்றிதழ் அளித்தார். இன்று மக்கள் எழுச்சியை அடக்க, துனிசியா அரசு கேட்டுக் கொண்டால் படை அனுப்ப தயாராக இருப்பதாக பிரெஞ்சு பாதுகாப்பு அமைச்சர் கூறுகிறார். துனிசியா முன்னாள் பிரெஞ்சுக் காலனி என்பதும், பிரான்ஸ் முக்கியமான வர்த்தக கூட்டாளி என்பதும் குறிப்பிடத் தக்கது. சிறிய நாடான துனிசியாவில் மக்கள் புரட்சி வென்று விட்டது. அடுத்தது இயற்கை வளம் நிறைந்த அல்ஜீரியா.

Wednesday, January 12, 2011

சோவியத் தேசிய இனங்களின் சத்திய சோதனை


[ஒரு தேசிய இனத்தை உருவாக்குவது எப்படி?]
(பகுதி : 4)


எந்தவொரு மேலாதிக்க சக்தியும், தேசிய இனங்களை மோத வைக்கவோ அல்லது ஒற்றுமையாக வாழ வைக்கவோ தான் விரும்பும். சதுரங்கம் விளையாடுவது போல, "ஆண்டவர்கள்" எங்கோ இருந்து கொண்டு வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பார்கள். சிங்களவர்களை வெறுக்கும் தமிழர்கள். தமிழர்களை வெறுக்கும் சிங்களவர்கள். பாகிஸ்தானியர்களை வெறுக்கும் இந்தியர்கள். இந்தியர்களை வெறுக்கும் பாகிஸ்தானிகள். இவர்கள், தாம் பிரிட்டிஷ் ஏகாதிபத்திய வல்லரசால் ஆட்டுவிக்கப்பட்ட பொம்மைகள், என்று உணர்வதில்லை. தங்களது கேவலமான நிலைமையை  உணராமல், மற்றவர்களை பரிகசித்துக் கொண்டிருப்பார்கள்.

சோவியத் யூனியன் குறித்து மத்திய தர வர்க்க அறிவுஜீவிகள் முன்வைக்கும் விமர்சனங்களில் ஒன்று, ரஷ்ய மொழியின் மேலாதிக்கம் பற்றியது. இதே அறிவுஜீவிகள் தமது தாய்மொழியை விட ஆங்கிலத்தை பேசுவதில் அதிக ஆர்வம் காட்டுவார்கள். அதில் என்ன தவறு? என்றும் கேட்பார்கள். 19 ம் நூற்றாண்டில் தான் ஆங்கிலேயர்கள் இந்தியா, இலங்கை போன்ற நாடுகளை காலனிப் படுத்தினார்கள். அங்கே ஆங்கில மொழியின் மேலாதிக்கத்தை திணித்தார்கள். சாம்ராஜ்யத்தை நிர்வகிக்க அவர்களுக்கு ஒரு பொது மொழி தேவைப்பட்டது. 19 ம் நூற்றாண்டில் ரஷ்யர்களும் அதைத் தான் செய்தார்கள். இங்கிலாந்துக்கு போட்டியாக சார் மன்னனின் ரஷ்யா சாம்ராஜ்யத்தை விஸ்தரித்துக் கொண்டிருந்தது. கொகேசிய ஐரோப்பிய பகுதிகள், சைபீரியா, மத்திய ஆசியப் பகுதிகள் எல்லாம் அப்போது ஆக்கிரமிக்கப்பட்டு காலனிப் படுத்தப்பட்டது. அங்கெல்லாம் ரஷ்ய மொழியே உத்தியோகபூர்வ மொழியாக இருந்தது.

1917 ல் போல்ஷெவிக் கம்யூனிஸ்ட்கள் ரஷ்ய சாம்ராஜ்யத்தின் ஆட்சிப் பொறுப்பை ஏற்றனர். கம்யூனிஸ்ட் கட்சியிலேயே பலர், சார் மன்னனின் ரஷ்ய மொழிக் கொள்கையை பின்பற்ற விரும்பினார்கள். "ரஷ்ய மொழியை ஒரே மொழிக் கொள்கையாக தொடர்வது, ரஷ்ய பேரினவாதத்தின் தொடர்ச்சியாக கருதப்படும்," என்று லெனின் கண்டித்திருந்தார். கம்யூனிஸ்ட்கள் புதிதாக தேசிய இனங்கள் பற்றிய கொள்கை வகுக்க வேண்டுமென்று, ஸ்டாலினை தேசிய இனங்களின் கமிசாராக நியமித்தார். ரஷ்ய மொழியில் இருந்து முற்றிலும் மாறுபட்ட ஜோர்ஜிய மொழியை தாய்மொழியாக கொண்ட ஸ்டாலின் அதற்கு ஏற்ற ஒருவராக கருதப்பட்டார். புதிய சோவியத் குடியரசுகளில் அந்தந்த மக்களின் மொழிகளை வளர்ப்பதற்கும், கல்வி கற்கவும் உரிமைகள் இருந்தன. அதே நேரம் ரஷ்ய மொழி கட்டாயமான இரண்டாவது மொழியாக பயின்றார்கள். நமது நாடுகளில் ஆங்கில வழிக் கல்வி போன்று, அங்கே தனியாக ரஷ்ய வழிக் கல்வி வழங்கும் பாடசாலைகளும் இருந்தன. சிறுபான்மை இனத்தை சேர்ந்த ஸ்டாலின் அதிபராக பதவியேற்ற பின்னர் கூட, ரஷ்ய மொழிக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டது. ரஷ்ய மொழி மேலாதிக்கத்தை எதிர்க்கும் நமது அறிவுஜீவிகள், அதற்கு பதிலாக வேறெந்த மொழியை, பொது மொழியாக பயன்படுத்த வேண்டும் என்று கூறினால் நல்லது. யாருமே பேசாத ஆங்கிலத்தையோ, பிரெஞ்சையோ எவ்வாறு பொது மொழியாக கொண்டு வர முடியும்?

இன்றைக்கு பல முன்னாள் சோவியத் பிரஜைகள் ஆங்கிலம் பேசுகின்றனர். ஆனால் ஆட்சியில் இருப்பவர்களின் அரசியல் சார்பு, பொருளாதார ஒத்துழைப்பு, மேற்குலகை நோக்கி இருப்பதே அதற்கு காரணம். சார் மன்னன் காலத்தில் மட்டுமல்ல, சோவியத் புரட்சியின் பின்னர் கூட பொருளாதார கட்டமைப்பு மொஸ்கோவை மையமாக கொண்டிருந்தது. ஆனால் சுற்றவரவிருந்த நாடுகளிடம் இருந்து துண்டிக்கப் பட்டிருந்தது. எல்லைக்கோடு பிரித்திருந்தாலும், அயல் நாடுகளில் சகோதர இனங்களைக் கொண்டிருந்த தேசிய இனங்கள் முதலில் பாதிக்கப்பட்டன. ஆர்மேனியாவின் அரைவாசிப் பகுதி ஏற்கனவே துருக்கியினால் விழுங்கப்பட்டிருந்தது. அங்கே தற்போது ஆர்மேனியர்கள் வாழ்ந்த சுவடே இல்லாமல், துருக்கிமயமாகி விட்டது. ரஷ்யாவின் பகுதியாக இருந்த ஆர்மேனியாவுக்கு போல்ஷேவிக்குகளால் குடியரசு அந்தஸ்து வழங்கப்பட்டது. சோவியத் வீழ்ச்சிக்குப் பின்னர் நெதர்லாந்துக்கு பல ஆர்மேனிய அகதிகள் வந்திருந்தனர். அவர்கள் இன்றைக்கும் தமது மொழியை சரளமாக எழுதப், பேச தெரிந்து வைத்திருந்தனர். "சோவியத் சர்வாதிகாரம் பல மொழிகளை அழித்து விட்டதகாவும், சிறுபான்மை மொழியினத்தை சேர்ந்தவர்களுக்கு ரஷ்ய மொழி மட்டுமே தெரியும் என்றும்," மேற்குலகினால் பிரச்சாரம் செய்யப்பட்டது.

மேற்குலகைச் சேர்ந்த சிறுபான்மையினங்களைப் பொறுத்த வரை, அது உண்மை தான். நான் சந்தித்த ஐரிஷ்காரர்களுக்கு சிறிதளவேனும் ஐரிஷ் மொழி பேசத் தெரிந்திருக்கவில்லை. ஆனால் முன்னாள் சோவியத் குடியரசுகளான ஜோர்ஜியா, ஆர்மேனியா, அசர்பைசான், உக்ரைன், பெலாரஸ், மொல்டோவியா நாடுகளைச் சேர்ந்த மக்கள் பலரை சந்தித்திருக்கிறேன். அவர்கள் எல்லோருக்கும் தமது தாய்மொழி தெரிந்திருந்தது. அதே நேரம் ரஷ்ய மொழியும் சரளமாக பேசக் கூடிய அளவுக்கு இரு மொழிப் புலமை பெற்றிருந்தனர். எழுபதாண்டு கால சோவியத் சர்வாதிகாரம் இந்த மொழிகளை அழித்திருந்தால், எவ்வாறு இளைய தலைமுறை அந்த மொழிகளை கற்றுக் கொண்டது? நமது மக்களிலேயே தமிழ் மொழியை பேச விரும்பாமல், ஆங்கிலம் பேசுவதை பெருமையாகக் கருதும் பலர் உண்டு. அத்தகையவர்கள் சோவியத் காலத்திலும் இருந்திருக்கின்றனர். அந்தப் பிராந்தியத்தில் ரஷ்ய மொழியே அதிக வளர்ச்சியடைந்திருந்தது. உயர்கல்வி, உயர்பதவியை நாடுவோர் ரஷ்ய மொழிப் புலமை பெற விரும்பினார்கள். துருக்கி மொழிக் குடும்பத்தை சேர்ந்த மொழிகளுக்கு எழுத்து வடிவம் இருக்கவில்லை. ரஷ்ய சிரிலிக் எழுத்துகளை கொண்டு எழுதும் முறை வந்த பின்னர் தான், அந்த மொழிகளில் நவீன கல்வி பெரும் வாய்ப்புக் கிட்டியது. அது வரை காலமும் இஸ்லாமிய மதகுருக்களால் நடத்தப் பட்ட மதராசாக்களில் திருக்குரான் மட்டுமே கற்பிக்கப்பட்டது. சுருக்கமாக, இன்றைய ஆப்கானிஸ்தான் போலத்தான் அன்றைய மத்திய ஆசிய சோவியத் குடியரசுகள் காணப்பட்டன.

1917 கம்யூனிஸ்ட் புரட்சியை பல வகையான சக்திகள் எதிர்த்துப் போரிட்டன. ஆர்மேனியா, ஜோர்ஜியாவில் தேசியவாத சக்திகள் பலமாக இருந்தன. அசர்பைசான், மற்றும் துருக்கெஸ்தான் (மத்திய ஆசிய குடியரசுகளின் பொதுவான பெயர்) ஆகிய நாடுகளில் இஸ்லாமிய மத அடிப்படைவாதிகள் "கடவுள் மறுப்பாளர்களுக்கு எதிரான ஜிகாத்" நடத்திக் கொண்டிருந்தார்கள். செம்படை முதலில் இவர்களை போரில் தோற்கடிக்க வேண்டியிருந்தது. ஸ்டாலின் தனது தாய் நாட்டின் (ஜோர்ஜியா) தேசியவாதிகளுக்கு கூட கருணை காட்டவில்லை. இரண்டாம் உலகப் போர் தொடங்கிய பொழுது, உக்ரைன் மற்றும் பால்ட்டிக் (எஸ்தோனியா, லாட்வியா, லிதுவேனியா) நாடுகளை சேர்ந்த தேசியவாதிகள் நாஜி ஆக்கிரமிப்பளர்களுடன் சேர்ந்து கொண்டார்கள். ஹிட்லரும் அவர்களின் தனி நாடுகளை அங்கீகரித்து குஷிப் படுத்தியிருந்தார். ஹிட்லரின் வீழ்ச்சியுடன் பறி போன சுதந்திரத்தை, ஜனநாயக மேற்கு நாடுகள் வாங்கிக் கொடுத்தன. இரண்டாம் உலகப்போர் முடிந்த பின்னரும், தேசிய இனங்களை மறு வார்ப்புச் செய்ய வேண்டியேற்பட்டது. எதிரிகளான ஜெர்மனியர்களுடன் ஒத்துழைத்த இனங்களின் பெரும்பான்மைப் பலத்தை குறைக்கும் முகமாக, ஆயிரம் மைல்களுக்கப்பால் கொண்டு சென்று மீள்குடியேற்றம் செய்யப்பட்டன.

ஆனால் அதற்கு முன்னரே, எல்லா சோவியத் குடியரசுகளிலும் குறிப்பிட்ட ஒரு இனத்தின் பெரும்பான்மைப் பலத்தை குறைப்பதற்காக, பிற சிறுபான்மை இனங்களின் பிரதேசங்கள் சேர்க்கப்பட்டன. (இது பற்றி விரிவாக அடுத்த பகுதியில் பார்க்கலாம்.) வருங்காலத்தில் இந்த குடியரசுகள் தனி நாடாக பிரிந்து சென்றாலும், இன முரண்பாடுகள் அவை தாம் விரும்பிய திசையில் செல்ல விடாது தடுக்கும். தேசிய இனங்களின் தலைவிதியை மாற்றியமைத்த ஸ்டாலினின் தொலைநோக்கு இன்று நிதர்சனமாகி வருகின்றது. லண்டனில் இருந்து கொண்டு, பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் தேசிய இனங்களின் தலைவிதியை எழுதியவர்களுக்கும் அத்தகைய தொலைநோக்கு இருந்தது. பங்களாதேஷ், காஷ்மீர், ஈழப் பிரச்சினைகளை ஆங்கிலேயர்கள் முன் கூட்டியே அனுமானித்திருந்திருப்பார்கள். தமிழர்களும், சிங்களவர்களும் இன்னும் நூறு வருடங்களுக்கு சண்டை பிடித்தால் பார்த்து இரசித்துக் கொண்டிருப்பார்களே தவிர, தமிழீழத்தை பிரித்துக் கொடுக்க முன்வர மாட்டார்கள்.

(தொடரும்)


தொடரின் முன்னைய பதிவுகளை வாசிக்க:

1.ஒரு தேசிய இனத்தை உருவாக்குவது எப்படி?
2.பேரினவாதத்திற்கு ஆதரவான மேலைத்தேய சுயநிர்ணய உரிமை
3.காலனிய எச்சங்களான தேசிய இனப்பிரச்சினைகள்

Monday, January 10, 2011

தெற்கு சூடான்: ஒரு புதிய தேசத்தின் ஜாதகம்

இதனை எழுதிக் கொண்டிருக்கும் பொழுது, தெற்கு சூடான் சுதந்திரத்திற்கான மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பு ஆரம்பமாகி விட்டிருந்தது. சூடானின் சக்தி வாய்ந்த அதிபர் பஷீர், தான் புதிய தேசத்தை வரவேற்பதாக ஏற்கனவே தெரிவித்தார். சந்தேகத்திற்கிடமின்றி, பெரும்பான்மை தெற்கு சூடான் மக்கள் பிரிவினைக்கு ஆதரவாக வாக்களிக்கலாம். ஆகவே "சுதந்திர தெற்கு சூடான் தேசம் உதயமாகின்றது...." என்ற நேர்மறையான பார்வையில் இருந்தே எழுத வேண்டியுள்ளது. முடிவுகள் எதிர்பார்த்ததற்கு மாறாகவும் அமையலாம். ஜனாதிபதி கருத்துக் கணிப்பு முடிவுகளை ஏற்க மறுக்கலாம். அதற்கு பல காரணங்களைக் கூறலாம். அவர் கூறக் கூடிய அதிகபட்ச காரணம், தெற்கு சூடானில் சாத்தியமாகக் கூடிய புதிய மோதல்கள்.

இன்று வரை, சமாதான ஒப்பந்தம் குறிப்பிடத்தக்க பிரச்சினைகள் எதுவும் இன்றி நடைமுறைப் படுத்தப் படுகின்றது. இருப்பினும் அரசு, கிளர்ச்சியாளர்கள் ஆகிய இரண்டு தரப்பும் அந்தப் பிராந்தியத்தில் ஆயுதங்களைக் குவிப்பது தொடர்பான செய்திகள் கிடைத்துள்ளன. அரசு எனும் பொழுது, அரச படைகளைத் தவிர, துணை இராணுவக் குழுக்களே அச்சமூட்டுகின்றன. எந்தவொரு நாட்டின் உள்நாட்டு யுத்தத்திலும் அரச ஆதரவுடன் இயங்கும் துணைப் படைகள் சட்டத்திற்கு புறம்பாக இயங்குவதால், அவை யாருக்கும் பதில் கூறக் கடமைப் பட்டவர்களல்ல. சூடானும் அதற்கு விதி விலக்கல்ல. போர் நிறுத்த ஒப்பந்தம், துணைக் இராணுவக் குழுக்களின் ஆயுதங்கள் களையப் பட வேண்டும் என்று கூறுகின்றது. ஆனால் அது பெருமளவில் நடக்கவில்லை என்று தெரிய வருகின்றது. இலங்கையில் புலிகள் அமைப்பில் இருந்து கருணா குழு பிரிந்து சென்றதைப் போல, முன்னாள் SPLA தளபதி ஒருவரின் குழு அரச படைகளுடன் சேர்ந்தியங்கி வருகின்றது.

அரபு மொழி பேசும் அரச படையினரை எதிர்த்து போரிட்ட கிளர்ச்சிக் குழுவான SPLA இயக்கம் தெற்கு சூடானை பிரதிநிதித்துவப் படுத்தியது. வெளியுலகில் இஸ்லாமிய வடக்கு சூடானும், கிறிஸ்தவ தெற்கு சூடானும் போரில் ஈடுபட்டிருப்பதாக நினைத்துக் கொண்டிருக்கின்றனர். ஊடகங்களும் அவ்வாறு தான் செய்தி தெரிவிக்கின்றன. ஆனால் கள நிலைமை அந்தளவு எளிமையாக புரிந்து கொள்ளக் கூடியதல்ல. ஆப்பிரிக்க பழங்குடியினங்கள் வாழும் தெற்கு சூடான், பிரிட்டிஷ் காலனிய காலத்தில் தான் இணைக்கப்பட்டது. ஏற்கனவே அபிவிவிருத்தியடைந்த பகுதியான வடக்கு சூடானில் தான், பிரிட்டிஷாரின் காலனிய ஆட்சியதிகாரம் நிலவியது. தெற்கு சூடானை "நாகரிகமடையச் செய்யும் பொறுப்பை" கிறிஸ்தவ மிஷனரிகளிடம் ஒப்படைத்தார்கள். அவ்வாறு தான் தெற்கு சூடான் கிறிஸ்தவ மயமாகியது. பல பழங்குடியின கிறிஸ்தவர்கள் இன்னமும் தமது மரபுகளைப் பேணி வருகின்றனர். உதாரணத்திற்கு, கிறிஸ்தவ போதனைக்கு மாறாக பல தார மணம் இப்போதும் சர்வ சாதாரணமாக நடந்து கொண்டிருக்கிறது.

வடக்கு சூடானை விட பெருமளவு பின்தங்கியுள்ள தெற்கு சூடானில், வெளிநாட்டு கிறிஸ்தவ தொண்டு நிறுவனங்கள் தான, தர்மம் செய்து கொண்டிருக்கின்றன. மறைமுகமாக SPLA க்கும் நிதி கொடுத்ததாக தகவல். அரபு-இஸ்லாமிய பேரினவாதத்தை, கிறிஸ்தவ தெற்கு எதிர்த்துப் போரிடுகின்றது என்று அவர்கள் தான் செய்திகளை வழங்கிக் கொண்டிருக்கிறார்கள். தலைநகர் கார்ட்டூமில் இஸ்லாமியவாதிகளின் மத்திய அரசும் அவ்வாறான கருத்துகளைப் பரப்பி வருகின்றது. கிறிஸ்தவ சபைகளுக்கு போட்டியாக, அரச ஆதரவு பெற்ற இஸ்லாமிய அமைப்புகளும் தெற்கு சூடானில் மதம் பரப்புகின்றன. இரண்டு மதங்களும் "ஆப்பிரிக்க காட்டுமிராண்டிகளை, நாகரிக மனிதர்களாக்கும் நற்பணியில்" ஈடுபட்டிருக்கின்றன!
எனது சூடானிய நண்பர்களிடம் இருந்து பலதரப்பட்ட கருத்துகளைக் கேள்விப்பட்டேன். வடக்கை சேர்ந்தவர் இடதுசாரி நண்பர்கள் தெற்கு சூடானின் சுயநிர்ணய உரிமையை ஆதரித்தனர். தெற்கு சூடானை சேர்ந்த நண்பர்கள் பொதுவாக SPLA ஆதரவாளர்கள். சூடானை ஆளும் வர்க்கம், அரபு பேரினவாதத்தையும், இஸ்லாமிய மத தூய்மைவாததையும் கொண்டிருப்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் அது அரசியல் சந்தர்ப்பவாதம் மட்டுமே என்பது ஆழமாக பார்ப்பவர்களுக்கு புரியும். பெரும்பாலும் மோதல்களின் நோக்கம் பொருளாதார வளங்களை பங்கு போடுவதற்கான போட்டியாகவே உள்ளது.

தெற்கு சூடான் தனியாகப் பிரிந்து செல்லும் வாக்கெடுப்பு நடப்பதைக் கேள்விப்பட்ட பல தமிழினவுணர்வாளர்கள், "இது போன்றே நாளை எமக்கு தமிழீழம் கிடைக்கும்." என்று நம்பிக்கை தெரிவித்தார்கள். சாதாரண மக்கள் எப்போதும் பிரச்சினைகளை ஆழமாக அலசி ஆராயாமல், செய்திகளை வைத்து அரசியல் பேசுகின்றனர். தமிழர்கள் மட்டும் தானா அப்படி நம்பிக்கையோடு காத்திருக்கிறார்கள்? சூடானிலேயே டார்பூர், மேல் நைல்நதிப் பிரதேச மக்கள் எல்லாம் தமக்கு தனி நாடு தேவை என்று போராடிக் கொண்டிருக்கிறார்கள். சூடான் ஆப்பிரிக்காவிலேயே மிகப்பெரிய நாடு. அதற்குள் எத்தனையோ வேறு பட்ட மொழிகளைப் பேசும், அல்லது வேறுபாடான கலாச்சாரங்களைக் கொண்ட இனங்கள் வாழ்கின்றன.
தெற்கு சூடானை முன்மாதிரியாகக் கொண்டு, பிற மாநிலங்களில் போர்கள் உருவாகலாம். கார்ட்டூமில் மத்திய அரசு, அரசமைக்க இயலாத பலவீனமான நிலை ஏற்படலாம். ஏற்கனவே டார்பூர் பிரதேச போரில் இனப்படுகொலை நடந்ததாக சர்வதேச சமூகம் குற்றம் சாட்டி வருகின்றது. இது சம்பந்தமாக விசாரிக்க நியமிக்கப்பட்ட நீதிமன்றத்தினால், ஜனாதிபதி பஷீர் குற்றவாளியாக காணப்பட்டார். சர்வதேச நீதிமன்றத்திற்கு சவால் விடும் வகையில், பஷீர் அரபு நாடுகளுக்கு விஜயம் செய்து வருகின்றார். சர்வதேச அரங்கில் இன்னுமொரு போர்க்குற்ற விசாரணை நாடகம். உண்மையில் சர்வதேசத்தின் அக்கறை டார்பூரின் மேல் அல்ல. போர்க்குற்றச் சாட்டுகள் கூட பஷீர் மீதான அழுத்தத்தை பிரயோகிப்பதற்காக மட்டுமே. சர்வதேசம் (இங்கே, அமெரிக்காவையும் மேற்கு ஐரோப்பாவையும் குறிக்கும்) தெற்கு சூடான் மீது தான் அதிக அக்கறை கொண்டுள்ளது. அந்தப் பிரச்சினைக்கு தாம் விரும்பும் தீர்வை, அதாவது தனியான தேசம், கொண்டு வர எத்தனித்தனர். அதில் வெற்றியும் கண்டு விட்டனர்.

மேலுக்கு சுதந்திரம் பற்றி பேசினாலும், தெற்கு சூடானில் இருக்கும் எண்ணெய் வளம் மீது தான் எல்லோரும் கண் வைத்துள்ளனர். சூடானில் இருந்து எண்ணெய் அகழ்ந்து ஏற்றுமதி செய்யும் தொழிற்துறையில் சீனா மட்டுமே ஈடுபடுகின்றது. சீனாவை விரட்டி விட்டு, மேற்குலக எண்ணெய்க் கம்பனிகள் நுழையப் பார்க்கின்றன. இன்று சூடானின் மொத்த வருமானத்தில், எண்ணெய் உற்பத்தி 50 % பங்கை வகிக்கின்றது. தெற்கு சூடான் தனி நாடானால், அதன் நூறு வீத வருமானமும் எண்ணெயில் இருந்து தான் கிடைக்கும். பிரிவினைக்கான வாக்கெடுப்புக்கு முன்னர் எட்டப்பட்ட ஒப்பந்தப் படி, எண்ணெய் வருமானத்தில் அரைவாசிப் பங்கு, வடக்கு சூடானுக்கும், அரைவாசி தெற்கு சூடானுக்கும் செல்ல வேண்டும்.

மேலும் வடக்கு சூடானுக்கும், தெற்கு சூடானுக்கும் நடுவில் இருக்கும் அபெய் மாகாணம் தனியான வாக்கெடுப்பை நடத்துகின்றது. எந்த நாட்டுடன் சேர்வது என்பது குறித்து அந்த மாகாண மக்கள் முடிவு செய்யப் போகின்றார்கள். அந்த முடிவு மிக முக்கியமானதாக கருதப் படுகின்றது. ஏனெனில் மற்ற பகுதிகளை விட அதிகளவு எண்ணெய் அபெய் மாகாணத்தில் காணப்படுகின்றது. இன்னொரு விடயமும் முக்கியமாக கவனிக்கப்பட வேண்டும். தெற்கு சூடான் இறைமையுள்ள தனி நாடு என்ற அந்தஸ்தைப் பெற்றாலும், அது வெறும் அரசியல் சுதந்திரம் மட்டுமே. பொருளாதார ரீதியாக வடக்கு சூடானில் தங்கியிருக்க வேண்டும். வெளிநாடுகளுக்கு எண்ணெய் ஏற்றுமதி செய்யும் குழாய்கள் வடக்கு சூடானூடாக சென்று தான் கடலை அடைகின்றன. இதனால் வடக்கு சூடானும், தெற்கு சூடானும் இரு தரப்பு நலன்களைக் கருத்தில் கொண்டு நல்லுறவைப் பேண வேண்டியிருக்கும்.

சூடான் குறித்த முன்னைய பதிவுகள்:
சூடான்: இஸ்லாமிய வடக்கும், கிறிஸ்தவ தெற்கும்
சூடான்: எண்ணைக்காக பிரிவினை கோரும் டார்பூர்
நைல் நதி: ஆப்பிரிக்காவின் நீளமான இரத்த ஆறு

Saturday, January 08, 2011

காலனிய எச்சங்களான தேசிய இனப்பிரச்சினைகள்


[ஒரு தேசிய இனத்தை உருவாக்குவது எப்படி?] (பகுதி : 3)

2003 ம் ஆண்டளவில் என்று நினைக்கிறேன். அமெரிக்கா, ஈராக் போருக்கு தயார் படுத்திக் கொண்டிருந்த காலகட்டம். பெல்ஜியத்தில் ஏகாதிபத்தியத்திற்கு எதிராக போராடும் நாடுகளையும் அமைப்புகளையும் ஆதரிக்கும் கூட்டம் ஒன்று நடைபெற்றது. பெல்ஜியம், நெதர்லாந்து, பிரான்ஸ், பிரிட்டன் ஆகிய நாடுகளில் இருந்து வந்த, புரட்சிகர கம்யூனிஸ்ட் கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். இன்று பனிப்போர் கிடையாது. அதனால் மார்க்சிய சித்தாந்தப் படி நடக்கும் தேசத்துடன், அல்லது அமைப்புடன் மட்டும் நட்பை பேணுவோம் என்று கூற முடியாது. ஆகையினால் காலத்திற்கேற்ப தந்திரோபாயங்களையும் மாற்றிக் கொள்ள வேண்டும். பெல்ஜியத்தில் நடந்த கூட்டத்தில் காரசாரமான விவாதங்கள் நடந்தன. தமது கட்சியின் தலைமை சதாமின் ஈராக்கை ஆதரிப்பதையிட்டு கட்சி உறுப்பினர்களே எதிர்ப்பு தெரிவித்தார்கள். அதைப் போன்றே, மத அடிப்படைவாத ஹமாஸ் பக்கம் நிற்பதையும் பலர் எதிர்த்தார்கள். இதை எல்லாம் ஏன் இங்கே கூறுகின்றேன் என்றால், "கம்யூனிஸ்ட்கள் கண்ணை மூடிக் கொண்டு, எந்த வித விமர்சனமுமின்றி பிற்போக்கு சக்திகளையும் தேசிய விடுதலையின் பேரில் ஆதரிப்பார்கள்," என்ற தவறான கருத்தை பலர் கொண்டிருக்கின்றனர். "கம்யூனிஸ்டுகள் உலகில் உள்ள அனைத்து தேசிய விடுதலைப் போராட்டங்களையும் ஆதரிக்க வேண்டும், அது அவர்கள் சித்தாந்தம்." என்றெல்லாம் பலர் தவறாக வியாக்கியானம் செய்கின்றனர். கேள்விச்செவியன் ஊரைக் கெடுப்பான் என்ற பழமொழிக்கேற்ப, ஒன்றை பற்றி அரைகுறையாக தெரிந்தவர்கள் மற்றவர்களின் மனதையும் கெடுக்கின்றனர்.

பெல்ஜியத்தில் நடந்த கூட்டத்தில் கலந்து கொண்ட அறுபது வயதைக் கடந்த பேராளர் ஒருவர் குறிப்பிட்டார். "முன்னொரு காலத்தில் சைப்ரஸ் விடுதலைக்கு போராடிய கிரேக்க எயோகஸ் அமைப்பை ஆதரித்தோம். அது ஒரு பாஸிச அமைப்பு என்பதை பின்னர் தெரிந்து கொண்டோம். இருப்பினும் சைப்பிரசில் பிரிட்டிஷ் காலனியாத்திக்கத்திற்கு எதிரான போராட்டத்தை மட்டுமே ஏற்றுக் கொண்டு ஆதரித்தோம். பாலஸ்தீனர்களின் உரிமைகளுக்காக பேசினால், ஹமாஸ் ஆதரவு என்று பிரச்சாரம் செய்கின்றனர். மார்க்சிய PLFP குறைந்தளவு மக்களின் ஆதரவைக் கொண்டது. அதே நேரம் மத அடிப்படைவாத ஹமாஸ் பெரும்பான்மை மக்களின் ஆதரவை பெற்றுள்ளது. அந்த உண்மையை மறுக்க முடியாது." இந்திய இடதுசாரிகளும் இதே நிபந்தனையின் கீழ் விடுதலைப் புலிகளை ஆதரிப்பதாக கூறுகின்றனர். "பெரும்பான்மை தமிழர்கள் அவர்கள் பின்னால் நிற்கின்றனர்...." பெல்ஜியம் கூட்டத்தில் பிரிட்டனைச் சேர்ந்த மாணவர்கள் சிலரும் கலந்து கொண்டிருந்தனர். அவர்களுக்கு இலங்கைப் பிரச்சினை குறித்து ஆழமான ஈடுபாடு இருந்தது. புலிகள் மார்க்சிச- லெனினிச சித்தாந்த அடிப்படையில் இயங்கும் அமைப்பு என்று, தமக்கு சில ஈழத்தமிழர் கூறியதாக தெரிவித்தனர்.

"மார்க்சியவாதிகள் அனைத்து வகை தேசிய விடுதலைப் போராட்டங்களையும் நிபந்தனையின்றி ஆதரிக்க வேண்டும்." என்று எங்கே எழுதப் பட்டுள்ளது? அநேகமாக இவ்வாறு (விதண்டா) வாதம் செய்பவர்கள் வலதுசாரிகள் என்பது குறிப்பிடத் தக்கது. தாலிபான், ஹமாஸ், ஆகிய மத அடிப்படைவாத அமைப்புகளும் தேசிய விடுதலைப் போராட்டம் நடத்துகின்றன. மிக மிகக் குறைந்த அளவு வலதுசாரி அறிவுஜீவிகளே, அவற்றை தேசிய விடுதலை இயக்கங்களாக ஆதரிக்க முன்வருவார்கள் என்பது நிதர்சனம். ஐரோப்பாவில் மார்க்ஸியம் தோன்றிய காலத்தில் இருந்தே தேசிய இனப் பிரச்சினை சம்பந்தமாக கவனத்தில் எடுக்கப் பட்டு வந்துள்ளது. மார்க்ஸ், எங்கெல்ஸ் ஆகியோர் அயர்லாந்து விடுதலையை ஆதரித்தனர். அயர்லாந்து சுதந்திரமடைந்தால், அது ஒரு முதலாளித்துவ நாடாகவே அமையும் என்பதை தெரிந்து தான் ஆதரித்தார்கள். பிரிட்டிஷ் காலனியாதிக்கத்தில் இருந்து ஒரு நாடு விடுதலையடைவது முற்போக்கானது என்பதே அவர்கள் கூறிய நியாயம். அதே நேரம் பகுனின், புருடோ போன்ற அனார்கிசவாதிகள் எந்தவொரு தேசியமும் பிற்போக்கானது என்று வாதாடினார்கள். இன்றைக்கும் அனார்கிஸ்டுகள் தேசிய எல்லைகளை, தேசிய அரசுகளை, தேசிய இனங்களை ஏற்றுக் கொள்வதில்லை. இவை யாவும் பாட்டாளி வர்க்கத்தை பிரிக்கின்றன, என்று அவர்கள் கூறும் காரணத்தை உண்மையை மறுப்பதற்கில்லை.

மார்க்ஸ், எங்கெல்ஸ், பகுனின், புருடோ ஆகியோர், ஐரோப்பிய சோஷலிச முதலாம் அகிலத்தில் நன்கு அறியப்பட்டவர்கள். அவர்கள் காலத்தில் தான் ஏறக்குறைய இன்றுள்ள ஐரோப்பிய தேசிய அரசுகள் தோன்றியிருந்தன. (அது குறித்து ஏற்கனவே முதல் இரண்டு அத்தியாயங்களிலும் எழுதியிருக்கிறேன்.) அதனால் அவர்கள் சிந்தனை முழுவதும், தேசிய அரசுகளை நிராகரித்து, உழைக்கும் மக்களின் நலன் பேணும் சோஷலிச அரசு அமைப்பதிலேயே குவிந்திருந்தது. இருப்பினும் அவர்களிடம் இருந்து பிரிந்த சமூக-ஜனநாயகவாதிகள் தேசிய அரசில் பங்கெடுப்பதாக அறிவித்தன. அவர்கள் தமக்கென இரண்டாவது அகிலம் ஒன்றை உருவாக்கினர். முதலாவது அகிலம், பாட்டாளி மக்களின் அதிகாரத்தைக் கொண்ட தேசியத்தை மட்டும் ஏற்றுக் கொண்டது. இரண்டாவது அகிலம் அதற்கு மாறாக அனைத்து பிரஜைகளினதும் தேசத்தை ஏற்றுக் கொண்டது. "குறிப்பிட்ட பிரதேசத்தில் மட்டும் அது ஒரு தேசிய இனமாகும் என்ற வரையறை அவசியமில்லை." (யூத தேசியத்திற்கு பொருந்துவது) போன்ற கோட்பாடுகள் முன்மொழியப்பட்டன.
ஸ்டாலினின் "மார்க்சியமும் தேசிய இனப்பிரச்சினையும்" என்ற நூலிலும், சமூக ஜனநாயக அறிஞர்களின் தேசியம் குறித்து விமர்சிக்கப்படுகின்றது. எடுத்துக்காட்டாக, "ஒவ்வொரு தேசிய இனத்தினதும் சுய நிர்ணய உரிமையை அங்கீகரிக்கும் சமூக-ஜனநாயகவாதிகள், அந்த தேசிய இனம் தனியாக பிரிந்து போகும் பொழுது அடக்க முனைவார்கள்...."

ஸ்டாலினின் தேசிய இனங்கள் குறித்த நூலில் இருந்து தான் பலர், "மார்க்சிய தேசியவாதத்தை" ஆராய்கின்றனர். ஸ்டாலின் வியனாவில் (அன்று ஆஸ்திரிய-ஹங்கேரிய ராஜ்ய தலைநகரம்) தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்த காலத்தில் தான் புதிய தேசிய அரசுகள் உருவாகியிருந்தன. அதனால் ஸ்டாலினுக்கு தேசிய இனம், தேசிய அரசு குறித்த அனுபவ அறிவு இருக்கும் என்று லெனின் நம்பினார். புரட்சிக்குப் பின்னர் அமையப்போகும் சோவியத் குடியரசில் தேசிய இனங்களை வகைப்படுத்தும் பொறுப்பு அவ்வாறு தான் ஸ்டாலின் கைக்கு வந்தது. புரட்சிக்கு முன்னர் ரஷ்ய சாம்ராஜ்யத்தில் 150 க்கும் குறையாத மொழிகளைப் பேசும் இனங்கள் வாழ்ந்தன. அந்த நாட்டின் எல்லைக்குள் பேசப்பட்ட 150 மொழிகளில் ஒன்று தான் ரஷ்ய மொழி. மேற்கில் இருக்கும் மின்ஸ்க் நகரில் இருந்து, கிழக்கில் உள்ள விலாடிவொஸ்டொக் வரை பிரயாணம் செய்தால், அரைவாசி உலகைச் சுற்றிப் பார்த்த உணர்வு தோன்றும்.

முதலாம் உலகப்போர் வரையில், சார் ரஷ்ய சாம்ராஜ்யமும், பிரிட்டிஷ் சாம்ராஜ்யமும் ஒன்றுடன் ஒன்று வல்லரசுப் போட்டியில் ஈடுபட்டிருந்தன. ஏட்டிக்குப் போட்டியாக நாடுகளை பிடித்து காலனியாக்கிக் கொண்டிருந்தன. ஒரு காலத்தில் ஆப்கானிஸ்தான் இரண்டு சாம்ராஜ்யங்களினதும் எல்லைக்கோடாக இருந்தது. ரஷ்யாவும், பிரிட்டனும் இரண்டு உலகப்போரில் பெருமளவு இழப்புகளை சந்தித்திருந்தன. இருப்பினும் ரஷ்ய சாம்ராஜத்தின் எல்லைக்குட்பட்ட நாடுகளை புதிய ஆட்சியாளர்களால் (போல்ஷெவிக் கம்யூனிஸ்டுகள்) தொடர்ந்து பராமரிக்க முடிந்தது. அந்தளவு வல்லமை பிரிட்டிஷாருக்கு இருக்கவில்லை. அதற்கு காரணம், இயற்கையான புவியியல் காரணிகள்.

பிரிட்டன் ஆயிரம் மைல்கள் கடல் கடந்து சென்று, காலனிகளை பராமரிக்க வேண்டியிருந்தது. அது நடைமுறைச் சாத்தியற்றது மட்டுமன்று, சாம்ராஜ்யத்தை கட்டியாள அதிக செலவு பிடித்தது. இதனால் காலனிகளுக்கு சுதந்திரம் கொடுத்து விட்டு, நவ காலனிய கட்டுப்பாட்டை வைத்திருப்பது இலகுவாகப் பட்டது. இந்தியாவும், இலங்கையும், இங்கிலாந்து எல்லையோரம் அமைந்திருந்தால், இன்றைக்கும் பிரிட்டன் என்ற ஒரே நாட்டின் மாநிலங்களாக இருந்திருக்கும். ஆகவே இத்தகைய வரலாற்றுப் பின்புலத்தைக் கொண்டு தான், இரண்டு சம்ராஜ்யங்களினதும் தேசிய இனங்களின் பிரச்சினையை புரிந்து கொள்ள வேண்டும். இன்றைக்கு தனிதனி தேசங்களான முன்னாள் சோவியத் குடியரசுகளில் ரஷ்யாவின் தலையீடு அதிகரித்து வருகின்றதே தவிர குறையவில்லை. பிரிட்டனும் அதைத்தான் தனது முன்னாள் காலனிகளில் செய்து கொண்டிருக்கின்றது. இவர்கள் யாரும் நேரடியாக தங்கள் நோக்கத்தை தெரிவிப்பதில்லை. பிரான்ஸ் மட்டும் உள்ளதை உள்ளபடியே கூறி வருகின்றது. முன்னாள் ஆப்பிரிக்க காலனிகளில் தலையீடு செய்வது, தனது நலன் சார்ந்த விடயம் என்பதை, பிரான்ஸ் ஒரு நாளும் மறுக்கவில்லை.

(தொடரும்)


Friday, January 07, 2011

பேரினவாதத்திற்கு ஆதரவான மேலைத்தேய சுயநிர்ணய உரிமை


[ஒரு தேசிய இனத்தை உருவாக்குவது எப்படி?] 
(பகுதி : 2)

தேசியவாதம் எப்போதும் வலதுசாரிக் கருத்தியலாகவே பார்க்கப்பட்டது. "நாங்கள்", "அவர்கள்" என்று இனங்களை மோதல் நிலையில் வைத்திருப்பது, வலதுசாரித் தேசியவாதம் என்று பிரிக்கப்பட்டது. இதைவிட சமத்துவம், சுதந்திரம் என்பனவற்றிற்கு போராடுவது இடதுசாரித் தேசியம் என்று வகைப் படுத்தப்பட்டது. தேசியவாதத்தின் வளர்ச்சியை ஐந்து கட்டங்களாக பிரித்து புரிந்து கொள்ளலாம்.

முதலாவது கட்டம்: தேசியவாதத்தின் பிறப்பு. பிரெஞ்சுப் புரட்சியின் போது தான் முதன்முதலாக "தேசியம்" என்ற சொல் பாவிக்கப்பட்டது. அந்தக் காலகட்டத்தில் அது முற்போக்கான பாத்திரத்தை வகித்தது. நிலவுடமையாளர்களுக்கு எதிராக சாதாரண மக்களை, தேசியம் என்ற பெயரில் முன்னிறுத்தியது. அன்று தேசியம் என்பது சாமானிய உழைக்கும் மக்களைக் குறிக்கும். நிலப்பிரபுக்கள் தேசியத்துக்குள் அடங்கவில்லை. புரட்சி நடந்த காலத்தில் பல மொழி பேசும் மக்களும் பிரஜைகள் என்று சமத்துவமாக பார்க்கப்பட்டனர்.

இரண்டாவது கட்டம்: 1870 ம் ஆண்டுக்குப் பின்னரும், முதலாம் உலகப்போர் வரையிலும். தேசியம் என்றால் இனம் என்று புரிந்து கொள்ளப்படுகின்றது. பல தேசிய அரசுகள் தமக்கென ஒரு மொழியை அரச கரும மொழியாக்கின. ஆதிக்கம் செலுத்திய மொழியைப் பேசும் மக்கள் தனி இனமாக கருதப்பட்டனர். சிறுபான்மை மொழிகள் அடக்கப்பட்டன. இந்தப் பிரிவினை ஏற்படுத்திய முறுகல் நிலை, முதலாம் உலக யுத்தத்தில் போய் முடிந்தது.

மூன்றாவது கட்டம்: முதலாம் உலகப்போர் முடிவில், மேற்குலகில் வில்சன் கோட்பாடு "தேசிய சுயநிர்ணயம்" என்ற ஒன்றை அறிமுகப்படுத்தியது. ஐ.நா. சபையின் முன்னோடியான, தேசங்களின் கூட்டமைப்பிலும் அது அங்கீகாரம் பெற்றது. அதற்கு வேறொரு தூண்டுதலும் இருந்தது. ரஷ்யாவில் போல்ஷெவிக் புரட்சி வெற்றி பெற்றதும், 1918 ல் கம்யூனிஸ்ட்கள் சுயநிர்ணைய உரிமை அடிப்படையிலான சோவியத் குடியரசுகளை அறிவித்தனர். காலனிய நாடுகள் விடுதலையடைய உரிமையுடையவை என்று அறிவித்தனர். போல்ஷெவிக் பிரகடனத்தை சமன் செய்வது போல வில்சன் கோட்பாடு அமைந்திருந்தது. முதலாம் போரின் முடிவில் ஐரோப்பாவின் வரைபடம் மாறியிருந்தது. புதிதாக பல நாடுகள் சுதந்திரமடைந்தன. அவற்றின் சுயநிர்ணய உரிமையை வில்சன் கோட்பாடு அங்கீகரித்தது. ஆனால் அதற்காக ஒவ்வொரு இனமும் தனக்கான தேசிய அரசை பெற்றுக் கொண்டன என்று அர்த்தமில்லை. உதாரணத்திற்கு யூகோஸ்லேவியா என்ற சுயநிர்ணய உரிமை கொண்ட புதிய நாட்டில், செர்பியர்கள் பிற தேசிய இனங்கள் மீது ஆதிக்கம் செலுத்தினர். ஐரோப்பாவில் நிலவிய குழப்பகரமான சூழ்நிலை இரண்டாம் உலகப்போருக்கு வழி வகுத்தது.

நான்காவது கட்டம்: இரண்டாம் உலகப்போர் முடிந்த பின்னர், உலகில் இடதுசாரிகளின் பலம் அதிகரித்தது. காலனியாதிக்கத்தை இல்லாதொழிப்பதற்கு தேசியவாதத்தின் அவசியத்தை இடதுசாரிகளும் உணர்ந்தனர். லத்தீன் அமெரிக்கா, ஆப்பிரிக்கா, ஆசியா கண்டங்களில் பல காலனிகள் விடுதலையடைந்தன. முதலாம் உலகப்போர் காலத்தில், கனடா, நியூசிலாந்து போன்ற பிரிட்டிஷ் காலனிகளுக்கு சுதந்திரம் வழங்கப்பட்டது. "வெஸ்ட்மின்ஸ்டர் யாப்பு" அடிப்படையிலேயே அந்த சுதந்திரம் வழங்கப்பட்டது. இருப்பினும் ஆசிய, ஆப்பிரிக்க கண்டங்களை சேர்ந்த பிரிட்டிஷ் காலனிகள் இரண்டாம் உலகப்போர் வரையில் காத்திருக்க வேண்டியேற்பட்டது. சுயநிர்ணய உரிமையை முன்மொழிந்த வில்சன் கோட்பாட்டின் நீட்சியாகவே வெஸ்ட்மின்ஸ்டர் யாப்பு கருதப்படுகின்றது. பிரிட்டனிடம் இருந்து சுதந்திரம் பெற்ற காலனிகள் அந்த யாப்பை அடிப்படையாக கொண்டிருந்தன. அண்மையில் சிம்பாப்வே வெஸ்ட்மின்ஸ்டர் யாப்புக்கு பதிலாக, புதிய யாப்பு எழுதக் கிளம்பிய பொழுது சர்வதேச நெருக்கடியை எதிர்கொண்டது. (1972 ல் குடியரசான இலங்கை அதே போன்ற நெருக்கடிக்கு உள்ளானது.) இன்று பல தமிழ் தேசியவாத அறிவுஜீவிகள் வில்சன் கோட்பாடு, வெஸ்ட்மின்ஸ்டர் யாப்பு போன்றன தமிழ் இனத்தின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிப்பது போல பேசி வருகின்றனர். உண்மையில் வில்சன் கோட்பாடு ஐரோப்பாவை மட்டும் மனதில் கொண்டு உருவாக்கப்பட்டது. வெஸ்ட்மின்ஸ்டர் யாப்பு ஆங்கிலேயர் குடியேறிய காலனிகளுக்கு சுதந்திரம் வழங்கும் நோக்குடன் எழுதப்பட்டது. இரண்டுமே காலனிய அடிமைப்பட்ட நாடுகளின் விடுதலை குறித்து பேசவில்லை.

ஐந்தாவது கட்டம்: பெர்லின் மதில் இடிந்து, சோஷலிச நாடுகள் மறைந்து விட்ட காலகட்டம். தற்காலத்தில் நாம் வாழும் உலகில் பல மோதல்களுக்கு காரணமானது. வலதுசாரிகளும், இடதுசாரிகளும் தமக்கேற்ற தேசியவாதம் பேசிய காலம் மறைந்து விட்டது. மேற்குலகின் ஆதிக்கத்தின் கீழ் வலதுசாரி சக்திகள் தாம் விரும்பியவாறு தேசியவாதத்தை வரையறுக்கின்றனர். அது மேலும் புதிய நாடுகளின் தோற்றத்திற்கு வழிவகுத்தது. யூகோஸ்லேவியா உடைந்து செர்பியா, ஸ்லோவேனியா, குரோவேசியா, போஸ்னியா, மாசிடோனியா, மொண்டி நெக்ரோ, கொசோவோ போன்ற புதிய தேசங்கள் உருவாகின. இப்படி எந்த தேசம் புதிதாக உருவாக வேண்டும் என்று அவர்களே தீர்மானித்தார்கள். வேறு சில நாடுகளின் தேசிய சுயநிர்ணய உரிமையை அவர்கள் அங்கீகரிக்கவில்லை. உதாரணத்திற்கு அப்காசியா, ஒசேத்தியா.

இவ்விடத்தில் சில முக்கிய குறிப்புகளை மீளாய்வு செய்ய வேண்டும். இலங்கையில் ஒரு காலத்தில், தமிழ் தேசியம் பேசிய வலதுசாரிகள், "சிங்கள இனவாதம்" என்ற சொல்லை மட்டுமே பாவித்து வந்தனர். அதே நேரம், சிங்கள/தமிழ் இடதுசாரிகள் சிங்களப் பேரினவாதம் என்ற சொல்லை பாவித்தனர். தற்போது சிங்கள பேரினவாதம் என்ற சொல் பரவலாக எல்லோராலும் பயன்படுத்தப் படுகின்றது. மேற்குலக அரசியல் கோட்பாட்டாளர்கள் உருவாக்கிய "சுயநிர்ணய உரிமை" ஒவ்வொரு தேசிய இனத்துக்குமானது என்ற தவறான புரிதல் காணப்படுகின்றது. உண்மையில் மேற்குலக சுயநிர்ணய உரிமை தோன்றிய காலத்தில், அது ஐரோப்பாவில் பேரினவாத அரசுகளுக்கு ஆதரவாகவே எழுந்தது.

உதாரணத்திற்கு பிரான்ஸில் கோர்சிகா, ஒக்கிடண்டல், நோர்மாண்டி, அல்சாஸ், பாஸ்க் ஆகிய மாகாணங்களுக்கென தனியான மொழிகள் உள்ளன. இவை பிரெஞ்சு மொழிக்கு சம்பந்தமில்லாதவை. ஆனால் பிரெஞ்சு பேரினவாதம் அந்த சிறுபான்மை மொழிகளை அடக்கி அழித்தது. பொது இடங்களில், தெருவில் கூட பிரெஞ்சு மொழி தவிர்ந்த வேறு மொழிகள் பேசக் கூடாது என்று உத்தரவு போட்டது. மீறியோர் கடுமையாக தண்டிக்கப்பட்டனர். ஜெர்மனியிலும் அதே போல, டென்மார்க்கை அண்டிய பகுதியில் பிரீஸ் என்றொரு மொழி பேசும் மக்கள் வாழ்கின்றனர். முதலாம், இரண்டாம் உலகப்போருக்கு இடைப்பட்ட ஜெர்மனியில் போலிஷ் மொழி பேசும் பிரதேசங்களும் அடங்கின. ஆனால் ஜெர்மன் பேரினவாதம் இவற்றை எல்லாம் அடக்கி, ஜெர்மன் மொழி மட்டுமே உத்தியோகபூர்வ மொழியாக்கியது. அதே போல நெதர்லாந்தில், பிரீஸ்லாந்து மாகாணத்தில் பேசப்படும் பிரீஸ் மொழி, மற்றும் மாகாணங்களுக்கு உரிய கிளை மொழிகள், எல்லாவற்றையும் ஹோலந்து மொழி ஆதிக்கம் செலுத்தியது. அதாவது ஹோலந்து என்ற மேற்கு மாகாணத்தில் மட்டுமே பேசப்பட்ட மொழி. அது பின்னர் நெதர்லாந்து (டச்சு) என்ற பெயரில் செம்மையான மொழியாக்கப்பட்டது. யூகோஸ்லேவியாவில் செர்பிய மொழி ஆதிக்கம் செலுத்தியது. இவ்வாறு கூறிக் கொண்டே போகலாம்.

நாம் இங்கே கவனிக்க வேண்டிய அம்சம் என்னவெனில், மேற்குலக "சுயநிர்ணய உரிமை" கோட்பாட்டாளர்கள், அத்தகைய பேரினவாத அரசுகளுக்கு ஆதரவாகவே கொள்கை வகுத்தனர். அதே கொள்கையை பின்னர், ஐரோப்பிய காலனிகளிலும் நடைமுறைப் படுத்தினர். பிரிட்டிஷ் காலனிகளாக இருந்து சுதந்திரமடைந்த நாடுகளை உதாரணமாக எடுப்போம். இந்தியாவில் இந்தி மொழி, பாகிஸ்தானில் உருது மொழி, இலங்கையில் சிங்கள மொழி, பிற மொழிகளின் மீது ஆதிக்கம் செலுத்துவது, பிரிட்டிஷாருக்கு ஒரு பிரச்சினையாக இருக்கவில்லை. மாறாக, அத்தகைய ஆதிக்கம் தமது நிர்வாக பிரிவுகளை நிரந்தரமாக வைத்திருக்க உதவும் என்று நம்பினார்கள். அதாவது காலனிய காலத்தில் எவ்வாறு ஆங்கில மொழி ஆதிக்கம் செலுத்தியதோ, அதே இடத்தில் காலனிகளில் பெரும்பான்மை மொழிகள் உள்ளன. இது பிரிட்டிஷாரின் நவகாலனித்துவ கொள்கைக்கு ஏற்றதாகவே அமைந்துள்ளது. அன்று எஜமானர்கள் நேரடியாக ஆண்டார்கள். இன்று எஜமானர்களின் சுதேசிப் பிரதிநிதிகள் ஆள்கிறார்கள். அது மட்டும் தான் வித்தியாசம்.


(தொடரும்)


Thursday, January 06, 2011

ஒரு தேசிய இனத்தை உருவாக்குவது எப்படி?


"ஒரு தேசிய இனம் தேசியத்தை உருவாக்குவதில்லை. மாறாக, ஒரு தேசியமே தேசிய இனத்தை உருவாக்குகின்றது." - சரித்திரவியலாளர் Eric Hobsbawm

சுமார் 200 வருடங்களுக்கு முன்னர் வரை, "தேசிய இனம்" என்றால் என்னவென்று எவருக்கும் தெரியாத காலம் ஒன்றிருந்தது. ஒரே மொழி பேசும் மக்கள், இனம், தேசிய இனம் எல்லாம் பிற்காலத்தில் செயற்கையாக உருவாக்கப்பட்டவை தான். முந்திய காலங்களில் மக்கள் தாம் சார்ந்த மதத்துடன், இனக்குழு, சாதி, பிரதேசம், குடும்பம் இவற்றுடன் சேர்த்து பார்க்கப்பட்டனர். அவற்றையே தமது அடையாளமாக காட்டிக் கொண்டனர். உலகில் எந்த மூலையிலும், "தேசிய இனம்" என்ற ஒரு பிரிவு இருக்கவில்லை. நூறு வருடங்களுக்கு முன்னர், "சிங்களவர்களும், தமிழர்களும் தனிதனி தேசிய இனங்கள்." என்று எவராவது கூறினால், எல்லோரும் அவருக்கு பைத்தியம் பிடித்து விட்டது என்று நினைப்பார்கள். புராதன காலத்தில் பௌத்த, இந்து மதங்கள் மட்டுமே பிரதேசம் கடந்து, சாதிப் பாகுபாட்டைக் கடந்து மக்களை ஒன்றிணைத்தன.

"தேசியம்" என்றால் இப்படித்தான் இருக்கும் என்று வரையறுப்பது கடினம். அதன் அர்த்தம் காலத்துக்கு காலம் மாறிக் கொண்டு வந்துள்ளது. பிரெஞ்சுப் புரட்சியின் போது கூறப்பட்ட தேசியம், பிரான்சின் அதிகார எல்லைக்கு உட்பட்ட அனைத்து பிரஜைகளையும் குறித்தது. பிற்காலத்தில் "தேசியம்", "இனம்" இரண்டும் ஒன்றாக சேர்க்கப்பட்டது. ஒரே மொழி பேசும், ஒரே கலாச்சாரம் கொண்ட மக்களை தேசிய இனம் என்றார்கள். மேற்கொண்டு அந்த அர்த்தத்திலேயே தேசியத்தை ஆராய வேண்டியிருக்கின்றது. ஐரோப்பாவில் 18 ம் நூற்றாண்டின் இறுதியிலும், 19 ம் நூற்றாண்டு முழுவதும், இன்று நாம் காணும் அடிப்படையைக் கொண்ட நவீன தேசங்கள் உருவாகின. தொழிற்புரட்சி, பொருளாதார வளர்ச்சி என்பன, தேச பரிபாலனத்தில் பல மாற்றங்களை கொண்டு வந்தன. புதிய ஆளும் வர்க்க பிரதிநிதிகளுக்கு, மக்களை ஆள்வது முன்னர் எப்போதும் இல்லாதவாறு கடினமாக இருந்தது. முன்பு மதமும், நிலப்பிரபுத்துவ சமூக அமைப்பும், இந்திய உபகண்டத்தில் சாதியமைப்பும் மக்களை ஒரு கட்டுக்கோப்புக்குள் அடக்கி வைத்திருந்தது. அத்தகைய சமூக அமைப்பு முதலாளித்துவ பொருளாதாரம் வளருவதற்கு தடைக்கல்லாக இருந்தது. மேலும் பிரெஞ்சுபுரட்சியின் பின்னர், ஐரோப்பிய நாடுகளின் ஆளும் வர்க்கம், தாராளவாத சித்தாந்தமே சிறந்தது என்று நம்பினார்கள்.

மக்களின் விசுவாசத்தைப் பெறுவதற்கு, மேலிருந்து அவர்களை ஆளுவதற்கு தேசியவாதம் சிறந்த தத்துவமாகப் பட்டது. தேச எல்லைக்குள் பொதுவான மொழி ஒன்று உருவாக்கப்பட்டது.பெரும்பான்மையான தேசிய அரசுகளில் ஆளும் வர்க்கம் எந்தப் பிரதேசத்தை சேர்ந்ததோ, அந்தப் பிரதேச மொழி பொது மொழியாகியது. ஒரு நாட்டின் எல்லைக்குள் வாழும் மக்கள் மத்தியில் ஒற்றுமையுணர்வை தோற்றுவிக்க பொது மொழி பயன்பட்டது. மேலும் பொதுவான பண்பாடு, வரலாறு என்பன உருவாக்கப்பட்டன. அதற்கு முன்னர், ஒவ்வொரு பிரதேச மக்களும் தமக்கென தனியான கலாச்சாரத்தை, வரலாற்றைக் கொண்டிருந்தனர். அவை சில நேரம் ஒன்றுக்கொன்று முரணானதாகவும் இருக்கலாம், அல்லது ஒரே மாதிரியாகவும் இருக்கலாம். தேசிய அரசு அவற்றை மேவிகொண்டு ஆதிக்க கலாச்சாரம் ஒன்றை தோற்றுவித்தது. தேசிய அரசு தோன்றின காலத்தில் இருந்து ஒரே மாதிரியானதாக வரலாறு மாற்றி எழுதப்பட்டது.

தேசியவாதம் எங்கே, எப்படித் தோன்றியது? பிரிட்டனும், பிரான்சும் நூறு ஆண்டுகளாக போரில் ஈடுபட்டிருந்தன. அந்தக் காலத்தில் ஐரோப்பிய நாடுகள் ஒன்றுக்கொன்று யுத்தம் செய்வது சர்வசாதாரணம். பிரிட்டனின் அரச பரம்பரையும், பிரெஞ்சு அரச பரம்பரையும் தமக்கிடையிலான முரண்பாடுகளை தீர்த்துக் கொள்ளத்தான் போரில் ஈடுபட்டார்கள். ஆனால் நூறாண்டு காலப் போர் நீடிப்பதற்கு ஏதாவதொரு சித்தாந்தம் தேவைப்பட்டது. அது "நாட்டுப்பற்று" என்ற வடிவம் எடுத்தது. நூறாண்டு காலப் போரின் முடிவில் பிரிட்டிஷ், பிரெஞ்சு "நாட்டுப் பற்றாளர்கள்" உருவாகியிருந்தனர். கிறிஸ்தவ நாடுகளில் தந்தை வழிக் கலாச்சாரம் வேரூன்றியிருந்தது. (கிறிஸ்தவ மதத்தில் கடவுள் ஒரு ஆணாக கருதப்படுகிறார்.) அதனால் ஒரு தேசிய அரசு "தந்தையர் நாடு" என்று அழைக்கப்பட்டது. தாய்வழிக் கலாச்சாரம் கொண்ட கீழைத்தேய நாடுகளில் அது "தாய் நாடு" என்று மொழிபெயர்க்கப்பட்டது.

19 ம் நூற்றாண்டில் "வெகுஜன தேசியவாதம்" தோன்றியது. அதாவது பொதுவான மொழி, கலாச்சாரம் என்பன மக்கள் மயப்பட்டன. அதன் அடிப்படையில், "தேசிய உணர்வு", "இனம்" என்பன மையப்படுத்தப் பட்டன. "இனம்" என்ற ஒன்று புதிதாக தோன்றிய பின்னர், ஒரு இனத்தை சேர்ந்த மக்கள், மற்ற இனத்தை சேர்ந்தவர்களை அன்னியர்களாகப் பார்த்தனர். அன்னியப்பட்ட இனங்கள் மத்தியில் அவநம்பிக்கையும், சந்தேகமும் தோன்றியது. ஒரு இனத்தின் அவலத்திற்கு, மற்ற இனம் மீது பழி போடப்பட்டது. பழிச் சொல்லுக்கு ஆளாகும் இனம் ஒரே நாட்டை சேர்ந்த சிறுபான்மையினமாக இருக்கலாம். அல்லது வேறொரு தேசத்தை சேர்ந்த இனமாக இருக்கலாம். ஒரே தேசத்திற்குள், உழைக்கும் வர்க்கம் முதலாளிகளுடன் சமரசத்தை பேண வேண்டும். (தேசிய ஒற்றுமைக்கு மிக அவசியம்) அதனால் பொருளாதார பிரச்சினைகளுக்கும் மற்ற இனத்தின் மீது பழி போடப்பட்டது. உதாரணத்திற்கு, ஜெர்மனியில் 20 ம் நூற்றாண்டு வரையில் அத்தகைய அந்நியர்களை வெறுக்கும் தேசியவாதம் நிலவியது. அதன் விளைவுகளும் உலகறிந்தவை தான்.

(தொடரும்)