Saturday, July 23, 2011

நோர்வே குண்டு வெடிப்பும், வெள்ளையின பயங்கரவாதமும்

22 ஜூலை 2011, நோர்வே நாட்டின் தலைநகர் ஒஸ்லோவில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல் உலகை உலுக்கி விட்டது. வெள்ளிக்கிழமை பிற்பகல், நகர மத்தியில் அமைந்துள்ள அரச கட்டிடங்களை இலக்கு வைத்து கார்க் குண்டு வெடித்துள்ளது. பிரதமர் அலுவலகமும், சில அமைச்சு அலுவலகங்களும், குண்டுவெடிப்பால் சேதமடைந்துள்ளன. கட்டிடங்கள் தகர்ந்துள்ள போதிலும், இரு வழிப்போக்கர்கள் மட்டுமே அகால மரணமடைந்துள்ளனர். அரச ஊழியர்களின் இழப்பு குறித்த தகவல்கள் தெரியவில்லை. பிரதமர் இரகசியமான இடத்தில் பத்திரமாக இருப்பதாக அறிக்கைகள் விடப்பட்டன. இரண்டாம் உலகப்போருக்குப் பின்னர், நோர்வேயில் இடம்பெற்ற முதலாவது குண்டுவெடிப்புச் சம்பவம் இதுவாகும். சமாதான விரும்பிகளின் நாடு என்ற விம்பத்தை தகர்த்த, குண்டுவெடிப்பின் சூத்திரதாரிகள் யார், என்ற ஊகங்கள் நாலாபக்கமும் இருந்து கிளம்பின. ஊடகங்கள் வழமை போல அல்கைதாவை குற்றம் சுமத்தின. "நோர்வே ஆப்கானிஸ்தான் போரில் ஈடுபட்டிருப்பதால் பழிவாங்கத் துடித்த அல்கைதா..." "ஈராக்கிய இஸ்லாமிய மதத் தீவிரவாதி முல்லா நாடுகடத்தப்படவிருந்ததால், நோர்வே அரசியல்வாதிகளுக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்தார்..." "லிபியா மீதான நேட்டோ குண்டுவீச்சில் நோர்வே பங்கெடுப்பதால், எச்சரிக்கை விடுத்த கடாபியின் கைக்கூலிகள்..." இவ்வாறு அனைவரின் கவனமும் மத்திய கிழக்கு, அல்கைதா அல்லது இஸ்லாமிய அடிப்படைவாதிகள் பக்கமே குவிந்திருந்தது. "உள்ளூர் பயங்கரவாதிகள்" என்று பல தசாப்தங்களாக நோர்வேயில் வாழும் பாகிஸ்தானிய சமூகமும் குற்றம் சாட்டப்பட்டது.

பி.பி.சி. உலகச் சேவையில் தோன்றிய, நிபுணர் என்று அழைத்துக் கொள்ளும் ஒருவர், "சந்தேகத்திற்கிடமின்றி இது அல்கைதாவின் செயல் தான்." என்று பிதற்றினார். உலகில் இதற்கு முன்னர் இடம்பெற்ற "அல்கைதா குண்டுவெடிப்புகள்" அதிகளவு பொதுமக்களின் இழப்புகளை ஏற்படுத்திய "மென்மையான இலக்குகள்" என்ற உண்மை அந்த நிபுணருக்கு தெரியவில்லை. ஓரிரு மணிநேரத்தின் பின்னர், நோர்வேயில் இருந்து இன்னொரு தகவல் வந்தது. குண்டுவெடிப்பை தொடர்ந்து துப்பாக்கிச் சூட்டுச் சம்பவமும் இடம்பெற்றுள்ளது. ஆளும்கட்சியின் கூட்டம் ஒன்றில், சரமாரியாக சுட்டுத்தள்ளிய நபர், போலிஸ் உடையில் வந்த நோர்வீஜிய தோற்றம் கொண்ட வெள்ளையினத்தவர். பிபி.சி. அந்த செய்தியை அறிவித்ததும், மீண்டும் "பயங்கரவாத எதிர்ப்பு நிபுணர்" என்ற பைத்தியம் உளற ஆரம்பித்து விட்டது. "அல்கைதா இப்போதெல்லாம் வெள்ளை இனத்தவர்களை சேர்த்து வருகின்றனர். பாதுகாப்புக் கெடுபிடிகள் காரணமாக, அத்தகைய நபர்களை பயங்கரவாத செயல்களில் ஈடுபடுத்துகின்றனர்."

ஆனால், அடுத்த நாள் பொழுது புலர்ந்த வேளை, உண்மை என்னவென்று உலகம் அறிந்து கொண்டது. கடந்த பத்து வருடங்களாக, சர்வதேச ஊடகங்கள் செய்து வரும் இனவாதப் பிரச்சாரம், இம்முறை ஆதாரங்களுடன் அம்பலமாகியது. ஆயினும் என்ன? தாக்குதல்கள் இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் வேலை இல்லை என்று நிரூபிக்கப் பட்டவுடன், அடக்கி வாசிக்க ஆரம்பித்து விட்டன. 90 பேர்களின் மரணத்திற்கு காரணமான கொலைகாரன் ஒரு வெள்ளையின நோர்வேஜியன் என்பதால், அவன் ஒரு புத்தி பிறழ்ந்தவன் என்று கதையை முடித்து விட்டார்கள். ஒரு வேளை, தாக்குதலை நடத்தியது ஒரு முஸ்லிம் என்றால், "பயங்கரவாதத்திற்கு எதிரான போரின் அவசியம்" குறித்து ஒபாமா விரிவுரை ஆற்றியிருப்பார். வெளிநாட்டுக் குடியேறிகளை கட்டுப்படுத்துமாறு, வலதுசாரிகள் நோர்வே அரசுக்கு அழுத்தம் கொடுத்திருப்பார்கள். தற்போது உள்நாட்டை சேர்ந்த தீவிர வலதுசாரி அரசியல் சக்திகள் தான் இந்த பயங்கரவாத செயலை புரிந்துள்ளமை நிரூபிக்கப் பட்டுள்ளது. இதன் விளைவுகள் எப்படி இருக்கும் என்பதைப் பார்ப்போம்.

தாக்குதலுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட இலக்கும், நேரமும் முன்கூட்டியே நன்கு திட்டமிடப் பட்டுள்ளன. அரச அலுவலகங்களில் பணிபுரிவோர், மற்றும் பிரதமரை கொலை செய்யும் நோக்கில் குண்டு வெடிக்கப் பட்டிருக்கலாம்.
வெள்ளிக்கிழமை பிற்பகல் என்பதால் மட்டுமல்ல, நோர்வேயில் தற்போது கோடை கால விடுமுறைக் காலம் என்பதாலும், தெருவில் சன நடமாட்டம் குறைவு.
ஆகையினால், தாக்குதலுக்கு திட்டமிட்டவர்கள் சாதாரண பொதுமக்களின் இழப்பை குறைக்க விரும்பியுள்ளனர். அல்கைதா பாணி தீவிரவாதிகள் என்றால், "மத நம்பிக்கையற்ற எல்லோரும் பரலோகம் போக வேண்டும்..." என்று விரும்பியிருப்பார்கள். பிற்காலத்தில் மக்கள் ஆதரவை இழக்க விரும்பாத உள்நாட்டு அரசியல் சக்தி ஒன்று தான் இந்த தாக்குதலை திட்டமிட்டிருக்கும். உள்நாட்டில் வளர்ந்து வரும் நவ-நாஜிச அல்லது தீவிர வலதுசாரிக் குழுக்கள் மீது தான் இயல்பான சந்தேகம் திரும்புகின்றது.

நோர்வேயில் நவ நாசிச கொள்கை கொண்ட குழுக்கள் தடை செய்யப் பட்டிருந்த போதிலும், "வெகுஜன அரசியல்" செய்யும் Fremskrittspartiet போன்ற கட்சிகள் வளர்ந்து வருகின்றன. சில நாட்களுக்கு முன்னர், "நோர்வேயின் பிற நகரங்களும் ஒஸ்லோ போன்று மாறி வருகின்றன... வெளிநாட்டவர் தொல்லை அதிகரிக்கின்றது... கிரிமினல்கள், விபச்சாரிகள், பிச்சைக்காரர்கள், அகதிகள் பெருகி வருகின்றனர்." என்று உள்ளூர் நாளிதழ் ஒன்றில் ஒப்பாரி வைத்தது. அவர்களைப் பொறுத்த வரையில், இந்த தீமைகளுக்கெல்லாம் ஆளும் தொழிலாளர் கட்சியின் (Arbeiderpartiet) தவறான கொள்கை காரணமாகும். குறிப்பாக "முஸ்லிம் குடியேற்றவாசிகள் பெருகி வருவதால், நோர்வேயில் குண்டு வெடிக்கும் காலம் வெகு தூரத்தில் இல்லை..." என்று இனவாதக் கருத்துகளை பரப்பி வருகின்றது.

தற்போது நடந்துள்ள குண்டுவெடிப்புக்கு தீவிர வலதுசாரி கொள்கை கொண்டோரே காரணம் என்பதால், நோர்வே மக்கள் மத்தியில் அவர்களுக்கான ஆதரவு குறையலாம். ஆனால், நீண்ட கால நோக்கில், தீவிரவாத எண்ணம் கொண்டோருக்கு மக்கள் ஆதரவு அதிகரிக்கலாம். எப்படியும் "வீர சாகசங்களைப் புரியும் செயல்வீரர்கள்" மீது மக்கள் மதிப்பு வைக்கலாமல்லவா? பொலிசாரினால் கைது செய்யப்பட்ட, தாக்குதலில் ஈடுபட்ட Anders Behring Brevik என்ற 32 வயது இளைஞனின் கொள்கையும் அதுவாக இருந்துள்ளது. அந்த நபரின் பேஸ்புக், டிவிட்டர் போன்ற தளங்களில் காணப்பட்ட வாசகங்கள் பகிரங்கப் படுத்தப் பட்டுள்ளன. "ஒரு மத நம்பிக்கையாளன், வெறும் நலன்களை மட்டுமே பேணும் ஒரு இலட்சம் படைவீரருக்கு சமமானவன்." என்று ஆங்கிலத்தில் எழுதப்பட்ட ஒரேயொரு வாசகம் மட்டுமே டிவிட்டரில் காணப்பட்டது. இதை விட, இணைய விவாதங்களில் கலந்து கொண்டு, கிறிஸ்தவ மத அடிப்படைவாதக் கருத்துகளை உதிர்த்துள்ளார். நெதர்லாந்தின் முஸ்லிம் எதிர்ப்பு அரசியல்வாதி கெர்ட் வில்டர்ஸ், மறைந்த பிரித்தானிய பிரதமர் சேர்ச்சில் ஆகியோரின் அபிமானியாக இருந்துள்ளார். முகநூலில் சிறந்த நூலுக்கான இவரது தெரிவாக ஆர்வேல் எழுதிய "1984" காணப்படுகின்றது. இவர் தன்னை ஒரு நோர்வீஜிய தேசியவாதியாக இனங்காட்டியுள்ளார். தற்காலத்தில் நடப்பது முதலாளித்துவத்திற்கு எதிரான போர் இல்லை. மாறாக, சர்வதேசியத்திற்கு எதிரான தேசியவாத சக்திகளின் போர்." என்று அந்த வெள்ளையின பயங்கரவாதி தத்துவ முத்துகளை உதிர்த்துள்ளார்.

ஒஸ்லோவில் நடந்த குண்டுவெடிப்பை அடுத்து, அங்கிருந்து 40 கி.மி. தூரத்தில் உள்ள "உத்தேயா" (Utøya) என்னும் தீவில் தான் அதிகளவு மரணங்கள் சம்பவித்துள்ளன. ஆளும் கட்சியான தொழிலாளர் கட்சியின் இளைஞர் அணியின் வருடாந்த ஒன்றுகூடல் நிகழ்வுகள் அந்தத் தீவில் நடந்து கொண்டிருந்தன. நாடு முழுவதிலும் இருந்து, இளம் வயது கட்சி உறுப்பினர்கள் சமூகமளித்திருந்தனர். தொழிலாளர் கட்சி இன்று ஒரு வலதுசாரி சந்தர்ப்பவாதக் கட்சியாக மாறி விட்டாலும், வெளிநாட்டவர் மத்தியில் மத்திய-இடதுசாரிக் கட்சியாக பார்க்கப்பட்டது. இதனால் பல அந்நிய குடியேறிகளின் சமூகங்களை சேர்ந்த இளைஞர்களும் கலந்து கொண்டுள்ளனர். தொழிலாளர் கட்சியின் கோடைகால முகாம் நடைபெற்ற இடத்திற்கு, கொலைகாரன் பொலிஸ் உடையில் சென்றுள்ளான். "ஒஸ்லோவில் நடந்த குண்டுவெடிப்பு சம்பந்தமாக, பாதுகாப்பு ஏற்பாடுகளை கவனிக்க அனுப்பப் பட்டதாக..." கூறியுள்ளான். தொடர்ந்து, கண்மூடித் தனமாக சுட்டதில் 90 இளைஞர்கள் கொல்லப்பட்டனர். பின்னர் அந்த இடத்திற்கு விரைந்த பொலிஸ் படையினர், Anders Brevik என்ற கொலைகாரனை மடக்கிப் பிடித்துள்ளனர். இருப்பினும், ஒரேயொரு நபர், ஒரு தானியங்கி துப்பாக்கி மூலம், 90 பேரை சுட்டுக் கொன்றமை நம்புவதற்கு கடினமானது. துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் இன்னொரு நபரும் சம்பந்தப்பட்டிருப்பதாகவும், பிறிதொரு இடத்தில் கைது செய்ததாகவும் அறிவித்தார்கள். ஆரம்பத்தில், தாக்குதல்கள் "ஒரு மனநோயாளியின்" செயல் என்று தெரிவித்தார்கள். போலிசிடம் அகப்பட்ட பயங்கரவாதி ஒரு "வெள்ளையின, கிறிஸ்தவ மத அடிப்படைவாதி" என்பதால், ஊடகங்களும் அதிகம் ஆராயவில்லை. கைது செய்யப்பட்டவர்கள் வெறும் கருவிகளாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுகின்றது. இவர்களுக்குப் பின்னால், ஒரு இயக்கம், அல்லது அரசியல் சக்தி இருக்கக் கூடும்.

தாக்குதல்கள் யாவும், ஆளும் கட்சியான தொழிலாளர் கட்சியை குறி வைத்தே இடம்பெற்றுள்ளன. இதனால், இந்த சம்பவம் காரணமாக தொழிலாளர் கட்சிக்கு வருங்கால தேர்தல்களில் அனுதாப வாக்குகளை பெற்றுத் தரலாம். இருப்பினும், இளைஞர் அணியை சேர்ந்த 90 உறுப்பினர்கள் கொலை செய்யப்பட்டுள்ளதால், எதிர்காலத்தில் அந்தக் கட்சிக்கு பின்னடைவை தோற்றுவிக்கலாம். இன்றைய இளைஞர்கள், நாளைய தலைவர்கள். இதனால், தூர நோக்கில் தொழிலாளர் கட்சியை நோர்வேயில் இல்லாதொழிக்கும் நோக்கம் தெரிகின்றது. தொழிலாளர் கட்சியின் மீது யாருக்கு அவ்வளவு கோபம்? தொழிலாளர் கட்சி வலதுசாரி சந்தர்ப்பவாதப் பாதையில் சென்ற போதிலும், இளைஞர் அணியினர் மத்தியில் இடதுசாரிப் போக்கும் காணப்படுகின்றது. சமீப காலமாக,"பாலஸ்தீன சுதந்திரத்தை அங்கீகரிக்க வேண்டும். இஸ்ரேலிய பொருட்களை பகிஷ்கரிக்க வேண்டும்." என்பன போன்ற குரல்கள் கேட்கின்றன. மேலும், துப்பாக்கிச் சூட்டு சம்பவம் நடந்த தினத்தன்று, முன்னாள் நோர்வே பிரதமர் வருகை தருவதாக ஏற்பாடாகியிருந்தது. இன்றைய பிரதமர் அப்பட்டமான வலதுசாரி என்பதும், முன்னை நாள் பிரதமர் ஓரளவு இடதுசாரி பக்கம் சாய்பவர் என்பதும் குறிப்பிடத் தக்கது.

இதற்கு முன்னர் குறிப்பிட்ட தீவிர வலதுசாரியினர், நவநாஜிகள் மட்டுமல்லாது, வேறு சக்திகள் சம்பந்தப் பட்டுள்ளனவா? நோர்வே வட அட்லாண்டிக் இராணுவக் கூட்டில் (நேட்டோ) அங்கம் வகிக்கின்றது. கடந்த மார்ச் மாதத்தில் இருந்து, நோர்வே விமானங்கள் லிபியா மீது குண்டுகளை வீசி வந்துள்ளன. நேட்டோ இராணுவ நடவடிக்கையின் ஓரங்கமாக நோர்வே செயற்பட்டு வந்தாலும், இந்த வாரம் குண்டுவீச்சை நிறுத்திக் கொள்வதென்று தன்னிச்சையாக அறிவித்தது. அதாவது, வருகிற ஆகஸ்ட் முதலாம் தேதியில் இருந்து, நோர்வே விமானங்கள் போர் நடவடிக்கையில் ஈடுபட மாட்டா. இதனால், நோர்வே அரசுக்கும், பிற நேட்டோ உறுப்பினர்களுக்கும் எச்சரிக்கை விடுக்கும் நோக்கில் தாக்குதல் நடந்திருக்கலாம். நேட்டோ, அல்லது நோர்வே அரச மட்டத்தை சேர்ந்த ஏகாதிபத்திய ஆதரவாளர்கள், தாக்குதலில் சம்பந்தப் பட்டிருக்கலாம். நேட்டோ ஐரோப்பாவில் இரகசியமாக ஒரு பயங்கரவாத அமைப்பை (Gladio) உருவாக்கி வைத்துள்ளது. அந்த இரகசிய அமைப்பு இத்தாலி போன்ற நாடுகளில் குண்டுவெடிப்புகளை நடத்தியுள்ளது. இதுவரை குண்டுகளை வைத்தவர்கள் யாரும் கைது செய்யப்படவில்லை. அதே போல, ஒஸ்லோ குண்டுவெடிப்பை நடத்திய சூத்திரதாரிகள், அவர்களின் நோக்கங்கள் என்பன இனி ஒரு காலமும் வெளிவராமல் போகலாம்.


மேலதிக விபரங்களுக்கு:
Olso Attacks Suspect Is 'Conservative Christian'
Pågrepet 32-åring kalte seg selv nasjonalistisk
Anders Behring Breiviks kommentarer hos Document.no
Terrorsiktet kjøpte seks tonn kunstgjødsel
TERRORAKSJON I OSLO

4 comments:

J.P Josephine Baba said...

பல அறிய தகவல்கள் நல்கிய கட்டுரை. வாழ்த்துக்கள் நண்பரே!

செங்கதிரோன் said...

குண்டுவெடிப்பின் முழுப்பின்னணியும் தெளிவாக விளக்கியதற்கு நன்றி

எஸ் சக்திவேல் said...

>ஆனால், அடுத்த நாள் பொழுது புலர்ந்த வேளை, உண்மை என்னவென்று உலகம் அறிந்து கொண்டது. கடந்த பத்து வருடங்களாக, சர்வதேச ஊடகங்கள் செய்து வரும் இனவாதப் பிரச்சாரம், இம்முறை ஆதாரங்களுடன் அம்பலமாகியது. ஆயினும் என்ன? தாக்குதல்கள் இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் வேலை இல்லை என்று நிரூபிக்கப் பட்டவுடன், அடக்கி வாசிக்க ஆரம்பித்து விட்டன. 90 பேர்களின் மரணத்திற்கு காரணமான கொலைகாரன் ஒரு வெள்ளையின நோர்வேஜியன் என்பதால், அவன் ஒரு புத்தி பிறழ்ந்தவன் என்று கதையை முடித்து விட்டார்கள். ஒரு வேளை, தாக்குதலை நடத்தியது ஒரு முஸ்லிம் என்றால், "பயங்கரவாதத்திற்கு எதிரான போரின் அவசியம்" குறித்து ஒபாமா விரிவுரை ஆற்றியிருப்பார்

100% !

எஸ் சக்திவேல் said...

>போலிசிடம் அகப்பட்ட பயங்கரவாதி ஒரு "வெள்ளையின, கிறிஸ்தவ மத அடிப்படைவாதி" என்பதால், ஊடகங்களும் அதிகம் ஆராயவில்லை. கைது செய்யப்பட்டவர்கள் வெறும் கருவிகளாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுகின்றது. இவர்களுக்குப் பின்னால், ஒரு இயக்கம், அல்லது அரசியல் சக்தி இருக்கக் கூடும்.

wise words